குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும்.எழுதுவதற்கு மிகவும் சிரமாமன இலக்கியம் எது என்றால் அது " குழந்தை இலக்கியமே " குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டால்த்தான் அது சாத்தியமாகும்.குழந்தைகளின் இலக்கியம் இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்த்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் "குழந்தை இலக்கியம் " என்பதுதான் மனமிருத்த வேண்டிய உண்மையெனலாம். அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களேஈடுபடுகிறார்கள்.குழந்தைகளுக்கான படைப்புக்களை படைப்பதை ஒரு முக்கிய பணியாக நினைத்தே அவர்கள் தங்களது படைப்புக்களை படைக்கின்றார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளர்.அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர்.சமூக அக்கறை கொண்டவர்.அடுத்த  தலை முறை யினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை சிறப் பினைப் பெற்றது எனலாம்.

 ஆரம்பத்தில் சிறுகதை எழுதியவர் பின்னர் கவிஞராகவே மலர்ந்தார். கவிஞராகவே இருக்கவே ஆசையும் கொண்டார். தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியம் என்றதும் எல்லோர் நினைவிலும் வந்து நிற்பவர் கவிமணி அவர்களே. அம்பியையும் ஈழத்துக் கவிமணி என்றுதான் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு குழந்தைகளிடம் பற்றும் பாசமும் கொண்டு அவர்களுக்காக கவிதை இலக்கியத்தை வளர் த்து நின்றார். கணித ஆசிரியராய் இருந்தவரின் எண்ணத்தில் குழந்தைகள் இலக்கியம் கருக்கொண்டது என்றால் அந்த அளவுக்கு அம்பியின் ஈடுபாடு குழந்தைகள் பால் மிக்கிருந்தது என்றுதான் கருத முடிகிறது.

   குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதற்கு கடின உழைப்பு. பொறுமை, சொற்களஞ்சிய அறிவு மிகவும் முக்கியம் ஆகும். குழந்தைகளின் கவிதைகள் அவர்களின் நாட்டப் பொருட்களை மையமாகக் கொண்டிருக்கவும் வேண்டும்.வீண் சொற்களையோ, வர்ணனைகளையோ, குழந்தைப் பாடல்கள் கொண்டிருப்பது கூடாது.இவற்றையெல்லாம் மனமிருத்தியே கவிஞர் அம்பி அவர்கள் குழந்தை இலக்கி யத்தைப் படைத்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்கான கவிதைகளையும் தந்திருக்கிறார். அவுஸ்திரேலிய தமிழ்க்குழந்தைகள் தமிழில் பேச வேண்டு. பேசிப் பேசி மகிழ வேண் டும் என்பதே அவரின் பேரவாக இருந்தது. இந்த எண்ணத்தை மனமிருத்தியே அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தைக் கட்டி எழுப்புவதில் அம்பி அவர்கள் பெரும்பங்கு வகித்தார் என்பதை இங்கு வாழும் தமிழர்கள் அனைவருமே ஒரு மனதாக ஏறுக்கொள்ளுவார்கள்.

   " கொஞ்சும் தமிழ் " , " பாலர் பைந்தமிழ் " என்னும் கவிதை நூல்களை குழந்தை இலக்கியமாய் அளித்திருக்கிறார். இவரின் அணுகு முறை அவுஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தியதுதான் என் பதே இங்கு முக்கியமாகும்.சூழலுக்கு ஒவ்வாத விடயங்களை யார் படைத்தாலும் அஃது பொருத்தம் அற்றதாகவே ஆகிவிடும். அப்படிப் பாடிஅமைப்பதை விட படைக்காமலே இருந்திடலாம். நீண்ட கால ஆசிரியப்பணி. பல நாடுகளில் ஆசியப்பணி. புலம் பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளின் உள்ளக் கிடக்கை இவற்றை எல்லாம் மிகவும் உன்னிப்பாகாகக் கவனத்தில் கொண்ட  காரணத்தினால்த்தான் அம்பி அவர்களின் குழந்தை இலக்கியம் அவுஸ்திரேயாவில் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது எனலாம்.

   " நீங்கள் இனிய தமிழ் வேச வேண்டு. பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேசி மகிழவேண்டும். நீங்கள் இனிய பாடல்கள் பாட வேண்டு.பாடப் பழக வேண்டும். இனிமையாகப் பாடி மகிழ வேண்டு. நீங்கள் பாடல்கள் பாடி ஆட வேண்டும்.பாடி ஆடி மகிழ வேண்டும். பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடும்போது அபிநயம் செய்து மகிழ வேண்டும்.அபிநயம் செய் யப் பழக வேண்டும்.அபிநயத்தால் எல்லோரையும் மகிழ்வித்தல் வேண்டும்.நீங்கள் பாடி ஆடி அபிநயஞ் செய்து மகிழும்போது அறிந்த சொற்களின் பொருளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். புதிய சொற்களையும் அறிதல் வேண்டும். புதிய சொற்களுடன் அறிவு வளர்ச்சியும் பெறுதல் வேண்டும்." என்று - " கொஞ்சும் தமிழ் பாடல்கள் " நூலில் அம்பி அவர்கள் தனது மனத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

   அம்பியின் பாடல்கள் தனித்துவம் மிக்கன.குழந்தைகளின் நாவில் உச்சரிக்கக் கூடிய எளிய தமிழ், அவர்களின் சிந்தையில் பதியக் கூடிய ஓசை நயத்துடனான சொற்கோலங்கள். இதனால் குழந்தைகள் அந்நியப்பட்டு விடாமல் பாடலுடன் நெருங்கி ஒட்டுற வாடுகின்றனர். இதுவேதான் " அம்பி " என்னும் குழந்தை இலக்கியப் படைப்பாளருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்துள்ள முக்கியத்துவம் எனலாம்.

   வினா விடை முறையிலே பல பாடல்களை அமைத்திருக்கிறார். அங்கு குழந்தைகளின் உளவியலை அவர் நன்கு அறிந்து எழுதியிருக்கிறார் என்பதையே காணமுடிகிறது.அவுஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி

" அம்பி மழலை " என்னும் குழந்தை இலக்கிய நூலை ஆக்கியிருக்கிறார்.கங்காரு அவுஸ்திரேலிய நாட்டின் அடையாளம். அதனை சிறியவர் முதல் பெரியவர்வரை விரும்பி இரசிப்பார்கள்.இந்த நாட்டில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு விளங்காத விலங்குகளை அறிமுகப்படுத்தவோ அல்லது அவை பற்றி சொல்லுவதோ பொருத்தம் அற்றது என்பதை அம்பி அவர்கள் தெரிந்து காரணத்தால் " ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக்குட்டி " என்று பாடாமல்

 " முன் இரண்டு காலைத் தூக்கி
   முன்னே பாய்ந்து செல்குவேன்
   பின் இரண்டு காலில் துள்ளி
   பாய்ந்து பாய்ந்து செல்லுவேன்

   சின்னக்குட்டியை வயிற்று பையில்
   செருகிக் கொண்டு செல்லுவேன்

   என்னைப் போன்ற அன்னை யாரோ
   என்று கேட்டுச் செல்லுவேன்

   என்னைத் தெரியுமா - என்
   பெயரைத் தெரியுமா ?    

  என்று கங்காரு பற்றி குழந்தைகளுக்கு காட்டுகிறார் அம்பி.

"கொஞ்சும் தமிழ்" அழகிய வண்ணப்படங்களுடன் அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியமாய் வந்திருக் கிறது. அத்துடன் "பாலர் பைந்தமிழ்" படைப்பும் சேர்ந்துவிட்டது.

" தமிழில் சிறுவர் இலக்கியம் இல்லாமை பெருங்குறையாகும். சிறுவர் இலக்கியத்தில் நாம் பின்தங்கி விட்டோம். அத்துறையில் "அம்பி யுகம் " ஆரம்பமாகி விட்டது என்று நாம் பெருமையும் பூரிப்பும் அடைய வேண்டும்." என ஈழத்து அறிஞர் அஸீஸ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

  "அவுஸ்திரேலியச் சிறுவருக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து பிறமொழிச் சூழல்களில் வளரும் எல்லாச் சிறுவருக்கும் ஏற்ற வகையில் அம்பியின் பாடல்கள் அமைகின்றன" என்று கலாநிதி. கவிஞர் கந்த வனம் குறிப்பிடுகிறார்.இப்படி பலரும் அம்பியின் குழந்தை இலக்கியம் பற்றி விதந்தே நிற்கி றா ர்கள்.தற்பொழு தொண்ணூறு அகவை கடந்து அவுஸ்திரேலிய மண்ணில் அம்பி அவர்கள் வாழ்ந்த காலம் அவுஸ்திரேலியக் குழந்தை இலக்கியத்துக்குக் கிடைத்த பெரு வரம் என்றுதான் எண்ண வேண் டும். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைபோல், இன்று அவுஸ்திரேலிய கவிமணியாய் அம்பி அவுஸ் திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தினைத்தினைப் பெற்றுத் தமிழ்க் கவிதையுலகில் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவர் எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தார் என்பதை ஏற்றுக் கொள் ளவே முடியாமல் அவரது அழகு தமிழ்க் கவிதைகள் அழுதபடியே இருக்கின்றன.

 அம்பியெனும் தமிழ்த்தும்பி அவ்வுலகம் சென்றது
 அமரர்க்குத் தமிழமுதை அளித்திடவே சென்றது
 குழந்தைக்குக் குழந்தையாய் குறைவின்றி கவிஈந்தார்
 குவலயத்தை விட்டுவிட்டு கவிசொல்லச் சென்றுவிட்டார்

 அன்னைத் தமிழோடு ஆங்கிலத்தில் கவிசொன்னார்
 அனைவர்க்கும் விளங்கும்படி அழகாகக் கவிசொன்னார்
 விஞ்ஞானம் கற்றாலும் விருப்புடனே தமிழணைத்தார்
 விண்ணவர்கள் விரும்பியதால் அவ்வுலகம் சென்றுவிட்டர்

 தமிழன்னை அம்பியை தடவியே கொடுத்தாள்
 அதனாலே அழகுதமிழ் அவரிடத்து நிறைந்தது
 ஆசானாய் இருந்தார் ஆளுமையாய் வலம்வந்தார்
 அவருடைய தமிழ்கேட்க ஆண்டவனே அழைத்துவிட்டான்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.