வாழ்வின் அந்திம காலங்களில் தனித்துவிடப்படுபவர்கள், விடப்பட்டவர்கள் பற்றி அறிந்திருக்கின்றேன். அவ்வாறு தனித்தே வாழ்ந்திருக்கும் ஆளுமைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கின்றேன். சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வீரகேசரி பிரசுரமாக ஒரு நாவல் வெளிவந்தது. ' நான் ஓர் அனாதை' என்ற அந்த நாவலை எழுதியவர் கமலா தம்பிராஜா. கதை மறந்துவிட்டது! அவர் அந்தத்தலைப்பில் ஏன் எழுதினார்? என்பதற்காகவாவது மீண்டும் அதனைத்தேடி எடுத்துப்ப டிக்கவேண்டும்போலிருக்கிறது. நானறிந்தவரையில் சகோதரி கமலா, தனது தனிப்பட்ட வாழ்வின் பெரும்பொழுதுகளை தனிமையில் கழித்திருந்தாலும், அவர் சார்ந்திருந்த ஊடகத்துறையில் பலருக்கும் மத்தியில் இயங்கிக்கொண்டே இருந்தவர். கடந்த 7 ஆம் திகதி அவர் கனடாவில் டொரொன்டோவில் காலமானார் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக அதனை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக கனடாவில் வதியும் வீரகேசரியின் முன்னாள் விளம்பர - விநியோக முகாமையாளர் திரு.து. சிவப்பிரகாசம் அவர்களைத்தொடர்புகொண்டேன். அதன்பின்னர், இலங்கையிலிருக்கும் ' கலைக்கேசரி' ஆசிரியை திருமதி அன்னலட்சுமி இராசதுரை அவர்களுக்கும் செய்தி சொல்லி துயரத்தை பகிர்ந்தேன். வீரகேசரியிலிருந்து கமலா, தகவல் அமைச்சிற்குச்சென்ற பின்னர் அவ்வப்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் நெடுநேரம் அன்னலட்சுமி அக்காவுடன்தான் பேசிக்கொண்டிருப்பார். வீரகேசரி பத்திரிகையில் செல்வி கமலா தம்பிராஜா 1970 களிலேயே ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர். அதன்பிறகு 1972 இல் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அங்கு இணைந்தேன். அதனால் அவர் எனக்கு மூத்த ஊடகவியலாளர். 1977 இல் நான் அங்கு ஒப்புநோக்காளராக ( Proof Reader) வேலைக்குச்சேர்ந்த வேளையில் கமலா, தகவல் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பணியில் இணைந்துவிட்டார். அவ்வப்போது வீரகேசரி அலுவலகம் வந்து தனது நண்பர்கள் சிநேகிதிகளுடன் உறவைப்பேணிக்கொண்டிருந்தார். கமலா யாழ்ப்பாணத்தில் பிரபல வேம்படி மகளிர் கல்லூரியில் தனது உயர்தர வகுப்பைத்தொடர்ந்த காலத்திலேயே எழுத்தாற்றல், பேச்சாற்றல் நிரம்பிய ஆளுமைமிக்க பெண்ணாக திகழ்ந்ததாக அவருடைய ஆசிரியை, தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்த கமலா, பட்டம் பெற்றதும் ஊடகவியலாளராகவே வீரகேசரியில் இணைந்தவர். அதனால் செய்தி எழுதுவது, வரும் செய்திகளை செம்மைப்படுத்துவது, மொழிபெயர்ப்பது முதலான துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பவர். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். பின்னாளில் இலங்கை வானொலியில் இணைந்து நிகழ்ச்சிகள் தயாரித்தார். செய்திகளை வாசித்தார். இவ்வாறு அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அவர்தேடிய மூலதனம். அதுவே அவரை தொலைக்காட்சியிலும் பிரவேசிக்கத்தூண்டியது. இலங்கையில் முதல் முதலில் 1979 இல் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் I.T.N. ( Independent Television Network) தொடங்கப்பட்டபோது செய்தி மஞ்சரியில் செய்திகளை தொகுத்துவழங்கினார். ரூபவாஹினி தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கும் தமிழ் செய்தியாளரானார். சிறுவர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தார். ஈரானிய உயர் ஸ்தானிகராலயத்திலும் செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர். இவையெல்லாம் அவர் நேசித்த - சார்ந்திருந்த ஊடகத்துறை பணிகள். 

1980 களின் பிற்பகுதியில் கனடாவுக்கு அவர் குடிபெயர்ந்த பின்னர் காணும் வாய்ப்பு இல்லாமல் போனது. அதற்கு முன்னர் 1976 இல் அவரை தமிழ்த்திரைப்படத்தில் கண்டோம். காவலூர் ராஜதுரையின் கதை வசனம், தயாரிப்பில் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் வெளியான பொன்மணி திரைப்படத்தில் பொன்மணியின் அக்காவாக தோன்றினார். அதிலும் தனித்துவிடப்பட்ட பாத்திரமே அவருக்கு கிடைத்திருப்பது தற்செயல்தான். மூன்று சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகளாக சீதனம் தரக்கூடிய நிலையில்லாதமையால் திருமணம் தள்ளிப்போகும் பரிதாபத்திற்குரிய பாத்திரம். சங்கீதம் பயிலும் அந்தச்சகோதரி பாத்திரம், " பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்... காத்திருப்பார் கண்ணனை" என்ற பாடலுக்கு வீணையை மீட்டியவாறு வாயசைக்கும்.

எங்கள் தாயகம் இனவாத நெருப்பில் கருகத்தொடங்கியவேளையில் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், விளம்பர விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம், பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் அகதிமுகாம்களுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் செல்லவேண்டிய துர்ப்பாக்கியம் தோன்றியது. பிரதம ஆசிரியர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். தகவல் அமைச்சிலும் ஈரானிய தூதுவராலயத்திலும் பணியாற்றிய கமலா தம்பிராஜா, மற்றும் பத்திரிகையாளர்கள், மேகமூர்த்தி, கனக அரசரத்தினம், சோமசுந்தரம் ராமேஸ்வரன், டீ.பி.எஸ். ஜெயராஜ் ,விளம்பர விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம், விளம்பர விநியோகப்பிரிவில் பணியாற்றிய வர்ணகுலசிங்கம், புனிதா பழனிச்சாமி பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன், உட்பட அச்சுக்கோப்பாளர்கள் சிலரும் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்கள். அதனால் கனடாவில் "வீரகேசரி குடும்பம்" என்ற அமைப்பும் அவர்களால் உருவாகி அவ்வப்போது ஒன்றுகூடல்களும் சந்திப்பு விருந்துகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. 

தம்பிராஜா, 1991ஆம் ஆண்டு டொரன்டோவில் ஆரம்பிக்கப்பட்ட தேமதுரம் வானொலியிலும் 2001ஆம் ஆண்டு அங்கு ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காட்சியிலும் , தமிழோசை, CTBC வானொலி, கீதவாணி முதலியவற்றிலும் பணியாற்றியவர் என்பதை அறியமுடிகிறது.  அவரை 2007 ஆம் ஆண்டு இறுதியில் கனடா டொரன்ரோவில் நடந்த தமிழர் செந்தாமரை பத்திரிகையின் ஆண்டுவிழா ஒன்றுகூடலில் சந்தித்தேன். அன்றைய நாளை மறக்கவே முடியாது. நீண்ட இடைவெளிக்குப்பின்னர், வீரகேசரி குடும்பத்தினர் அன்று ஒன்றுகூடியிருந்தோம். வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் (அமரர்) க. சிவப்பிரகாசம், அலுவலக நிருபர் (அமரர்) கனக. அரசரத்தினம், துணை ஆசிரியர் மேகமூர்த்தி, விளம்பரப்பிரிவிலிருந்த வர்ணகுலசிங்கம், விளம்பர- விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் ஆகியோருடன் கமலா தம்பிராஜாவும் எம்முடன் அமர்ந்திருக்க கடந்து சென்ற பசுமையான காலங்களை நனவிடை தோய்ந்தோம்.

2008 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி பிறந்த புத்தாண்டு தினமன்று இரவு இராப்போசன விருந்துக்காக தமது வீட்டுக்கு அழைத்து உபசரித்தார்.  அன்று அவரது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிப்பணிகளில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். " இலங்கையில் I.T.N. தொலைக்காட்சியில் முதல் முதலில் செய்திமஞ்சரியில் தமிழில் செய்தி வாசித்த போது குறைந்த வளங்களே இருந்ததாகவும், தலைப்புச்செய்திகளை முதலில் மனப்பாடம் செய்துகொண்டு முன்னாலிருக்கும் கெமராவைப்பார்த்து பேசவேண்டியிருந்ததாகவும், காண்பிக்கப்படும் 'டைட்டில் கார்ட்களை' வெளியே ஓவியர்கள் மூலம் வரைந்து வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இத்தனைக்கும் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் அந்த செய்தி மஞ்சரிக்கு கிடைத்த சன்மானம் அப்பொழுது 60 ரூபாய்தான்" எனச்சொல்லிவிட்டு கலகலவென சிரித்தார். இவ்வாறு அன்றைய இராப்போசனம் கலகலப்பாகவே நிறைவடைந்தது. இச்சந்திப்பில் நண்பர் வர்ணகுலசிங்கம் - சரோஜினி தம்பதியரும் கலந்துகொண்டனர்.  அவுஸ்திரேலியாவிலிருந்து நான் எடுத்துச்சென்ற எனது நூல்கள் சிலவற்றையும் கொடுத்தேன். நாம் நடத்தும் தமிழ் எழுத்தாளர் விழா தொடர்பான படங்கள், செய்தி நறுக்குகள் அடங்கிய பெரிய அல்பத்தைப்பார்த்துவிட்டு, தனக்கும் ஒரு விழாவிற்கு வந்துகலந்துகொள்ளவேண்டும்போலிருக்கிறது என்ற அவர், இங்கு தனக்குத்தெரிந்தவர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு விசாரித்தார். ஆனால், அவரது விருப்பம் நிறைவேறவில்லை. அவருடன் இலங்கையில் பணியாற்றிய சிலர் மற்றும் அவரது ஆசிரியை ஆகியோர் இங்கு இருக்கிறார்கள். 

அன்றைய சந்திப்பில் எடுத்த ஒளிப்படங்களையும், கமலா தம்பிராஜா ரூபவாஹினியில் செய்தி வாசிக்கும் தொலைக்காட்சி படத்தையும் நண்பர் வர்ணகுலசிங்கம் நான் கனடாவை விட்டு புறப்படும்பொழுது ஒரு இறுவட்டில் பதிவுசெய்து தந்தார். கமலா கனடாவில் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும், அந்த இறுவட்டையே கணினியில் பதிவிறக்கிப்பார்த்து கலங்கினேன். அவருடன் தொலைபேசியில் அவ்வப்போது உரையாடியிருக்கின்றேன். பின்னர் தொடர்பாடல் குறைந்தது. அவர் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொண்டதும் காரணம்.  அவர் பின்னாளில் கனடாவில் மூத்த பிரஜைகளை அழைத்துக்கொண்டு வெளிநாடு, உள்நாடு சுற்றுலா செல்லும் குழுவிலும் அங்கம் வகித்து வழிகாட்டியாகவும் பயணித்துக்கொண்டிருந்தவர்.  அவர் பற்றிய நினைவுகள் சாசுவதமானவை. எமது வீரகேசரி குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் இழந்திருக்கின்றோம். அவர் செல்வியாகவே வாழ்ந்து விடைபெற்றுவிட்ட எங்கள் சகோதரி. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R