1. அவரவர் – அடுத்தவர்

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) (* சமர்ப்பணம்: கவிதைப் பிதாமகர்களுக்கும் ‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்)

‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமாவென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
"வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ"ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
"முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ" என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!

(*சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தனிமொழியின் உரையாடல்’ – கவிதைத் தொகுப்பிலிருந்து)

2. சதுர நிலவின் மும்முனைகள்

தன் சதுர நிலவை
உள்ளங்கைக்குள் பொதிந்துவைத்திருந்தது குழந்தை.
வட்டமாயில்லாதது எப்படிச் சந்திரனாகும் என்று
கெக்கலித்துக் குற்றஞ்சாட்டி
கத்தித்தீர்த்த திறனாய்வாளரைப் பார்த்து
கன்னங்குழியச் சிரித்து
தன் ஒரு நிலவைப் பல வடிவங்களில்
பிய்த்துப்போட்டதில்
பெருகிய ஒளிவெள்ளத்தைக்
கைகுவித்து மொண்டு குடித்து மகிழ்ந்த குழந்தை
நாவறள நின்றிருந்தவரை அன்பொழுகப் பார்த்து
அவர் கையிலிருந்த தரவரிசைப்பட்டியல் தாளைத்
தன் சின்னக்கைகளால் விளையாட்டாய்ப் பறித்து
அதில் சிறிது ஒளிநீரை அள்ளி ஊற்றி
அவரிடம் குடிக்கச் சொல்லித் தந்த பின்
தன்போக்கில் துள்ளி முன்னேறிச் சென்றது.

3. விதைப்பும் அறுப்பும்

ஒவ்வொரு நகர்விலும்
ஒருவகை ‘method in madness’ இரண்டறக் கலந்திருக்க
தனக்கு மிகவும் பிடித்த வெட்டாட்டத்தை
இடையறாது விளையாடிக்கொண்டிருக்கிறார் விமர்சகர்.
சுழற்றப்படுவது கிழிந்த காகிதவாள் என்று
புரிந்துகொள்ளாமல்
எளியோர் சரிந்துவிட
இறந்துபட
வி்ழுந்து விழுந்து சிரிக்கிறார்.
பெருங்குரலெடுத்து.
இல்லாத அரியணையில் பொருந்தியமர்ந்தபடி
கையிலிருக்கும் பட்டியலில் அவ்வப்போது
சில பெயர்களை சேர்த்தும் நீக்கியும்
பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும்
அவருக்குப் பிடிபடுமோ
தயாராகிக்கொண்டிருக்கும் இன்னொரு பட்டியலின்
வடிவமும்……
அதில் அவருடைய இடமும்?

4. நீள அகல வரையறைகள்

பந்திப்பாயை விரித்துப்போட்டால்
நான் முந்தி நீ முந்தி என்று
பெரியவர் சின்னவர் பக்கத்துவீட்டுக்காரர்
உற்றமித்ர பந்துக்கள் ஊர்ப்பெருந்தனக்காரர்கள்
படித்தவர் படிக்காதவர்
பிடித்தவர் பிடிக்காதவரெல்லாம்
பாயாசம் சாப்பிட,
பப்படம் சாப்பிட
பிரியாணி லட்டு பாசந்தி பிஸிபேளாபாத்
வறுவல் பொரியல் வச்சதெல்லாமே
பிரமாதம் பிரமாதம் அருமையோ அருமையென
உருகிக்கிறங்கி
திரும்பத்திரும்ப கடைவாயில் எச்சிலொழுகியவாறு
உறங்கும்போதும் உச்சாடனம் செய்ய
விழுந்தடித்துக்கொண்டு வருவார்களெனக்
கச்சிதமாய்ப் போட்ட கணக்கெல்லாம்
பொய்யாக_
வந்தவர்கள் அன்போடு மாப்பிள்ளை – பெண்ணை
வாழ்த்திவிட்டு
வழக்கம்போல் சுந்தரத் தமிழினில் உரையாடியவாறே
சமோஸாவையும் சிங்கிள்-டீயையும் ருசிக்க
தெருவோர தேனீர்க்கடைக்காய் காலெட்டிப்
போடக்கண்டு
பட்டுவேட்டி ஜரிகை அங்கவஸ்திரக்காரர்
பத்துநூறு பவுன் தங்கச்சங்கிலிக்காரர்
காலிக் கூடத்தில்
ஓலமிட்டபடியே…….

5. வல்லமை தாராயோ….

’கல்லடி பட்டாலும் சொல்லடி பட்டாலும்
நல்லபிள்ளைக்கழகு சிரித்துக்கொண்டேயிருப்பது’
என்று திரும்பத்திரும்பப் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறார்கள்
நல்லவர்கள் சிலர்; நாலும் தெரிந்தவர்கள்…

ஏலாதய்யா எம்குலச் சாமிகளே……
என்ன செய்ய…
வாலைக் குழைக்கத் தெரியாத ஏழைக் கவிக்கு
வாய்த்த முதுகெலும்பு வளையாதது.
சூடு இருக்கிறது
சுரணையிருக்கிறது.

அரணையைப் பாம்பென்றால் ஆமாம்சாமி போட
’கீ’ கொடுத்தால் கைதட்டும் பொம்மையில்லையே கவி.

கருணைக்கொலை யென்ற பெயரில் காலங்காலமாய் பல கவிகளைக்
கைபோன போக்கில் கழுவிலேற்றிவருபவரின்
அருங்காட்சியகச் சுவர்கள் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
அறம்பாடலால்.

பாதகஞ் செய்பவரைக் கண்டா லவர் முகத்திலுமிழ்ந்துவிடச் சொன்ன
பாரதி காற்றுபோல்;
யாரொருவரும் கக்கத்திலிடுக்கிக்கொண்டுவிட முடியாது.

அம்மையப்பனாய் அறிவார்ந்த நண்பனாய்
அன்பே உருவான வாழ்க்கைத்துணையாய்
மொழி யிருக்கிறது.
இம்மை மறுமைக்கு இதுபோதும் –
வேறெந்த ஆசானும் தேவையில்லை.

பொந்தில் வைத்த அக்கினிக்குஞ்சுகளும்
வெந்து தணியும் காடுகளும்
வளர்கதையாக _

விரியும் பாதை. செல்வழி தொலைவு
சொற்பநேரமே இருப்பு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமி கவிதை.
சரணம் கவிதை.

வணக்கம் சொல்லி விடைபெறுகிறோம்
ஒரு சிறு பிரார்த்தனையோடு:

உம்மைப் பெண்டாளனென்றும் புல்லுருவியென்றும்
அம்பலத்தில் நாக்குமேல பல்லுபோட்டுப் பேசும்
நீசத்தனம்
யார்க்கும் வாய்க்காதிருக்கட்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R