(30) மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -இன்று இங்கு (பெங்களூருவில்) பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்துள்ளது. எனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஓம் பூரி பெங்களூருவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் International Film Festival – ல் பேசியிருக்கிறார்.  Art film – ம்  commercial film - ம் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்று. ஷ்யாம் பெனிகல், கோவிந்த் நிஹலானி போன்றாரால் சினிமா உலகத்துக்கு அறிமுகப் படுத்தப்பட்டவர். சினிமாவுக்கு வரும் முன் National School of Drama, Delhi யில் பயின்றவர். நாஸருதீன் ஷா போன்று நாடகம் பயின்றவர் சினிமாவுக்கு வந்ததும் தன்னை மிக வியந்து பாராட்டும் வகையில் ஆச்சரியப்படும் வகையில் சினிமாவுக்கு ஏற்ற வகையில் தன் நடிப்பை மாற்றிக்கொண்டவர். இன்று ஹிந்தி சினிமா உலகில் மிகச்சிறந்த நடிகர் என்று நாம் அங்கீகரித்தகுந்த மிகச் சிலரில் ஒருவர் இந்த ஓம் பூரி.

அவர் பெங்களூரில் சொன்னதாக செய்தி சொல்கிறது. ஓம் பூரி சொன்னாராம், “ஆர்ட் சினிமாவும் வியாபார சினிமாவும் சந்தித்துக்கொள்ள வேண்டும். பாட்டையும் டான்சையும்( சங்கீதம், நடனம் என்று நான் அதை பொழிபெயர்க்க விரும்பவில்லை – இந்த இரண்டையும் நாம் புரிந்து கொண்டிருப்பது மிகவும் கேவலப்படுத்தித்தான்). நாம் வெறுத்தொதுக்கக் கூடாது. ஏனெனில் இவை இரண்டும் நம் பாரம்பரியத்தில் ஊறியவை. நம் சினிமாவை தனித்துக் காட்டுபவை. எல்லாவற்றுக்கும் மேலாக இவை இரண்டும் தான் ஹாலிவுட் சினிமாவின் படையெடுப்பை மீறி நம் சினிமாவை வாழவைப்பவை. “ என்றெல்லாம் அதன் புகழ் பாடியிருக்கிறார். இது அவருக்கு தன் அறுபதாவது வயதில் தோன்றிய ஞானம். ஷ்யாம் பெனிகல், சத்யஜித் ரே, கோவிந்த் நிஹலானி போன்றோரின் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதெல்லாம் அவருக்கு இந்த ஞானம் கிட்டவில்லை. அப்போதும் ஹிந்தி சினிமா தன் பாட்டு டான்ஸோடு உலகைக் கலக்கிக் கொண்டிருந்தது தான். இப்போது அவருக்கு இந்த ஞானம் தோன்றக் காரணம், ஹிந்தி சினிமாவில் கிடைக்கும் பிராபல்யமும் பணமும் வேறு எதிலும் கிடைக்காது. ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார் தான். ஆனால் அதில் பெயர் கிடைக்குமே தவிர பணம் வடிவேலு மாதிரியோ கூடக் கிடைக்காது. ஹிந்தி பட வாய்ப்புக்கள் இப்போது அவருக்கு இல்லை. கிடைக்கும் வாய்ப்புக்களின் படங்கள் எப்படி இருந்தாலும் அவர் தனித்து தன்னை ஓம் பூரி என்னும் சிறந்த கலைஞராக அடையாளம் காட்டிக்கொள்கிறார் தான். எல்லாம் நகைச் சுவைப் பாத்திரங்கள். பாவம் வியாபார உலகில் ஒளி வீச அவருக்கு  ஆசை ஏற்பட்டு விட்டது. தவறில்லை. ஆனால் அதற்கு நியாயம் கற்பிக்கும் வாதம் தான் அபத்தமானது.

போகட்டும்.  நம்மூர் சந்தை தயாரிப்பாளர்களில்.சிலர்  கொஞ்சம் ஆங்கிலம் ஸ்டைலாக பேசுகிறவர்கள் தம் கோமாளித்தனத்துக்கு அங்கீகாரம் கேட்பது போல, ”ஆர்ட் சினிமா, கமர்ஸியல் சினிமா என்று இரண்டு கிடையாது. ஆர்ட்டோ கமர்ஸியலோ, எதாக இருந்தாலும், நல்ல சினிமா மோசமான சினிமா என்று தான் இரண்டு உண்டு” என்பார்கள். இந்த வாதம்,  ”படம் எதுக்கய்யா எடுக்கறாங்க, சம்பாதிக்கத்தானே. சம்பாதிக்கறது ஒண்ணும் பாவம் இல்லையே” என்று சொல்வார்கள். இது எந்த அரசியல் வாதியும் “நாங்கள் மக்களுக்கு உழைக்கிறோம்” என்று சொல்வது போன்ற ஒரு படு  மோசடித்தனமான கோஷம்.   

வெகு காலம் ஆர்ட் சினிமா என்று சொல்கிறார்களே, அது என்ன ஆர்ட் சினிமா.? அதை அர்த்த முள்ள சினிமா, நம் வாழ்க்கையைச் சார்ந்த சினிமா, இன்றைய சந்தைக்கான சரக்கு என்றில்லாமல், வெகு நீண்ட காலத்துக்கு மனித வாழ்க்கையோடு உறவாடும் குணமுள்ள சினிமா, மொழி, கலாசாரம், எல்லாவற்றையும் தாண்டி உலகின் எந்த மூலையிலிருக்கும் மனிதனுக்கும் அர்த்தமும் உறவும் உள்ள சினிமா, சினிமாவான சினிமா (புகைப்படமெடுக்கப்பட்ட நாடகமோ, கூத்தோ, ரெக்கார்ட் டான்ஸொ அல்ல) சினிமா என்ற தொழில் நுணுக்கம் தரும் சினிமா என்ற தகுதி பெறக்கூடிய சினிமா, சுருக்கமாக சினிமா என்று இனம் காணக்கூடிய ஒன்றைத் தான் சந்தைக்காக தயாரிக்கப்பட்ட  சரக்கு அல்லாத ஒன்றை ஆர்ட் சினிமா என்று பிரித்து பார்க்கும் வகையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும்..

இது தெரியும் பாமரத்தனமான மோசடி கோஷங்கள் எழுப்புகிறவர்களுக்கு. ஆனால் இவர்களின் பணக்கொள்ளையை நியாயப் படுத்த குத்தாட்டம் போட்டு அதை நமது பாரம்பரியத்தில் உள்ள டான்ஸாக்கும் என்று  கோஷம் போட்டு மறைக்கும் களவாணித் தனம்

முதலில் இவர்களுக்கு சினிமா என்றாலே என்னவென்று தெரியாது. ஓம் பூரி பேசிய அதே விழாவில் பேசிய இரானிய சினிமா இயக்குனர் மெஹ்ர்ஜூயி, Cinema’s soul is in poetry and philosophy not in gadgetry “ என்று சொல்லியிருக்கிறார். ஓம் பூரியைக் கேட்டால் “ஆமாம் அது உண்மைதான்” என்று கட்டாயம் ஒப்புக்கொள்வார். மெஹ்ர்ஜூபியின்  படங்கள் எதுவும் நான் பார்த்தது கிடையாது. அவர் பெயரையே நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன். ஆனால் இராணிய படங்கள் பற்றியும் இயக்குனர்கள் பற்றியும் எனக்கு அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களில் பெரும்பாலானவர் இரானிய அரசின் சிறையில் கிடப்பவர்கள். அரசின் கொடுமைக்கு ஆளாகியவர்கள். இரான் ஒரு முஸ்லீம் நாடு. அரசும் இஸ்லாமின் மதகுருக்களின் பிடியில் சிக்கி பணிந்து நடப்பவர்கள். அரசின் முடிவுகளையும் தன் மதப்பார்வைக்கு ஏற்ப் தடுத்து நிறுத்தும் அதிகாரம் மதகுரு கொமேனிக்கு உண்டு. அத்தகைய சமூகத்தில் தான் பெண்கள் சுதந்திரம் மறுக்கப்படுவதையும் ஆண்களின் யதேச்சாதிகாரத்தையும் வெளிப்படுத்தும் படங்களை அவர்கள் தயாரிக்கிறார்கள். ஒரு யதேச்சாதிகாரத்தின் கீழ், மதத்தின் இறுகிய பிடியின் கீழ் வாழும் ஒரு கலைஞன் தன் சுதந்திரத்தை வலியுறுத்தும் போது தான் கருத்து சுதந்திரம் என்றால் என்ன, கலைஞர் என்று யாரைச் சொல்வது என்று நாம் தெரிந்து கொள்கிறோம். அதை நாம் இரானிய சினிமாவிலிருந்தும் இரானிய கலைஞர்களிடமிருந்தும் கற்றுக் கொள்கிறோம். சற்று முன் சொல்லப்பட்ட மெஹ்ர்ஜூயியின் படம் ஒன்று ஒன்பது வருடங்களாகத் திரையிடப்படவில்லை. ”என் இப்போதைய அக்கறை எங்கள் சமூகமும் அரசும் மறுக்கும் பெண்களின் சுதந்திரத்தைப் பற்றித் தான்”, என்கிறார் மெஹ்ர்ஜூயி. அவர் சொல்கிறார் ”தொழில் நுட்ப சாதனங்கள் முக்கியமல்ல” அவை சினிமாவாகாது” என்று. 

நம்மூர்க் காரர்களுக்குத் தான் அது புரியாது. நாம் எவ்வளவு டெக்னிக்கில் முன்னேறியிருக்கிறோம். சங்கரைப் பாருங்க, மணி ரத்திரந்த்தைப் பாருங்க,  க்ராபிக்ஸைப் பாருங்க, நாம் உபயோகப்படுத்தற காமிராவைப் பாருங்க, அந்தால காரு ஆகாயத்திலே பறக்க வச்சிடறாரே. ரயில் பெட்டி முப்பது முப்பத்தைந்தையும் ரஜனி என்னமா பக்கவாட்டிலே படுத்துக்கிட்டே என்னா வேகமா ஒடி பெட்டிக்குள்ளெ சடக்குனு புகுந்துக்கறாரு? இதெல்லாம் டெக்னிக் இல்லாமே முடியுமா?” என்று சொல்லக் கூடும்

இதெல்லாம் நம்மூரில் கிராமங்களில் பயாஸ்கோப் காட்டுகிறேன் என்று ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒருவன் வருவான். ஒரு சின்ன துவாரத்தில் கண் வைத்துப் பார்க்க வேண்டும். ”பாரு பாரு பட்டணம் பாரு,” என்று பாடிக்கொண்டே உள்ளே படம் காட்டுவான். அதைப் பார்த்து அதிசயித்த சிறு வயதுப் பருவம் உண்டு. இப்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் நமக்கு ரஜனி சுட்டு விரலை ஆட்டினால் ரம்பம் அறுக்கும் சப்தம் வர வேண்டும். ஆகாயத்தில் சங்கர் படக் கதா நாயகியும் நாயகனும் டான்ஸ் பண்ணிக்கொண்டே ஆகாயத்தில் மிதப்பார்கள். பின் அந்தரத்திலேயே அப்படியே கால் பரத்தி கைகள் நீட்டி உறைந்து விடுவார்கள். ரஜனி நடு ரோட்டில் நின்றால் அவரைத் தாக்க வந்த கூட்டத்தின் திருப்பாச்சி, வெட்டருவாள், பிச்சுவாக்கத்தி எல்லாம் அவர் உடம்பில் வந்து ஒட்டிக்கொள்ளும்.  இது ரஜனி ஸ்பெஷல். மற்ற ஹீரோக்களுக்கெல்லாம், டெக்னீக் வேறே. சரி தனுஷை எடுத்துக்குவோம். அவருக்குன்னு ஒரு ஸ்டைல் அவர்  வீர நடை போட்டு வருவார். எதிரில் வரும் எட்டு தடியன்களும் அவர் முஷ்டியை நீட்டியதுமே எட்டு திசைகளிலும் ஏதோ கம்பி மத்தாப்பு பூச்சொரிவது போல மிக அழகாக ஆகாயத்தில் கோலம் போட்டது போல விழுவார்கள். அவர்களுக்குஒன்றும் ஆகியிருக்காது ஒரு சிராய்ப்பு, ஊஹூம். . நமக்கு கால் எலும்பு முறிந்திருக்கும். ஆனால் அந்த தடியர்கள் மீண்டும் எழுந்து வந்து இன்னொரு ரௌண்ட் வந்து வரிசையாக ஒவ்வொருவராக வந்து அடிவாங்கிச் செல்வார்கள்.. அல்லது மறுபடியும் தனுஷ் தன் முஷ்டியைச் சுழட்டவேண்டியிருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் என்ன சொல்லியிருக்கிறாரோ தெரியாது. எவ்வளவு நேரத்துக்கு எவ்வளவு ரௌண்ட் அடிவாங்க வேண்டும் என்பது ஷூட்டிங் ஸ்க்ரிப்டில் இருக்கும்.

தமிழ் வாழ்க்கைக்கும் நம் அன்றாட சந்தோஷங்கள், ஏமாற்றங்களுக்கும் இந்தப் படங்களுக்கும் ஏதும் சம்பந்தமிராது. எல்லாம் கனவுலக மயக்கங்கள். கற்பனைக் கனவுகள்.  அதிலும் பைத்தியக்காரக் கனவுகள்.

சினிமாவில் தொழில் நுட்பம் என்பது நமக்குத் தெரியாது எப்படி எடுத்தார்கள் என்று. படம் பார்க்கும்போது “என்னா டெக்னிக்கு என்னா டெக்னிக்கு” என்று வாய் பிளக்க மாட்டோம்.

ஒரு இரானியன் படம். Mirror. என்று பெயர். Zafar Panahi அதன் இயக்குனர். இவர் இப்போது எட்டு வருஷ காலமாக சிறையில் இருக்கிறார். எந்த அப்பீலும் அவருக்கு உதவ வில்லை. உலகத்தின் சிறந்த சினிமா கலைஞர்கள் எல்லாம் அவருக்காக மண்றாடியும் பயன் இல்லை. அப்படி என்ன ராஜத்ரோகம் செய்துவிட்டார் அவர்?. பேசாமல் நமீதாவோடு “வருவீயா, மாட்டீயா? என்று டான்ஸ் ஆடிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால அவர் புத்தி கெட்டுப் போய், இரானில் பெண்களின் அவல நிலை பற்றி படம் எடுத்திருக்கிறார். அவ்வளவே. The Circle என்று ஒரு படம். ஒரு இளம் பெண் கர்ப்பமாகி யிருக்கிறாள். அவளுக்கு உதவுகிறவர்கள் யாரும் இல்லை. அவளுடைய அன்பான சினேகிதி கூட அவள் கர்ப்பத்தைக் கலைக்க உதவுவதில்லை. அவள் சிறையிலிருந்து தப்பியவள். கடைசியில் தெரு விபசாரியாகத் தான் குற்றம் சாட்டப் பட்டு சிறைக்கு எடுத்துச் செல்லபடுகிறாள்.

Off side என்று இன்னொரு படம். ஒரு இளம் பெண். அவளுக்கு.  கால்பந்தாட்டம் பார்க்க ஆசை. கொரியாவும் இரானும் ஆடுகிறார்கள். . அப்பாவின் கட்டுப் பாட்டையும் மீறி , ஆண் வேஷம் போட்டுக்கொண்டு ஸ்டேடியத்துக்குப் போகிறாள். அவள் பிடிபட்டு அவளைப்போல பந்தாட்டம் பார்க்க வந்த இன்னும் மற்ற பெண்களோடு ஒரு வெளியிடத்தில் ஆடுகள் கிடையில் அடைக்கப்படுவது போல அடைபடுகிறாள். கடைசியில் அவளும் ஒரு போலீஸ் வானில் மற்ற கால்பந்தாட்ட ரசிகைகளோடும், வேசிகளோடும் எடுத்துச் செல்லப் படுகிறாள். அவள் குற்றம் அனேகமாக தெருவில் தொழில் செய்தாள் என்று தான் இருக்கும். சரி, மிர்ரருக்கு வரலாம். ஒரு எட்டு வயதுக் குழந்தை. ஸ்கூல் முடிந்ததும் வெளியே வருகிறது. ஸ்கூலின் சுற்றுச் சுவர் மேல் உட்கார்ந்து கொள்கிறது. அதன் இடது கையில் ப்ளாஸ்டர். அம்மா வருவாள் அழைத்துச் செல்ல என்று. அந்த ஸ்கூல் எதிரில் மௌண்ட் ரோட் மாதிரி ஒரு போக்கு வரத்து நெரிசல் மிகுந்த ரோட். நமது மிகச் சிறந்த படங்களில் ஒன்றான, மூன்றாம் பிறை உலக நாயகன் நொண்டி நொண்டிக்கொண்டே,. ஸ்ரீதேவி உட்கார்ந்து இருக்கும் பெட்டி பின்னால் கதறிக்கொண்டே ஒட  வசதியாக முற்றிலும் ஈ காக்கா இல்லாத ரயில்வே ப்ளாட்ஃபார்மாக (ஒரு அரை நாளுக்கு ஸ்டேஷனையே வாடகைக்கு எடுத்திருப்பார்களோ என்னவோ ) இராது. கார்களும் பஸ்களும் விரைந்து சென்று கொண்டிருக்கும் அந்த ரோடின் குறுக்கே அந்த சிறு பெண் கொஞ்சம் இடைவெளி கிடைத்ததும் குறுக்கே போவாள், எதிர் நடை பாதைக்குச் செல்ல. முதலில் யாராவது ரோடைக் கடக்கிறார்களா என்று பார்த்து அந்த ஆளோடு ஒட்டிக்கொண்டு செல்வாள். இதற்குள் மறுபடியும் கார்கள் குறுக்கிடும். பாதி ரோடில் நின்று பின் அடுத்த பாதியில் ரோடு காலியாவது  பார்த்து ஓடுவாள்.. இப்படி அந்த படம் பூராவும் சுமார் ஒன்றரை மணி நேரம் படம் பிடித்திருப்பது அத்தனையும் அந்தக் குழந்தை தாய் வராது தவிக்கும் நிகழ்வுகள் தான். படப் பிடிப்புக் குழு ஒரு வானில் காமிரா வைத்துக்கொண்டு படம் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அது நமக்குத் தெரியாது. கடைசியில் படம் முடிவதற்கு 10 நிமிஷம் இருக்கும் போது தான் அந்தப் பெண்,  ”நான் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தன் உடலில் பொருத்தியிருக்கும் ஸ்பீக்கரைக் கழற்றிக் கொடுப்பாள். படம் பிடிப்பவர்கள் ஒவ்வொருவராக வந்து அவளைக் கெஞ்சுவார்கள் ”யாரும் உன்னை எதாவது திட்டினார்களா?. என்று. அவர்களுக்குள் தகராறு எழும். ”இன்னம் கொஞ்ச நேரம் தானே கடைசிக் காட்சி. யார் குழந்தையை என்ன சொன்னது.? என்று அவர்களுக்குள் வாதப் பிரதி வாதங்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வார்கள். இந்தக் கடைசிக் காட்சியின் போது தான் நமக்கு காமிராவுடன் ஒரு வண்டி பின் தொடர்கிறது என்று தெரியும். . அதுவும் எப்படி சாத்தியம்? என்று நமக்கு வியப்பாக இருக்கும். அங்கு இருக்கும் டாக்ஸி ட்ரைவர்களின் கூட்டத்தில் சென்று அந்தப் பெண் விசாரிப்பாள். இன்னொரு துணி வியாபாரி தான் அவளை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்துச் செல்வதாக தன் பைக்கில் ஏற்றிச் செல்வான். இன்னொரு சமயம் அங்கு வரும் பஸ் டிரைவரிடம் விசாரிப்பாள். “அன்னிக்கு என் அப்பாவோட சண்டை போட்டாயா? என்று இன்னொரு ட்ராஃபிக் போலிஸிடம் கேட்பாள். அன்று ஃபைன் போட்டாயே? எங்க அப்பா இன்ன காரில் வந்து கொண்டிருந்தாரே என்று அவரிடம் வழி கேட்பாள். அவர்கள் விழிப்பார்கள். குழந்தைக்கு உதவ விருப்பம் தான். ஆனால் குழந்தை சொல்வதை எப்படி புரிந்து கொள்வது? கற்பனை செய்துகொள்ளுங்கள். மௌண்ட் ரோடில் சாயந்திரம் ஆறு மணிக்கு இதெல்லாம் நடக்கிறது. ஷூட்டிங் நடக்கிறது. ஒரு எட்டு வயதுப் பெண் அங்குமிங்கும் ரோடைக் கடக்கிறாள் விசாரிக்கிறாள். ட்ராஃபிக் போலீஸ். டாக்ஸி ட்ரைவர்கள் கூட்டம் என்று எல்லாரையும்.

இது ஸ்டுடியோவில் நடக்கிற காரியம் இல்லை. பகலில் நடு ரோடில். இயல்பான அவ்வளவு நெரிசலையும் படத்துக்குள் கொணரவேண்டும். இடையில் அந்தச் சிறு பெண்ணும் நடிக்கவேண்டும், அவர்களில் ஒருவராக.. இது தான் தொழில் நுட்பம். இந்த தொழில் நுட்பம் இன்னம் நம்மவர்க்கு சாத்தியமாகவில்லை என்று தான் நான் நிச்சயமாகச் சொல்வேன்..

ஜாஃபர் பனாஹி சிறையிலடைபட அவர் செய்த குற்றம் என்ன? அயதொல்லா கொமேனி ராஜ குருவாக இருக்கும் இரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்டம் பார்க்கப் போகலாமா? கர்ப்பமாகி தவறு செய்த பெண் தான் கர்ப்பத்தைக் கலைக்கலாமா? அவளுக்கு உதவுவது குற்றம் என்று மறுக்கும் சினேகிதி நர்ஸும் டாக்டரும் இருக்கும் நாட்டில். சரி. இந்தச் சிறு பெண் எட்டு வயதுப் பெண் அம்மாவுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் கதையில் என்ன குற்றம்.?

எப்படியடா இதையெல்லாம் படம் எடுக்கிறார்கள் என்று நாம் வியக்கச் செய்தவன் சிறையில். கெட்டிப்பட்ட மதவாதிகளின் இறுகிய மனங்கள் ஆட்சி செய்யும் நாட்டில் இருக்கும் வதைபடுவோருக்கு சாத்தியமாகும் படங்கள் இந்த மதச் சுதந்திரம் மதசார்புற்று இருக்கும் சுதந்திரம், பிரமனின் நாக்கில் இருக்கும் சரஸ்வதி எங்கு மலம் கழிப்பாள் என்று கேட்கும் சுதந்திரம் உள்ள நாட்டில் ஏன் மாயா ஜாலங்களே மக்கள் விரும்பும் சினிமாவாகிறது? அதனால் தான் நம்மவரகள் அரசுக்கு வாரத்துக்கொரு முறை பாராட்டு விழா கொண்டாடுகிறார்கள். ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு. அதில் தம் ஜன்ம சாபல்யம் காண்கிறார்கள். இவர்களும் சிறை செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.கொஞ்சம் முதுகெலும்போடு, கொஞ்சம் வியவஸ்தையோடு, கொஞ்சம் பொதுப்புத்தியை இழக்காமல் இருக்கலாம். இதுவே இவர்களிடம் அதிகம் வேண்டுவதாகிறதோ என்னவோ!


(31) மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -இது காறும் நான் எழுதிவந்தவற்றுக்கு அவ்வப்போது வரும் எதிர்வினைகளைப் பார்க்கும் போது தெரிவது என்ன?, இதை நான் ஆரம்பத்திலிருந்தே அனேகமாக ஒரு வருட காலமாக தொடர்ந்து வரும் கருத்துக்களில், தொனிகளில் கவனித்து வருகிறேன் பல அபத்தமான கருத்துக்களை அவை அப்போதைக்கு கிளுகிளுப்பூட்டுவதால் சற்றும் யோசிக்காமல் சந்தோஷமாக உள்வாங்கிக்கொண்டு பின் அந்த கிளுகிளுப்பை உதற மனதில்லாமல் ஏதோ மதம் போல, அந்த அபத்தத்தை ஏதேதோ சால்ஜாப்புக்கள் சொல்லி  இறுகப் பற்றிக்கொண்டிருக்கத் தான் தோன்றுகிறது. ”சினிமா என்னத்துக்கு இருக்கு?. நாள் பூராவும் உழைத்து ஓய்ந்து வரும்போது மனதுக்கு சந்தோஷம் தரும் பொழுது போக்கு தானே? என்று. இந்த பாமர.  பைத்தியக் காரத்தனத்துக்கு சினிமா தயாரிப்பாளர்களிலிருந்து தொடங்கி சினிமா பெஞ்ச் ரசிகன் வரை எல்லோரும் நியாயம் கற்பிக்கிறார்கள். இந்த அபத்தத்திற்கு கலை என்று ஒரு லேபிளும் ஒட்டி  அறிவு ஜீவிகளும், அதிகாரமும் பத்திரிகையாளரும் அதற்கு சப்போட்டு கொடுக்க மிக சௌகரியமான சாக்காகக் காண்கிறான் ரசிகன். இதை பெஞ்ச் ரசிகன் மாத்திரம் சொல்லவில்லை. ரூபாய் 200-ஓ 500-ஓ கொடுத்து காரில் குடும்பத்தோடு வரும் அதிமேதை பணக்காரன் கூடத் தான்.இந்தப் பைத்தியகார கூத்தாட்டத்திற்கு கலை என்று வேறு லேபில் கொடுத்தால் வேண்டாம் என்கிறதா என்ன சம்பந்தப்பட்ட யாருக்கும்?.

கலை என்பது சர்க்கஸாகியிருக்கிறது.. மாயாஜால காட்சியாகி யிருக்கிறது. ரிகார்ட் டான்ஸாகியிருக்கிறது. ஒவ்வொருத்தனும் தன்னைக் கலைஞர் என்றும் என்னென்னமோ சிகரம், மேதை, திலகம், ஞானி, என்று ஒரு ஒளி வட்டத்தை கற்பனை செய்து கொள்கிறான்.

இந்தக் கூத்தாட்டத்தையெல்லாம் செய்து கொண்டே, இதன் அபத்தத்தையும் அவ்வப்போது போட்டு உடைக்கும் ஒரே ஜீவன் தனுஷைத்தான் பார்க்க.முடிகிறது. அப்படிச் சொன்னாலும் தனுஷ் குத்தாட்டம் போடுவதையோ, பத்து குண்டன்களை சும்மா காலை உதறி, கையை வீசி திரும்பத் திரும்ப விழுத்தாட்டும் காரியங்களை செய்ய மறுப்பதில்லை. மாமனார் செய்யும் விரலை அசைத்து ரம்பம் அறுக்கும் ஒலிப் பதிவோடு தன் வீராப்பைக் காட்டத் தொடங்கவில்லை (தமிழ்ப் சினிமா டெக்னீக்கில் உலகத்தரத்துக்கு உயர்ந்துள்ளதற்கான சாட்சியம் இந்த விரலைசைப்பும் ஒரு காலை எடுத்து ஒரு ராஜ கம்பீரத்தின் பாவனையுடன் இன்னொரு காலின் மேல் ஒரு வீரப் புன்னகை  பூத்து ,போடுவதும், அதெல்லாம் ரம்பம் அறுக்கும் ஒலி பின்னணியில் இருக்க வேண்டும். உலகத்தில் எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் இந்த மாதிரி டெக்னீக்கைக் காணமுடியாது,. இது தமிழ் சினிமா மூளையின் கண்டுபிடிப்பு. அவர்கள் காபிரைட். சிம்புவும் அதேபோல செய்ய ஆரம்பித்தாயிற்று

.இன்னும். ”இதையெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். செய்கிறேன்” என்று சொல்லி உதறும் நிதானம், புத்தி விவேகம் தனுஷிடமிருந்து போய்விட வில்லை. உலக நாயகனிடமோ அல்லது வேறு யாரிடமோ இந்த பேத்தல் காரியங்களை பேத்தல் என்று ஒப்புக்கொள்ளும் விவேகமும் வேளையும் இன்னும் வரவில்லை. சமீபத்தில் தான் பாலுமகேந்திராவின் படம் ஒன்று பார்த்தேன். அது ஒரு கனாக் காலம் என்று நினைக்கிறேன். அதில் தனுஷ் பாலு மகேந்திரா சொன்னதைச் செய்யும் நேர்மையைப் பார்த்தேன். அதை நம் தமிழ் நடிகர்கள் வேறு யாரும் செய்திருக்கமாட்டார்கள். தன் இமேஜ் என்று ஒன்று இருப்பதாகவும், தன் ரசிகர்கள் இதை ஏற்கமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். தனுஷுக்கு அந்தக் கவலையெல்லாம் ஏதும் கிடையாது. “என் முகத்தைப் பாத்து எவளாவது……..” என்று தொலைக் காட்சியில் வெளிப்படையாகப் பேசும் ஒரு தமிழ் சினிமா நடிகனை, “அம்மா நீங்கள்ளாம் பெரிய பெரிய இடததைச் சேந்தவங்க., நான் ஏதோ சாதாரண……”என்று ஐஸ்வர்யாவைப் பார்த்து மேடையிலேயே சொல்லும் கணவனையும் நடிகனையும் முதல் தடவையாக தமிழ் சினிமாவில், தொலைக்காட்சியில் பார்க்கிறோம். நினைத்துப் பார்க்கலாம். இந்த வார்த்தைகளை, தனுஷ் நடிக்கும் ரோல்களை, வேறு எந்ததமிழ் நடிகரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. கார்த்திக் எப்போதும் தரித்திருக்கும் அந்த சிரிப்பு, சிம்பு பேசும், முகத்தை வைத்துக்கொள்ளும் பாவனைகள், தன்னைப் பற்றி வளர்த்துக்கொண்டிருக்கும் பிம்பங்கள் ஜெயம் ரவியின் அங்க சேஷ்டைகள் எதுவும் சகித்துக்கொள்ள் முடிவதில்லை. இவர்களை இந்தத் தலைமுறையினர் என்பதால் சொல்கிறேன். இவர்கள் தனித்து நிற்பவர்கள் இல்லை. எல்லோருக்கும் அவரவரது அலட்டல்கள், ஒளிவட்டம் ஒன்று தலைக்கு மேலும் பின்னும் சுழல்வதான பிரமைகள், சிவாஜி கணேசனிலிருந்து தொடங்கி தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது.

சோகம் என்னவென்றால், இவர்கள் எல்லாம் வேறு வித சூழலில், சமுதாயத்தில், சினிமா கலாசாரத்தில், இப்படியான பிரமைகளில மூழ்கிக் கிடந்திருக்க மாட்டார்கள். பாரதி படத்தில். செல்லம்மாளாக நடித்த தேவயானியிடம், glamour girl- ஆகவே தமிழ் சினிமாவில் அது வரை வாழ்ந்துவிட்டவரிடம் இந்த செல்லம்மாள் ஒளிந்து கொண்டிருப்பதை யார் எதிர்பார்த்திருக்க முடியும்?. பாரதி படம் முடிந்ததும் அவர் மறுபடியும் ஆடிப்பாடி வசனம் பேசப் போயாயிற்று. இப்படி எத்தனை பேர் இருக்கிறார்களோ தமிழ் சினிமாவில். கமலஹாசனைச் சொல்லலாம். ஆனால் கமலஹாஸனுக்கு என்ன சொன்னாலும் பொழுது போக்கு தானே சினிமா என்ற வாய்ப்பாட்டையே அலுக்காமல் சலிக்காமல் சொல்லும் தமிழ் சினிமா ரசிகனைப் போல, என்னதான் உலகப்படங்களையெல்லாம் பார்த்து பார்த்து வியப்பதாகச் சொன்னாலும் ஆணோ பெண்ணோ கிழவியோ, குள்ளனோ, கோவணதாரியோ, தசாவதாரம், சதாவதாரம் என்ற அவதார மேக்கப் பிரமைகளில் ஆழ்ந்திருக்கும், மேடையில் கலைஞர், முதல்வர், கருணாநிதி நடுநாயகமாக் அமர்ந்து பாராட்டுக்களை முகமலர்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில், ”கலைஞரிடம் தான் நான் தமிழ் கற்றேன்,  பராசக்தி படத்தைப் பார்க்கும் போது கலைஞருக்கு 1952 லேயே இருந்த சினிமா உத்திகள் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது!
என்று இப்போதும் நான் மலைத்து பிரமித்துப் போகிறேன்” என்று தன் உலகளாவிய சினிமா ரசனையை வெளிக்காட்டும் போதும் தமிழனுக்கு எது தெரியுமோ தெரியாதோ, அதிகார பீடங்களுக்கு பாலாபிஷேகமும் செய்து சாஷ்டாங்க நமஸ்காரமும் உலகறியச் செய்து தன் வாழ்க்கையை எவ்வித உத்பாதங்களும் நேராது இன்ஷ்யூர் செய்வதற்குரிய அத்தனை உபாயங்களும் தெரிந்தவன் என்பது சாட்சியம் பெற்றது

வெகு அபூர்வமாக ஒரு தமிழ் விளம்பரப் படம் அதிகம் அசட்டு பாவனைகள் நமக்கேயான வசனங்கள், நடிப்புகள் இல்லாத அமைதியும் அழகுமான விளம்பரம் சூர்யா பக்கத்திலிருக்கும் ஜோதிகாவுக்கு சூர்யனைக் காட்டி, நீ கேட்டால் அந்த சூர்யனை
எப்போதும் அங்கேயே இருக்கச் செய்துடட்டுமா? என்று சொல்ல, அப்போது ஜோதிகா சில வினாடிகளுக்கு சூர்யாவைப் பார்க்கும் கூர்ந்த பார்வையும் (இப்படியும் உளறுவியா நீ, பெண்டாட்டிகிட்ட பெருமை அடிச்சுக்க) பின் சின்ன, முகச்சுளிப்பும்) எத்தனை சுலபமாகச் சொல்லிவிடுகிறது. இந்த மாதிரி திறன் ஜோதிகா             விடமிருப்பதை எந்தத் தமிழ் இயக்குனர், தன் படம் மூலம் வெளிக்கொணர முடிந்திருக்கிறது? வித்தியாசமாகப் படம் எடுப்பதற்கு முயன்றவர் பிரகாஷ் ராஜ் தன் மொழி படத்தில் ஜோதிகாவை ஊமைப் பெண்ணாக்கி என்னேன்ன  கோணங்கித்தன மெல்லாம் செய்ய வைத்திருக்கிறார்? .எந்த ஊமைப் பெண் இவ்வளவு கோணங்கித் தனம் செய்யப் பார்த்திருக்கிறோம்? அதில்லையென்றால் டான்ஸ், க்ளாமர் கேர்லுக்கு தமிழ்ப் படங்களுக்கென்று தயாரித்து வைத்திருக்கும் பாவனைகள், ஆட்டங்கள், வசனஙகள். பாட்டுக்கள் .தமிழ் ரசிகர்களிடம் என்ன, எந்த விதமான ரசனை வளர்க்கப்பட்டிருக்கிறது அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், வசூலை அள்ளிக்கொண்டு வர என்னென்னெ செய்யவேண்டும் என்று கையிலிருக்கும் ரெடிமேட் கையடக்கப் புத்தகம் பார்த்துப் பார்த்து செய்யும் போது தேவயானிக்கும் ஜோதிகாவுக்கும் எங்கேயாவது ஒன்றிரண்டு காட்சிகள் அபூர்வமாக ஒரு படத்தில் கிடைத்தால் பெரிது. அதை நம் தமிழ் ரசிகர்களும் மறந்து விடுவார்கள்.

அந்த வெற்றி ஃபார்முலாவும் வெற்றி தருவதில்லை. ரசிகர்கள் என்ன வேண்டுகிறார்கள்,  என்று தெரிந்து வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பாபா என்ன ஆயிற்று? குசேலன் என்ன ஆயிற்று< உலக நாயகனின் தசாவதாரம் என்ன ஆயிற்று? ஆளவந்தான் என்ன ஆயிற்று? காப்பியே அடித்தாலும்,  உன்னைப் போல் ஒருவன் தன் கையடக்கப் புத்தகத்தின் பட்டியலில் இருக்கும் வெற்றிப்பட மசாலாக்களை எல்லாம் சேர்க்காமல் எடுத்த உன்னைப் போல் ஒருவனால் என்ன பெரிய படுபாதாள வீழ்ச்சி ஏற்பட்டது? என்ன செலவாயிற்று? என்ன வசூல்? என்ன நஷ்டம்?
ஏன் கோடி கோடியா அள்ளனும் என்ற பேராசை எல்லாரையும் பிடித்துப் பேயாக ஆட்டுகிறது?. தன் வெற்றிப்பட பார்முலாக்களை தன் ரசிகர்கள் ஆசைகளைப் பற்றி தவறிப் போய் A Wednesday யை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காப்பியடித்ததால் என்ன மோசம் போயிற்று? காப்பியடித்ததிலோ புதுசா ஒன்றும் நடந்து விடவில்லை. வழக்கமாகச் செய்து வந்தது தானே. கொஞ்சம் பொதுப்புத்தியை உபயோகித்து அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்ததால் தன் ப்ராண்டு கோணங்கித்தனம் எதுவும் செய்யாமல் ஒழுங்காகக் காப்பியாவது அடிக்க முடிந்திருக்கிறதே.

பாலு மகேந்திராவும் பார்த்தார். தமிழ் நாட்டில் இதெல்லாம் சரிப்படாது. அவங்க கேக்கற மசாலாவும் கொஞ்சம் அங்கே இங்கே தூவலாம் என்று தூவப் போய், அவர் ஒன்றும் தன் படங்களை வெற்றிப் படங்களாக்கி விட முடியவில்லை. படத்தின் பெயர் நினைவில் இல்லை. ஏதோ ஒரு படத்தில் சரிதாவை கன்றாவியாக ஆடவைத்து, இன்னொரு க்ளாமர் நடிகையை ஜலக்ரீடை செய்து பாடவும் வைத்து, ஒன்றும் பயனில்லாது போய்விட்டது. மலையாளத்தில் படம் எடுக்கும்போது இதையெல்லாம் அவர் செய்வதில்லை. டெக்னீக்கில் என்னமோ உலகத்தரத்துக்கு தமிழ் நாட்டில் சினிமா எடுக்கிறார்களாமே, அந்த தமிழ் நாட்டில் தமிழ் ரசிகர்களுக்கு அவர் படம் எடுக்கும் போது தான் அவர் இதையெல்லாம் செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார். உலகத் தர டெக்னீக்கை வேண்டும் தமிழ் ரசிகன் இந்த அரை குறை சமாசாரங்களால் எல்லாம் ஏமாறுவதில்லை. அவன் மிகப் பிடிவாதமான ரசிகன், கொள்கை தீவிரம் கொண்டவன். சூப்பர் ஸ்டார் ஆனாலும் அவரை மச்சுப் பிச்சுக்குப் போய் ஐஸ்வர்யாவுடன் நாப்பது எக்ஸ்ட்ராவோடு டான்ஸ் பண்ணி கிதாரும் வாசித்தால் தான் அவனைத் திருப்திப் படுத்த முடியும். சங்கரும் புதுசு புதுசா ஏதும் பிரம்மாண்டமான கோமாளித் தனங்களை யோசித்துத் தான் ஆகணும். இல்லையெனில் எல்லாத்தையுமே பாபாவாக்கிவிடுவான்.

அவ்வப்போது என்ன காரணத்தாலோ கொஞ்சம் யதார்த்தமும் தமிழ் வாழ்க்கையையும் மற்ற மசாலாக்கள் போல சேர்த்துக் கொள்ளலாமே என்று சிலர் யோசிக்கிறார்கள். அதில் தான் இந்த மதுரைப் பேச்சு, விருது நகர் தெருக்கள், கைலியை  தன் காக்கி அண்டர் வேர் தெரிய் கைலியை மடித்துக் கட்டுதல்  எல்லாம் வந்து சேரும்.

(இதெல்லாம் யதார்த்தமுங்க, தமிழ் ரசிகன் படிப்படியா மாறீட்டு வராங்க, அதுக்குத் தக்காப்போல நாம்பளும் மாறாட்டி எப்படீங்க, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க)

இதில் அதிக அளவு முன்னேறியது வெற்றி மாறன் ஆடு களத்தில். அதுக்கு தனுஷ் தான் சரி. உலக நாயகனையா, இல்லை சூப்பர் ஸ்டாரையா கூப்பிட முடியும்? சூப்பர் ஸ்டார் ”இந்தத் தடவை மெக்ஸிகோ போலாங்க அங்கேயும் தமிழ் நாட்டுக்கரங்க மாதிரியே வான்கோழி, இல்லை வல்லூறு சண்டை இருக்கான்னு சங்கர் ஒரு சுர்வே பன்ணீட்டு வந்துருவாரு இல்லாட்டி அந்த ஊர எருமைச் சண்டையா வச்சிக்கிடலாங்களா?,” என்று சொல்லலாம். உலக நாயகனுக்கும் இப்படி ஏதாவது மேக்கப் ஐடியா வரலாம். நம்ம தமிழ் சினிமா மரபை எப்படி மாத்தறது?. ரிக்‌ஷாக்காரன் தான்னாலும் பட்டு வேஷ்டி, தலைப்பாகை, சில்க் ஜிப்பா போட்டு ரிக்‌ஷா மேலே நின்னுக்கிட்டே பாடினாத்தான் எம்ஜிஆர் ரசிகர்கள் ஒத்துக்குவாங்க. அதே போல ரிக்‌ஷாக்காரன்னாலும் கலைஞர் கருணாநிதி வசனம் எழுதி அதை சிவாஜி சார் பேசணும் என்று சொல்லக்கூடும்.

இதெல்லாம் ஒரு படத்தோடு சரி. இனி ஆடுகளம் மாதிரியே எடுத்திட்டிருப்பாங்களா, வளர்ற கலைஞர்கள் என்று வெற்றி மாறனும் வெற்றிப்படம் ஃபார்முலாவுக்கு போயாற்று என்று தோன்றுகிறது.

இப்படித்தான் சாண் ஏறி முழம் சறுக்கும் விவகாரமாகத் தான் தமிழ் சினிமா வரலாறு இருக்கிறது. முந்தியெல்லாம் சறுக்கு மரத்துக்கு எண்ணை தடவினார்கள் என்றால் நம் ஹீரோக்கள் சொல்லக் கூடும், “நல்ல ஊத்துக்குளி வெண்ணையாத் தடவனுங்க. காலம் மாறுது நாமும் வளரணும்க” என்ற ரகத்தில் தான் நம் சினிமா சிந்தனைகள் இருக்கின்றன”

இப்போ சங்கருக்கு போட்டியா வெற்றிப்பட இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ் முரண் என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அவருக்கு எப்படி எங்கேயும் எப்போதும் படம் கொண்டிருந்தது போன்ற கதையை கற்பித்துக்கொள்ள முடிந்தது? பின் அதை படமாக்கவும் மனதில் ஒரு எண்ணத்தைத் தைரியமாகக் கொள்ள முடிந்தது? என்பது புதிராக இருக்கிறது. புதுமை புதுமை என்று கோஷமிடுவதில் தமிழனுக்கு ஒரு அலாதி பரவசம் உண்டு. புதுமை இருக்கோ இல்லையோ அதுபற்றிக் கவலை இல்லை. ஸ்ரீதர் தமிழ் சினிமாவுக்கு தன் ஒரு கையை மடக்கி தாடையைத் தாங்கி உட்கார்ந்து ஒரு சிந்தனையாளராகப் போஸ் கொடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து “இந்தப் படத்திலே என்ன புதுமை புகுத்தியிருக்கீங்க? என்று ஒரு வழக்கமான கேள்வி அவரிடம் கேட்கப்படும். அவரும் புளகாங்கிதமடைந்து எதாவது சொல்லி வைப்பார். அதன் பின் இந்தப் புதுமை என்ற கேள்வி எல்லாரிடமும் கேட்கப்பட்டது.  காபி அடிப்பவர்களெல்லாம் ஏதாவது புதுமை செய்ய ஆங்கிலப் படம் பார்த்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த மாதிரி முருக தாஸும் ஏழாம் அறிவு எடுத்ததாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் புதுமை என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம் சந்தோஷம் தான். நான் இன்னும் பார்க்கவில்லை. சண்டை,மாயா ஜாலங்கள், தமிழன் பெருமை என்று இந்த மாதிரி ஆகிவந்த வெற்றிச் சமாசாரங்கள் அதில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

போகட்டும். ஆனால் முரண் பற்றி சொல்வதாகச் சொல்லி பாதை மாறிக்கொண்டே இருக்கிறேன். பார்த்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. சேரன், பிரசன்னா இருவர் தான் எனக்கு நினைவில் இருக்கிறார்கள். மற்ற யாரும் எனக்கு நினைவில் இல்லை.  அவர்கள் இருவரும் நினைவில் இருக்க வேண்டியவர்கள் தான்.

படத்தின் ஆரம்பத்திலேயே பிரசன்னா குடி போதையில் எதிரிலிருப்பவர்கள் முன் திடீரெனெ தோன்றி  வம்புக்கு இழுத்து சவால் விட்டு, தற்கொலை செய்துகொள்வது போல பயமுறுத்தியதும், பின் காரில் வந்து கொண்டிருந்த சேரன காரோடு  ஒரு பணக்கார போக்கிரிக் கும்பல் கலாட்டா செய்துகொண்டே மோதிச் செல்ல பழுதடைந்த காரை ரோடிலேயே விட்டு விட்டு ஏதும் கார் கிடைக்குமா என்று ரோடில் நின்று கொண்டிருக்க பிரசன்னா காரை நிறுத்தி சேரனை தன் காரில் ஏற்றிக்கொண்டு, சேரனோடு பேச்சுக் கொடுக்க நீண்ட தூர பிரயாணத்தில், அவரைச் சினேகிதம் செய்து கொண்டு தன் தந்தையைக் கொலை செய்தால் தான் சேரனின் மனைவியை, சேரனிடம் அன்பு செலுத்தாத, சேரனை அவமானப் படுத்தும் மனைவியைக் கொல்ல  உதவுவதாகச் சொல்கிறான். சேரனைச் சினேகிதம் செய்துகொள்ள பிரசன்னா கையாண்ட உபாயம் காரை அந்தப் போக்கிரிக் கும்பல் இருக்குமிடஃம் சென்று அவர்களை வதைத்ததும், பின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்காமல் எப்படி இருக்கமுடியும் என்று சொல்லி  ரோட் நடுவில் நின்று கொண்டு எதிர் எதிர் திசையில் விரைந்து வரும் இரண்டு கார்களுக்கு இடையில் நின்று உயிரைப் பணையம் வைத்துப் பிழைத்து வருவதை அதிலும் ஒரு சிறிய மனச் சலனம் உடல் பதற்றம் கூட இல்லாது வருவதைப் பார்த்து சேரனுக்குத் தான் பதற்றமும் பயமும். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படிப் பட்ட உயிர் போகும் சவால்களா?  படத்தின் கடைசி வரை பிரசன்னாவுக்கும் சேரனுக்கும் இடையேயான பேரங்களும் பேச்சுக்களும் சவால்களும் சேரனின் தயக்கங்களும் பிரசன்னாவிடம் காட்டும் வெறுப்பும் திரும்பத் திரும்ப பிரசன்னா சேரனைத் தூண்டுவதும்…… எல்லாம் எனக்கு தமிழ் சினிமாவுக்கு புதியவை. அந்த அமைதியான, சாதாரணமாக நாம் இருவருக்குள் பேசிக்கொள்ளும் குரலிலேயே அந்த படம் முழுவதும் விரவியிருக்கும் பரிமாறல் எனக்கு மிக ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்த ஒன்று.  எனக்கு இந்த புரட்சிகர மாற்றம், வசனத்தில், பேசும் தொனியில், பெறும்பாலும் காரில் விரைந்து செல்லும்போதே நிகழ்வதான படப்பிடிப்பும் எனக்குப் பிடித்தவை. இது தொடர வேண்டும். தமிழ் சினிமாவில் கத்துவார்கள். வீர வசனம் பேசுவார்கள். காதல் வசனம் என்று பிதற்றுவார்கள். ஆட்டம், பாட்டம் எல்லாம் இருக்கும். அதை விட்டு சாதாரணமாக நாம் வாழ்க்கையில் பேசும் குரலில், பேசும் மொழியில் இருவர் இடையில் பேச்சு அமைந்திருப்பது, அது படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பதும் புதிய பாதையில் நிகழும் புதிய பயணம்.

ஆனால் இந்த மாதிரியான ரோடில் திடீர் சினேகிதமும், அந்த சினேகிதனிடம் நான் உனக்கு உதவுகிறேன், நீ என் அப்பாவைக் கொலை செய்யவேண்டும் நான்  உனக்கு வேண்டாத உன் மனைவியைக் கொல்கிறேன் என்று பேரம் பேசுவதும், இதே படம் முழுவதும் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதும், வாழ்க்கையில் காணாத குரூர கற்பனை. இதற்கும் தமிழ் வாழ்க்கைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது ஒரு குரூரமான கற்பனை. என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, என் மருமகள் சொன்னாள், இது ஹிட்ச்காக்கின் Strangers in a Train என்னும் படத்தின் காபி என்றாள்.  பொத்தென என்ன் சந்தோஷம் தமிழ் சினிமா கனவுகளெல்லாம் உடைந்து சிதறின. இருப்பினும் மீசை முறுக்காத, கோரமாக தலையை விரித்துப் போட்டுக்கொள்ளாத, பயங்கரமாகச் சிரிக்காத, பயங்கரமாக விழிகளைப் பிதுக்காத பயமுறுத்தும் கொடிய வசனம் பேசாத சாதாரணமாக நம்மைப் போல் தோற்றமும் பேச்சும் கொண்ட ஒரு வில்லத்தனத்தை ஏதோ வீடு வாங்குவது போன்று ஒரு கொலைத்திட்டத்தைப் பேசும் வில்லனை, காபி அடித்தாவது தமிழ் சினிமாவில் உலவ் விட்டிருக்கிறார்களே, அதுவரைக்கும் சந்தோஷப்படலாம். கொலை, வில்லன் என்றால் பி. எஸ் வீரப்பாதான் மாடல் என்று நினைக்காத தமிழ் சினிமா எட்டிப் பார்த்து  விட்டதே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R