முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
பிடி சார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால் பொன் அம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே!

Courtesy (image - Shrani Bandaranayake): http://www.srilankabrief.orgமணி முடி, கிரீடம் அணிந்த மன்னரும் மற்ற எல்லாரும்  கடைசியில்  ஒரு பிடி சாம்பலாய் தீயில் வெந்து அல்லது மண்ணில் புதை உண்டு போவதும் அதைப் பார்த்த பின்னும் இந்த உறவுகள் என்னும் பிடி சார்ந்த வாழ்கையை நினைப்பது அல்லால்  பொன்னால் செய்யப்பட்ட நடன சபையில் ஆடுபவர் (சிவன்)  திருவடி பற்றி நாம் பிழைக்க வேண்டும் என்று அறிபவர் இல்லையே!  பட்டினத்தடிகளாரது பாடல் இது. வாழ்க்கை நிலையாமை பற்றிப் பாடுகிறார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக தமிழீழப் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி தோற்கடித்த சிங்கள - பவுத்த பேரினவாதம் இப்போது தனது கறைபடிந்த கைகளை நாட்டின் நீதித்துறைக்கு எதிராக நீட்டியுள்ளது.

சிங்கள - பவுத்த பேரினவாதத்தின் குறியீடாக சனாதிபதி மகிந்த இராசபக்சே விளங்குகிறார். போர் நடைபெற்ற காலத்தில் வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு,  தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என்று ஆர்ப்பரித்தவர். ஆனால் இன்று தமிழ்மக்களுக்கும் இராணுவத் தீர்வுதான் எனச் சொல்கிறார்.

இனச் சிக்கலுக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் குழுவை நியமித்தவர், அதனை மீளாய்வு செய்ய வல்லுநர் குழுவை நியமித்தவர் அவை கொடுத்த அறிக்கைகளை குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டார்.

போரில் வென்றுவிட்டோம் இனி அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது வீண் வேலை, தேவையில்லை என்று சனாதிபதி மகிந்த இராசபக்சே பகிரங்கமாகப் பேசுகிறார். தமிழ் மக்களுக்குத் தேவை பொருளாதார அபிவிருத்தி. நீண்ட சாலைகள், பாலங்கள், நீச்சல் தடாகங்கள்,  கட்டிடங்கள். தேவை இல்லாதது அரசியல் உரிமைகள் என்கிறார் இராசபக்சே.

"எனக்கும் எனது கட்சிக்கும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருக்கிறது. அதை ஒவ்வொரு தேர்தலிலும் எண்பித்துக் காட்டி வருகிறேன். எனவே நாட்டின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பவர்களை - அவர்கள் யாராக இருந்தாலும் -  அப்புறப்படுத்துவேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என இராசபக்சே கொக்கரிக்கிறார்.

நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசருடன்  சனாதிபதி மகிந்த இராசபக்சே மோதுவதற்கு இந்த ஆணவப் போக்கு - சர்வாதிகாரப் போக்குத்தான் அடிப்படைக் காரணம்.

நாட்டின் தலைமை நீதியரசருக்கு எதிராக அரசியல் குற்றத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அவரை விசாரிக்க ஒரு தெரிவுக் குழுவை உருவாக்கியதற்கு ஒரே காரணம் தலைமை நீதியரசர் திவிநெகும  சட்டவரைவு பற்றிய தீர்ப்புத்தான். தனது சர்வாதிகார ஆட்சிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் தலையாட்டாமல் தடையாக இருக்கிறார்,  அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டார் என்பதாலேயே அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு குற்றவாளியாகவும் காணப்பட்டுள்ளார்.

நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு 'எமனாக' அமைந்து விட்ட திவிநெகும சட்ட வரைவைப் பற்றி சுருக்கமாக ஆராய்வோம். இந்தச் சட்டம் அரசிதழில் யூலை 27, 2012  இல் வெளியிடப்பட்டது.  சமுர்த்தி அதிகாரசபை,  தெற்கு அபிவிருத்தி சபை மற்றும் உடரத்த அபிவிருத்தி சபை மற்றும் எண்ணற்ற சமூக அமைப்புக்கள், காப்பகங்கள் போன்றவற்றை  திவிநெகும திணைக்களத்துக்குள் கொண்டு வருகிறது. இந்த திணைக்களம் இரகசியமாக செயல்படும். நீதிமன்றத்துக்கு மட்டுமே அதன் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்வதற்கு உரிமையுண்டு. திவிநெகும திணைக்களம் இராசபக்சேயின் உடன்பிறப்பான பசில் இராசபக்சேயின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.  சமுர்த்தி திட்டத்துக்கு  உரூபா 3,000  மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.  26,000 சமுர்த்தி ஊழியர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள். மேலும்  போர் வீரர்களது குடும்பங்களுக்கு உரூபா 400 மில்லியன் 2013 வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பங்கள் முன்னெடுக்கும் பொருளாதார திட்டம் ஒவ்வொன்றுக்கும்  தலைக்கு  உருபா 500,000 கடன் பிரதேச அபிவிருத்தி வங்கி மூலம் வழங்கப்படும்.

திவி நெகும சட்ட வரைவு மாகாணசபைகளுக்குப் பகிரப்பட்ட பல அதிகாரங்களை பிடுங்குவதாக இருக்கிறது. 13 ஆவது சட்ட திருத்தத்தின் அடிப்படையில் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் மாகாண சபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சட்ட வரைவு இலங்கையின் யாப்புக்கு முரணானது என மாவை சேனாதிராசா, நா.உ.  உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கு ஒகஸ்ட் 27, 28 இல் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஷிராணி பண்டாரநாயக்க, பிரியசத் டெப் மற்றும் ஈவா வனசுந்தரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  உச்ச நீதிமன்றத்தின் முடிவு நாடாளுமன்ற அவைத் தலைவர் சாமல் இராசபக்சேக்குத் தெரியப்படுத்தப்பட்டது. செப்தெம்பர் 18 ஆம் நாள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவைத் தலைவரால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. 

சட்ட வரைவில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் மாகாண சபைக்கு கையளிக்கப்பட்ட அதிகாரங்களை மீறுவதால் அந்த  மாகாணசபை ஒவ்வொன்றினதும் ஒப்புதல் பெற்ற பின்னரே அதனை நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  செம்தெம்பர் 25 - ஒக்தோபர் 03  கால இடைவெளிக்குள்  8 மாகாண சபைகள் தீர்மானம் மூலம் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்தன. வட மாகாண சபைக்கு தேர்தல் நடைபெறாததால் அதன் சார்பாக சனாதிபதி இராசபக்சேயால் நியமிக்கப்பட்ட ஆளுநர் சந்திரசிறீ ஒப்புதல் கடிதம் கொடுத்தார்.  இதனை எதிர்த்து  மேலும் 11 முறையீடுகள் உச்சநீதி மன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டன.  அதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தாக்கல் செய்த முறையீடும் ஒன்றாகும். அவர் சார்பில்  எம்.ஏ. சுமந்திரன் சட்டத்தரணி தோன்றி வாதாடினார்.

ஆளுநர் சந்திரசிறீக்கு மாகாண சபையின் சார்பாக ஒப்புதல் கடிதம் கொடுக்கச் சட்டத்தில் இடம் இல்லை என்பது சுமந்திரனின் வாதமாகும். இந்த முறையீடுகளை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஷிராணி பண்டாரநாயக்க, என்.ஜி. அமரதுங்க மற்றும் கே. சிவபாலன் ஆகியோர் விசாரித்தனர்.   விசாரணை ஒக்தோபர் 18, 22 மற்றும் 23 இல் இடம்பெற்றன. அவர்களது தீர்ப்பு சனாதிபதி இராசபக்சேக்கு ஒக்தோபர் 31 அன்று அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற அவைத் தலைவர் அதனை நொவெம்பர் 6 இல் அறிவித்தார்.  சட்ட விதி 8 (2) யாப்புக்கு முரணானது. எனவே அதனை சட்டமாக்க நினைத்தால் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.  மேலும் 12 விதிகள் யாப்புக்கு  பொருத்தமாகக் காணப்படவில்லை. அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளோடு நிறை வேற்ற வேண்டும். 

இந்தத் தீர்ப்புத்தான் இராசபக்சேக்கு கடுப்பை ஏற்றியது. தான் நியமித்த உச்சநீதிமன்ற நீதியரசர் தனது அரசுக்குச் சாதமாக தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்று இராசபக்சே எதிர்பார்த்தார்.  முன்னாள் தலைமை நீதியரசர் சரத் டி சில்வா அப்படித்தான் ஆள்வோரின் குறிபறிந்து தீர்ப்பு வழங்கினார்.ஆனால் ஷிராணி பண்டாரநாயக்காவிடம் அவரது  எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றவுடன் உச்ச நீதிமன்றத்  தலைமை நீதியரசர் ஷிராணி  பண்டாரநாயக்கா மீது அவரது நெற்றிக்கண் திரும்பியது.  தனது ஆட்சிக்குத் தலைமை நீதியரசர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என எண்ணினார். அவரைப் பழிவாங்க நினைத்தார்.

இதுவே தலைமை நீதியரசர் மீது கொண்டுவரப்பட்ட அரசியல் குற்றவியல் தீர்மானத்தின் பின்னணியாகும். அவசர அவசரமாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் இலங்கையின் வரலாற்றில் இராசபக்சேயின் ஆட்சி ஒரு மோசமான ஆட்சி என்பதை ஊருக்கு மட்டுமல்ல உலகத்துக்கே எண்பித்துக் காட்டியுள்ளார்.

ஜே.ஆர்.  ஜெயவர்த்தனா கையில் இருந்த அதிகாரபலத்தை விட பல மடங்கு அதிகார பலத்தை  இராசபக்சே தனது கைகளில் வைத்திருக்கிறார். பதினேழாவது திருத்தத்தை ஒழித்துவிட்டு 18 ஆவது  திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியதன் மூலம் இராசபக்சே ஒரு தெரிவு செய்யப்பட்ட சர்வாதிகாரியாக (elected dictator) மாறியுள்ளார்.

மக்களாட்சி முறைமை கிரேக்கத்திலுள்ள ஏதன்ஸ் நாட்டில்தான் உருவாகியது.  மக்கள் நேரடியாக (Direct Representative)  இந்த மூன்றுதுறைகளிலும் ஈடுபட்டார்கள்.  பின்னர் எல்லா மக்களும் ஒரே நேரத்தில் பங்குகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதனைச் சரிசெய்ய பிரதிநித்துவ முறை (Representative) கொண்டுவரப்பட்டது.  இந்தப் பிரதிநிதிகள் மக்களது இறைமையை மக்கள் சார்பாகப் பயன்படுத்தினார்கள்.

சனநாயகம் என்ற ஆட்சிமுறை இருக்கின்ற நாட்டின் அத்திவாரத்தை நாடாளுமன்றம்,  நீதித்துறை மற்றும் அமைச்சரவை என்கிற மூன்று  தூண்கள்  (The 3 pillars of democracy are Judiciary(interprets laws), legislature(make laws) and executive(enforces laws) தாங்கிப் பிடிக்கின்றன.  இந்த அதிகாரப் பிரிவினை உரோம் நாட்டில்தான் தோற்றம் பெற்றது. இதன் கீழ் அரசு பின்வருமாறு பிரிக்கப்பட்டது.

1. நாடாளுமன்றம் / சட்டமன்றம்  (Legislature) -    சட்டத்தை இயற்றும் அரசியல்வாதிகள். 
2. நீதித்துறை    (Judiciary)   -    சட்டத்தை பொருள் விளக்கித் தீர்ப்புக் கூறும் நீதிபதிகள்.  
3. நிறைவேற்றுத்துறை (Executive - Administrative, Beuraucrats) - சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சனாதிபதி மற்றும் அமைச்சர்கள், நிருவாக ஊழியர்கள். 

ஆனால் இந்தப் பிரிவினை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. நாடாளுமன்ற முறைமையும் சனாதிபதி ஆட்சிமுறையிலும் வேறுபடுகிறது. சனாதிபதி ஆட்சி முறைமையில் சனாதிபதி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்தியாவில் இந்த மூன்று துறைகளும் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.

1. நாடாளுமன்றம் -  சட்டமியற்றல்

2. நீதித்துறை - உச்ச நீதிமன்றம்

3. சட்ட நடைமுறை - தலைமை அமைச்சர், அமைச்சரவை, அரச திணைக்களங்கள், சிவில் சேவை.

பிரித்தானியாவிலும் இது போன்ற அரசியல் முறைமை இருக்கிறது. ஆனால் எழுதப்பட்ட யாப்பு இல்லை. மரபுகளின் அடிப்படையில் அரச இயந்திரம் இயங்குகிறது.

இந்த மூன்று பிரிவுகளும் ஒன்றன்  மீது மற்றொன்று மேலாதிக்கம் செலுத்தக் கூடாது என்பதே அடிப்படைக் கோட்பாடு. அதனைத் தடுத்தலும் சமன் படுத்தலும் (checks and balances) என்று சொல்லுவார்கள்.

இந்த மூன்றோடும் ஊடகத்துறையை நான்காவது தூண் என வருணிக்கப்படும் மரபும் இருக்கிறது.  ஊடகத்துறை இந்த மூன்று துறைகளிலும்  காணப்படும் நிறை, குறைகளை நடுநிலைமையோடு சுட்டிக்காட்டுகிறது.

இந்த மூன்று துறைகளும்  ஒன்றோடு ஒன்று முட்டி மோதாமல் சுயாதீனமாக இயங்க வேண்டும். அவற்றுக்கு உரிய அதிகாரங்கள் பிரிக்கப்படுவதற்கு அதுவே காரணம்.  குறிப்பாக நீதித்துறை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாகச் செயறபட அனுமதிக்கப்பட வேண்டும்.  அதே நேரம் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள்  நாட்டின்  யாப்புக்கு அமைய இயற்றப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து தீர்ப்புக் கூறும் அதிகாரமும் உச்சநீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய காலங்களில் உச்ச நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கும் அதிகாரம் நீதித்துறை ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. தலைமை நீதியரசர் இன்னொரு நீதியரசர் முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்வார். ஆனால் 1978  இல் உருவாக்கப்பட்ட யாப்பின்படி நீதித்துறையின் பரிந்துரையின்படி  சனாதிபதி நீதியரசரை நியமிப்பார். அவர் முன்பே உறுதிமொழியும்  எடுத்துக் கொள்வார். 18 ஆவது திருத்தத்தின்படி சனாதிபதி நீதித்துறையின் யோசனையைப் பெற்றால் போதும். யாரை நியமிப்பது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் சனாதிபதிக்கே உண்டு.

தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா சந்திரிகா குமாரதுங்காவால் உச்ச நீதிமன்ற நீதியரசராக 1996 இல் நியமிக்கப்பட்டார். இப்படி பதவி நியமனம் செய்யப்பட்ட முதல் பெண்மணி இவராவர். ஆனால் இவர் சட்டம் படித்திருந்தாலும் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும்  நீதிமன்றங்களில் வழக்காடவில்லை. 2011 இல் தலைமை நீதியரசராக மகிந்த இராசபக்சே நியமனம் செய்தார்.

தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றவியல் விசாரணை கோரும் தீர்மானத்தில் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து வைத்திருந்தார்கள்.  அந்தத் தீர்மானத்தில் தலைமை நீதியரசருக்கு எதிராக மொத்தம் 16 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.  தீர்மானத்தின் அடிப்படையில் அவைத் தலைவர் 11 பேர் அடங்கிய தெரிவுக் குழுவை நியமித்தார். இதில் 7 பேர் ஆளும் கட்சி உறுப்பினர்கள். நான்கு பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள். 

தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான விசாரணை சிங்கள சட்டவாதிகள் மற்றும் அறிவுப்பிழைப்பாளர்கள் மத்தியில் மகிந்த இராசபக்சே அரசுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு அலை உருவாக்கியுள்ளது.  புலிவாலைப் பிடித்து விட்டோமா என மகிந்த இராசபக்சே அச்சப்படுகிறார். அதன் எதிரொலிதான் சுயாதீனமான குழு விசாரணை யோசனை.

தெரிவுக் குழு முதன் முறையாக நொவெம்பர் 23 இல் கூடியது.  அதன் பின்னர் ஒரு மாத காலத்தில் 8 முறை கூடியது. பதினாறு சாட்சிகள் சாட்சியம் அளித்தார்கள். 139 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  தலைமை நீதியரசர் பதில் அளிக்க 20 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆறு வார கால அவகாசம் வேண்டும் என்று நீதியரசர் சார்பாக தோன்றி வாதாடிய சட்டவாதிகளது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.  சாட்சிகளை குறுக்கு விசாரணை  செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 

நாதெகு க்கு முன்னர் தோன்றிய தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மிகவும் கேவலமான முறையில் நடத்தப்பட்டார். அவருக்கு எதிராக வன்மம் காட்டப்பட்ட தோடு சிங்களத்தில் தகாத சொற்களால் அருச்சிக்கப்பட்டு அவமானப்படுத்தப் பட்டார்.  இது பற்றி தலைமை நீதியரசரின் பணிப்பில் அவரது சட்டத்தரணி அவைத் தலைவர் சாமல் இராசபக்சேக்கு ஒரு கடிதம் எழுதி குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

“pissu gaani”(பைத்தியக்கார மனிசி)

” Api Me Nonava Methana Thiyagena Methana Thiyagena Madawanawa”

“Babaa” – ” Naa Baba Hukung”,

“Usaviye Nadagam Natanawa”

“Meyaata Adamla Godak Innawa”

“Babaa Wage Hitiyata Babaa Wage Weda Nee”

இவைதான் அந்த அருச்சனைச் சொற்கள்.  இதனைக் கேட்ட தலைமை நீதியரசர் தனது சட்டத்தரணிகளோடு வெளிநடப்புச் செய்தார். அவரைப் பின்பற்றி எதிர்க்கட்சியைச் சேர்ந்த 4 நா.உறுப்பினர்களும் நாதெகு இன் போக்குப் பிடிக்காமல் அதில் இருந்து வெளியேறினார்கள்.

நாதெகுழு தலைமை நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளில் முதல் 5 குற்றச்சாட்டுக்கள் மட்டும் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு  1,4, 5 இல் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதாக தீர்ப்புக் கூறியுள்ளது. 2, 3 இல் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தது. எஞ்சிய குற்றச்சாட்டுக்கள் 6-14 நேரம் போதாமையால் விசாரிக்கப்படவில்லை.

குற்றச்சாட்டு 1, நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா Trillium  நிறுவனத்திடம் இருந்து தனது சகோதரிக்கு வீடு வாங்கியது.

குற்றச்சாட்டு 2,  இருபதுக்கும் மேலான வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களை அரசுக்கு அறிவிக்கத்தவறியது.

குற்றச்சாட்டு 3,  தனது கணவருக்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் அவருக்குச் சார்பாக நடந்து கொண்டது.

(The three charges which were 1st, 4th and 5th are pertaining to Trillion houses, failing to declare the details of bank accounts  and other assets and being biased towards her husband’s bribery or corruption charges.)

ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் தலைமை நீதியரசர் பதவி அடுத்த ஆண்டு சனவரி மாதத்தில் பறிக்கப்படும் என  எதிர்பார்க்கலாம்.  அதன் மூலம் அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டனத்துக்கு உள்ளாகும் என்பது உறுதி. ஏற்கனவே அமெரிக்கா, பொதுநல மாநாட்டு செயலாளர் நாயகம் தலைமை நீதியரசருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை பக்க சார்பானது அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம் சாட்டியுள்ளார்கள்.

குற்றச்சாட்டுகளைப் பார்த்துவிட்டு தலைமை நீதியரசர்  ஷிராணி பண்டாரநாயக்க தானாக முன்வந்து தனது பதவியில் இருந்து விலகிவிடுவார் என சனாதிபதி இராசபக்சே எதிர்பார்த்தார். ஆனால் அது நடைபெறவில்லை. நான் குற்றமற்றவள். சுயாதீனமான விசாரணை வைத்தால் எண்பித்துக் காட்டுவேன் என பதிலுக்கு சூளுரைத்தார்!

மகிந்த இராசபக்சே அரசு மீது ஏற்கனவே  மனித உரிமை மீறல்கள்,  போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் சாட்டப்பட்டு அவற்றை விசாரிக்க ஒரு பன்னாட்டு விசாரணை தேவையென்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த வேளையில் ஏன் இந்த அரசு இப்படி முட்டாள்த்தனமான செயலைச் செய்யத் துடிக்கிறது? நாய் வாலை நிமிர்த்த முடியாததையே இந்த நாதெகு வின் நியமனமும் அதன் தீர்ப்பும் எடுத்துக் காட்டுகிறது.

ஆனபடியால்தான் இலங்கையின் வரலாற்றில் இப்படியான ஒரு காட்டுமிராண்டி ஆட்சி இருந்ததில்லை என அரசியல் விமர்ச்சகர்கள் விமர்ச்சிக்கிறார்கள்.  சட்டவாதிகள் சங்கம் புதிய நீதியமைச்சரை புறக்கணிக்கப் போவதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இராசபக்சே குடும்பத்தைச் சேர்ந்த 268 க்கும் அதிகமானவர்கள் அரசியல் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். சாதாரண பொது தராதரத் தேர்வில் சித்திபெற்ற அவரது மைத்துனர் ஜாலியா விக்கிரமசூரியா (Jaliya Wickramasuriya) அமெரிக்காவுக்கான சிறீலங்கா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

இராசபக்சே சகோதரர்கள்  5  முக்கிய அமைச்சுக்களை (நிதி, பாகாப்பு, நகர அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி,  நெடுஞ்சாலை, துறைமுகம், மற்றும் வான்போக்கு வரத்து)  கைவசப்படுத்தி வைத்துள்ளார்கள்.  வரவு - செலவு திட்டத்தில் 70 விழுக்காடு அவர்கள் கையில் இருக்கிறது.

தெரிவுக் குழுவின் விசாரணை ஒரு கண்துடைப்பே. நீதியரசர் மீது கொண்டுவரப்பட்ட அரசியல் குற்றவியல் தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவிக்குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். அதாவது குற்றம் சாட்டியவர்களே நீதிபதிகளாக மாறினார்கள். முன்கூட்டியே நீதியரசர் குற்றவாளி என்ற முடிவை எடுத்துவிட்டார்கள்.  இதனால் விசாரணை என்ற போர்வையில்  தலைமை  நீதியரசர் துரியோதனர்களால் துகிலுரியப்பட்டார்!  

நாடாளுமன்ற தெரிவுக் குழு அறிக்கை வெளிவந்தபின் சனாதிபதி இராசபக்சே அந்த அறிக்கையை மீளாய்வு செய்ய ஒரு சுயாதீன குழுவை நியமிக்கப் போவதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.  யாப்பில் அப்படியொரு மீளாய்வு செய்வதற்கு எந்த விதியும் இல்லை. மேலும் நாதெகு அறிக்கையை வெளியில் உள்ள ஒரு குழு மீளாய்வு செய்ய முடியுமா? அப்படி முடிவு செய்தால் நாடாளுமன்றம் உச்ச உயர்வான (supreme) அமைப்பு என்னாவது என்ற கேள்வி எழுகிறது.  உண்மை என்னவென்றால் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை பற்றி யாப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் ஒரு  சுயாதீனக் குழுவை அமைப்பதற்கு காரணம் இருக்கிறது. சனாதிபதி இராசபக்சே புலிவாலைப் பிடித்த நிலையில் உள்ளார். தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான அரசியல் குற்ற விசாரணைக்கு பலத்த எதிர்ப்பும் கண்டனமும் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்துள்ளது. அதன் சூட்டைத் தணிக்க இந்த சுயாதீனக் குழு உதவும் என இராசபக்சே கணக்குப் பண்ணுகிறார் போல்  இருக்கிறது.

சனாதிபதி இராசபக்சே தலைமை நீதியரசருக்கு  எதிராக அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக எடுக்கும் நடவடிக்கை இன்னொரு களத்தை திறந்திருக்கிறது.  தமிழர் - நீதித்துறை இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது புரியவில்லை.

அடுத்த ஆண்டு மார்ச்சு, 2013 இல் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீளாய்வுக்கு வருகிறது.  அதனை அடுத்து பொதுநல நாடுகளது தலைவர்களது கூட்டம் இலங்கையில் நடைபெற இருக்கிறது.  ஆனால் மகிந்த இராசபக்சே அரசு அவை பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படுவதாக இல்லை. இந்த அசட்டுத் தைரியத்துக்கு என்ன காரணம் என்பது விளங்கவில்லை.  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கிறது அதனால் அரசு நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கலாம் என அவர்  நினைக்கிறதாகத் தெரிகிறது.

கெடுகுடி சொல் கேளாது. மகிந்த இராசபக்சே குடும்பத்தைப் பொறுத்தளவில் இதுதான் உண்மை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R