வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 - இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'ஞானம்' மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017 இதழில் நேர்காணலின் முதற் பகுதி வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது. -

(வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.)


நேர்காணல் பகுதி 2

9. நீங்கள் எழுதிய அறிவியல் / அமானுஷ்ய சிறுகதைகள், புகலிட வாழ்வனுபவம் சார்ந்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.

எனக்கு அறிவியற் துறையில் மானுட இருப்பினை அறிந்து கொள்வதற்குரிய துறைகள் மிகவும் பிடிக்கும். உளவியல், உயிரியல், மானுட சமுதாயப்பொருளியல் மற்றும் வானியற்பியல் ஆகிய துறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவற்றில் வானியற்பியல் எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்த துறை. என் சிந்தனையை விரிவு வைக்கும் துறை. இத்துறையில் ஸ்டீபன் ஹார்கிங்ஸ், பிரயன் கிறீன் மற்றும் மிஷியோ ககு போன்றொர் சாதாரண மக்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய வானியற்பியல் சம்பந்தமான அறிவியல் நூல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் யாவரும் சிறந்த அறிவியல் அறிஞர்கள். தாங்கள் அறிந்ததை, புரிந்துகொண்டதை, கண்டு பிடித்ததை எல்லாம் சாதாரண மக்களும் அறிந்துகொள்வது அவசியம் என்று கருதுபவர்கள். ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம், குவாண்ட இயற்பியல் போன்ற துறைகளைப்பற்றி சாதாரண வாசகர்களும்  புரியும் வகையில் இவர்கள் எழுதினார்கள். பிரபஞ்சம் பற்றிய இவர்கள் பற்றிய கருதுகோள்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக மூன்று பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்களை உள்ளடக்கி உயிரினங்கள், இப்பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சங்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களைப்பற்றியெல்லாம் இவர்களின் நூல்கள் விபரித்தன.  இப்பல்பரிமாண உலகும், உயிர்களும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் எப்பொழுதும் எனக்கு மிகவும் வியப்பினைத் தந்த அதே சமயம் என் சிந்தனையையும் கேள்விகளுக்குள்ளாக்கி விரிவுபட வைத்தன. நான்  எழுதிய அறிவியற் சிறுகதைகளில் 'தேவதரிசனம்' மற்றும் 'நான் அவனில்லை' ஆகியவை  முப்பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு' 'தொலைகாவுதல்' (Teleporting) என்னும் அடிப்படையில் ஆத்மா என்னும் தத்துவத்தையும் இணைத்துச் சிந்தித்ததன் விளைவாக உருவான சிறுகதை. இதுவரையில் நான் அதிகமான புனைகதைகளை அறிவியற் துறையில் எழுதியிருக்காவிட்டாலும், மூன்று அறிவியற் சிறுகதைகள் மற்றும் ஆறு அறிவியற் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியிருக்கின்றேன். எதிர்காலத்தில் இத்துறையில் மிக அதிகமாக எழுத வேண்டுமென்ற ஆர்வமுள்ளது. பிரதிலிபி இணையத்தளத்தில் அறிவியற் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பினை வாசிக்கும் வசதியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: https://tamil.pratilipi.com/read?id=5092686858027008

10. ’பதிவுகள்’ இணையத்தளம் ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

பதிவுகள் இணையத்தளத்தை நான் 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பித்தேன்.  நான் ஆரம்பித்ததன் நோக்கம் என் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவும், இணையத்தில் தமிழில் எழுதுவோரை ஊக்கப்படுத்துவதற்காகவுமே. ஆரம்பத்தில் என் படைப்புகள் சிலவற்றுடன் பல்வேறு விடயங்கள் பற்றிய என் கருத்துகளையும் எழுதி வந்தேன். மிகவும் சாதாரணமானதொரு இணையத்தளம். ஆனால் அதுவே பலரையும் கவர்ந்தது. ஆனந்தவிகடன் கூடத் தனது இதழொன்றில் பதிவுகளில் வெளியான மகாத்மா காந்தியின் பேரன் பற்றி எழுதிய கருத்தொன்றினை மீள்பிரசுரம் செய்திருந்தது. பதிவுகளுக்குப் பலர் தம் படைப்புகளையும் அனுப்பி வைக்கத்தொடங்கினார்கள். அவற்றையும் பிரசுரிக்க ஆரம்பித்தேன். பின்னர் பதிவுகளில் விவாதக்களத்தினையும் ஆரம்பித்தோம். தமிழகத்தின் முன்னணிப்படைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள். ஜெயமோகன், பாவண்ணன், ராஜநாயஹம், யமுனா ராஜேந்திரன், ஜெயபாரதன், வேதசகாயகுமார், வெங்கட்  சாமிநாதன் போன்ற தமிழ்க்கலை,இலக்கியத்துறையில் அறிமுகமானவர்கள் தொடக்கம் , புகலிடத்தமிழ் எழுத்தார்கள் பலர் மற்றும் அறிமுகமாகாத புதியவர்கள் வரையில் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி  வந்தார்கள். பதிவுகள் பலருக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கின்றது. அது திருப்தியைத்தருகின்றது. ஆரம்பத்தில் முரசு அஞ்சலில், பின் முரசு அஞ்சலின் திஸ்கி எழுத்துருவில் தற்போது ஒருங்குறி எழுத்துருவில் பதிவுகள் வெளியாகின்றது. உலகின் பல்வேறு பாகங்களிலுமிருந்து பதிவுகளுக்கு ஆர்வத்துடன் படைப்பகளை அனுப்புகின்றார்கள். பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசியர்கள் தொடக்கம் பட்டப்படிப்பு மாணவர்கள் வரையில் தம் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புகின்றார்கள். பதிவுகள் நானே எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. மகிழ்ச்சியைத்தருகின்றது. அதே சமயம் மிகுந்த உழைப்பினையும் வேண்டி நிற்கின்றது.

11. ஒரு எழுத்தாளர் சஞ்சிகை நடத்துவதற்கு (இணையம் ஆயினும் சரி) தமது நேரத்தை ஒதுக்குவதனால், அவர் தனது எழுதும் நிலையிலிருந்து விடுபட்டுப் போகின்றார் என்று சொல்வது பற்றி…

அது எழுத்தாளர் ஒவ்வொருவரையும் பொறுத்தது. எழுத்தாளர் ஒருவர் எப்பொழுதுமே எழுதிக்கொண்டிருப்பதில்லை. அவருக்கு வேறு பொழுது போக்குகள், குடும்பச்சுமைகள் இவற்றுக்கு மத்தியில்தான் எழுதுகின்றார்.  எனவே ஒருவர் நன்கு திட்டமிட்டால் , அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இவ்விதமான பிரச்சினைகள் எழாது  அல்லது கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருக்காது. மேலும் எழுத்தார்வம், வாசிப்பார்வம் உள்ள ஒருவர் எவ்விதமான தடைகளுக்க்கு மத்தியிலும் அவற்றுக்கென்று நேரத்தைக் கண்டுகொள்வார். என் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றேன்.

12. ஓர் இணையத்தளத்தை நிர்வகிப்பது என்பது இலகுவான வேலை அல்ல. அது பல சவால்களைக் கொண்டது. தினமும் இணையத்தளத்தை புதுப்பித்தும் வருகின்றீர்களே! உங்கள் வேலைப் பணிகளுக்கிடையே எப்படி இது சாத்தியமாகின்றது?

அர்ப்பணிப்பும் , ஆர்வமுமே இணையத்தளத்தை நிர்வகிப்பதை ஓரளவுக்கு இலகுவாக்குகின்றன என்பேன். அப்படியிருந்தும் பதிவுகளுக்கு வரும் படைப்புகள் குவிந்திருப்பதால்  எல்லாவற்றையும் உடனுக்குடன் வாசித்துப் பிரசுரிப்பது சாத்தியமாவதில்லை. சவால்களுக்கு மத்தியிலும் என்னால் கடந்த பதினாறு வருடங்களாக 'பதிவுகள்' இணைய இதழினை நடாத்த முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ஆர்வமும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும்தாம்.

13. பதிவுகள் இணையத்தளம் வாசகர் பரப்பில் முன்னணியில் இருப்பதாக அறிகின்றேன். உங்கள் இணையத்தளம் மற்றைய இணையத்தளங்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றது? இணையத்தளத்தை நடத்துவதில் ஏற்படும் சுவாரஸ்யமான அனுபவங்கள், இடர்ப்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்? இணையத்தளத்தை நடத்துவதற்கு ஏற்படும் பெரும் செலவை எப்படி ஈடு செய்கின்றீர்கள்?

இவ்விதமானதொரு இணையத்தளத்தை நடத்துவதானால் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவிகள் தேவைப்படும். தளத்தை நிர்வகிக்க 'வெப் மாஸ்ட்டர்', இதழின் படைப்புகளைப்பரிசீலித்து வெளியிட ஆசிரியர், இணையத்தளத்தை உருவாக்க இணையத்தளத்தை உருவாக்கக்கூடிய மென்பொருள வல்லுநர்கள் இவ்விதம் பலரின் உழைப்பு தேவைப்படும். அதற்கு மிகுந்த செலவேற்படும். ஆனால் இத்துறைகளில் எனக்குள்ள அனுபவம் ,அறிவு காரணமாக இவற்றை என்னால் நடத்த முடிகின்றது. இவை தவிர இணையத்தளத்தை நடத்துவதற்குரிய இணையத்தளச்சேவை வழங்கும் நிறுவனத்துக்கான மாதாந்த செலவினை ஏனைய செலவாகக் குறிப்பிடுவேன்.

'பதிவுகள்' இணையத்தளத்தில் ஆய்வு என்றொரு பிரிவு உள்ளது. அதில் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யும் பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை, பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகளை, எழுத்தாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம். இப்பகுதித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் மிகுந்த ஆதரவினைப் பெற்றுள்ளது. 'பதிவுகள்' இணைய இதழ்களில் தம் ஆய்வக்கட்டுரைகள் வெளியாவதை அவர்கள் விரும்புகின்றார்கள். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் ஆய்வுகளைப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதையே இது காட்டுகின்றது. இந்த 'ஆய்வு'ப்பகுதி முக்கியமான ஏனைய இணைய இதழ்களில் காணப்படாத பகுதிகளிலொன்று. அடுத்தது ஏனைய இணையத்தளங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலேயே புதிய ஆக்கங்களை வலையேற்றம் செய்கின்றன. ஆனால் 'பதிவுகள்' இணைய இதழ் ஆக்கங்கள் கிடைப்பதன் அடிப்படையில் வாசிக்கப்பட்டு, பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவை பிரசுரமாகின்றன. இவையெல்லாம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எனலாம்.

14. ஒருவர் தனது படைப்பை பத்திரிகை அல்லது சஞ்சிகைகளில் அதாவது என்றும் அழியாத ஊடகங்களில் வருவதையே விரும்புகின்றார். ஏனென்றால் சில இணையத்தளங்கள் இடையில் முறிந்துபோய் விடுகின்றன. அப்படியே அந்த இணையத்தளம் மீள உயிர்பெற்றாலும் பழைய படைப்புகளை அங்கே காண முடிவதில்லை. அப்படி ஒருவர் வேறு ஊடகங்களில் வந்த தனது படைப்பை மூலம் குறிப்பிட்டு இணையத்தளங்களுக்கு அனுப்புவது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இன்னுமொரு கேள்வி ஒருவர் தனது படைப்பை ஒரே நேரத்தில் பல இணையத்தளங்களுக்கு அனுப்புவது பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

நூலகம் இணையத்தளத்தில் இணையத் தளங்களை ஆவணப்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகின்றனர். அது சாத்தியமாகும் பட்சத்தில்  இணைய இதழ்களில் வரும் படைப்புகளும் இணையத்தில் அழியாது நிலை நிற்கும் சாத்தியம் ஏற்படும். இவ்விதமாக இணையத்தளங்களைப்பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் ஏற்கனவே உள்ளன. அவற்றை நூலகம் போன்ற இணையத்தளங்கள் பாவிப்பது மிகுந்த பயன் தருவதாக அமையும். ஒருவர் தனது வேறு ஊடகங்களில் வெளியான படைப்புகளை இணைய இதழ்களுக்கு அனுப்புவதை நான் ஆதரிக்கின்றேன். ஆனால் மூலம் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இணைய இதழ்கள் மீள்பிரசுரம் செய்ய விரும்பும் படைப்புகளை மட்டுமே மூலம் குறிப்பிட்டுப் பிரசுரிக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. ஏனைய படைப்புகளை நேரடியாக 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பினால் அவை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது  அவற்றை மூலம் குறிப்பிடாது பிரசுரிப்போம்.

15. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் எப்படி வரவேற்பைப் பெற்றுள்ளனவா?

நான் தமிழில் எழுதியதைப்போல் ஆங்கிலத்தில் அதிகமாக எழுதியவனல்லன். இதுவரையில் லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் குடிவரவாளன், அமெரிக்கா நாவல்கள், சில சிறுகதைகள், மற்றும் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களும், சில சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. நான் ஆங்கிலத்தில் இதுவரை சுமார் 13 கவிதைகள் வரையில் எழுதியிருக்கின்றேன். அவற்றில் லங்கா கார்டியனில் ஆங்கிலக் கவிதைகளிரண்டு வெளியாகியுள்ளன. poemhunter.com  மற்றும் poemlist.com ஆகிய ஆங்கில இணையத்தளங்களில் என் ஆங்கிலக் கவிதைகள்  13 வரையில் பிரசுரமாகியுள்ளன. அவற்றில் சில 'யு டியூப்'பில் குரல் வடிவில் வெளிவந்திருப்பதையும் அறிந்திருக்கின்றேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் வெளியான எனது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' ஆங்கிலத்தில் 'A CO(W)UNTRY  ISSUE'  என்னும் தலைப்பில் வெளியானது. அதனை இணையத்தில் கண்ட அமெரிக்கப்பெண்மணியொருவர் ,Betsy Harrell (USA) என்று பெயர்,  வாசித்துப் பாராட்டிச் செம்மைப்படுத்தி அனுப்பியிருந்தார். மறக்க முடியாத அனுபவம். அதுபோல் ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை என்னும் சிறுகதையின் மேற்படி ஆங்கில வடிவம் (லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில்) இலண்டனிலிருந்து வெளிவரும் ஆங்கில சஞ்சிகையான தமிழ் டைம்ஸ் மீள் பிரசுரம் செய்திருக்கின்றது. நல்லூர் இராஜதானியின் ஆங்கிலபிரதியினைப் பல ஆய்வாளர்கள் தம் ஆய்வுகளில் பாவித்துள்ளதை இணையத்தேடல்களில் கவனித்துள்ளேன். இவற்றைப்பற்றித் தற்போது எத்தகைய வரவேற்பினைப் பெற்றுள்ளன என்பதைக் கூற முடியாது. காலம் தான் கூறவேண்டும்.  மேலும் ஆங்கிலத்தில் நான் எழுதியவை மிகவும் குறைவு. நான் ஆங்கில வலைப்பூ இணையத்தளத்தினை 'Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner' என்னும் பெயரில் வைத்துள்ளேன். அதற்கான இணையத்தள முகவரி: https://vngiritharan23.wordpress.com/  அங்கு என் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை, ஆங்கிலக்கவிதைகளை நீங்கள் வாசிக்கலாம்.

16. கனடாவில் வெளிவந்த முதல் தமிழ் நாவல், நீங்கள் எழுதிய ‘மண்ணின் குரல்’ என அறிகின்றேன். இது பற்றிச் சொல்லுங்கள்.

1984ஆம் ஆண்டு கனடா வந்தேன்.  அப்பொழுது மான்ரியாலில் கையெழுத்துப் பிரதியாக வெளியாகிக்கொன்டிருந்த 'புரட்சிப்பாதை' என்னும் சஞ்சிகையில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 'மண்ணின் குரல்' என்னும் சிறு நாவலொன்றினையும் எழுதியிருந்தேன். அதில் வெளிவந்த 'மண்ணின் குரல்' முடிவடைவதற்குள் அக்கையெழுத்துச் சஞ்சிகை நின்று போய்விட்டது. எனவே நாவலை முடித்து , 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றையும் சேர்த்து 1987 தை மாதம் 'மண்ணின் குரல்' என்னும் சிறு தொகுப்பினை மங்கை பதிப்பகம் சார்பில் வெளியிட்டேன். அதுவே நான் அறிந்த வரையில் கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அதனைக் கனடாவில் இயங்கிக்கொண்டிருக்கும் றிப்ளக்ஸ் நிறுவனம் அச்சடித்துத் தந்தது. மேலும் அந்நூலை அன்றே கணினி மூலம் அச்சடித்து வெளியிட்டார்கள்.

17. நீங்கள் நியூயோர்க்கில் தடுப்புமுகாமில் இருந்ததை மையப்படுத்திச் சொல்லும் ‘அமெரிக்கா’ குறுநாவல், அதன் பின்னரான நியூயோர்க் மாநகரத்து வாழ்வை விபரிக்கும் ‘குடிவரவாளன்’ நாவல் இவை பற்றி சிறிது சொல்லுங்கள்.

1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து கனடா நோக்கி அகதியாகச் செல்லும் வழியில் பாஸ்டன் நகரில் எம்மை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டிய டெல்டா விமான நிறுவனம் ஏற்க மறுத்து விட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் அகதிக்கோரிக்கையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் சட்டபூர்வமாகக் கனடா செல்லவிருந்த பயணிகள். எங்களுக்கு எட்டு மணி நேர 'ட்ரான்சிட் விசா' கூடத்தரப்பட்டிருந்த நிலையில், அகதிக்கோரிக்கையினை முன் வைத்த எம்மைச் சட்டவிரோதக் குடிவரவாளர்களாகக் கருதிய அமெரிக்க அரசு பாஸ்டனிலிருந்து எம்மை நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் கொண்டு சென்று அடைத்து விட்டது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் எம்மை அடைத்து வைத்த அரசு தன் தவறினை உணர்ந்து சொந்தப்பிணையில் செல்ல அனுமதியளித்து விடுவித்தது. இந்த மூன்று மாதத்தடுப்பு முகாம் அனுபவங்களைப் பதிவு செய்வதன் அவசியத்தை உணர்ந்ததன் விளைவே எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவல். கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியானது. அக்காலகட்டத்தில் தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. பின்னரே அது தன் வடிவத்தை மாற்றிச் சஞ்சிகையாக வெளிவர ஆரம்பித்தது. இந்த வகையில் 'அமெரிக்கா' நாவல் பதிவு செய்யும் அனுபவம் முக்கியமானது என்று கருதுகின்றேன். 'அமெரிக்கா' தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக (மங்கை பதிப்பகம் - கனடா- வுடனிணைந்து ) , மேலும் சில  சிறுகதைகளையும் இணைத்து வெளியானது. மிகுந்த வரவேற்பினைப்பெற்ற தொகுதி அது.

அதன் பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மேலும் ஒன்பது மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக் குடியானவனாக எவ்விதமான வேலை செய்வதற்குரிய சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி அலைந்து திரிந்தேன்.  அந்த அலைந்து திரிந்த அனுபவத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் நீண்ட நாள்களாக எனக்கிருந்தது. அதன் விளைவே அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான 'குடிவரவாளன்' நாவலாகும். ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் அமெரிக்கா - 11 என்று வெளியான நாவல் பின்னர் தன் பெயரைக் 'குடிவரவாளன்' என்று மாற்றிக்கொண்டது. இதுவும் இலங்கை அகதியொருவரின் நியூயார்க் மாநகர அனுபவத்தை வெளிப்படுத்துவதால், ஆவணப்படுத்துவதால் முக்கியமானது என்று கருதுகின்றேன்.

18. உங்களது படைப்புகளை பல்கலைக்கழக மாணவர்கள் தமது பட்டப்படிப்பிற்காக ஆய்வு செய்துள்ளதாக அறிகின்றேன். அதைப் பற்றிய விபரங்களை இங்கே தரமுடியுமா?

முனைவர் ர. தாரணி அவர்கள் பினவரும் ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழக ஆய்வரங்குகளில் சமர்ப்பித்துள்ளார்.
1. Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan
2. The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan
(இவ்வாய்வுக் கட்டுரை  ‘Scholarly International Multidisciplinary Print Journal’ (January -February 2017) என்னும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.)
3. முனைவர் ர. தாரணி '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் விமர்சனக்கட்டுரையினையும் எழுதியுள்ளார். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளது.

ஏனைய ஆய்வுகள்:
4. வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் ஞானசீலன் ஜெயசீலன் "The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan" என்னும் ஆய்வுக்கட்டுரையினைத் தமிழக ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருக்கின்றார். இவ்வாய்வுக்கட்டுரை தமிழகத்தில் வெளிவரும் 'பனுவல்' என்னும் ஆய்விதழிலும் வெளியாகியுள்ளது.
5. 'வ.ந.கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்வு இலக்கிய பதிவுகள்  என்னும் தலைப்பில்  இளமுனைவர் பட்ட ஆய்வேடானது, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை மாணவியாகிய அங்கம்மாள் என்பவரால், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளது.
6. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'Fractured Self: A Study of V.N. Giritharan’s Selected Short Storie' என்னும் தலைப்பில் எம்.துரைராஜ் என்பவர் தனது Master of Philosophy in English பட்டப்படிப்புக்காக ஆய்வு செய்துள்ளார்.
7. சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு தனது உயர்தரக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத்திட்டத்தில் சுவடுகள் (நோர்வே) இதழில் வெளியான 'பொந்துப்பறவைகள்' என்னும் சிறுகதையைச் சேர்த்துள்ளது.

19.  ‘முகநூல் இலக்கியம்’ - இந்த முகநூலால் நீங்கள் அடைந்த இலக்கியம் சார்ந்த நன்மைகள்/தீமைகள் என்ன?
முகநூல் என்னைப்பொறுத்தவரையில் ஆரோக்கியமான விளைவுகளையே அதிகமாகத்தருவதாகக் கருதுபவன். எழுத்தாளர் ஒருவரின் பத்திரிகைகள், சஞ்சிகைகள்  ஆகியவற்றில் வெளியாகும் பத்தி எழுத்துகளைப் போன்றவையே 'முகநூற்  பதிவுகள்' என்பது என் கருத்து.  முகநூல் மிகவும் இலகுவாக அதிகமான வாசகர்களிடம் உங்கள் முகநூற் பதிவுகளைக் கொண்டு செல்கின்றது. மேலும் 'முகநூல்' நீங்கள் விரும்பும் கலை, இலக்கிய ஆளுமைகள் பலருடன் நட்பு பேணிட வழி வகுக்கின்றது.  அவர்களது எண்ணங்களை , உங்களது எண்ணங்களை ஒருவருடனொருவார் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதைச் சாத்தியமாக்கியுள்ளது சமூக ஊடகமான 'முகநூல்'. மேலும் உடனுடன் தகவல்களை அறிய முடிகின்றது. அரசுகளால் மானுட உரிமை மீறல்களை ,முன்பு போல் மூடி மறைக்க முடியாது. இந்த விடயத்தில் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் பணி போற்றுதற்குரியது. எந்தப்புதிய தொழில் நுட்பமும் ஆரோக்கியமான விளைவுகளையும், கூடவே எதிர்மறையான விளைவுகளையும் ஒருங்கே கொண்டிருக்கும். ஆறறிவு படைத்த மானுடர்களாகிய நாம்தாம் நல்லதைப்பிரித்து அல்லதைத்தவிர்க்க வேண்டும். இந்த வகையில் என்னைப்பொறுத்தவரையில் 'முகநூல்' போன்ற சமூக ஊடகங்களின் வரவை ஆரோக்கியமான வரவாகவே காண்கின்றேன்.

20. கனடாவில் ஆரம்பத்தில் வெளிவந்த கையெழுத்துப் பிரதிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவை பற்றி…
கனடாவில் 84இல் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையாக வெளிவந்தது. சுமார் பதினைந்து இதழ்களுக்குள் வெளியாகியிருக்கலாம். கனடாவில் நான் எழுதிய படைப்புகள் முதலில் வெளிவந்தது அக்கையெழுத்துச் சஞ்சிகையில்தான். 86.87 காலகட்டத்தில் நான் 'குரல்' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையினை நடாத்தியிருக்கின்றேன். மான்ரியால் நகரிலும் வேறு சில கையெழுத்துச் சஞ்சிகைகள் வெளிவந்துள்ளதாக அறிகின்றேன். அவை பற்றிய போதிய விபரங்கள் கைவசமில்லாததால் இத்தருணத்தில் விரிவான பதிலினைத் தர முடியவில்லை. இது பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று கருதுகின்றேன்.

21. எழுத்தாளர்களில் பலர், எழுதுவது ஒன்றாகவும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நேர் முரணாகவும் உள்ளது. இவர்களை மனதில் வைத்துக் கொண்டு - ’படைப்பாளியைப் பாராதே, படைப்பைப் பார்’ என்ற கோசம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சமூக, அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒருவர் எழுதும் படைப்புகளைப்பொறுத்தவரையில் அவர்களது வாழ்க்கையையும், எழுத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து, தம்மைச் சத்தியசோதனை செய்து, அதன் விளைவாக எழுதுபவர்களாக இருப்பின் ஏற்றுக்கொள்ளலாம்.

மானுட வாழ்க்கையென்பது மானுடரின் ஆழ்மன, வெளிமன உணர்வுகளுக்கிடையிலான போராட்டமே.  ஆழ்மனத்து உணர்வுகளை எல்லாராலும் அடக்கிச் சாதிக்க முடிவதில்லை. இதனால்தான் பகுத்தறியும் வெளி மனம் தவறென்று கூறும் விடயங்கள் பலவற்றை, ஆழ்மனத்தூண்டுதல்களால் மானுடர்கள் பலர் புரிந்து விடுகின்றார்கள். இந்த நிலையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சூதாட்டத்துக்குத் தம்மை அடிமையாக்கியவர் எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி. அதற்காக அவரது நாவல்களின் மகத்துவத்தை நாம் மறக்க முடியுமா?

நான் வாசித்த பல படைப்புகளை அவற்றை எழுதியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தபின் வாசித்தவனல்லன். முதலில் ஒரு படைப்பு கூறும் பொருள், அதன் நடை, பாத்திரப்படைப்பு , கதைப்பின்னல், பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் ,அது கூறும் பொருள் எனப் பலவற்றை உள்ளடக்கியது. கூறும் பொருள் மட்டுமே அப்படைப்பின் வெற்றியை அல்லது தரத்தை நிர்ணயிப்பதில்லை. இந்த வகையில் பொதுவாக எழுத்தாளர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது குறை, நிறைகள் அவரது படைப்பொன்றினை வாசிப்பதற்குத் தடையாக இருப்பதில்லை; இருக்கக்கூடாது என்பேன்.

22. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் சுயாதீனமாக எதையும் எழுதக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். அவர்களது போரியல் இலக்கியம் சார்ந்த படைப்புகள் பற்றி நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்?

யாரும் போரியல் சார்ந்த படைப்புகளை எழுதலாம். போரில் ஈடுபட்டவர்கள் மட்டுமே எழுத வேண்டுமென்பதில்லை. ஆனால் போரியல் வாழ்வனுபவம் அற்ற ஒருவர் அவ்விடயத்தில் போதிய ஆய்வுகள் செய்து அவற்றின் அடிப்படையில் எழுத வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அவ்வனுபவத்தினூடு வந்த ஒருவருக்கு அந்தப்பிரச்சினை இல்லை. மிகவும் இயல்பாக எவ்விதமான சான்றுகளும் தேவைப்படாத நிலையில் அவரால் எழுத முடியும். புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் சுயாதீனமாக எதையும் எழுதலாம் என்ற சூழலில் எழுதுவதற்கு  முடியும் என்பதால், அவர்களது போரியல் இலக்கியம் சார்ந்த அவர்களது படைப்புகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. எழுதப்படும் படைப்பின் தன்மை மட்டுமே அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும்.

அதே சமயம் ஊரில சுயாதீனமாக எழுத முடியாத சூழலில் வாழும் ஒருவரும் கூடப் போரியல் இலக்கியத்தைப்படைக்க முடியும். உதாரணமாகக் குறியீடுகள் மூலம் அவ்விதமான புனைவகளைப் படைக்க முடியும். நான் என்ன கூற வருகின்றேனென்றால் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு குடும்பத்தின் கதையாகத் தென்படும் கதையானது இன்னுமோர் ஆழ்ந்த அர்த்தத்தில் இன்னுமொரு பொருளினைத்தர முடியும். ஒரு குடும்பம் என்பது ஒரு நாட்டின் அரசின் தவறுகளை விமர்சிப்பதாக அமையும் வகையில் இருக்கலாம்.

இவ்வகையான படைப்புகளில் , புகலிடத்தமிழ் எழுத்தாளர்கள்தம் படைப்புகளில், அண்மையில் வெளியான 'பார்த்தனீயம்' முக்கியமானதொரு படைப்பு. அதன் பாத்திரப்படைப்புகள் சிலவற்றில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் , இந்தியப்படைகளின் இலங்கைத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைப் பதிவு செய்தல் என்னும் அடிப்படையில் அது முக்கியமானது. சோபாசக்தி, சயந்தன், குணா கவியழகன் போன்றோரின் படைப்புகளிலும் போரியற் சூழல் விபரிக்கப்பட்டுள்ளது. தம் அனுபவங்களின் அடிப்படையில் அவர்கள் எழுதும் படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை வரலாற்றினைப் பதிவு செய்கின்றன அல்லது ஆவணப்படுத்துகின்றன என்னும் வகையில்.
குணா கவியழகனின் படைப்புகள் போராட்ட காலத்து அனுபவங்களை, யுத்த முடிவுக்குப்பின்னரான தடுப்பு முகாம அனுபவங்களை ஆவணப்படுத்துகின்றன.

23. இலக்கிய உலகில் / வாசகர் பரப்பில் கவனம் பெறாத பல புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் அசுரகதியில் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவது பற்றி?

தமிழ் இலக்கிய உலகு பல குழுக்களாகப் பிளவுண்ட நிலையில் எழுத்தாளர்கள் தற்போதுள்ள தொழில் நுட்ப வசதிகளின் அடிப்படையில் தம் படைப்புகளை மொழிமாற்றம் செய்து வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அவற்றில் நல்லவை நிலைக்கும். அல்லவை ஒதுங்கும் அல்லது மறையும்.


24. கனடாவில் பிறந்து வளர்ந்தவர்களின் தமிழ், இலக்கிய முயற்சிகள் எப்படி இருக்கின்றன?

பொதுவாக இங்கு பிறந்த குழந்தைகள் பலர் அதிகமாக ஆங்கிலத்திலேயே எழுதி வருகின்றார்கள். எதிர்காலத்தில் இவையே கனடியத்தமிழர் இலக்கியமாக நிற்கப்போவது யதார்த்தம். இப்பொழுதுதான் எழுதத்தொடங்கியிருக்கின்றார்கள். இன்னும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் கனடாவில் மட்டுமல்ல ஏனைய நாடுகள் பலவற்றில் வாழும் புகலிடத்தமிழர்களின் குழந்தைகள் பலர் தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் எழுதத் தொடங்கியிருக்கின்றார்கள். சிலர் கவனத்துக்குள்ளாகிய எழுத்தாளர்களாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றார்கள். இவ்விதமாக எழுதும் இளையவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

1. வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 1 , கண்டவர்: கே.எஸ்.சுதாகர் [ஞானம் , இலங்கை, சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017 இதழில் வெளியானது.]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R