- கடல்புத்திரன்  (பாலமுரளி) -[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் 'கடல்புத்திர'னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது 'வெகுண்ட உள்ளம்' நாவலில் காண முடியாது. 'வெகுண்ட உள்ளங்கள்' என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. - பதிவுகள் -]

ஆசிரியரின் என்னுரை!

இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான 'தாயகம்'பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் வ.ந.கிரிதரனின்  முயற்சியில் குமரன் வெளியீடாக 'வேலிகள்' என வெளியாகிய தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது.  நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம்.

இந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது. அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நான்கு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம். அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல். தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி, அடுத்தப்பக்கம் இருப்பது வேலணைத் தீவு. காரைநகர், பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு, மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும்.  மகிந்த ராஜபக்சா அரசாங்க  காலத்தில்   அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிற‌து போல இருக்கிறது. கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட்டே விட்டிருப்பதுப் போலவே காட்டுகிறது.   ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை.   .இந்த இடத்தில் தான் .1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது. 50 % …உண்மையும்,50 %  …புனைவுமாக கலந்து எழுதப் பட்டிருக்கிறது. இனி வாசியுங்கள்.இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் இருக்கலாம்.

சில திருத்தங்களுடன் இந்நாவல் மீண்டும் தொடராகப் 'பதிவுகள்'இணைய இதழில் வெளியாகின்றது.


அத்தியாயம் இரண்டு!

வாலையம்மன் கோவில் வாசிகசாலை அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், தில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம் பயத்துடன் நின்றிருந்தனர். அவர்கள் சார்பில் வாசிகசாலைக் கமிட்டி இயக்கக் 'காம்பு'க்குப் போய் மன்னிப்பு கேட்பது என்று தீர்மானித்தார்கள்.  ஆனால், இரண்டு இயக்கங்களையும் உடனே அணுகப் பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கிறார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு …இருக்குமோ? தெரியாது .அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாகிவிடும். எனவே கட்டாயமும் இருந்தது.

அவர்கள் பயந்தது நடந்தே விட்டது. வடிவேலின் இயக்கம் வானில் வந்திறங்கியது. கமிட்டி ஆட்களை, தலைவர் பரமேஸ், உபதலைவர் பிரகாசம், காரியதரிசி சரவணன், உபகாரியதரிசி பாலன், பொருளாளர் குமார், கமிட்டி உறுப்பினர் சுமன், மனோகரன் அகிலன் என்று எட்டுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போனார்கள். கூட்டத்திலிருக்கிற மற்றவர்களுக்கு …வயிற்றைக் கலக்கியது. தலைவரையே கைது செய்தது அவர்களை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் ஆக்கிவிட்டது.  இனி, மற்றதின் தாக்குதல் எப்படியிருக்கப்போகிறதோ? எனவும் பயந்தார்கள். அவர்கள் மத்தியில் இக்கரையைச் சேர்ந்த அவ்வியக்கத்தைச் சேர்ந்த அன்டன், நகுலன் என இரண்டு பெடியள் இருந்த போதும் அவர்களுக்கு சிறிதும் அக்கரையோடு தொடர்புகள் இருக்கவில்லை. தீவுப்பகுதி இன்னொரு ,எ.ஜி.எ அமைப்பு. இவர்கள்,எ.ஜி.எ யிலே இருக்கிற சிறு ஜி.எஸ் …பிரிவு.

வீட்டில், விளக்கேற்றியபிறகும் துயரத்துடன் கூட்டம் கூட்டமாக கூடி என்ன செய்யலாம் எனக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அன்டன், நகுலன், நடேசன் ஆகியோர் கனகன் வீட்டு மணலிலே உட்கார்ந்திருந்தார்கள். முருகேசு, பஞ்சன், தில்லை கோஷ்டி ரோட்டிலேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தது. செல்லன், தியாகப்பு போன்ற பழசுகளின் வட்டம் கோவிலடியில் இருந்தது.

அன்றைக்கு யாருமே நித்திரை கொள்ளமாட்டார்கள் போலத் தோன்றியது. கமிட்டியில் வயசானவர்கள், ஒ.லெவல் வரைபடித்த பெடியள்கள், ஒரிருவர் அரச வேலையில் இருப்பவர்கள் … என‌ ஆகியோர்கள் இருந்தனர். விசயம் அறிந்து நிதானமாக நடக்கிற அதையே அரஸ்ட் பண்ணி விட்டதால் போனவர்களுக்காக யார் கதைப்பது? எனப் புரிய வில்லை. கடைசியில், பழசுகளின் கோஷ்டி அண்டனைத் தேடி வந்தது. "தம்பி, நாளைக்கு காலையில் ஒருக்காய் போய் எப்படி, என்ன மாதிரி நடந்தது என்பதை உங்கடயாட்களிற்கு அறிவிச்சு விடு. வாசகிசாலைக்குழு மன்னிப்புக் கேட்க இருந்ததையும் சொல்லிவிடு” என்றார் தியாகப்பு.

“சரி அப்பு "என்றான்

கனகனுக்கு எல்லாரையும் பார்க்கப் பாவமாய் இருந்தது.

ஆளுக்காள் கலைய, பன்னிரண்டு ஒரு மணி இருக்கும். நித்திரையில் ஆழ்கிற நேரம் திடும் என வீடுகளில் அல்லோகலம் ஏற்படத் தொடங்கியது. யாரோ பெடியள் அணி ஆயுதத்தோட வந்து சூழ்ந்துவிட்டார்களாம். அடுத்த இயக்க மும் வந்துவிட்டது என்று அவனுக்குப் புரிந்தது.அண்ணன்ரை சேதி என்னவாக இருக்குமோ என மனம் பதற‌ அண்ணர் வீட்ட‌  விழுந்தடிச்சு ஒடினான். அண்ணன் உட்பட அடிசவையளை அவர்கள் அரெஸ்ட் பண்ணிவிட்டார்கள். எப்படி, அவர்களிற்கு அடிச்சவையள்?  வீடுகள் சொல்லி வைச்சது மாதிரித் தெரிந்தனவா?.அவர்கள் மத்தியில் பின் தளத்தில் பயிற்சி பெற்ற பட்சி தோழரும்,அம்மன் கோவிலடியில் பண்டா தோழரும் இருக்கவே செய்தனர். அவர்கள் அவ்வளவாக அமைப்புத் தோழர்களுடன் திரிவதில்லை. லிங்கனை அவர்கள் சந்திக்கிறவர்கள் தான். இராணுவப் பிரிவுடனும் தொடர்பு பட்டிருக்கிறவர்கள். சாமத்திற்குப் பிறகு யாரிடமும் கேட்பதற்கு.. வாய்ப்பும் இல்லை. இருளைக் கிழித்தபடி வாகனம் கரையை நோக்கி பறந்தது .அவர்கள் வள்ளத்தில் ஏற்றப்பட்டு அக்கரைக்கு கொண்டு போக, பீதியில் குழம்பிய நிலை இன்னும் அதிகமானது. அன்டனுக்கும் நகுலனுக்கும் வந்தவர்களைத் தெரிந்திருக்கவில்லை.

தனியாயிருக்கப் பயந்து அண்ணி கலாவையும் பாபுவையும் இழுத்துக்கொண்டு அவன்ர‌ வீட்டுக்கு வந்திருந்தார். மற்ற வீடுகளிலும் இதே நிலை தான். தனிக்கட்டையாக இருந்தவர்கள் வீடுகளி லும் சோகம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் குமைந்தன. சகோதரங்கள் ஆளுக்காள் மூஞ்சிகளைப் பார்த்துக் கொண்டே  இருந்தார்கள்.

விடிந்தபிறகு, முதிர்ந்த பெண்களை 'காம்பு'க்கு அனுப்பி கதைத்துப் பார்ப்போமா என்று இளைஞர் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்க வயதானவர்கள் மறுத்துவிட்டார்கள். பெரிசுகளிற்கு தம் பொண்டாட்டிமார் மேல் பாசம் அதிகம் தான் தவிர அவர்களிற்கு வெளி அனுபவம் ,படிப்பறிவும் குறைவு தான்.தைரியம் பத்தாது.

கனகன் வீட்டு வலைக் குவியலில் நித்திரையில் கிடந்த‌ அன்டனையும் நகுலனையுமே அதிகாலையிலே எழுப்பி விரட்டினார்கள். கனகன், பாரில் அன்டனை ஏற்ற, நகுலன் தனிய வர சைக்கிள்கள் அயற்கிராமத்தை நோக்கி விரைந்தன. தேத்தண்ணி ஒரு வாய் குடித்த கையோட வெளிக்கிட்டிருந்தார்கள். பிடிபட்டவர்களுக்கு அடி விழாமல் காப்பாற்றி விட வேண்டும் என்ற அந்தரம் அவர்களுக்கும் இருந்தது. அயல் கிராமத்தில் இருக்கிற‌அவர்களின் பொறுப்பாளரையும் எழுப்பிக் கொண்டு ஒட வேண்டும். பொதுமக்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவாக மாற்று அரசாங்கம் போல ஒரு கமிட்டி அமைப்பை அவ்வியக்கமும் வைத்திருந்தது. ஏ.ஜி.ஏ.யை சந்திக்க முதல் விதானையாரைச் சந்திப்பதுபோல் அவ்விடத்துக் கிராமப் பொறுப்பாளரைச் சந்திக்கவேண்டும். பிறகே அவர்கள் ஏ.ஜி.ஏ.யைச் சந்திக்க வேண்டும். ஏ.ஜி.ஏ.களுக்கு மத்தியிலே கூட்டம் நடைபெறும். தீவுப்பகுதி ஏ.ஜி.ஏ.கடலால் பிரிக்கப்பட்டிருந்ததால். சாதாரண விதானையார் பிரிவுகளுக்கு அயலில் இருந்த மானிப்பாய் விதானையாருடன் இருந்தளவு பழக்கம் கூட‌அவர்களோடு நிலவவில்லை.

பெரிய பிரச்சனைகளை ஏ.ஜி.ஏ.மட்டத்தினரே கதைத்து தீர்த்துக் கொள்வர். முடியவில்லை என்றால் அவர்களிற்கு மேலே இருக்கிற‌ தலைமையாயிருக்கிற ஜி.ஏ.(அரசாங்க அதிபரு)க்கு கொண்டு போவார்கள். எல்லா அமைப்புகளையுமே பொதுமக்கள் சந்தித்துக் கதைக்கக் கூடியதாகவே அமைக்கப்பட்டிருந்தது. விதானையார், ஏ.ஜி.ஏ. தீர்ப்புகள் திருப்தி அளிக்காவிட்டால் மக்கள் முறைப்பாடுகளை நேரடியாகவும் ஜி.ஏ. அமைப்பில் போய்க் கதைக்கலாம். இது தான் நடைமுறை. ஆனால் அதற்கு முதல் அமைப்புகள் சாம,தான,தண்ட முறைகளை எல்லாம் பாவித்து விடுவார்கள். "அடியாத மாடு பணியாது"என்ற பழமொழியே எங்களிடையே இருக்கிறது அல்லவா? கிராமப் பொறுப்பாளர் லிங்கன் கிராமத்தில் எழுகிற சமூகப் பிரச்சனைகளை அறிய கிராமத்து தோழர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நேரிலே சந்தித்து தனித்தனியாகக் கதைத்து அடி நுனிகளை அறிய முயற்சிப்பான். பிறகு ,பொதுவான நியாயம் எனப்படுறதுக்கு ஒத்துப் போகச் சொல்லி கேட்டுக் கொள்வான். வீணாக கிராமத்து மக்களை எ.ஜி.எ க்கு கொண்டு போய் அடி வாங்கிக் கொடுக்க விரும்புவதில்லை. அவனை குட்டி எம்.ஜி.ஆர் என வைத்துக் கொள்ளலாம். தோழர்கள் பிரச்சனைப் பட்டால், 'மன்னிப்பு கேட்க'வைத்து சமாதானப்படுத்தி விடுவான். இப்படி நடப்பதால் தோழர்களிற்கு எல்லாம் லிங்கனை நன்கு பிடிக்கும்.

முதலில் விதானையாரைச் சந்திக்கப் போய்க்  கொண்டிருந்தார்கள்.

மற்ற இயக்கத்தைப் போய்ச் சந்திப்பதென்றால் அவர்களுடைய பிரதேசக் காம்புக்கு நேரடியாகப் போக வேண்டும். அவர்களுடைய நடைமுறைகளே வேற மாதிரி. அவர்கள் ஆயுதங்களோட எந்த நேரமும் புழங்குவதால், இளைஞர்களை அனுப்பப் பயப்பட்டார்கள். இயக்கப் பகைமையும் அதிகம் காணப்படுவதால் மற்ற இயக்கத்தின் பெடியளும் வாரவயளில் கலந்திருப்பார்களோ என  சந்தேகித்து அவர்களும் கடுமையாக அணுகுவார்கள். எனவே, கடைசியில் கிழடு கட்டைகளை அதற்கு அனுப்புவதென முடிவெடுத்திருந்தனர்.

காலையிலே வெளிக்கிட்டு விட்டதால், சாமிக்கிழவர், அல்லது தியாகப்பு தலைமையில் போனார்களா என்பது பெடியள்களிற்குத் தெரிந்திருக்கவில்லை. இருவருமே ஒரளவு விசயங்களை புரிந்து கொள்கிற அனுபவஸ்தர்கள் . முந்தி  எல்லாம் அடி பிடி, சண்டை, ஆதரவின்மை என்பவற்றால் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்திருந்தார்கள். இப்ப, இவர்கள் தலையிட்ட பிறகே ஒரே குழுவாக ஐக்கியப்பட்டு, பலம் பொருந்தியதாக இயங்கி வருகிறது. அவர்களின் ஆதரவாலே வாசிகசாலைக் குழு நல்ல முறையில் இயங்குகிறது.

இயக்கப்பிரச்சினை என்பதால் கையாளுவதில் எல்லாருக்கு மே பிரச்சனை. பெடியள்கள், விதானையார் லிங்கனை தேட, அவன் வீட்டார் “அவன் தலைமைக் காம்புக்குப் போயிருக்கிறான்” என்ற தெரிவித்தார்கள். நேற்று போய் இருக்க வேண்டும்,அங்கேயே தங்கி விட்டான் போல இருக்கிறது. அப்படியே தலைமைக் காம்பை நோக்கி விரைந்தார்கள். குறைந்தது மூன்று,நாலு மைலாவது சைக்கிள் ஓட வேண்டும். அன்டன் குறுக்குப் பாதைகளினூடாக விட்டு விரைந்த போதும். தூரம், தூரம் தான் ! போய்ச் சேர்ந்த போது எட்டரை ஒன்பதாகி விட்டது. நல்ல காலம் லிங்கனும் அவர்களுடன் அந்த வலக்க‌ம்பறை  தேர்முட்டியி லே  இருந்தான். அது கோயிலின் தேர் நிறுத்தக் கட்டியிருக்கும் படிகளோடு கூடிய மேடை. பெரிய திறந்த வளவுடன் அமைந்த கோயிலுக்கு முன்னால் உள்ள அந்த மேடையையே இலகுவாக மக்கள் சந்திப்பதற்காக அவர்களுடைய இயக்கம் தெரிந்திருந்தது.

லிங்கனைத் தனியே கூட்டிக்கொண்டு போய் அன்டன் விசயத்தைச் சொன்னான். தீவுப்பகுதிப் பெடியனின் கை முறிந்த செய்தி அவர்களுக்கு முதலே வந்திருந்தது. ஆனால் அவன் பகுதி ஆட்களால் நடந்தது என்று அப்பவே தெரிய வர‌, அவன் அவர்களைக் கூட்டிக்கொண்டு பிரபாவைச் சந்திக்க சென்றான்.

“பிரபா தெற்குப் பகுதியிலும் பொறுப்பாளன் ஒருத்தனை கட்டாயம் நியமிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பக்கத்தில் போய் அமர்ந்தான். கனகன், அன்டன், நகுலன் ஆகியோரும் பக்கத்தில் போய் அமர்ந்தார்கள். “இவயள் பகுதியில் இருக்கிறவயள் இயக்கப்பெடியள் என்று தெரியாமல் கையை உடைத்து விட்டார்களாம். இரவு போல் தீவு அமைப்பு வந்து இவர்களில் ஆறு பேரை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போய்விட்டது” என்று தெரிவித்தான். பிரபாவுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் இன்னொரு ஏ.ஜி.ஏ. அமைப்பு அனுமதியில்லாமல் அவர்களுடைய ஏ.ஜி.ஏ.பிரிவுக்குள் நுழைந்தது ஒருமாதிரியாக இருந்தது. இத ஜி.ஏயோட கட்டாயம் கதைக்க வேண்டும். ஆனால் எங்களின்ரை பெடியளின்ரை கையை முறித்திருக்கிறார்கள். மண்டை தீவுப்பக்கம் சென்றியில் நிற்கிற பெடியள். எங்களோட சொல்லிப் போட்டுச் செய்திருக்கலாம் தான்” என்றான். மண்டைத் தீவுக்காம்ப், இலங்கைப் படையினரால் பண்ணைக் கடலைக் கடந்து ஏறுகிற பாதை மூன்றாகப் பிரிந்துபோகும் பகுதியில் உள்ள கணிசமான பரப்பில் வீதியை மறித்து போடப்பட்டிருந்தது.

கனகனுக்குத் திகிர் என்றது. அண்ணனைப் போட்டு அடிச்சிருப்பாங்களோ? ஆனால், இவயளுடைய  பிரச்சனைகள் வேறு பட்டவை விட்டுக் கொடாமல் கதைத்தாலும் பிரபா உடனே நடவடிக்கை எடுத்தான். லிங்கனை இன்னொருத்தனோடு மோட்டார் சைக்கிளில் தீவுப் பக்கம் அனுப்பினான். இன்னுமிருவரை ஜி.ஏ.யிடமும் அனுப்பினான். லிங்கன், அண்டனைப் பிறகு சந்திப்பதாகக் கூறி விடைபெற்றான். பிரபா அவர்களைப் பார்த்து ஆதரவாகச் சொன்னான். “உண்மை தெரிந்தால் எங்கட பெடியள் சும்மா அடிக்கமாட்டினம். போய் வாருங்கோ” வெறும் தேத்தண்ணியோட வெளிக்கிட்டதால் மூவருக்கும் பசி வயிற்றைக் குடைந்தது.

அருகில் உள்ள தேத்தண்ணிக் கடையில் புகுந்து வடையும் தேத்தண்ணியும் வெட்டி விட்டு வெளிக்கிட்டார்கள். தேர்முட்டியில் கூட்டம் அதிகமாகியது. “அவர்களின் சட்டசபை கூடிவிட்டது” என்று  அன்டன் கூறினான். “கனகு, இண்டைக்கு நிலவரம் எப்படியும் தெரிந்துவிடும்.தீவுப் பகுதி ஆட்கள் அடிக்க மாட்டினம் என்றே நினைக்கிறேன். ஆனால் எங்கட ஆட்கள் வடிவேலனோடு மட்டும் தான் கதைச்சவங்கள். எங்கட‌ இயக்க த்தோடு கதைக்கவில்லை. ஒரியக்கம் மற்ற இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அது பிரச்சினை தான்” என்றான் சிந்தனை வயப்பட்டு.  பகல் 1.30 மணி போல் லிங்கன் வாசிகசாலைக்கு வந்தான். “இண்டைக்கு பின்னேரம் மூன்றரை நான்கு மணி போல எல்லாரையும் விட்டு விடுவினம். அந்த இயக்கத்தோட‌ கதைத்தது போதும் என ஒரு சிலர் உளறியதால் அடி கொஞ்சம்விழுந்து விட்டது. எல்லா இயக்கங்களும் இன்னமும் ஒரு பொதுவான ஐக்கியப்பாட்டுக்கு.வரவில்லை. அதனாலும் நீங்கள் பிரச்சனைப்பட வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனான்.லிங்கன் போன கொஞ்ச நேரத்திற்கு பிறகு மற்ற இயக்கத்தின் வான் வாசகிசாலையில் வந்து நின்றது. அதிலிருந்து கமிட்டி யும் இறங்கியது. உருட்டல், மிரட்டல்கள் அவர்களை வாயடைக்க வைத்திருந்தது. “ரிவால்வரை, மகசீனை, கிரனேட்டை 8 மணிக்குள்ள கமிட்டி வாங்கிவிட வேண்டும்” என்று அதிகாரமாக கெடு விதித்து விட்டு போனார்கள்.

மற்றவர்களையும் பிடித்தது அவர்களுக்கு அப்பவே தெரிந்தது. லிங்கன் போய் சந்தித்ததையும் பின்னேரம் விடப்படுவார்கள் என்ற செய்தியையும் அறிந்து கொண்டார்கள். எல்லாமே குழுவை மீறிய விசயங்கள். நடப்பதை மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது. 4 மணிபோல் மற்றவர்கள் வள்ளத்தில் வந்து. கரையில் இறங்கி,  ஒரு மினி பஸ்ஸில் ஏற்றப்பட்டு வாசிகசாலைக்கு கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள். பொதுவாக எல்லாருக்குமே அடி விழுந்திருந்தது. சிலருக்கு உள்நோவு. குமாருக்கும் பஞ்சனுக்கும் புக்கை கட்டவேண்டியிருந்தது. முருகேசனிடம் ஒரு களைத்த முகத்தோற்றம் காணபப ட்டது.இயக்கங்களோடு சும்மாவேனும் பிரச்சனைக்கு போகக்கூடாது என்ற நினைப்பு எல்லாருக்கும் ஏற்பட்டிருந்தது.

மெளனமே எங்கும் கனத்தது .

கனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தபோது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “மீட்டிங்குக்கு உங்களை உடனடியாக வரட்டாம்” அண்டனுக்கும் நகுலனுக்கும் செய்தியை தெரிவித்தான்.

“கனகன் உன்ரை சைக்கிளை ஒருக்காத் தாரியோ” என்று அன்டன் கேட்டான். நகுலனிடமும் சைக்கிள் இருக்கவில்லை. வாசிகசாலைக் குழு அடிபட்ட பிறகு இயக்கத்துக்கு உதவுவதை வெறுப்பாகப் பார்த்தது. “கொண்டு போ என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்தான்’ முந்தினமாதிரி இருந்தால் வளர்ந்தவனாயிருந்தாலும் கோபத்தோடு தடுத்திருப்பான். அல்லது ஏதாவது சொல்லி இருப்பான் .இப்ப, எதிலேயும் பற்றற்றவன் போல ஈழநாடு பேப்பரில் கவனத்தை பதித்திருந்தான். சனமும் தீவிரமாக வாசிப்பது போல் மெளனமாக இருந்தது. இந்தச் சூழல் கனகனின் மனதையும் நோகச்செய்தது.

அவனைப் பிடிச்சுக்கொண்டு போன போது அழுது கொண்டு அண்ணியும் பிள்ளைகளும் ஒடி வந்தது ஞாபகம் வந்தது. அண்ணன் ஒரு வித்தியாசமான பிறவி முன்னர் அண்ணியின் ஊர்ப் பக்கமிருந்த செல்லாச்சி மாமி வீட்ட அடிக்கடி போய் வந்தான். மாமிட மகள் வதனியில் ஒரு பிடிப்பு இருப்பதாக.அவன் கூட நினைத்திருந்தான். ஆனால் பக்கத்து வீட்டிலே இருந்த வதனியின் சினேகிதியான‌ அண்ணியைப் பார்க்கத் தான் போனான் என்பது யாருக்குமே தெரியாது. இருவருக்குமிடையில் எப்படி காதல் ஏற்பட்டது?அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.யாழ்ப்பாணத்தில் கலப்பு மணம் என்றால் இலேசிலே எத்தரப்பினரும் அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்குள் செய்யவே கட்டுப் படுத்தினார்கள். முருகேசன் அண்ணியைக் கூட்டிக் கொண்டு வந்தபோது கத்தி, பொல் சகிதம் தொடர்ந்து வந்திறங்கிய அவர்களை தனியனாக திருக்கைவாளோடு துணிஞ்சு எதிர் கொண்டவன். பிறகு மண்டா, மீன் முள்ளு, தடி என கையில் பட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பஞ்சன், தியாகு, அவன் என அவன் செட்  திரண்டு வர ஒடிவிட்டார்கள்.

வாசிகசாலைக்குழு நிலைமையை கவனத்தில் எடுத்துச் சமாளித்தது. “எல்லாரும் கட்டாயம் அமைதி காக்கவேண்டும்” என கட்டுப்பாட்டை விதித்தது. அங்குள்ள வாசிகசாலை (சனசமூக நிலையம்) குழுவுடன் நேரே சென்று பேச்சு நடத்தியது.

“புனிதம் அவனோடயே வாழவிரும்புவதால் இப்படியே விடுறதுதான் நல்லது” எனக் கேட்டுக்கொண்டது. “உங்கள் பேச்சை நம்ப மாட்டன்” என்று சத்தம் போட்டுக்கொண்டு அவளுடைய அண்ணன் குழுவோடு அங்கே வந்தான். அந்த நேரம் “நான் வரமாட்டேன்” என மன்னி அவர்கள் மத்தியில் ஒடிஒளிந்தது எல்லார் மனதையும் கரைத்தது.

[தொடரும் ]

நாவல்: வெகுண்ட உள்ளங்கள் - அத்தியாயம் ஒன்று:

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R