வாழ்நாளில் பெரும்பகுதியை ஆராய்ச்சித் துறைக்கே அர்ப்பணித்த பேராசிரியர் வி. சிவசாமி! - வி. ரி. இளங்கோவன் -
வாழ்நாளில் பெரும்பகுதியை ஆராய்ச்சித் துறைக்கே அர்ப்பணித்துச் சமஸ்கிருதத்துறைக்கும், நுண்கலைத்துறைக்கும் சிறந்த பங்களிப்பு வழங்கியவர் பேராசிரியர் வி.சிவசாமி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமஸ்கிருதத் துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் வி. சிவசாமி வெளியிட்டுள்ள ஆய்வு நூல்களிலும், வெளியிட்ட கட்டுரைகளிலும், அவரது ஆராய்ச்சித் திறமை நன்கு புலப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாம் விரும்பிய முறையில் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று பார்க்கின்ற சந்தர்ப்பங்களையும், பெரும் பொருட் செலவுகளோடு கூடியதாக உரிய வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பல நாடுகளைப் பார்க்கும் சந்தர்ப்பங்களையும் தியாகம் செய்து சமஸ்கிருதத் துறையையும், அதனோடு தொடர்பான கலைகள் குறிப்பாக நுண்கலைகள், வரலாறு ஆகிய துறைகளில் மட்டுமன்றி இசை, பரதநாட்டியம், சிற்பம் முதலிய துறைகளிலும் பெரிதும் அபிமானமுள்ள இவர் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதித் தமது ஈடுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டுகள் பெற்றவர்.