வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane)ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) ஒரு சிங்கள ஊடகவியலாளர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் , 2006இல் இலங்கையை விட்டு புகலிடம் நாடி புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களிலொருவர் இவர். மெளனிக்கப்பட்ட யுத்தத்தின்போது இலங்கைத்தமிழர்கள் அடைந்த இன்னல்கள், துயரங்களை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற ஆவணப்படமான 'மெளனிக்கப்பட்ட குரல்கள்' (The Silenced Voices) ஆவணப்படத்தில் நேர்காணப்படும் சிங்கள ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.  இலங்கைத்தமிழர்கள் நிலையை நன்கு அறிந்த, அதற்காகக் குரல் கொடுக்கும் சிங்கள ஊடகவியலாளர்களில் ரோகித பாஷனா அபயவர்த்தனேயின் பங்களிப்பு முக்கியமானது. தற்போதும் நாடு திரும்பாமல் PEN அமைப்பின் உதவியுடன், ஜேர்மனியில் வாழ்ந்துவரும் இவர் 'இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள்' என்னும் (JDS - Journalists for Democracy in Srilanka: http://www.jdslanka.org/ ) இணையத்தளத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஆசிரியர் குழுவிலொருவராகவுமிருந்து வருகின்றார். ரோகித பஷானா அபயவர்த்தனே நன்கறியப்பட்ட சிங்களக் கவிஞர்களில் ஒருவரும் கூட. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மாற்றுக்கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிங்களப்பத்திரிகையான ஹிரு பத்திரிகையின் ஸ்தாபகராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவுமிருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தது. அப்பத்திரிகையில் இவர் எழுதிய அரசியல் கருத்துகள் காரணமாகவே இவருக்குப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவற்றின் காரணமாகவே இவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

சமூக ஊடகங்கள் காரணமாகவும், யுத்தம் ஏற்படுத்திய் பேரழிவுகள் காரணமாகவும் சிங்கள மக்களில் பலர் நாட்டில் அமைதி வேண்டுமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். உணரத்தொடங்கியிருக்கின்றார்கள். நாட்டில் தமிழர்கள் சம உரிமையற்று வாழ்வதை உணர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் சிறுபான்மையினத்தவரின் நியாயமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு அவசியமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். அவர்களிலொருவர் ரோகித பாஷனா அபயவர்த்தனே. இவர்களைப்போன்றவர்களைப்பற்றி, இவர்கள்தம் அரசியல் நிலைப்பாடு பற்றியெல்லாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.


நாவல்: கணங்களும், குணங்களும் - மணிவாணன்மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் (கனடா) பத்திரிகையில் சில சிறுகதைகள் எழுதியுள்ளேன். அவை வருமாறு:

1. ஒரு முடிவும் விடிவும்
2. ஒட்டகங்கள்
3. பொற்கூண்டுக்கிளிகள்
4..மழையில் சில அகதிகள்
5. அகிலா என்ன செய்து விட்டாள்
6. மழையும் அகதியும்

நாவல்: கணங்களும், குணங்களும் - மணிவாணன் (மணிவாணன் என்னும் பெயரில் 'தாயகம்' பத்திரிகையில் எழுதிய முதற் படைப்பு)

மணிவாணன் என்னும் பெயரில் ஒரு விமர்சனக் கட்டுரையினையும் எழுதியுள்ளேன்.

இவை தவிர வ.ந.கிரிதரன் என்னும் சொந்தப்பெயரில் எழுதியவைகளாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்.
2. நாவல்: அமெரிக்கா.
3. நாவல்: வன்னி மண்.
4. நாவல்: 1983 (முற்றுப்பெறவில்லை)
5. நாவல்: நவசீதா.

1. தொடர்: மரபும், கவிதையும்
2. தொடர்: வளர்முக நாடுகளின் குடிமனைப்பிரச்சினைகள்.
3. தொடர்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு.
4. தொடர்: பாரதியார் பற்றிய கட்டுரைகள்.
பல கவிதைகள் & கட்டுரைகள்.

சிறுகதைகள்:
1. மனித மூலம்
2. பூர்வீக இந்தியர்கள்
3. ஒரு மாட்டுப்பிரச்சினை (ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை)
4. சுண்டெலிகள்
5. கணவன்

என் அபிமானக் கவி பாரதி பற்றித் 'தாயகத்'தில் தொடர்ச்சியாக எழுதியுள்ளேன். அவற்றின் விபரங்கள் வருமாறு:

1. பாரதியின் பக்திப்பாடல்களும் சமுதாயப்பற்றும் - வ.ந.கிரிதரன் -
2. பாரதியும் மனிதகுல விடுதலையும் - வ.ந.கிரிதரன் -
3. பாரதியின் அஞ்சா நெஞ்சு - வ.ந.கிரிதரன் -
4. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. - வ.ந.கிரிதரன் -
5. இன்று புதிதாய்ப்பிறந்தோம் பாரதியின் வழியொன்று. - வ.ந.கிரிதரன் -
6. பொதுவுடமை பற்றிய பாரதியின் பார்வை. - வ.ந.கிரிதரன் -


தாயகம் முனி பதில்கள்

தொண்ணூறுகளில் 'தாயகம்' பத்திரிகையில் வெளியாகிய 'முனி பதில்'களில் பல்வேறு விடயங்களைப்பற்றியும் முனிவர் அளித்திருக்கும் பதில்கள் சுவையானவை; சிந்திக்கத்தூண்டுபவை. உதாரணத்துக்கு இரண்டு:

1. வாசகர் ஒருவர் 'முனிவரே! புலிகளின் போர்த்தந்திரம் என்ன?' என்று கேட்டிருப்பார். அதற்கு முனிவர் கூறுவார் "அடி மேல் அடி அடித்தால் ஆமியும் நகரும்'.

2. நான் இரசித்த 'தாயகம்' முனியின் இன்னுமொரு கேள்வி - பதில்:

கேள்வி: "தமிழக அரசியலுக்கும் ஈழத்து அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?" - நேசகுமார், ரொறன்ரோ

முனிவர்: 'இங்கு "தம்பி" பெயரைச்சொல்லி அரசியல் நடத்துகிறார்கள். அங்கு "அண்ணா" பெயரைச் சொல்லி அரசியல் நடத்துகிறார்கள்.' "


கவிஞர் வி.கந்தவனத்தின் ஈரடி மணிக்கவிதைகள் சுவையானவை

தாயகம் (கனடா)  கவிதைப்பகுதியில் வெளியான கவிஞர் வி.கந்தவனத்தின் ஈரடி மணிக்கவிதைகள் சுவையானவை; கருத்தாழம் மிக்கவை. இக்கவிதைகள் 'மணிக்கவிதைகள்' என்னும் பெயரில் நூலாக ஏற்கனவே வெளிவந்துள்ளது. அவற்றில் சில கீழே:

அலுவல் முடிக்க அடிக்கடி வருவார்.
அலுவல் முடிந்தபின் அடிக்கவும் வருவார். :-)

மாலை மதிப்புகள் வாழ்த்துக் களுக்கு
வாலை யாட்டலும் மயங்கலும் மடமை.

பழகப் பழகப் பால் புளியாதாம்
அழகுள் ளத்தில் அன்பழி யாதாம்


கேலிச்சித்திரம்: 'தாயக'த்தில் 'வில்லர்' பாட்டு!

இடையிலொரு comic relief. இக்கேலிச்சித்திரம் அன்றைய அரசியலைக் கிண்டல் செய்து தாயகத்தில் வெளியான கேலிச்சித்திரங்களிலொன்று. கேலிச்சித்திரமென்பது பார்ப்பவர் முகங்களில் புன்னகையை ஏற்படுத்தும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்க வேண்டும். 'தாயகம்' பத்திரிகையில் வெளியான வில்லரின் இவ்வில்லுப்பாட்டுக் கேலிச்சித்திரமும் அத்தகையது. மேலும் வில்லுப்பாட்டை 'வில்லர் பாட்டாக' மாற்றிய கேலிச்சித்திரக்காரரின் சாதுரியத்தையும் நான் இரசித்தேன். இக்கேலிச்சித்திரத்தை வரைந்தவர் கனடா மூர்த்தியாக இருக்க வேண்டும். மூர்த்தி அறியத்தரவும். இதற்கான முகநூற் பதிவுக்குக் 'கனடா மூர்த்தி' (நாராயணமூர்த்தி) அளித்துள்ள பதில்:

'கனடா மூர்த்தி'"பகிர்வுக்கு நன்றி கிரி.. ஹாஹாஹா... இந்தக் கேலிச்சித்திரம் 'வில்லர்பாட்டு' நீங்கள் சொல்வதுபோல எனது ‌அந்த காலநேரத்துக் கைங்கரியமேதான். :) படத்தில் வரையப்பட்டிருக்கும் முகங்கள் அக்காலகட்டத்தில் மொன்ரியாலில் இருந்த இரு இளம் “செயல்பாட்டாளர்“களையும், ஒரு அமைப்பின் மூத்த குட்டித் தலைவரையும்போல இருக்கவேண்டும் எண்டு கயிற்றப்பட்டு நான் கீறினது. ‌அன்றைய தொலைபேசிச் செய்திகளை கிண்டலடிக்கத்தான் “வில்லு“ ரெலிபோன் ரிஸீவர் மாதிரி இருக்கும்.(தாயகம் பததிரிகையில் 90களில் எழுதப்பட்ட பல விடயங்கள் அக்காலகட்டத்தில் பலம் கொண்டதாயிருந்த இயக்கத்தின் அரசியல் போக்கை கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருவது வாடிக்கை. ‌சிறப்பாக சொன்னால் ‌‌ஆசிரியர் ஜோர்ஜின் எழுத்துக்கள் ஈழத்தமிழராக நம்மைப் பாதிக்கும் தவறான அரசியல் நிலைப்பாடுகளை தொடர்ந்து தோலுரித்துக் கொண்டு 'ஏடிட்டோரியலாக' வெளியாகும்.. இதனால் அரசியல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத குறிப்பிட்ட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்களும், அவர்களுக்கு 'பிற்பாட்டு பாடுபவர்களும்' “எங்களை எதிர்ப்பவர்கள் தமிழனத் துரோகிகள், கைக்கூலிகள்” என்று தம்மை விமர்சிப்பவர்களுக்கு முத்திரை குத்துவது மட்டும் எப்போதும் ஒரே பல்லவியாக மாறாமல் தொடரும்.

பலவேளைகளில் 'பிற்பாட்டுப் பாடுபவர்கள்' முன்னர் தாம் சொன்னதற்கும் செய்ததற்கும் முற்று முழுதாக முரணான விடயங்களை - தலைமை சொல்லிவிட்டது என்றதொரு காரணத்தைக் சாட்டி - எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு “ஆமா.. ஆமா” என பலமாகவே கோரஸ் பாடுவார்கள்... சிந்திக்கத் தெரிந்தவர்கள் முரண்பாடுகளை விமர்சிப்பார்கள். உடனே அவர்களை நோக்கி “எங்களை எதிர்ப்பவர்கள் தமிழனத் துரோகிகள், கைக்கூலிகள்” என்ற முத்திரை குத்தல்கள் மீண்டும் தொடரும். “வில்லர் பாட்டு” ஒரு தொடர்போல வாராவாரம் பிரசுரமானது.. அந்த அளவுக்கு எங்கட அரசியலில் முன்னுக்குப் பின் முரணாக செய்யப்பட்ட பல விடயங்கள் நம்மிடம் கொட்டிக் கிடந்தன!)"

என் எதிர்வினை: " தகவலுக்கு நன்றி மூர்த்தி. வில்லுக்குப் பதிலாக தொலைபேசி உங்கள் படைப்புத்திறனின் வெளிப்பாடு. வில்லர் பாட்டுக் கேலிச்சித்திரங்கள் மேலுமிருந்தால் பகிர்ந்துகொள்ளவும். சிரித்திரன் சுந்தருக்கு ஒரு 'சவாரித்தம்பர்' போல் கனடா மூர்த்திக்கு ஒரு 'வில்லர் பாட்டு' அழைக்கப்படும் சாத்தியமுமுண்டு. 'தாயகம்' பத்திரிகை / சஞ்சிகையில் வெளியான பல்வகை ஆக்கங்களும் மின்னூற் தொகுப்புகளாகவாவது முதலில் உருவாக்கப்பட வேண்டியதவசியம். கனடாத் தமிழ் இலக்கியத்துக்குத் தாயகம் ஆற்றிய பங்களிப்பு இன்று திரும்பிப் பார்க்கையில் பிரமிக்க வைக்கின்றது. முக்கியமான , வளமான பங்களிப்பு."

கேலிச்சித்திரம்: 'தாயக'த்தில் 'வில்லர்' பாட்டு!


கனடாத் தமிழ் இலக்கியத்தில் கவிதைப்பங்களிப்பென்றால் நிச்சயம் 'தாயகம்' சஞ்சிகைக் கவிதைகளுக்கும் முக்கியமானதொரு பங்குண்டு.  உண்மையில் 'தாயகம்\ சஞ்சிகையில் வெளியான கவிதைகளின் தொகுப்பொன்று வெளிவரவேண்டும். இதுபோல் தாயகம் சிறுகதைகள், தாயகம் கட்டுரைகள், தாயகம் நாடகங்கள் ,எனத் தாயகம் தொகுப்புகள் வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம். ஆசிரியர் ஜோர்ஜ்.இ.குருஷேவ் இவ்விடயத்தில் சிறிது கவனம் எடுப்பாராக.

தாயகம் கவிதைகள்

'தாயகம்' கவிதைகள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.