நோயல் நடேசன்குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி  மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானதால் அவசரத்தில் உள்ளே இருந்து வெளிவர துடிக்கும் சிறுவன் கதவைத் தட்டுவது போல் நெஞ்சாங் கூடு அதிர்ந்தது. சேரா குளிருக்காக போரத்தியிருந்த மண்ணிற கம்பிளி போர்வையின் ஊடாக அவளது கைகளின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்தபோது  கழுத்தை திருப்பி மெதுவாக என்ன என்பது போல் சிரித்தாள்.

‘இந்தப் போர்வையாக நான் மாறக்கூடாதா?’

இது கொஞ்சம் அதிகமில்லையா? என்றபடி தனது விரல்களால் அவன் விரல்களை கோர்த்து பிடித்தபோது உடல் வெப்பம் அவனுக்கு கொதிநிலையை  அடைந்தது. வாயிலிருந்த  உமிழ்நீர் வற்றிவிட்டது போல் இருந்தது.  தண்ணீர் குடித்தால்தான் சரி வரும் என நினைத்தபடி அவளது கழுத்தில் மெதுவாக சரிந்து முத்தமிட்டபோது அவளது கலைந்த பல கேசங்கள் வாயில் சிக்கி பல்களிடையே  சென்றன. கழுத்தில் முகம் புதைத்தான். இதற்கு மேல் அவனால் விமானத்தில் அவளை நெருங்கமுடியாது.

ஐம்பது வயதில் இப்படியான காதலும் கத்தரிக்காயும் தேவையா என யாராவது பார்த்தால் கேட்பார்கள். அவர்களுக்கு அவனது  வரலாறு தெரியுமா? சொன்னால்தான் புரியுமா?. இருபத்தைந்து வயதிற்கு கீழ்த்தான் காதல் ஏற்படுவதை எமது சமூகம் தமிழ் திரைப்படங்களில் பார்த்திருக்கிறது. காதல் என்பது அந்த வயதிற்கு மேல் ஏற்பட்டால் அது கயமை அல்லது லோலாத்தனம் என வரையறுத்துள்ளது. ஆனால் இளவயதில் காதல், சாதி ,மதம், குடும்பச்சுமை, சகோதரிகள் , சீதனம் என பல விலங்குகளைப் போட்டு சிறையடைக்கப்படுகிறது.

காதல் உணர்வுகள், பச்சைப்பயறை மணல்போடாமல் சூடான சட்டியில் வறுப்பது போன்று வாட்டி கருக்கி எடுத்துவிடுகிறது. இளவயதுக் காதல் குளிர்கால நெடும் தூக்கம் கொண்டு பனித் திணை மிருகங்கள் உயிர்களுடன் உறைந்து விடுவது போல் எத்தனை இளம் உள்ளத்து உணர்வுகள் மரத்துவிடுகின்றன.

அவனது  காலத்தில் ஆண்கள் படித்து பல்கலைக்கழகம் சென்றால் அவர்களை சந்தைக்கு வந்த காளை மாட்டைப்போல் ஏலம் விடுவதற்கு  அக்கால சமூகம் தயாராக இருந்தது. பிள்ளைகளைப் பிடித்து குருடாக்கி பிச்சையெடுக்க வைக்கும் பாதகனைப் போல் சமூகம் இருந்தது என்ற கூற்று சில சந்தர்ப்பங்களில் மிகையானது அல்ல.

இலங்கையில் பல்கலைக்கழக பிரவேசத்தில் தரப்படுத்தல் வந்தபோது, இந்த ஏல வியாபாரம், பங்குச் சந்தை சரிவடைவது போல் தேக்கமடைந்தது. அதனாலும் ஆயுதப்போராட்டம் வந்திருக்க வேண்டும்.  ஆனால் அதை ஒரு  காரணமாகச் சொல்ல யாழ்ப்பாண சமூகத்திற்கு துணிவு இல்லை.

ஆனந்தன், தனது  நண்பன் ஒருவன் பள்ளிக் காலத்தில் காதலிப்பதைப் பார்த்து கான்வெண்டில் படித்த ரெஜீனா என்ற பெண்ணிடம் பழக முயன்றான். பாடசாலை முடிந்து அவள் போகும் வழியில் சைக்கிளில் வந்து மறித்து சுகம் விசாரிக்க முற்பட்டபோது காறித் துப்பிவிட்டு சென்றுவிட்டாள் . அவளது துப்பல் உலர்ந்து போனாலும் அதன் தாக்கம் பல வருடங்களாக தொடர்ந்;தது.

ஏன் அவள் தன்னை உதாசீனம் செய்தாள்? குறைந்த பட்சம் முகத்தை திருப்பிக் கொண்டு போயிருக்கலாம். அவ்வாறு  அவமானம் செய்வதற்கு காரணம் என்ன?

ஐந்தடி எட்டங்குல  உயரத்தில்   தான் கருப்பு நிறமாக இருந்ததுதான் காரணம் என ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனந்தனிலும் பார்க்க அவலட்சணமானவர்கள் காதலிகளை வைத்திருந்த போது தனது இயலாமைக்கு காரணம் வேறாக இருக்கவேண்டும்   என   நினைத்தான். ஆண்களே படித்த யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் தொடர்ந்து படித்ததால் பெண்களிடம் பழகும் நாகரீகம் தெரியவில்லையோ? அல்லது பெண்களை அணுகும் முறையில் தவறா?

மவுனமாக கேள்விகளை மட்டும்தான் அவனால் கேட்க முடிந்தது. நண்பர்களிடம் முதல் காதலின் தோல்வியை பகிர்ந்து கொள்ள அவமானமாக இருந்தது. அவளில் ஆத்திரப்படவும் முடியவில்லை. எச்சிலை துடைத்து விட்டு அந்த காதலை மறந்துவிட்டான். அந்தத் துப்பலுடன் காதலிக்கும் எண்ணம் அவனை விட்டு போய்விட்டது.

அவன் பேராதனை பல்கலைகழகம் சென்ற  முதலாவது வருடத்தில் தகப்பனார் ஏலத்துக்கான ஏற்பாட்டைத் தொடங்கிவிட்டார். இரண்டு தங்கைகளையும் சீதனம் கொடுத்து மாப்பிள்ளை எடுக்கவேண்டும் என காரணம் காட்டியதால் வேறுவழி இல்லாமல் சகோதர பாசத்தின் பிளக்மெயிலில் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

பட்டம் பெற்று,  மகாவலிகங்கை மறித்து கட்டும் திட்டத்தில் கொத்மலையில் சிவில் எஞ்ஜினியராக வேலை தொடங்கியபோது ஏலம் உச்ச நிலையடைந்து திருமணவிவகாரம் சூடு பிடித்தது.

ஆனந்தனின் தந்தை கணக்கு வாத்தியார். அவர்  கணக்குப் போட்டு சீதனமாக கேட்ட பணம், இரண்டு எஞ்னியரை வளைச்சுப் போடக்காணும். இரண்டு தங்கைகளுக்கும் சேர்த்து  சீதனமாக சேர்த்து கேட்ட தொகையாக இருக்கவேண்டும்.  அக்காலத்தில் யாழ்ப்பாணக் குடும்பங்கள் வீடு வளவுகளை  எல்லாம் அடைவு வைத்து இளம் பொடியங்களை ஏரோபுளட்டில் பெர்லினுக்கு அனுப்பியதால் பலரிடம் காசு  சேமிப்பில் இல்லை. அனுப்பிய பொடியள் பெர்லின் எல்லை கடந்து  பிரான்ஸ்,  சுவிற்சலண்ட் என்று அலைந்து வேலை செய்து எப்ப காசு அனுப்புவார்கள் என தபால்காரனை வழிமேல் விழி வைத்து பெற்றோர் காத்திருந்த காலம்.

ஆனந்தனின் தந்தை பலரது வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொண்டார். பலர் உள்ளுக்குள் திட்டினார்கள்.வாத்திக்கு பேராசை என்றார்கள்.  சிலர் முகத்துக்கே நேரடியாகச் சொன்னார்கள்.

‘உங்கடை மகனுக்கு இவ்வளவு இலச்சம் கொடுத்து கலியாணம் செய்யிறதிலும் பார்க்க, பிரான்சில் கோப்பை கழுவிறவனுக்கு என்ர பிள்ளையைக் கொடுப்பன்.  குறைந்த பட்சம் நிம்மதியாக உயிர்ப்பயம் இல்லாமல் என்ர மகள் படுத்தெழும்புவாள்’.

 மற்றொருவர் ‘என்ன உங்கட மகனுக்கு தங்கத்தில குஞ்சாமணி இருக்கெண்டா இவ்வளவு காசு கேட்கிறீர்கள். சரி அப்படி இருந்தாலும்; அதை வைத்து என்ன செய்யமுடியும்?’ என சிரித்தபடி கேட்டதாக தங்கச்சி ஒட்டுக் கேட்டுச் சொன்னாள்

அம்மாவும் தன் பங்குங்கு ‘என்ர மகன், உங்களாலே கிழவனாகிவிடுவான்’ என புறுபுறுக்கத் தொடங்கிவிட்டாள். விடுமுறைக்கு வந்த ஆனந்தனுக்கு இவற்றைக்கேட்டு  வெறுப்பு வந்து இனி யாழ்ப்பாணம் வருவதில்லை என தீர்மானித்தான்

இறுதியாக  கொழும்பு பலசரக்கு கடையின் முதலாளி ஒருவர் ஏலத்தில் வென்று  இருபத்திரண்டு லச்சம் டொனேசன், கொக்குவிலில் வீடு கார் என வியாபாரத்தை முடித்தார. யாழ்ப்பணத்தில் இரண்டு  தங்கைகளுக்கு  திருமணம் முடித்துவைப்பதற்காக இருபத்தியிரண்டு  லச்சம் வாங்கி தந்தையின் சொற்படி கேட்டு  டொனேசன் காசை அப்படியே கொடுத்துவிட்டு நல்ல பிள்ளையாக திருமணம் செய்தான் ஆனந்தன்;;.

முப்பத்திரெண்டு வயது வரை காய்ந்து பருத்தி விதைபோல வெடித்து பறக்கும் நிலையில்  இருந்த ஆனந்தனுக்கு வாழ்க்கைப்பட்ட  மேனகா வானத்து மேனகா போல் இல்லாமல் , பலசரக்குக்கடைத் தானியத்தின் போசிப்பில் அமோகமாக விளைந்து  இருந்தாள். அவளது அங்கலாவண்யங்கள் ஆனந்தனுக்கு கவர்ச்சியாக இருந்தது. இரண்டு வருடங்கள் மகியங்கனையில் எஞ்ஜினியராக இருந்தபோது முதலாவது மகள் பிறந்தாள். மகள் உமா பிறந்த சில மாதங்களில் வந்த 83 கலவரத்தில் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் போனபின்பு மெல்பேனுக்குக்கு வந்தனர்.

இலங்கையில் வசதியாக வாழ்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் அவுஸ்திரேலிய வாழ்க்கை கசந்தது. அரசாங்க உதவிப்பணத்தில் வாழவேண்டி இருந்தது. வாழ்க்கையின் சக்கரங்களில் மேல்பக்கத்தில் இருந்து சவாரி செய்தவன்;, இப்பொழுது அடிப்பக்கத்தில் நசிபடுவது புரிந்தது. உதவிப்பணத்தில் வாழ்க்கை ஓட்டுவது கடினம் என்பதால் எஞ்ஜினியர் வேலை கிடைக்கும் நேரத்தில் கிடைக்கட்டும் என தீர்மானித்து மெல்பனில் டாக்சி சாரதியாக  வேலைசெய்தான். வருமானம் அதிகம் கிடைப்பதால் இரவு சிப்ட் ஓடினான். டாக்சியில் இருந்து வீடு வந்தவுடன் களைப்பில் சாப்பிட்டு நித்திரை கொண்டு மீண்டும் எழுந்து போகும் இயந்திர மனிதனாக நடந்து கொண்டான்

அவுஸ்திரேலிய நாட்டு சுதந்திரமான சூழலில் மேனகாவின்  கனவுகளும் அவனது  கனவுகளும் வேறுதிசைகளில் சென்றன. அவன் பகலிலும் அவள் இரவிலும் கண்டனர். 

இருவரது இல்லற வாழ்வு புயலில் சிக்கிய கப்பல்போல் தத்தளிக்கத் தொடங்கியது.  காதல்  உணர்வுகளைக் கொண்ட இரண்டு ஆத்மாக்கள் மீட்டும் இராகம் என்றில்லாமல்  உடல் அரிப்பில் வேலியில் உராயும் வெள்ளாடுபோல் சுகித்துவிட்டு  பகலில் நித்திரைக்கு செல்வான். ஆரம்பத்தில் பல்லைக் கடித்தபடி பொறுத்துக்கொண்ட  மேனகா பத்தினிப் பெண்ணாக நடந்தாள். பின்பு வெறுப்பை உடல் மொழியில் வெளிப்படுத்தினாள். சில தடவைகள் அவள் ‘நீ மென்மையான உணர்வுகள் இல்லாத மனிதன்’ என்று சொல்லிவிட்டு அழுது கொண்டு வேகமாக குளியலறை சென்றிருக்கிறாள் மேனகா.  அவள் குளியலறையில் இருந்து வருவதற்குள் ஆனந்தன் நித்திரையாகி விடுவான். மேனகா வாய்விட்டு திட்டியபடியே வீட்டில் வலம் வருவாள். காலையில் இறக்கிய கருப்பணிச்சாறு மாலையில் வாயில் வைக்க முடியாத புளித்த கள்ளாகிவிடுவதுபோன்று  அவள் வாழ்வும்  புளித்துப்போனது.  புணர்வில் எப்படி மென்உணர்வைக் காட்ட முடியும் என்பது ஆனந்தனுக்குப் புரியவில்லை.

உடல் உறவுக்கு  மென்னுணர்வுகள் தேவையில்லை என்பதை நிருபித்தபடியே உள்ளத்தில் காதல் இல்லாமல் கலவி செய்யலாம் என்பதற்கு அடையாளமாக ஒரு மகள் பிறந்தாள். ரேணுகா பிறந்ததும் மேனகா அத்துடன்; தாம்பத்தியவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். கர்ப்பிணியாக இருந்த போது தற்காலிகமாகத்தான் இருக்கும் நினைத்த ஆனந்தனுக்கு ஏமாற்றம் தொடர்ந்தது.

ஆரம்பத்தில் குழந்தை அழும்போது குழந்தையின் அறையில் படுக்க ஆரம்பித்தவள் பின்பு  சிட்னியில் இருந்து வரும் இன்பத்தமிழ் என்ற வானொலியை கேட்கவென்று கடந்த பத்துவருடங்களாக வேறு அறையில்  படுத்தாள். டாக்சியோடும் வேலை போய் எஞ்ஜினியரிங் வேலை கிடைத்த பின்பும் நிலைமை மாறவில்லை.  வெளியாருக்கு கணவன் மனைவியாக, பிள்ளைக்கு தாய் தந்தையாக  வாழ்ந்தார்கள்

இப்படியாக தொலைத்த இரவுகள் அவனுக்கு நாற்பது வயதில் இருந்து நலமடிக்கப்பட்டுவிட்டதாக  உணரப் பண்ணியது. சாப்பாட்டை மேசையில் வைத்து விட்டு தொலைக்காட்சி பார்ப்பாள்.இல்லையென்றால் உடம்பு நோகிறது  என படுத்துவிடுவாள். என்றாவது ஒருநாள் தட்டுத் தடுமாறி கால் கைபட்டால் விரோதியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு விலத்திக் கொண்டு போய்விடுவாள். பெரிய மகள் பெரிதாகியதால் இந்த விடயங்கள் அவளைப் பொறுத்தவரை தடை செய்யப்பட்ட விவகாரங்களாகிவிட்டன. 

 அவனிடம் கிரகாச்சாரம் முடிந்து பிரமச்சரியம் எதிர்பார்த்தாள். வாழ்கை என்பது சக்கரம் தானே? 

இளைஞனாக இருந்தபோது தகப்பனை தனது எதிரியாக நினைத்த ஆனந்தனுக்கு இப்பொழுது மேனகா அந்த இடத்தை எடுத்து விட்டாளே என்று எரிச்சல் அதிகமாகியது.

எனக்கு நெருங்கியவர்களாலேயே  நான் தொடர்ந்து சபிக்கப்படுகிறேனே. இதற்கு மற்றவர்கள் மட்டும் பொறுப்பா?  இல்லை நானும் பொறுப்பேற்கவேண்டுமா? 

அவனுக்கு  மனம்  அலைபாய்ந்தது.

இக்காலத்தில் ஆனந்தனின் தந்தையார் இறந்த செய்திவந்த போது ஆனந்தனுக்கு எந்தக் கவலையுமிருக்கவில்லை. எனக்கு செய்த கொடுமைக்கு கொஞ்சம் சீக்கிரமாக போய்விட்டார்   என   நினைத்துக்கொண்டான். கொழும்பில் குண்டு வெடித்ததை காரணம் காட்டி யாழ்ப்பாணம் போவதையும் தவிர்த்துக்கொண்டான்.

கொழும்பில் குண்டு வைத்தவர்களை மனதில் மெச்சிக் கொண்டான். அம்மா அதன் பின்பு கனடாவில்  வதியும்  தங்கைகளிடம்  சென்றுவிட்டாள்.

மேனகாவோடு ஒன்றாக இருந்து பிரயோசனம் இல்லை. கோடைவெயில் உறிஞ்சிய தண்ணீர் மாதிரி அவளது காம உணர்வுகள் ஆவியாகிவிட்டால்   அவளை தவறு சொல்லி சொல்லி எதுவும் நடக்கப்போவதில்லை. அந்தக்காலத்திலே யாழ்ப்பாண கத்தரிக்காயும் பருப்பு சோறுமென  உண்டே செழிப்பாக இருந்தவள் இப்பொழுது அவுஸ்திரேலிய இறைச்சி ,மீன் , சுத்தமான மரக்கறி என்று இரண்டு மடங்காக வீங்கிவிட்டாள்.  அவள் கன்னியாஸ்திரியாகிவிட்டாள்.

அவளை விட்டு விலகுவதுதான் நல்லது. இப்படி இருவரும் இரண்டு அறைகளில் வாழ்க்கையை  விரயமாக்கவியலாது என அவனது உள்ளுணர்வு சொல்லியது.

பிரிவது இலேசாகத் தெரியவில்லை. பிரிந்தால்வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. ஆனந்தன் அதே போல் உள்ளத்தில் பல கேள்விகள் எழுந்தன. இந்த வயதில் என்ன செய்வது? குடும்பத்தை பிரியும் போது சொத்துக்கள் பிரிக்கப்படுவதுடன் பிள்ளைகள் வாழ்வில் குழப்பமும்  ஏற்படும்.  

இவற்றை சமாளிப்பது என்ற தீர்மானத்துக்கு வந்தபோது பத்துவருடமாக பாவனையில் இல்லாத ஆண்மையை நம்பி எப்படி வேறு ஒரு பெண்ணைத் தேடுவது  என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த வயதில் ஆண்மையை பரிசோதிக்க ஒரே வழியாக பணம் கொடுத்து பெண்ணொருத்தியை பார்ப்பது என்ற  முடிவுக்கு  வந்தபோது கால்நூற்றாண்டுக்கு முன்பு தந்தையின் செயல்  நினைவுக்கு வந்தது.

இருபத்தைந்து வயதில் அப்பு எனது ஆண்மைக்கு லட்சக்கணக்கில் விலை பேசினார்;. நான் இப்பொழுது பணத்தை கொடுத்து தேடவேண்டியுள்ளது.

பத்திரிகையில் பார்த்து ஒரு மணிக்கு விலை பேசிய பின்; அவளை சந்தித்தான். டாக்சி ஓட்டியகாலத்தில் வாடிக்கையாளரிடம் பேசிய அனுபவம் இப்பொழுது கை கொடுத்தது.

முகவரியையும் நேரத்தையும் கேட்டு அவளது வீட்டிற்கு சென்றபோது கதவை திறந்ததும் சிரித்தபடி வரவேற்று தன்னை ரோஸ் என அறிமுகப்படுத்தினாள்.

இதுதான் முதல் தடவையா? என்றாள்

நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். அதிக மேக்கப்புகள் இல்லாமல் சாதாரணமாக இருந்தாள். கொஞ்சம் அரைகுறையாகத்தான் உடையணிந்திருந்தாள். தொடையின் பெரும்பகுதி வெளித்தெரிந்தது.மார்புப் பகுதியிலும் மேற்சட்டையை  கத்தரிக்கோல் விளையாடியிருந்தது.

அவளது தொழிலுக்கான யூனிபோம் ஆக இருக்கலாம். விளம்பரமில்லாமல் வியாபாரம் நடக்குமா?

அந்த ஹோலில் உள்ள சோபாவில் உட்காரும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று சில நிமிடத்தில் வைன்கிளாசுயுடன் வந்தாள்.

இப்படியான உபசாரத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தயக்கத்துடன் கையை நீட்டி வாங்கியதும் மீண்டும் உள்ளே சென்று  தனது கையிலும் ஒரு வைன் கிளாசைகொண்டு வந்தாள்

வீட்டில்கூட இப்படி உபசாரம் நடக்காது. பொக்கற்றில் கையை விட்டு அவளிடம் பேசிய தொகையை கொடுத்த போது, நன்றி சொல்லி விட்டு மீண்டும் உள்ளே சென்று   திரும்பிவந்து,பக்கத்தில் உடலோடு நெருங்கி இருந்தபடி ‘உங்கள் கதையை சொல்லுங்கள்‘ என்றாள்

ஆரம்பத்தில் தனது அந்தரங்க விடயங்களை அவளுக்குச் சொல்லத் தயக்கமாக இருந்தாலும் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்.

‘பலவருடங்களாக மனைவியுடன் உறவில்லை. மீண்டும் திருமணம்  செய்யவிருக்கிறேன். என்னை கொஞ்சம் பரிசோதிக்க எண்ணி இங்கே வந்தேன்.

‘எவ்வளவு காலமாக காய்ந்திருந்தீர்கள்?;’

‘கிட்டத்தட்ட பத்துவருடங்கள்’

‘அப்பாடி….. இது எப்படி முடிந்தது. கத்தோலிக்க பாதிரிமார்களே பிரமச்சாரியம் பேணாத இந்த நாட்டில் இது பெரிய சாதனை’   எனச்சொல்லி கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விட்டு  மீண்டும் உள்ளே சென்று  இரண்டாவது வைன் கிளாசை கொண்டு வந்து முன்னால்வைத்தாள்

‘இது யாருக்கு?’

‘உங்களுக்குத்தான்’

‘வைனைத் தந்து அனுப்பிவிட நோக்கமா?’ என நகைச்சுவையாக  அவன்   கேட்டான்.

குடித்த வைன் பேச்சைக்கூட்டி இலகுவாக்கியது

பத்துவருடம் காய்ந்த மனிதரை கொஞ்சம் ரிலக்ஸ் பண்ணவேண்டும்.மனமும் உடலும் இறுகியபடி இருந்தால் உடலுறவு இன்ப அனுபவமாக இராது. ஏதோ ஒரு காரியத்தை முடித்து விட்டது போன்ற திருப்திதான் ஏற்படும்’ என்று   சொன்னவாறு  கட்டி அணைத்தாள்

அவளது அணைப்பில் இரண்டாவது வைன் விரைவாக உட்சென்றது.

அவளே கையைப் பிடித்து மங்கலான அறையொன்றுக்கு அழைத்துச் சென்றாள்.

அவள்  தனது மேலாடையை களைந்ததும் அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான்.  பத்து வருடங்களின் பின்பாக  ஒரு  பெண்ணுடலை   அன்றுதான்   பார்க்கிறான். அவனைப் பொறுத்தவரை எங்கிருந்தோ புத்துயிர் கொடுக்கப்பட்டு உயிர்த்தெழுவது போன்ற