மொழி எனும் போதையில் இருந்து ..... ‘இடைவெளி’ – இதழ் குறித்த ஒரு பார்வை.

‘இடைவெளி’ சிறுசஞ்சிகை ஆனது தனது 5வது இதழினை (ஜனவரி 2019) வெளியிட்டுள்ளது. மிக அண்மையில்தான் எஸ்.சம்பத்தின் ‘இடைவெளி’ நாவலை வாசித்து முடித்திருந்தேன். ‘மரணம் என்பது வேறொன்றுமில்லை. அது அது ஒரு இடைவெளி மட்டுமே’ என்ற செய்தியைச் சொல்லிச் சென்றது அது. இந்த ‘இடைவெளி’ சஞ்சிகை எத்தகைய இடைவெளியைச் சுட்டி நிற்கின்றது, அல்லது எந்த தளத்தில் இயங்குகின்றது என்ற கேள்வியுடனேயே இதழினை வாசிக்க முற்படுகின்றேன்.

தமிழகத்திலிருந்து சிவா.செந்தில்நாதனை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவருகின்ற இச்சஞ்சிகையானது அதன் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி அதன் வடிவமைப்பிலும் கூட மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு  கையில் வைத்திருக்கும்போதே ஒரு பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் பாலசுப்ரமணியம் பொன்ராஜின் மிக நீண்ட நேர்காணலுடன் வெளிவந்துள்ள இவ்விதழில் பாலைநிலவன், ஆழியாள், பச்சோந்தி, நெகிழன், க.மோகனரங்கன் கவிதைகளுடன் பல மொழிபெயர்ப்புக் கவிதைகளும், கலைச்செல்வியின் ‘கும்கி’ என்ற சிறுகதையுடன் பல மொழிபெயர்ப்புக் கதைகளும் இடம்பெற்றுள்ளன. இமையத்தின் ‘செல்லாத பணம்’ மற்றும் சி.மோகனின் ‘விந்தைக் கலைஞன் உருவச் சித்திரம்’ நாவல்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளும் கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார் படைப்புக்கள் குறித்த ‘ஆடியில் கரைந்த மனிதர்கள்’ கட்டுரையும் சிறப்பாக வெளிவந்துள்ளன. அத்துடன் கோணங்கியின் படைப்பொன்றும் வெளிவந்துள்ளது. அதன் நீண்ட தலைப்பான  ‘மாரீச மான்களின் கால் நீட்சியில் சிறு உறக்கம் கொண்டுள்ளது கேன்வாஸ்’, கோணங்கி எப்போது திருந்துவார் என்ற கேள்வியை என்னுள் எழுப்பி நின்றது.

‘பி.நரசிம்மனின் தற்கொலை’ என்ற வீ.சந்திரசேகர ராவுவின் தெலுங்கு மொழிபெயர்ப்புச் சிறுகதை அண்மையில் நான் வாசித்த மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. ஹைதராபாத்தில் வதியும் ஆந்திரப்பிரதேச பெண் எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அங்கு உருவாகி வரும் ஆந்திர மக்களுக்கு எதிரான எழுச்சியையும் பகைமையையும் பகைப்புலமாக கொண்டு மிகவும் நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளது. இது தமிழின் சிறந்த 100 கதைகள், தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று பட்டியல் இடுவோர் அவசியம் படிக்க வேண்டிய கதை.

இதழினை வாசித்து முடித்ததும் இவ்விதழ் குறித்த இலேசான புரிதல் என்னுள்ளே. ‘இடைவெளி’ இதழ் இயங்கும் தளம் மற்றய இதழ்களில் இருந்து வேறுபட்டதாகவே அமைந்திருக்கின்றது. இது அடிப்படையாக கற்பனையும் போதையும் நிறைந்த மொழிக்கும் யதார்த்தமும் உக்கிரமும் நிறைந்த வாழ்கைக்கும் உள்ள இடைவெளியை இட்டு நிரப்ப முற்படுகின்றது அல்லது அந்த வினோதங்கள் நிறைந்த அந்த இடைவெளியை வேடிக்கை பார்த்து நிற்கின்றது.

அடுத்த இதழில் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘அயோத்திதாசரும் மயிலை சீனி வேங்கடசாமியும் சந்திக்கும் தருணங்கள்’ என்ற கட்டுரை  வெளிவர இருப்பதாக ஒரு முன்னறிவிப்பு ஒன்றை செய்துள்ளார்கள். இதழின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

வாழ்த்துகள் செந்தில்நாதன்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.