எழுத்தாளர் நகுலன்எஸ்.ராமகிருஷ்ணனின் 'நாவலெனும் சிம்பொனி' நூலில் எழுத்தாளர் நகுலன் பற்றியதொரு கட்டுரையுள்ளது. சிறு கட்டுரை அது. அதில் நகுலனின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் சுசீலா என்னும் பெண் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. நகுலனின் சுசீலா பற்றி எஸ்.ரா பின்வருமாறு கூறுவார்:

"'சுசீலாவின் உயர் தன்மைகள் சுசீலாவிடம் இல்லை' எனப்பேசும் இவர், கவிதையெங்கும் காணப்படும் சுசீலா எனும்  பெண் பெயரைக்கொண்டு அதைப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ப்படுகிறது.  இப்பெண்பெயர் உருவாக்கும்  வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ, பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம். ஒருவகையில் மரபுக்கவிதையில் வரும் வெண்சங்கே, பாம்பே, கிளியே, குதம்பாய்போல் இதுவும் சுய எள்ளல் குறியீடாகக் கொள்ளலாம்.  சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும்  நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போலத் தெரிகிறது."

எழுத்தாளர்கள் பலர் அவ்வப்போது சுசீலா போன்ற விடயமொன்றினைப்பற்றிக் குறிப்பிடும்போது அவ்விடயம் பற்றிய போதிய ஆய்வெதுமின்றி முடிவொன்றுக்கு வந்து விடுகின்றார்கள். அதற்கு எஸ்.ராமகிருஷ்ணனும் விதிவிலக்கானவரல்லர் என்பதையே நகுலனின் சுசீலா பற்றிய அவரது கூற்றும், அது பற்றிய மேலதிக விளக்கங்களும் புலப்படுத்துகின்றன.

எஸ்.ரா. நகுலனின் சுசீலா பற்றி இவ்விதமான முடிவொன்றுக்கு வர முன்னர் நகுலனின் படைப்புகள் அனைத்திலும் நகுலன் எவ்விதம் சுசீலாவை விபரித்திருக்கின்றார் என்று பார்த்திருக்க வேண்டும். பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவ்விதம் அவர் செய்திருந்தால் நிச்சயமாக 'சுசீலாவும் ஒரு எள்ளல்' என்னும் முடிவுக்கு வந்திருக்க மாட்டார். எனக்கென்னவோ நகுலனின் வாழ்வில் எதிர்பட்ட , அவர் காதலித்த ஆனால் அவருக்குக் கிடைக்காமற் போன பெண்ணொருத்திதான் அவர் படைப்புகளில் வரும் சுசீலா என்னும் பாத்திரமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. தனக்குக் கிடைக்காமற் போன பெண்ணைச் சுசீலா என்னும் பாத்திரமாக உருவகித்து அவளைத்தன் எழுத்துகளில் நடமாடவிட்டு , அவளுடன் எழுத்துலகில் வாழ்ந்து வந்திருக்கின்றார் நகுலன் என்றே தோன்றுகின்றது. இறுதிவரைத் தனிமையில் வாழ்ந்த நகுலன் நிஜ வாழ்க்கையில் தனக்குக்கிடைக்காமற் பெண்ணைச் சுசீலாவாக்கி மானசீகமாக வாழ்ந்த்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

உதாரணத்துக்கு நகுலனின் சுசீலா பற்றிய கவிதைகள் சிலவற்றைப்பார்ப்போம்..  - நடை சிற்றிதழில் வெளியான கவிதைகள் இவை:

1. உன் நினைவு

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.


2. சுசீலா

சுசீலா
சுசீலாவின் பெயரில்லை;

சுசீலாவின் சிறப்பு (ச்)
சுசீலாவிடமில்லை

என்றாலும் என்ன
அவளிடம் இல்லாத
ஒவ்வொன்றும்
எனக்குக் கிட்டாத
ஓராயிரம்
கிட்டும் கிட்டும்
என்று

பல்லாண்டு பாடும்.

இன்னுமொரு கவிதை தஸ்தயேவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நாவலைப்படித்துவிட்டு, அதில்வரும் ஸோனியா பாத்திரத்தின் பாதிப்பில் எழுதிய ஸோனியா என்னும் கவிதை. அதிலும் சுசீலா பற்றி வரும். அது வருமாறு:

3. ஸோனியா

“உதாரணம்
சொல்லாமல்
சொல்”

இது
ஸோனியா
ராஸ்சூகால்நிகாவிற்குச்
சொன்னது.

இதைப்
படிக்கையில்
ஒரு வினாடி
ஒரு சூழ் நிலையில்
என் எதிர் இருந்த
சுசீலாவின்
ஏன் என்ற பார்வை
இன்றும்
என் பிரக்ஞையின்
பளீரென
மின்னலிடுகிறது.
ஏன் ?


இவ்விதமெல்லாம் நகுலனின் படைப்புகள் பலவற்றில் காணப்படும் சுசீலாவை , எஸ்.ரா கூறுவதுபோல் வெறும் எள்ளல் என்று என்னால் ஒருபோதுமே கருதமுடியவில்லை.

'நகுலன் : நினைவின் குற்றவாளி'  என்னும் ஷங்கர்ராமசுப்ரமணியனின் கட்டுரையில் நகுலனின் சுசீலா பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

"நகுலனின் புனைவுகளில் பெண்கள் ஸ்தூலமாய் வருகிறார்கள். சுசீலா, அம்மா மற்றும் சுலோசனா. சுசீலா காதலி. மானசீகமான ஒரே முன்னிலை மற்றும் வாசகி. நகுலன் (அ)நவீனனுக்கு தனிமையைக் கற்றுக் கொடுத்துப் பிரிந்த ஆசிரியை. சுசீலாவின் பிரிவும்,சுசீலாவை இடைவிடாமல் ஜபிப்பதும், மனவெறியில் சுசீலாவுடன் உரையாடுவதும்,சுசீலாவை எழுதுவதும் நகுலனுக்கு தனிமையை விலக்கும் செயலாக, தனிமையைப் பெருக்கும் செயலாக இருக்கிறது. அம்மா நவீனனை (அ) நகுலனை நிறை குறைகளோடு ஏற்றுக்கொண்டவள். அங்கீகரித்தவள். அவளும் நவீனனைத் தனியே உலகில் விட்டு மறைந்து விடுபவள். 'இவர்கள்' நாவலை அம்மா என்னும் புராதனப் பிரக்ஞைக்கும்,அதன் நிழலிலிருந்து தற்கால நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நவீன மனதுக்கும் இடையே உள்ள உரையாடல் என சொல்லலாம். இந்தியா போன்ற கீழைத் தேசங்களில் தாய் என்பவள் தந்தைக்குப் பணிவான, படிந்து போகக்கூடிய ஆளுமையாய் தோற்றம் கொடுத்தாலும் வலிமை கொண்ட மனமாய் அவளே இருக்கிறாள். நினைவைக் காப்பாற்றுபவளாய், ஒருவகையில் நினைவின் எஞ்சிய ஒரே படிமமாகவும் இருக்கிறாள்.தாயின் நினைவின் நிழல் படர்ந்திருப்பவன், நிகழ்கணம் கோரும் செயலில் ஈடுபட இயலாமல் இருப்பவன். 'இவர்கள்' நாவலில் அம்மா 'பழைய காலத்தின் உள்ளுணர்வுள்ள பிரதிநிதியாகவும்' சித்தரிக்கப்பட்டுள்ளாள்."

உண்மையில் தனது சிறுகதையொன்றில் (இது சிறுகதையா அல்லது சிறு கட்டுரையா என்பதில் எனக்கொரு குழப்பமுண்டு) நகுலன் சுசீலா யார் என்பது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். கணயாழி இதழின் செப்டம்பர் 1968 இதழில் அவர் எழுதிய 'நகுலன் 'ஒரு ராத்தல் இறைச்சி' என்னும் அவரது படைப்பையே நானிங்கு குறிப்பிடுகின்றேன். இதனை நவம்பர் 2015 கணையாழி இதழில் விதைநெல் என்னும் தலைப்பில் மீள்பிரசுரம் செய்திருக்கின்றார்கள். அதில்வரும் பின்வரும் பகுதியினைப்பாருங்கள்:

"என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகின்றேன். நான் எழுதுவது ஒன்றாவது பிரசுரமாகவில்லை." இவ்விதம் ஆரம்பமாகும் படைப்பில் அடுத்த பந்தியில் சுசீலாவைப்பற்றிப் பின்வருமாறு வரும்:

"நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவள் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது.  இப்பொழுது அவள் ஒரு தாயார். இதை நினைக்கும்போதெலாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை"

இப்படைப்பின் ஆரம்பத்தில் நகுலன் என் பெயர் நவீனன் என்று குறிப்பிடுகின்றார். நகுலனின் புனைபெயர்களிலொன்று நவீனன். அவரது படைப்புகளிலொன்று நவீனன டைரி. சுசீலா என்பது கற்பனைப்பெயராக இருக்கலாம் பாரதியின் கண்ணம்மாவைப்போல. ஆனால் சுசீலா பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் நகுலன் (நவீனன்) வாழ்வில் வந்து சென்ற ஒரு பெண்ணாக நிச்சயமிருக்க வேண்டுமென்றே தோன்றுகின்றது. அவர் காதலித்த, ஆனால் அவ்ருக்குக் கிடைக்காத பெண்ணாக அவளிருக்க வேண்டும். அவளையே அவர் சுசீலாவாக்கித் தன் படைப்புகளில் நடமாட விட்டிருக்க வேண்டும். இதுவே அவரது படைப்புகளில் வெளிப்படும் சுசீலா பற்றிய உணர்வுகள், தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.