வாசிப்பும், யோசிப்பும் 245: 'நானே நானா? யாரோ தானா?'சென்ற வெள்ளிக்கிழமை , 23.06.2017 , எனக்குச் சிறியதொரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே என் கண்களிரண்டும் அவ்வளவு ஆரோக்கியமான நிலையிலில்லை. இரு கண்களிலும் 'கட்ராக்ட்' அதாவது கண் புரை  என்னும் நிலை தோன்றியிருந்தது. அண்மைக்காலமாக இரவில் வாகனம் செலுத்தும்போது , எதிரில் பிரகாசமான வெளிச்சம் தென்படுகையில் , வாகனத்தைச்செலுத்துவது சிரமமாக இருப்பதை அறிந்தேன். எனவே முதலில் என் இடது கண்ணில் அதற்கான சத்திர சிகிச்சையினைச் செய்ய இசைந்தேன்.

சத்திரசிகிச்சைக்கு முதலிரு தினங்களும் கண் துளிகளிட்டேன். சத்திரசிகிச்சை நாளும் ,சத்திரசிகிச்சைக்கு முன் மேலும் சில துளிகள் இடப்பட்டன. Intravenous (IV) முறையில் இடது கை வழியாகத் திரவங்கள் செலுத்தப்பட்டன வலி தெரியாதிருப்பதற்காக. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். படுக்க வைத்தார்கள். கண்களை இன்னுமொரு திரவம் கொண்டு துடைத்தார்கள். சிறு துவாரம் மிக்க துணி கொண்டு இடது கண்ணை மூடினார்கள். என் முன்னே குனிந்திருந்த கண் வைத்தியரும், அவரது உதவியாளர்களும் தெரிந்தார்கள். ஏதோ செயற்படுகின்றார்கள் என்பதை மட்டும் அறிய முடிந்தது. பத்து அல்லது பதினைந்து நிமிடங்களிருக்கும். 'எல்லாம் முடிந்தது' என்றார்கள். கண் மேல் போர்த்தியிருந்த துணியை அகற்றினார்கள். உலகம் கண் முன்னே முன் எப்போதையும் விட அழகாக, பிரகாசமாக, வர்ணங்களுடன் விரிந்தது. மேலுமிரு மணி நேரம் தங்கியிருந்தேன். கண்ணைப் பரிசோதித்தார்கள். நன்றாக இருப்பதாகத் திருப்திப்பட்டார்கள். ஒருவாரம் கழித்து மீண்டும் கண் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதிக்கும்படி கூறினார்கள். முதல் நாள் முழுவதும் கண்ணை மறைத்திருக்கும் வகையில் பிளாஸ்டிக் கண்ணாடியால் மூடி விட்டார்கள். ஒரு வாரம் வரையில் இரவில் படுக்கச்செல்லும்போது அவ்விதமே மூடிப்படுக்கும்படி கூறினார்கள். முதல் 24 மணி நேரம் கவனமாக இருக்கும்படி கூறினார்கள். தொடர்ந்து கண் துளிகளை ஒவ்வொரு நாளும் நான்கு தடவைகள் இட்டு வரும்படி கூறினார்கள். 26ந்திகதியிலிருந்து முகநூலில் பதிவுகள் இடத்தொடங்கினேன். அடுத்த நாளே கண்ணாடியில்லாமல் காரை ஓட்டிப் பார்த்தேன். வலது கண்ணுக்கும் கண்ணாடி தேவை என்பதால், புதுக்கண்கண்ணாடி எடுக்கும் வரையில் , கண்ணாடி அற்றே இன்று வரை வாகனம் ஓட்டுகின்றேன். இப்பொழுதுதான் தெரிகின்றது இது நாள் வரையில் நான் பல வர்ணங்களை இழந்த உலகையே பார்த்து வந்திருக்கின்றேன் என்று.

கடந்த வியாழன் மீண்டும் கண் வைத்தியரைச் சென்று சந்தித்தேன். கண்ணைப்பரிசோதித்தார். மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், எந்தவித நிபந்தனைகளும் இனி இல்லை என்றார். நீ விரும்பியதை நீ செய்யலாம் என்றார். நீந்த விரும்பினாலும் நீந்தலாம் என்றார்.

புதுக்கண்கண்ணாடி எடுக்கும் வரையில் வாசிப்பதற்கும், கணினியைப் பாவிப்பதற்கும் 'சொப்பேர்ஸ் ட்ரக் மார்ட்' மருந்துக்கடையில் வாங்கிய அருகிலிருப்பதைப்பார்ப்பதற்கான கண் கண்ணாடியைப் பாவிக்கின்றேன். முதன் முதலாக என் வாழ்க்கையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை இது. முதலாவது செயற்கை உறுப்பொன்று என் உடம்பில் பொருத்தப்பட்டு விட்டது.

முகநூலுக்கு வருவதற்கு ஒரு வாரமாவது ஆகுமென்று கணக்குப் போட்டிருந்தேன். இரண்டு நாட்களிலேயே முன்புபோல் முகநூலுக்கு வர , வாசிக்க , எழுத முடிந்தது எனக்கே மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

நண்பர்களே! இதுதான் காரணம் இங்கு நான் கண்ணாடி இல்லாமல் காணப்படுவதற்கு. என்னைப்பார்ப்பதற்கு எனக்கே ''நானே நானா? யாரோ தானா?' என்றிருக்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.