- இப்பகுதியில் அவ்வப்போது முகநூலில் இடப்படும் பதிவுகளும், அவற்றுக்கான எதிர்வினைகளும் பிரசுரமாகும் -

ஒற்றுமையே பலம்!- வ.ந.கிரிதரன் -1. தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம் சில வேளைகளில் எனக்கேற்படும் சிந்தனையென்னவென்றால்.... அன்று ஈழத்தமிழர்களை எல்லைப்புறங்களில் சென்று குடியேறும்படி அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் அழைப்பு விடுத்தார்கள். எத்தனைபேர் சென்றார்கள்? சென்ற இளைஞர்கள் சிலரும் நுளம்புக்கடி தாங்காமல் ஓடி வந்து விட்டார்கள். பின்னர் வந்தவர்கள் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள். அவர்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள்.

இன்று சொந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் அத்து மீறிக்குடியேற்றங்கள் செய்கின்றார்கள் என்று மக்களை இன, மதரீதியாகப் பிளவு படுத்திக் கருத்துகள் விடும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நாட்டில் நிலவும் சட்டங்களை மீறி யாரும் செயற்படுவதாக இருந்தால் , சட்டங்கள் மூலம் அவற்றை எதிர்கொள்ளுங்கள். நிலத்துக்கான உறுதிப்பத்திரங்கள் இருந்தால் அவற்றின் உதவியுடன் உங்கள் உரிமைகளை நிலைநாட்டுங்கள். அமைதியான முறையில் அரசியல் ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்யுங்கள். அப்பகுதிகளிலுள்ள அரச அதிகாரிகளிடம் , சமூக , அரசியல் தலைவர்களுக்கு முறையிடுங்கள். தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அனைவருமே இவ்விதமே தமக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கப்பழக வேண்டும்.

இவற்றை விட்டு விட்டு முஸ்லிம் மக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கருத்துகளை இனத்துவேசம் வெளிப்படும் வகையில் வெளியிடாதீர்கள். ஓரினத்துக்கு எதிராக எவ்விதச் சட்டங்களையும் திணிக்க முடியாது. அது மனித உரிமை மீறல். ஒரு நாட்டின் சட்டமென்பது அந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது.

உண்மையில் உங்களுக்கு உங்கள் மண்ணில் ஆர்வமிருந்தால், மேற்கு நாடுகளின் அரவணைப்பில் அம்மண்ணின் வளங்களைச் சுகித்துக்கொண்டு வாழும் இவ்விதமான கருத்துகளைக் கூறும் நீங்கள் உடனடியாக உங்கள் குழந்தைகளுடன் நாட்டுக்குத் திரும்புங்கள், அங்கு உங்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள். உங்கள் கருத்துகள் உருவாக்கும் மோதல்களால் பாதிக்கப்படப்போவது அங்குள்ள அப்பாவி மக்களே. உங்களிடமெல்லாம் ஒரு கேள்வி: அன்று தலைமுறை தலைமுறையாகத் தம் சொந்த மண்ணில் வாழ்ந்து வந்த வடக்கிலிருந்த முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட வேளையில், ஒரு சில மணித்தியாலயங்களில் அவர்களின் உடமைகள் பிடுங்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டபோது நீங்கள் எல்லோரும் எங்கு சென்றிருந்தீர்கள். அன்றிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்களில் பலர் இன்றும் திரும்பாமல் இருப்பதை அண்மையில் ஐபிசி தமிழ் வெளியிட்ட ஆவணப்படமொன்றில் பார்த்தேன்.

ஒரு கணம் மேனாடுகளின் அரவணைப்பில் வாழும் நீங்கள் சிந்தித்துப்பாருங்கள். அந்நாடுகளின் பெரும்பான்மை வெள்ளையின மக்களில் சிலர் இவைபோன்ற இனத்துவேசம் மிக்க கருத்துகளை உங்களை நோக்கிக் கூறும்போது எவ்வளவுதூரம் துடித்துப்போகின்றீர்கள். இதைத்தானே அவர்களும் கூறுகின்றார்கள். எங்கள் பண்பாடு பறி போகின்றது. அதிக அளவில் குழந்தைகளைப்பெற்று, சமூக உதவிப்பணத்தை அதிக அளவில் பெற்று நாட்டு வளங்களைச் சுரண்டுகின்றார்கள். அச்சமயங்களில் அவற்றை மனித உரிமை மீறல்களாகக் கருதி முறையிடுகின்றோம். ஆனால் உங்கள் சொந்த மண்ணில் நீங்கள் வெளியிடும் கருத்துகளும் இவ்வகையானவையே.

தற்போதுள்ள சூழலில் மேலும் இன முறுகல்களை ஏற்படுத்தாமல் உங்களுக்கிடையிலுள்ள பிரச்சினைகளை அணுகப்பழகுங்கள். அவற்றைப் பகை முரண்பாடுகளாக்கி மோதல்கள் , இரத்தக்களரிகளை மீண்டும் உருவாக்கத் துணைபோகாதீர்கள். எல்லாச்சமூகங்களிலுமுள்ள மத, இன அடிப்படைவாதிகளுக்கு அவர்களுக்குப் பின்னாலிருந்து இயங்கும் சக்திகளுக்குத் தேவை நாட்டில் மீண்டும் மக்கள் மத்தியில் மோதல்கள் உருவாவது. இரத்த ஆறு ஓடுவது. அவற்றின் மத்தியில் நின்று குளிர்காய நினைக்கும் அச்சக்திகளின் தூண்டுதல்களுக்குப் பலியாகாதீர்கள்.

Vadakovy Varatha Rajan:  போடு போடு அப்படி போடு

Kandiah Navarednam:  உண்மையான கூற்று. எவ்வளவு. காலந்தான். ஏமாற்று வேலைகளைஅரசியல் தலைவா்கள் நாடகம். போட்டு காலத்தை கடத்துவது

Pradeesh Kumar Subramaniam:  ·self thinking of human values needed more and it is the basic/must need always......

Vathiri C Raveendran: புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து ஒரு உண்மைக்குரல்.

Janaki Karthigesan Balakrishnan நன்று. நன்றி. இது போன்ற கூற்றுகள் பலரிடமிருந்து வரவேண்டி இருந்தது. வருகிறது. 2002 ம் ஆண்டளவிலும் கிழக்கு மாகாணத்தில் தமிழரை எல்லைப்புறங்களில் விவசாயம் செய்யுமாறு அனுப்பி வைத்த போது, அனைவரும் முடியாதென திரும்பி விட்டார்களென மட்டக்களப்பு சென்றிருந்த போது ஒரு ஆசிரியர் கூறினார். அதைத் தொடர்ந்து அந்த இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றம் நடந்து, பரந்த தேசத்தில், எல்லையைக் காணமுடியாத அளவு, நெல் விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானே அதற்கு சாட்சி. நேற்று இரவுதான் அக்டோபர் 29, DAN News இல் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா அவர்கள், மாவை சேனாதிராசா அவர்களை நேர்காணல் செய்ததைப் பார்த்து பபிள்கம் அல்லது ஜவ்வு போல் 70 வருடங்களாக இழுபடும் தமிழ் அரசியல் தீர்வு காணுதல் பற்றியது தொடர்பான எனது கருத்தினைத் பகிர்ந்தேன். இன்று காலை இந்தப் பதிவு மகழ்ச்சியையும் உத்வேகத்தையும் தருகிறது.

Siva Murugupillai : உங்களின் இந்தப் பதிவுக்கு காரணமாக இருந்த பதிவிற்கு நான் இட்ட பதில்களை இங்கு மீள்பதிவு செய்கின்றேன். எங்கள் பதிவு மிகவும் சரியான பார்வையுடன் இருக்கின்றது வாழ்த்துகள்.

Siva Murugupillai :  சற்று அவதானமாக நிதானமாக பார்க்கப்பட வேண்டிய விடயம் பேரினவாதம் சிறுபான்மை மக்கள் இடையே பிரிவுகளை ஏற்படுத்தும் தந்திரோபாயத்தை நீண்டகாலமாக கையாண்டு வருகின்றது இதில் முஸ்லீம் தரப்பு தமிழ் தரப்பு என இருதரப்பிலும் விலை போனவர்கள் பலர் உள்ளனர். ஆரோக்கியமான தொடர்சியான கருத்துப் பரிமாற்றம் இரு தரப்பு 'தலைவர்கள்' இடையேயும் நடைபெறுவது மிகவும் குறைவு. இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்தில் இதற்கான சில முன்னெடுப்புக்கள் (கூடவே மந்திரி சபையில் தமிழர் சிங்களவர் முஸ்லீம் என மூத்தரப்பினரும் இணைக்கப்பட்டிருந்தனர்) காணிப் பங்கீடு சம்மந்தமான பிரச்சனை இருதரப்பிலும் உள்ளது. இரு சமூகமும் தனது 'பலமான' இருப்பிற்கான போராட வேண்டியுள்ளது தவிர்க்க முடியாமல் இவ்விரு சமூகங்களும் மலையக மக்களைப் போலல்லாது அருகருகே வாழ்ந்து வருகின்றனர். எனவே இவர்கள் இடையேதான் காணிப்பங்கீட்டுப்பிரச்சனை வர வாய்புகள் ஏற்படும். பேரிவாதம் இஸ்ரேலின் வழிநடத்திலின் படி செய்படுத்த முற்படும் (இது ஜேஆர் காலத்தில் தீவிரப்படுதப்பட்டது) பிரித்தாளும் செய்பாடு முடிவிற்கு வந்ததாக எண்ண வேண்டாம். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களை மட்டும் கருத்தில் கொண்ட தமிழ் தரப்பு அரசியல் தீர்வு முன்னெடுப்புகள் (அது ஆயுதப் போராட்ட வழியாக இருகலாம் பாராளுமன்ற மறையாக இருக்கலாம்) முஸ்லீம் தரப்பு அபிப்பிராயம் கோரப்படாமல் ஏதேச்சாகராரமாக செயற்பட்டது படுகின்றது இங்கு கவனிக்கப்பட வேண்டும். இதனை இனவாதத்தை கையில் எடுக்கும் இருதரப்பும் கையில் எடுக்கின்றது. ஒன்று மட்டும் தெளிவாக நாம் இருக்க வேண்டும் சிறுபான்மையினர் பரிந்து நின்றால் பேரினவாதம் தனனு மேலாண்மையை பிரிந்தாளும் கொள்கையை பாவித்து தனியாக்கி இலகுவாக சிறுபான்மையினரை இல்லாமல் செய்து விடும் சிறுபான்மை மக்கள் தமக்கிடையே தொடர்சியான கலந்துரையாடல்கள் சந்திப்புகளை மேற்கொண்டு பொதுவான விடயங்களில் இணைந்து போராடும் நிலமையை ஏற்படுத்த வேண்டும். சிறிய பிரதேசத்தில் அதிக குடிசனப்பரம்பலாம் இட நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் நிலமை முஸ்லீம் மக்களை எங்களுக்கு பாரதியாரின் ' காணி நலம் வேண்டும்...' என்று பாட வைத்திருக்கும் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்

Siva Murugupillai :  இனப்பரம்பலைக் கட்டுப்படுத்தும் பொதுக் கொள்கை சரியானதோ பிழையானதோ என்பதை வேறு ஒரு தளத்தில் விவாதிப்போம். முஸ்லீம் மக்களின் இனப் பரம்பலைக் கட்டுப்படுத்தல் என்பதை நான் தனியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இனப் பெருகத்திற்கான பொது கொள்கை இலங்கையில் அமைத்தால் இதனை எல்லோருக்கும் அமுல்படுத்தலாம் இல்லாவிடின் இனப் பரம்பலை முஸ்லீம் மக்களிடம் மட்டும் அமுல்படுத்துவது சட்டத்திற்கு முரணானது மட்டும் அல்லாது தனிமனித சுதரந்திரத்திற்கு முரணானது. சீனா போன்ற நாடுகளில் அமுல்படுத்திய மக்கள் பரம்பலுக்கான பொதுக் கொள்கையை உருவாக்க்க வேண்டும் இதன் பிறகு இதனை அமுல்படுத்துவது பற்றி ஆராயலாம்

Yamuna Nithiananthan:  Well said.....!!! Thanks .

அராலியூர் நிலா: உண்மை

Thanaa Rob:  மதவாதம் மனிதனைஅழித்துவிடும்.

2.  அனைத்து இனங்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகள் நட்பு ரீதியில் அணுகப்பட்டு, அவற்றைப் பகை முரண்பாடுகளாக்காமல் தீர்த்து வைப்பதற்கு நிலவும் சட்ட திட்டங்கள் வழியே, சமூக, அரசியல் தலைவர்களின் பரஸ்பர உரையாடல்கள் மூலம் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இந்நிலையில் ஒவ்வோரினத்திலுமுள்ள இன வெறியர்கள், மத வெறியர்கள் இவற்றை ஊதிப்பெருக்க வைத்து அவற்றைத் தம் சுய மற்றும் அரசியல் இலாபங்களுக்காகப் பாவிக்க முனைவதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். அவர்கள்தம் நீலிக்கண்ணீருக்கு அல்லது முதலைக்கண்ணீருக்கு உணர்ச்சிபெருக்கில் உளத்தையிழந்து நாம் எம்மை இழக்கக்கூடாது. மானுடர்களில் சிலர் இன, மத பேதமின்றிச் சுயநல அரசியல் இலாபங்களுக்காகச் செயற்படுபவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்தம் சொந்தப்பூமியிலேயே தமிழ் அரசியல்வாதிகள் ஏக்கர்கள் கணக்கில் நிலங்களைச் சேர்த்துக்குவிப்பதைப்பற்றிய செய்திகளை அண்மையில் ஊடகங்களில் பார்த்தது நினைவுக்கு வருகின்றது.

தற்போது பல்வேறு இனங்களுக்கு மத்தியிலுள்ள முரண்பாடுகளைப் பூதாகரமானதாக்கி அவற்றின் மத்தியில் தமது சுய நலன்களுக்காகக் குளிர்காயப் பல்வேறு உள்நாட்டு, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியற் சக்திகள் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்பதையும் இத்தருணத்தில் மனத்திலிருத்தல் அவசியம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.


பொ.சண்முகநாதனின் 'பெண்ணே நீ பெரியவள்தான்'பொ.சண்முகநாதன்3.  பொ.சண்முகநாதனின் 'பெண்ணே நீ பெரியவள்தான்':இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்துக்கும் முக்கியத்துவமுண்டு. நகைச்சுவையென்றால் முதலில் நினைவுக்கு வருபவர்களிலிலொருவர் எழுத்தாளர் பொ.சண்முகநாதன். இவரது 'கொழும்புப்பெண்', 'பெண்ணே நீ பெரியவள்தான்' , ம்ற்றும்  'வெள்ளரி வண்டி' ஆகியவை முக்கியமான வெளியீடுகள். தமயந்தி பதிப்பகம் (அச்சுவேலி) வெளியிட்ட 'பெண்ணே நீ பெரியவள்தான்' இவரது நகைச்சுவைக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசித்துப்பாருங்கள். சிரித்து மகிழுங்கள். நூலகம் தளத்தில் இந்நூலினை வாசிக்கலாம். அழகான அட்டைப்பட ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் வி.கனகலிங்கம் (வி.கே). நூலின் தலைப்புக்கேற்ற ஓவியம். பெரிய பெண்ணை அண்ணாந்து பார்க்கும் ஆணின் ஓவியம்.  அட்டைப்படமே நூலினை வாசிக்க வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.

தரமான நகைச்சுவை இலக்கியம் எவ்விதம் படைக்கப்பட வேண்டுமென்பதற்கு நல்லதோர் உதாரணப்பிரதியாக இத்தொகுதியை என்னால் கருத முடிகின்றது.

புகைப்படங்களுக்காக நன்றி: பொ.சண்முகநாதன்

நூலுக்கான இணைய இணைப்பு: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%80_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

Memon Kavi : அவரது கொழும்பு பெண், நினைவுக்கு வருகிறது

Vathiri C Raveendran:  ஏழாலை சண்முகநாதன் எனவும் அழைப்பர்.அவருடைய கொழும்புப் பெண் நகைச்சுவை நாவலே நான் வாசித்த முதலாவது நகைச்சுவை நாவல்.நெல்லியடி நூல் நிலையத்தில் வாசித்தேன்.எனக்கு பிடித்த எழுத்தாளரும் கூட.
கொழும்பில் இருந்த காலங்களில் இருவரும் நன்றாக பழகினோம்.சென்ற மாதம்கூட என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

Giritharan Navaratnam:  அவருடனான மற்றும் உங்களது அக்கால இலக்கிய அனுபவங்களை நீங்கள் ஏன் எம்முடன் பகிரக்கூடாது? கேட்கக் காத்திருக்கின்றோம் நண்பர் வதிரியாரே!

Vathiri C Raveendran : தவறுக்கு வருந்துகிறேன். ஏழாலை பெயரோடு இவரை அழைப்பதில்லை.

Vathiri C Raveendran : பொ.சண்முகநாதன் யாழில் இப்போ வசித்துவருகிறார்.Ponniya Shanmuganathan .

Giritharan Navaratnam:  தகவலுக்கு நன்றி.

Ponniya Shanmuganathan:  I am not Erlalai Shanmuganathan. My birth place is Sanguvely. Erlalai T. Shanmuganathan, also known as Shokkallo Shanmuganathan is now in Canada. 'Colombo Pen' is not a novel. It is a collection of humorous Article. This information is for Mr Vathiri C Raveendran.

Vathiri C Raveendran:  Tks Mr .Ponniya Shanmuganathan .

Giritharan Navaratnam : தரமான நகைச்சுவை இலக்கியம் எவ்விதம் படைக்கப்பட வேண்டுமென்பதற்கு நல்லதோர் உதாரணப்பிரதியாக இத்தொகுதியை என்னால் கருத முடிகின்றது.

Thambirajah Elangovan:  எமது மூத்த சகோதரர்கள் நாவேந்தன் - துரைசிங்கம் ஆகியோரின் நெருங்கிய நண்பர். அவர்கள் உடுவிலில் வசித்த காலத்தில் பொ. சண்முகநாதன் அவ்வப்போது சகோதரர்களைச் சந்திக்க வந்துசெல்வார். பொ. சண் அவ்வேளை சங்குவேலியில் வசித்ததாக ஞாபகம். நீண்ட காலம் அவரை யான் காணவில்லை. அவரது 'கொழும்புப் பெண்' அந்தக் காலத்தில் வாசித்த ஞாபகம்..!

Giritharan Navaratnam : இவரது 'பெண்ணே நீ பெரியவள்' வாசித்ததிலிருந்து இதுவரை வாசிக்காத ஆனால் கேள்விப்பட்டுள்ள 'கொழும்புப்பெண்' நூலினையும் வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Ponniya Shanmuganathan : Thanks for the comments.

Giritharan Navaratnam : உங்களைப்போன்ற எழுத்தாளர்களெல்லோருடனும் தொடர்புகொள்ள வழி சமைத்த முகநூலுக்குத்தான் நாம் அனைவரும் நன்றி கூற வேண்டும்.


திக்குவல்லை கமால்4.  திக்குவல்லை கமால்: ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்படமுடியாத முக்கியமான படைப்பாளிகளிலொருவர் எழுத்தாளர் திக்குவல்லை கமால். திக்குவல்லையைத் தமிழ் இலக்கிய உலகில் காத்திரமாகப் பதித்ததுடன் , அப்பெயரினை மறக்க முடியாமல் செய்தவர் திக்குவல்லை கமால். சிறுகதை, கவிதை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இவரது தமிழ் இலக்கியப்பங்களிப்பு பரந்தது. சித்திலெப்பையின் 'அசன்பேயின் சரித்திரம்' தொடக்கம் இன்றுவரை திக்குவல்லை கமால், மேமன்கவி, ஏ.இக்பால், எச்.எல்.எம்.ஹனிபா, எம்.ஏ. நுஃமான், இளம்பிறை எம்.ஏ.ரகுமான், சுபைர் இளங்கீரன், மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி.....  என்று முஸ்லிம் படைப்பாளிகள் பலர் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குத் தம் பன்முகப்பங்களிப்பினை நல்கி வந்தார்கள்; வருகின்றார்கள். இவர்களது படைப்புகளைத்தவிர்த்து இலங்கைத்தமிழ் இலக்கியம் பற்றிப் பேச முடியாது.

என் மாணவப்பருவத்திலிருந்து இலங்கைப்பத்திரிகை, சஞ்சிகைகளில் இவர்களது பெயர்களை அடிக்கடி பார்த்து வியந்திருக்கின்றேன். குறிப்பாகத் திக்குவல்லை கமால் அவர்களின் படைப்புகள் பலவற்றை மல்லிகை சஞ்சிகையில் பார்த்திருக்கின்றேன். இவ்விதம் அன்று நான் பார்த்து வியந்த எழுத்தாளர்கள் பலரை முகநூல் என் நண்பர்களாக்கியுள்ளது. நான் ஒருபோதுமே எண்ணியிருக்காத ஒரு விடயமிது.  இவ்விதம் இலக்கியப்படைப்பாளிகள் பலருடன் நாடு கடந்து நண்பர்களாக இணைவதை முகநூல் என்னுமொரு சமூக ஊடகம் சாத்தியமாக்கும் என்று யார்தாம் கனவு கண்டிருப்பார்? தொழில்நுட்பமோன்றின் ஆக்கபூர்வமான பங்களிப்பென்பது இதுதான்.

எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்களின் படைப்புகள் பலவற்றை (சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல் & கவிதைகள்) 'நூலகம்' இணையத்தளத்தினர் ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். அதற்கான இணைய இணைப்பு: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

'நூலகம்' தளத்தில் ஆவணப்படுத்தபட்டிருக்கும் அவரது 'எலிக்கூடு' என்னும் கவிதைத்தொகுதியின் அட்டைப்படக் கவிதையான மல்லிகையில் வெளியான 'எலிக்கூடு' என்னும் கவிதையினை இத்துடன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

கவிதை: எலிக்கூடு - திக்குவல்லை கமால் -

நானோர் தொழிலாளி
நாளாந்தம்..
இரும்புக் கடைதனிலே வேலை
பார்க்கின்ற பேர்வழி!

ஒற்றை நாழிகைக்குள்
எத்தனையோ மனிதர்களைச்
சந்தித்து உரையாடும்
சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அன்றொருநாள்..
குழிவிழுந்த கண்களும்
தளருடல் கொண்ட
ஒருமனிதர் எனையண்மி,

"தம்பி, எலிக்கூடு உண்டோ ?”
என வினவ
"இல்லை, எலிப்பொறிதான் இங்குளது"
என்றேன் நான்.
"பாவம், பொறியிலவை
பின்னி இறந்திடுமே!
தேவை கூடொன்றே
சிக்கிவிட்ட பின்பவற்றைத்
தூரக் கொண்டுபோய்த்
திறந்திடலாம்  ஆதலினால்
மேலும் தேடுகிறேன்."
எனமொழிந்து விடைபெற்றார்.
விடை பெற்றாரா..?

அற்ப ஆசைக்கும்
சொற்ப எதிர்ப்புக்கும்
மனிதனை மனிதன்
அநியாயமாய்க் கொன்றும்
வெட்டியும் குத்தியும்
வெறிதீர்க்கும் இந்நாளில்...

தீங்கு விளைவிக்கும்
சிற்றுயிரே யாகிடினும்
பாங்கான முறையிலதைப்
பெயர்த்துவிட வழிதேடி
ஏங்கி அலைகின்ற....
'குழிவிழுந்த கண்களும்'
தளருடலும் கொண்ட
அம்மனிதன் இன்னுந்தான்
விடை பெறவில்லை
என்னுள்ளத்தில்... ]\
வீற்றிருக்கின்றார்.

{மல்லிகை)

Mullai Amuthan:  ஈழத்தின் மூக்கிய படைப்பாளிகளில் ஒருவர் இவர் என்பது மறுக்கமுடியாதது.அக்கால கட்டத்தில் நிறைய கவிதை நூல்கள் வந்தன.அன்பு ஜவகர்ஷா,கருணையோகன்,மேமன்கவி,பேனா.மனோகரன்,மு.கனகராஜன் என்பவர்களின் நூல்களுடன் பல நூல்கள் வந்தன.

Pena Manoharan : எலிக்கூடு கவிதை மல்லிகை இதழில் வாசித்ததும் பின்னர் தொகுப்பாக வாசித்து மகிழ்ந்ததும் நன்றாக நினைவில் இருக்கிறது.1976 இல் அன்பு ஜவகர்ஷாவின் முயற்சியில் அநு.கலைச்சங்கம் வெளியிட்ட எனது " சுமைகள் " குறும்பிரசுரம்..அ.யேசுராசா...திக்குவல்லைக்கமால்...மாத்தளை பாலா நயவுரைகளுடன் வெளியானது.ஈழத்தில் எழுபதுகளில் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுதிகளில் எலிக்கூடு...காவிகளும் ஒட்டுண்ணிகளும்.( அன்பு ஜவகர்ஷா ) மற்றும் ஏனைய முன்னோடிகள் தொகுதிகளோடு " சுமைகள் " தொகுதியும் ஈழத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுதிகளில் ஒன்றாக அறியப்பட்டது.

திக்குவல்லைக்கமால்...அ.யேசுராசா ஆகியோர் படைப்பிலக்கியத்திலும் அன்பு ஜவகர்ஷா...இன்றைய இளைய ஆசிரியர்களுக்கான வழிகாட்டியாகவும் கலைக்களஞ்சியமாகவும் மிளிர்வது மகிழ்ச்சியைத் தருகிறது.வாழ்த்துகள் தோழர்களே...

Thambirajah Elangovan:  'மல்லிகை'யில் வாசம் சேர்த்த படைப்பாளி..!

Raveendran Nadesan  திக்குவல்லை கமாலின் சில படைப்புகள் எனது நூலகத்தில் இடம்பெற்றுள்ளன; அவைதவிர ஏனைய பலவற்றையும் இரவலாகப் பெற்று அவர் குறித்த கட்டுரையொன்றை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் வெளியிட்ட 40 முற்போக்காளர்கள் பற்றிய நூலில் எழுதியிருந்தேன். அக்கட்டுரைக்கான மேலதிகமான தகவலின் பொருட்டு அவரது பண்டாரகம இல்லம் சென்று காலை முதல் மாலை வரை அவரோடு உரையாடியிருந்தேன். அவரது எழுத்தில் ஊடாடும் அன்போடு இழையோடும் குடும்ப வாழ்வுக்கான மூலமாக அவரது குடும்பம் முழுமையும் அமைந்திருந்தமையை அனுபவித்து உணர்ந்தேன்.

அவரது நூலகம் விதந்துரைக்கத்தக்கது. குறிப்பாக, மல்லிகையின் முழுத்தொகுப்பு (அநேகமாக) அவரிடம் மட்டுமே இருப்பதற்கான சாத்தியமுள்ளது. மேமன்கவியிடமும் வேறு ஓரிருவரிடம் இருக்க வாய்ப்புண்டு என நேற்று ஓர் உரையாடலின்போது மா.பா.சி. கூறியிருந்தார். இலங்கையில் அவர்போலச் சிலராயினும் படைப்பையும் கடந்து, சிறப்பான நூலகத்தைக் கொண்டிருப்பது மகிழ்வான விடயம்.

Nadigamvila Ggs Ananda:  இவர் எனக்கும் பல முறை உதவியும் ஒத்தாசையும் செய்தவர். பல சிங்கள நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவர். 'சமாதானத்தின் ஒரு பாலம்.' இவர்தான் சிங்களத்துக்கு மொழிபெயர்க்க தகுதியுள்ள சில தமிழ் ஆக்கங்களை தெரிவு செய்து எனக்கு தந்தார். நான் அவரை பற்றி சிஙகள பத்திரிகைக்கு எழுதினேன்.

Giritharan Navaratnam : நண்பரே! நன்றி உங்கள் பயனுள்ள தகவலுக்கும் , வருகைக்கும். திக்குவல்லை கமால் அவர்களைப்போல் நீங்களும் தமிழ்ப்படைப்புகளைச் சிங்களத்துக்கு மொழிபெயர்த்து வருகின்றீர்கள். அப் பணியும் ஆரோக்கியமானது. வாழ்த்துக்கள்.

Nadigamvila Ggs Ananda : மிக நன்றி !
கார்த்திகேசன் மாஸ்ட்டர்5. கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. பதிவுகள் இணைய இதழில் வெளியான இக்கட்டுரையை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

(பதிவுகள் இணைய இதழ்) நினைவு கூர்வோம்: எங்கள் தோழன் கார்த்தி!  - நீர்வை பொன்னையன் -

- கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை.  அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படங்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. - பதிவுகள் -.

கட்டுரையை முழுமையாக வாசிக்க: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4247:2017-11-12-21-47-42&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46

Giritharan Navaratnam : வரலாற்றுச் சிறப்பு மிக்க அரியதோர் ஆவணம்.

Janaki Karthigesan Balakrishnan : பதிவிற்கு நன்றி.

Thambirajah Elangovan:  மக்கள் பணிசெய்த மகத்தான மனிதன்..!

Sivanesaselvan Arumugam : I had long discussions with him and Devan Wonderful jovial person

Terrence Anthonipillai:  அருமையான ஆவணம். நீர்வை பொன்னையன் at his best.

Gv Venkatesan : Good document ... Thanks for your information

Raveendran Nadesan:  யாழ்ப்பாணம் பழைமைவாதம் ஊறியமண். அங்கு மார்க்சியம், ஆயுதப்போராட்டம் என்பன சாத்தியப்பட இயலாதன என்று நிலவிய கருத்தைத் தவிடுபொடியாக்கிய ஒரு முன்வரிசை ஆளுமை தோழர் கார்த்திகேசன் அவர்கள். அவரோடு இணைந்து இயங்கிய நீர்வைப் பொன்னையன் வாயிலாக அவரை அறியும் வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி!

Siva Murugupillai:  நீர்வை பொன்னையனின் பதிவுகள் யதார்த்தமானவை உண்மையானவை எனது கம்யூனிஸ ஆசான் கார்த்திகேசன் ஆசிரியர் அதிபர்தான். இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையை பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் ஆட்சியல் முதல் அமைச்சர் தலமையில் மாகாணசபை நடைபெற்ற போது தமிழ் பகுதியல் ஒரே ஒரு வீதிக்குத்தான் புதிய பெயர் வைக்கப்பட்டது அது நல்லூருக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியல் ஆரம்பிக்கும் அரசடி வீதி பெயர்மாற்றப்பட்டு கார்த்திகேசன் வீதி என பெயர் சூட்டப்பட்டது பெயர் மாற்றத்திற்கு காரணம் இவ் வீதியன் பெயரின் சாதியத்தின் கருத்தாக்கம் இருந்தது மற்றயது கார்த்திகேசனை கெரவிப்பது மற்றயது இந்த வீதியில் உள்ள வாசிகசாலை ஒன்றில்தான் தோழர் கார்த்திகேசனின் தோழர்கள் கூடி பேசுவது அதிகம் இன்னும் நிறை வரலாறு உண்டு வேறு ஒரு தளத்தில் எழுதுகின்றேன்

Vadakovy Varatha Rajan : கார்த்திகேசன் மாஸ்றரைப்பறி நீர்வை என்னக்கு பலவிடயங்களைப்பற்றி சொல்லியிருக்கிறார் .அவரது வீடே அலுவலகமாக இருந்தது பற்றி இரவிரவாக கட்சி வேலைகடகாக திரிந்தது பற்றி இன்னும் பல சுவாரசியமான சம்பவங்கள் .அவர்கள்எல்லாம் கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் . நம்மிடமிருப்பது அவக்களைப்பற்றிய பிரமிப்பு மட்டுமே .அவர்களைப்போல் எங்களால் வாழமுடியாமை வேதனையே .இலட்சியவாதிகளை ஞாபகமூட்டியதற்கு நன்றி கிரி

Charles Gunanayakam:  மிக அருமையானயவர். இளமைக்காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவர்கள் நடத்திய வகுப்புகளிலும் கலந்துரையாடல்களிலும் கலந்து எங்கள் சமுக அறிவை மேம்படுத்திக் கொண்டோம். கிளிநொச்சியிலும் தருமபுரம், விசுமடுப் பிரதேசங்களிலும் நடத்தப்படும் கலந்துரையா...See More

Uthaya Moorty · :கார்த்திகேசன் ஆசிரியரின் அந்த நினைவு மலரை முழுமையாக வாசித்தேன்! அவரிடம் கல்விகற்கும் வாய்ப்போ, அல்லது பழகும் வாய்ப்போ எனக்கு கிடைத்திருக்கவில்லை, ஆனாலும் அவரின் மாணவர்களின் மூலமும், ஏனையவர்கள் மூலமும் அவரைப் பற்றி அந்த எழுபதுகளில் அறிந்திருந்தேன்!, பின்னர் இந்த நினைவு மலரில் உள்ள கட்டுரைகளை வாசித்ததன் மூலம் அவரின் பெருமைகளையும், அவரின் மகள்களின் கட்டுரை மூலம் எத்தகைய ஒரு கணவராகவும் தந்தையாகவும் எல்லவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த இலட்சியம் கொண்ட மனிதராகவும் இருந்திருக்கிறார் என அறிந்தேன்! எனக்கு தெரிந்தவரையில் யாழ் மண்ணில் இப்படி ஒருவர் இருந்ததாக ஞாபகம் இல்லை!
அசோக் யோகன் கண்ணமுத்து6. அசோக் யோகன் கண்ணமுத்துவின் முகநூட் குறிப்புகள்: நண்பர் அசோக் யோகன் கண்ணமுத்து , 'அசை' சஞ்சிகையின் ஆசிரியர், முகநூலில் எழுதும் பதிவுகளை நான் ஆர்வத்துடன்  வாசிப்பது வழக்கம். இவரது கருத்துகள் எவையாகவிருப்பினும் (நான் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட) அவை அவரது உள்ளத்தின் உண்மையான சிந்தனைப் பிரதிபலிப்புகள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. மேலும் இவர் தனது விமர்சனங்களை, கருத்துகளையொட்டி புரியப்படும் எதிர்வினைகளைக்கண்டு ஆத்திரம் அடைவதில்லை. ஆவேசம் கொள்வதில்லை. அவற்றை ஆரோக்கியமானவையாகக் கருதி ஏற்றுக்கொள்ளும் தன்மை மிக்கவர். இவர் தனது கடந்த கால சமூக,அரசியல் செயற்பாடுகளை உள்ளடக்கி விரிவாகச் சுய விமர்சனங்களை எழுதுவதானது என்னைப்பொறுத்தவரையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று கருதுபவன். இதுவரையில் ஏன் அதனை இவர் செய்யவில்லை என்பது தெரியவில்லை. இவரைப்போன்ற எழுத்தாற்றல் மிக்க ஒருவர் அவற்றை எழுதும்போது அவை வெறும் சரித்திரங்களாக மட்டும் நின்று விடுவதில்லை. இலக்கியச்சிறப்பு மிக்கவையாகவும் அவை அமைந்து விடுகின்றன.

இவரைப்போல் இன்னுமொருவரின் சுய விமர்சனங்களுடன் கூடிய வாழ்க்கை அனுபவங்களையும் நான் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கின்றேன். அவரும் இதுவரை ஏன் அவற்றை எழுதவில்லை என்பது தெரியவில்லை. அவரும் பல்வேறு சமூக, அரசியல் சம்பந்தமான நூல்களையெல்லாம் தேடிப்பிடித்துப் படிக்கும் ஆர்வம் உள்ளவர், அவற்றை விரிவாக, தர்க்கரீதியாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவர். அவரும் தன் வாழ்வை தான் நம்பும் சிந்தனைகளுக்காக அர்ப்பணித்துச் செயற்படுபவர். அவரும் விரைவில் அவற்றையெல்லாம் எழுதுவாரென்று நம்புகின்றேன். அவர் ஜான் மாஸ்ட்டர்.

இப்பொழுது அசோக் யோகன் கண்ணமுத்து அவர்கள் தனது முகநூலில் அண்மைக்காலத்தில் வெளியிட்டு, என் கவனத்தை ஈர்த்த பதிவுகள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. "எங்களது பலரின் வாழ்வில், இளம் பருவத்தின் திசைவழியை தீர்மானிக்க வழிசமைத்ததில், சோவியத் ருஷ்ய இலக்கிய-அரசியல் சித்தாந்த படைப்புக்களுக்கு நிறைய பங்குண்டு. என்னிடம் தேங்கி நின்ற "நிலமானிய-இளம் பருவக் கோளாறுகளை" ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்தவை இவை. 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்' எனும் இப் புத்தகத்தை, மிக நீண்ட ஆண்டுகளுக்கு முன் படித்திருந்தேன். மனித குலத்தின் வரலாற்றில் பதிய சகாப்தத்திற்கு வழி கோலிய , வெற்றிகரமான ருஷ்யா சோசலிசப் புரட்சியைப் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைத்த முதல் நூல் இதுவென்றே கூறவேண்டும். வெறும் ஆயுதங்களும், இராணுவவாதமும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை. மக்கள் நலன் கொண்ட அரசியல் சித்தாந்தமும், மக்கள் படையுமே வெற்றியை சாத்தியப்படுத்தும் என நிருபித்த மக்கள் புரட்சி அது. இப்புரட்சிதான் ஒடுக்கப்பட்டமக்களுக்கான-- தொழிலாளர்களுக்கான -விவசாயிகளுக்கான- பெண்களுக்கான- தாய்மார்மார்களுக்கான - வயோதிபர்களுக்கான -குழந்தைகளுக்கான அன்றைய உன்னத ருஷ்யாவை உருவாக்கியது. இந் நூலை எழுதிய ஜான் ரீடு, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். ருஷ்யாதான் அவரை தமது மேசையில் மார்க்ஸ்- ஏங்கெல்ஸ்- லெனினின் நூல்களை குவித்துக்கொள்ளும்படி செய்தது.அந்தப் புரிதலே ருஷ்யா புரட்சியிலும் அவரை ஈடுபடவைத்தது. அவரின் அனுபவங்களையே இந் நூல் பேசுகின்றது. ஜான் ரீடு முப்பத்திமுன்று வயதில் இளம் பருவத்தில் காலமானார். அவரைப்போல் வாழ்தல் என்பது மகாத்தானது.பெருமை மிக்கது. மீண்டும் இந் நூலை படிக்கவிரும்புகின்றேன்..."

2.  "கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதும், நீயா நானா நிகழ்ச்சி தடையும் - கருத்துச் சுதந்திரமும் , சில கருத்துக்களும் ....

ஒரு சில வாரங்களுக்கு முன் விஜய் தொலைக் காட்சியில், 'நீயா நானா ' நிகழ்ச்சியில் ஒளிபரப்ப இருந்த நிகழ்ச்சி ஒன்று தடைசெய்யப் பட்டது நமக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன்.

" கேரளாப் பெண்கள் அழகானவர்களா? தமிழ் நாட்டுப் பெண்கள் அழகானவர்களா? "என்ற தலைப்பிலான அந்த உரையாடல் நிகழ்ச்சி, பெண்களை போகப் பொருளாக பார்க்கும், ஆணாதிக்க நுகர்வுக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்பதில் எமக்கு எத்தகைய கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. காப்பிரேட் தொலைக் காட்சிகள் தங்களின் வியாபார உத்திகளுக்காக இவ்வாறான தலைப்புக்களை தெரிவு செய்கின்றன. இந் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி குரல் எழுப்பி, கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நிகழ்ச்சி ஒளிபரப்பாமல் முடக்கப்பட்டது. அநேகமான "முற்போக்காளர்கள்" இதற்கு ஆதரவு தெரிவித்தும் இருந்தனர். கருத்துநிலையில் எமக்கு உடன்பாடற்ற ஒரு உரையாடலை தடைசெய்யக் கோரும் இந்த நிலைப்பாடு, எனக்கு பலத்த சங்கடத்தை கொடுத்தது. கார்ப்பரேட் நுகர்வு கலாச்சாரம் எப்போதும் பெண்களை போகப் பொருளாக , தாங்கள் வகுத்துக்கொண்ட அழகு -கவர்ச்சி என்ற மாயையை திட்டமிட்டு வியாரப்படுத்துவதில் மிகக்கவனமாக இருக்கும். இவற்றிக்கு கார்ப்பரேட் ஊடங்களான 'விஜய் ரீவி' போன்றவை , பக்கபலமாக உள்ளன.அது தங்களுக்கு ஏற்றவாறு கருத்தியல்களை உற்பத்தி பண்ணுகின்றது. இக் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டம் என்பதும், விமர்சனம் என்பதும், எதிர்வினை என்பதும் அக்கருத்தை - நிகழ்ச்சியை தடைசெய்ய கோருவதல்ல. மாறாக, நேர்மையான - திறன்கொண்ட மக்கள் நலன்சார்ந்த கருத்துக்களால் அவர்களை எதிர்கொள்வதும், அவர்களை சமூகத்தின் முன் அம்பலம்படுத்துவதும், இவ்வாறான ஊடகங்களின் மீதான மக்களின் நம்பகத் தன்மையை இல்லாமல் ஆக்குவதும்தான். வெறுமனமே நிகழ்ச்சிகளை தடைசெய்துவிட்டால், அந் நிகழ்ச்சிக்கூடாக வெளிவரவேண்டிய கருத்தியல் போராட்டமும், நிகழ்ச்சியை நடாத்துகின்ற ஊடகம் மற்றும் அது சார்ந்த நபர்களின் மக்கள் விரோத அரசியல் -சமூக -பண்பாட்டு நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியாமல் போக செய்துவிடுகின்றன. இவ்வாறு ஒவ்வொருவரும் தமக்கான கருத்து நிலைகளிலிருந்து சாதகமானவற்றை வரவேற்பதும், இணக்கமற்ற கருத்துக்களை முடக்க -தடைசெய்ய கோருவதுமான இந்த நிலைப்பாடு எந்தவகையில் ஆரோக்கியமானதென சிந்திப்பது அவசியமாகின்றது. மத அடிப்படைவாதமும் -பாசிசக் கூறுகளும் கொண்ட இன்றைய அதிகார ஆட்சியில் கருத்துச் சுதந்திர மறுப்பை நாமே ஏற்படுத்த முனைவோமானால், இவ் பிற்போக்கு சக்திகளுக்கு அதுவே முன் உதாரணமாக அமைந்துவிடும் அபாயத்தை நாமே ஏற்படுத்தி க் கொடுத்து விடுகின்றோம். இன்று கார்ட்டூனிஸ்ட் பாலாவின் குரல்வளை நசுக்கப்பட்டதுபோன்று, நாளை பல "பாலாக்களின்" குரல்வளை நசுக்கப்படலாம். அதற்கு நம்மையே அவர்கள், உதாரணம் காட்டவும் கூடும். எனவே,

கருத்து உரிமையின் சுதந்திர வெளியின் மீதான நம்பிக்கைகளை நாம் வளர்க்க முயல்வதும் ,கருத்துச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்தலுமே எமது செயலாகட்டும். 'நாம் வெறுக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரத்தில், நமக்கு நம்பிக்கை இல்லையெனில், கருத்துச் சுதந்திரத்திலேயே நமக்கு நம்பிக்கை இல்லை என்றே பொருள் ' -நோம் சாம்ஸ்கி -

பாசிசத்தின் தொடக்கம், விமர்சனத்தை- மாற்றுக் கருத்தை நிராகரிப்பதில் தொடங்குகின்றது .கவனம் கொள்வோம் நண்பர்களே.. கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான கருத்துச் சுதந்திர மறுப்பும், அவர் மீதான நடவடிக்கைகளும் மிகவும் கணடனத்திற்குரியவை. அதே வேளை, 'கருத்துச் சுதந்திரம்' என்பது , அவரவர் சார்பு நிலை கொண்டதாகவே நம்மிடம் இருக்கின்றது. கருத்து உ ரிமைக்கான விளக்கத்தை சொந்த விசுவாசங்களிலிருந்தும், தமக்கான கருத்து நிலைகளிலிருந்தும் கட்டமைத்துக் கொள்கின்றோம். நமக்கு வேண்டியவர்கள் மீது கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும்போது, எதிர்வினை ஆற்றும் நாம் , எமக்கு விரும்பப்பட்டவர்கள் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும்போது- அதக்கெதிரான தடைகளை விதிக்கும்போது "கள்ளமெளனம்" சாதித்துவிடுகின்றோம். கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான கருத்துச் சுதந்திர மறுப்புக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் பலர், கடந்த காலங்களில் ஈழ விடுதலை இயக்கங்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஏற்படுத்திய அச்சுறுத்தல்களையும் , கொலைகளையும் நாம் பேச முனையும்போதெல்லாம் கள்ளமெளனமாய் அதை கடந்துசெல்ல முயல்கின்றனர். அத்தோடு , இவற்றை நியாயப்படுத்த, மூடி மறைக்க புதுப்புது "புனைவுகளை" உருவாக்குகின்றனர். உண்மையில், இவர்கள் கார்ட்டூனிஸ்ட் பாலா க்கு தெரிவிக்கும் கருத்துச் சுதந்திர ஆதரவு என்பது, போலித்தனமானதாகவே இருக்கின்றது."

3. " கார்ப்பரேட் நுகர்வு கலாச்சாரம் எப்போதும் பெண்களை போகப் பொருளாக , தாங்கள் வகுத்துக்கொண்ட அழகு -கவர்ச்சி என்ற மாயையை திட்டமிட்டு வியாரப்படுத்துவதில் மிகக்கவனமாக உள்ளன. இவற்றிக்கு கார்ப்பரேட் ஊடங்களான 'விஜய் ரீவி' போன்றவை , பக்கபலமாக உள்ளன. அது தங்களுக்கு ஏற்றவாறு கருத்தியல்களை உற்பத்தி பண்ணுகின்றது. இக் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டம் என்பதும், விமர்சனம் என்பதும், எதிர்வினை என்பதும் அக்கருத்தை - நிகழ்ச்சியை தடைசெய்ய கோருவதல்ல. மாறாக, நேர்மையான - திறன்கொண்ட மக்கள் நலன்சார்ந்த கருத்துக்களால் அவர்களை எதிர்கொள்வதும், அவர்களை சமூகத்தின் முன் அம்பலம்படுத்துவதும், இவ்வாறான ஊடகங்களின் மீதான மக்களின் நம்பகத் தன்மையை இல்லாமல் ஆக்குவதும்தான். வெறுமனமே நிகழ்ச்சிகளை தடைசெய்துவிட்டால், அந் நிகழ்ச்சிக்கூடாக வெளிவரவேண்டிய கருத்தியல் போராட்டமும், நிகழ்ச்சியை நடாத்துகின்ற ஊடகம் மற்றும் அது சார்ந்த நபர்களின் மக்கள் விரோத அரசியல் -சமூக -பண்பாட்டு நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியாமல் போக செய்துவிடுகின்றன. அத்தோடு , நோம் சாம்ஸ்கி சொல்வது போல், 'நாம் வெறுக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரத்தில், நமக்கு நம்பிக்கை இல்லையெனில், கருத்துச் சுதந்திரத்திலேயே நமக்கு நம்பிக்கை இல்லை என்றே பொருள் ' என்பதற்கான சாட்சியங்களாக நாம் மாறிவிடுவோம்..."
தமிழினி ஜெயக்குமரன்7. பெண் விடுதலை பற்றித் தமிழினி ஜெயக்குமரன்: முகநூல் நினைவூட்டிய என் முன்னாட் பதிவுகளிலொன்று ஏற்படுத்திய சிந்தனைப்பொறிகள். தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தை ஈர்த்தன. அவற்றை இங்கு மீண்டும் பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம். இப்பதிவினை மீள்பதிவு செய்வதற்கு முக்கியமானதொரு காரணமுள்ளது. தமிழினிக்கு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், தென்னிலங்கையில் சிறைவாசம் அனுபவித்து வெளிவந்த பின்னர், தன்னை, தான் சார்ந்திருந்த அமைப்பினை, தன்னை உருவாக்கிய சமூக, அரசியற் சூழல்களையெல்லாம் சுய விமர்சனம் செய்யும் துணிவிருந்தது. அத்துணிச்சல் அனைவருக்கும் மிகவும் அவசியமானதொன்று. கடந்த கால அனுபவங்களைச் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கும் மானுடரின் வாழ்க்கையே சரியான பாதையில் செல்லும். எவ்விதச் சுய விமர்சனமுமற்று, அரசியல் மற்றும் சுய இலாபங்களுக்காக இயங்குபவர்களினால் வளர்ச்சி தடைபட்டுப் போகின்றது. தமது சொந்த வாழ்வின் தவறுகள் ஏற்படும்போதெல்லாம் மறுமுறை அவ்விதமான தவறுகள் ஏற்படாமல் திருத்தி வாழ்பவர்கள், மக்களுக்காக இயங்கும் அமைப்புகள் மத்தியில் ஏற்படும் தவறுகளைச் சுயவிமர்சனம் செய்யத் தயங்குகின்றார்கள். தொடர்ந்தும் அவ்வகையான தவறுகளையே செய்கின்றார்கள். இவ்வகையான சுய விமர்சனங்களற்ற தொடர்ச்சியான தவறுகள் தனி மனிதர்களைப்பாவிப்பதில்லை. மக்கள் அனைவரையும் பாதிக்கின்றன என்பதை உணர வேண்டும். அதற்காகச் சுய விமர்சனங்கள் தேவை. தமிழினி ஜெயக்குமரனின் சுய விமர்சனத்தை ஆக்கபூர்வமான சுய விமர்சனமாக இக்கோணத்தில் வைத்தே நான் பார்க்கின்றேன்.

தமிழினி ஜெயக்குமரனின் கருத்துகள் , பெண்கள் விடுதலை சம்பந்தமான் கருத்துகள் மிகவும் முக்கியமானவை. அவர் ஒரு பெண்ணாக இருந்ததும், தான் சார்ந்த மக்களின் ஆயுதரீதியிலான தேசிய விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதும், இறுதியில் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர் சிறைவாசம் அனுபவித்து வெளிவந்தபோது தன் கடந்த கால வாழ்கை அவர் சுய விமர்சனம் செய்ததும் , அதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியதும் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானவை.

1. :" எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 73)

2. "பெண்கள் ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது. குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப் பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். " ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 75 & 76)

3. "பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை. பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 76)

4. "பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று கருத்துகளை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும், ஆயுதப்போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை." (('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 77)

5. "அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும், இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்துக்காக உழைப்பதும், என்பனவாகவே இருந்தன. இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்கு புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கென குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும். ஏனெனில் இயக்கத்தின் முழுக்கவனமும் , மொத்த வளங்களும் யுத்தத்தில் ஈட்டப்பட வேண்டிய வெற்றியை நோக்கியே திருப்பபட்டிருந்தன்" ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 77)

Pena Manoharan : தமிழினிக்கு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தென்னிலங்கையில் சிறைவாசம் அனுபவித்து வெளிவந்த பின்னர்தன்னை...தான் சார்ந்திருந்த அமைப்பினை, தன்னை உருவாக்கிய சமூக, அரசியற் சூழல்களையெல்லாம் சுயவிமர்சனம் செய்யும் துணிவிருந்தது...' ஒரு கூர்வாளின் நிழலில்...இலங்கைப்பதிப்பு...காலச்சுவடு பதிப்பு இரண்டும் என்னிடம் உள்ளன.

Giritharan Navaratnam : அந்நூல் முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணமாக வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றது எழுதியவரின் ஆளுமையினால்.

Janaki Karthigesan Balakrishnan : தமிழினியின் தற்போதைய சிந்தனை நிலைப்பாடும், அதனை அதிக காலதாமதில்லாமல் வெளிப்படுத்தியதும், அதை வெளிப்படுத்திய முறையும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதும். அவர் கூறிய சில கருத்துக்கள் ஆச்சரியத்தைத் தரவில்லை. அவர் தன்னை இணைத்துக் கொண்ட ஆயுதம் தாங்கிய போர் சார்ந்த இயக்கமும், எம்மில் பலர் வாழும் முதலாளித்துவ கோபரேட் உலகமும் ஒரே விதமாகத்தான் இயங்குகின்றன. இரண்டிலும் வெற்றி, யாருக்கு வெற்றி, எவர் முதலிடம் பெறுவது என்பவைதான் முன்னிடம் வகிக்கின்றன. வெளிஉலக பார்வைக்கும், சில தேவையின் நிமித்தமும் ஆண்-பெண் சமஅந்தஸ்து, சம ஊதியம் ஆகியன பேசப்பட்டாலும், ஏன் கொள்கை அளவில் எழுத்தில் வடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டாலும், முன்பு கூறியவற்றை எடுத்தச்செல்ல அதிகம் உதவ மாட்டாது அல்லது இடராக இருக்கும் எனும் பட்சத்தில், அவை விசுவாசமாக முன்னெடுத்துச் செல்லப்படுத்துவதில்லை. ஆனால் சில தோற்றப்பாடுகள் ஏற்படுத்தப்படும். தமிழினியின் இணைப்பும் இதற்கு விதிவிலக்கானதல்ல. சிறீ லங்காவில் யுத்த நிறுத்தமும், சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகளும் 2002ம் ஆண்டளவில் ஏற்பட்ட வேளையில், நான் பிரயாணம் செய்த போது, எல்லைக் கோட்டைத் தாண்டும் இடத்தில் பெண்கள் பரிசோதனை, மலசலகூடம் போன்ற பகுதிகளில் பெண் போராளி காவலாளிகள் பொறுப்பேற்று நின்றனர். அநேகமாக அவர்கள் கீழ்மட்டத்தில் இருந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அவர்களில் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பேசியபோது, என் மனதளவில் ஆயுதம் தாங்க துணிந்தவர் எனும் மரியாதை இருந்தது. அவருக்கு நான் துணிச்சலாகப் பேசுபவள் போலப்பட்டதாகக் கூறினார். இவ்வித வேறுபாடுகளும் இழப்புகளும் பெரும் தாக்கத்தினையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

மேற்கத்தைய நாடுகளில் வேறு நாடுகளில் போரில் ஈடுபட்ட பல உயர்பதவி பதவி வகித்தோர், தமது நிர்ப்பந்தமான சில செய்கைகளினால் ஏற்பட்ட விளைவுகளை காலம் கடந்து வந்து வெளிப்படுத்தினர். இது அவர்களுக்கு நீண்ட காலமாக ஏற்பட்ட மனஉளைச்சினால் ஆகும். இங்கிலாந்தில் டோனி பிளையர் தனது அரசியல் தோல்விக்குப் பிறகு அமெரிக்காவுடன் இணைந்த ஈராக் மீதான போர் குறித்து கவலை தெரிவித்தார். ஒருவர் தனது சிந்தனையில் முதிர்ச்சியடையும் போது தாமாகவே தமது நிலையை வெளிப்படுத்தவர். சிறைவாசம் பலருக்கு அவ்வாறான முதிர்ச்சியடைய வாய்ப்பளித்திருக்கிறது.

தமிழினி தனது துடிப்பான இளமைக் காலத்தில், அதிகம் விபரமறியாது இணைந்து கொண்டதும், அதன் விளைவுகள் பற்றி, வயதில் அல்ல, சிந்தனையில் முதிர்ச்சியடைந்த நிலையில் வெளிப்படுத்தியது ஒரு வரலாற்றுச் சம்பவம் மட்டுமல்ல, அனைவரும் அதை வாசித்து கருத்தில் கொள்ள வேண்டியதொன்றாகும்.

எனது உறவினரான முந்நாள் பெண் போராளி ஒருவர், கண்பார்வையும் கைகளும் இழந்த ஆண் போராளியை மணமுடித்த நிலையில் ஒரு குறுகிய கால வாழ்விற்குப் போதுமான ஒரு தொகைப் பணத்தடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். முடிவுகள் யார் எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. பாரிய சமூகப் பொறுப்புகளையும் போரின் பின்பும் பெண்களே ஏற்க வேண்டியதாயிற்று.

Gv Venkatesan : உயர்ந்த இலட்சியங்களுக்காக தமிழினி அக்கா பட்ட துன்பங்களை எண்ணி வியக்கிறேன் ..போற்றுகிறேன்

K S Sivakumaran:  It's a pity that hr huband hadnot read my review of herbook.b

Rajaji Rajagopalan : தமிழினியின் பெயரில் இன்னொருவர் எழுதுகிறாரென்று பேச்சு அடிபடுகிறதே. நான் இவரின் நூல்களை இன்னும் வாசிக்கவில்லை.

Sj Siva:  மிகவும் உயர்ந்த தலைமைப் பதவியில் இருந்த தமிழினிக்கு மாற்றங்களைச் சரிவரச் சொல்லிக்கொடுக்கும் அறிவும் வாய்ப்பும் இருந்த போதும் அதைச் செய்யாமல் ஓய்வு நிலைக்குப் பின்னர் போரின் வெற்றி ஒன்றை மட்டுமே நோக்கி பயணித்ததாக தமிழ் ஈழ போராட்டத்தின் பன்முக வளர்ச்சியினை மறைப்பதேன்??

Giritharan Navaratnam : நீங்கள் அந்த நூலினை வாசித்தீர்களா? தமிழினி உயிருடன் இருந்திருந்தால் இன்னும் விரிவான நூல்களை எழுதியிருக்கக் கூடும். இது அவரது முதலாவது சுய ஆய்வு நூல். அவர் தனக்கு உடனடியாக நினைவுக்கு வந்ததை , கூற வேண்டுமென்று நினைத்ததை கூறியிருக்கின்றார்./ அவர் உயிருடன் இருந்திருந்தால் உங்கள் கேள்விக்கெல்லாம் விரிவான விடைகள் அளித்திருக்கக் கூடும். ஆனால் தன் கடந்த கால வாழ்வினை சுய ஆய்வு செய்ததென்பது மிகவும் ஆரோக்கியமான விடயம். அதனை அவர் தொடங்கி வைத்துள்ளார். அதற்காகவே அவரது இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் இந்நூலில் சுருக்கமாகத் தன் வரலாற்றைக் கூறியிருக்கின்றார். நீங்கள் நூலை வாசித்திருக்கவில்லை என்பதை உணர முடிகின்றது. வாசித்துப்பார்த்தால் நூல் என்ன கூறுகின்றது , கூறிய விடயங்கள் ஆரோக்கியமானவையா என்பதை உணர்ந்துகொள்வீர்கள். வாசியுங்கள். பின்னர் நூலிலுள்ள உங்களுக்குச் சரியென்று படாத விடயங்களை உதாரணங்களுடன் சுட்டிக் காட்டுங்கள். அவ்விதம் செய்தால் தர்க்கம் செய்வது ஆரோக்கியமாகவிருக்கும்.

Sj Siva : Nichchayamaaka. Karuththukalai solla ippoluthu Neram pothavillai .viraivil solkiren

Giritharan Navaratnam:  நூலை வாசித்து விட்டு, விரிவாக ஆழமாக நூலிலுள்ள உதாரணங்களுடன் உங்கள் கருத்துகளை நேரமுள்ளபோது தர்க்கியுங்கள். பலர் நூலை வாசிக்காமல் அவர் சொன்னார், கேள்விப்பட்டோம் என்ற பாணியில் கருத்துகளை முன் வைக்கின்றார்கள்.

Manokaran Param:  நான் முழுமையாக வாசித்தேன் அது தமிழினி அக்காதான் எழுதியுள்ளார் சில இடங்களை யாரோ மாற்றியிருப்பதாக நினைக்கிறேன் உதாரணமாக பூநகரி தாக்குதலில் அவர் பங்குபற்றியிருந்தார் தாக்குதல் நடந்த மாதம்மே செப்டம்பர் என மாறியிருந்தது இதைப்போல பல தகவல் பிழைகளை நான் வாசிக்கையில் உணர்ந்தேன் எங்களுக்கு தெரிந்த தமிழினி அக்கா இந்த பிழைகளை விடமாட்டா