மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன்- அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில், முகநூலில் வ.ந.கிரிதரன் எழுதிய குறிப்புகள், தமிழ்சின் சிஎன் இணையத்தளத்தில் நக்கீரன் எழுதிய நீண்ட கட்டுரை, முகநூலில் விஜயபாஸ்கரன், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பற்றி  அனுபவம் மிகுந்த மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த எதிர்வினை இது. உங்கள் கருத்துகளையும் அனுப்பி வையுங்கள். ஆக்கபூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.- பதிவுகள் -


அண்மையில் சிறீ லங்கா பிரதமரும், யு.என்.பீ. கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 200 கோடிகள் பெறுமதியான திட்டமாக மகாவலி ஆற்றினை முல்லைத்தீவு வரை திருப்பப் போவதாகவும், அதனுடன் முல்லைத்தீவின் சில பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தினை அமுல்படுத்தப் போவதாவும் அறிவித்தார் என செய்திகள் வெளிவந்தன. அதனையொட்டி பதிவுகள், கட்டுரைகள், கருத்துகள், எதிர்ப்புகள் என்று பல சம்பவங்கள் நடந்தன.

கடந்த புதன்கிழமை, ஆகஸ்ட் 29, 2018 தினம் நண்பர் Giritharan Navaratnam மகாவலித்திட்டம் திசை திருப்பப்படுமாயின் வடக்கு-கிழக்கிற்கான அது பற்றிய பயன்பாடு பற்றியும், அது தொடர்பான ஏற்கத்தகு குடியேற்றத்திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றியும் தனது கருத்துகளடங்கிய பதிவினைப் பகிர்ந்தார். அவை மறுப்பேதும் கூறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே.

இதனிடையே நண்பர் Vijaya Baskaran தனது புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2018 “ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பில் உள்ள பதிவில், பல தரவுகளைத் தந்தும் சில கடந்தகால  குடியேற்றத் திட்ட விபரங்களையும் தனது கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அவையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தன.

அத்துடன் தானறிந்த வரலாறு நிமித்தம் சில குடியேற்றத்திட்டங்களில் பங்கேற்க தமிழர்  முன்வரவில்லை என்பதையும் குறிப்பிட்டு, கல்லோயா திட்டத்தில் தமிழர் உதவிகளைப் பெற்று குடியேறவில்லை எனும் பதிவு பற்றிய உண்மை, பொய் தெரியவில்லை என்றும் கிரிதரன்க கூறியிருந்தார்.

அதே பதிவில் Tamilcnn எனும் தளத்தில் பதிவான, “திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிக மோசமானது அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்” எனும் தலைப்பில் நக்கீரன் என்பவரினால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையின் சில முக்கியமான பகுதிகளை இணைத்து ஆரோக்கியமான தர்க்கத்திற்கு தந்திருப்பதாகக் கிரிதரன் கூறியிருந்தார்.  இது பற்றிய உங்கள் கருத்தகளைப் பகிருங்கள் நண்பர்களே என்று ஒரு பரந்த வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நான் எனது முகநூல் பக்கத்தில் பதிவுகளாகவும், நண்பர் Giritharan Navaratnam பதிவுக்கு கருத்துகளாகவும், மூன்று பகுதிகளாக, தலைப்புகள் முறையே “மகாவலி நீர் முல்லைத்தீவுக்கு திசை திருப்பப்படுமா? மக்கள் நிலை மக்களுக்குப் புரிய வைக்கப்படுமா?” , “வெலி ஓயா - மணலாறு”, “வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்மக்களின் இடப்பெயர்வு”  என்று பதிவேற்றினேன். அத்துடன்  இவ்வாறான மகாவலி திருப்பம் போன்ற திட்டங்கள் ஏன் குடியேற்றத்தைப் புகுத்தாமல் அவ்வப் பிரதேசங்களில் வாழ்பவர் அந்நிலங்களை அவர்களே அனுபவிக்க இடம் கொடுக்கக் கூடாது என நண்பர் கிரிதரன் தெரிவித்த கருத்துக்கு பதிலும் அளித்திருந்தேன்.

இவை அனைத்தையும் தொகுத்து ஒரு கட்டுரையாக எழுத முன்வந்துள்ளேன். சிலர் நான் எழுதுவது இன்றுவரை பகிரப்பட்ட விடயங்களுக்கும், நடந்த சம்பவங்களுக்கும் எதிர்வினையானது என்று கருதினாலும், எனது கருத்துகள் பொதுமக்கள் தேவையையும், நன்மையையும் இட்டு நடுநிலையானவை என்றே தீவிரமாக நம்புகிறேன்.  

ஏற்கனவே மகாவலித்திட்டம் முன்பு போலில்லாமல், யாழ்குடா நாட்டின் கீழே வடக்கின் சில பகுதிகளிலும் மகாவலியின் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த திட்டம் விரிவு படுத்தப்பட்டிருந்தாலும், இன்று வரை எந்தவொரு மகாவலித் திட்டப்பகுதிகளிலும் தமிழ்ப் பிரதேசங்களை உள்ளடக்காத யு.என்.பீ. கட்சி திடீரென இப்படியொரு அறிக்கையை விடுதல், தேர்தல் பிரச்சாரமே அன்றி வேறொன்றுமில்லை என்பது வெளிப்படை. தருவது போல் பாசாங்கு செய்வதும், தருணம் வரும் போது தமிழர் மேல் பிழையைப் போட்டு மீளப் பெற்றுக் கொள்வதும் அக்கட்சியின் ஒரு தந்திரப் போக்கு என்பது நன்கு புரிந்தது. அதேவேளை சிங்களக் குடியேற்றம் என்றதும் தமிழரை இன்றுவரை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் முதலைக் கண்ணீர் வடித்து தேர்தலில் வாக்குகளைப் பெற ஒரு சந்தர்ப்பமும் வாய்ப்பாக அமைந்தது. இதனிடையே கத்தோலிக்க சமய பாதிரிமார், இன்னோர் சமய உள்ளீடு ஏற்படும் என கிலேசம் கொண்டு, தமிழ்ப்பிரதேசங்களின் கலாச்சாரம் குலைந்துவிடும், நிலம் பறிபோய்விடும் என்ற பயமுறுத்தல்களைக் கையாண்டு மக்களை அணிதிரட்டி ஒரு மாபெரும் எதிர்ப்புக் கூட்டமே நடாத்தி முடித்துவிட்டார்கள். நண்பர் தமிழ் நேசன் ஆகஸ்ட் 31, 2018, தனது முகநூல் பக்கத்தில் இந்த எதிர்ப்புக் கூட்டம் ஒழுங்கு செய்த முறையினையும், மக்களை அணிதிரட்டிய விதம் பற்றியதையும் “திட்டமிட்டு மக்களை ஏமாற்றும் கைக்கூலிகள்” என ஆரம்பித்து பதிவு செய்திருந்தார். இச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே “மகாவலித் திருப்பமும் சிங்கள குடியேற்றமும் - காகமும், நரியும் வடைக் கதையா?” எனும் சிறிய பதிவினை எனது முகநூல் பக்கத்தில் எழுதிய பின், மேற்கூறப்பட்ட மூன்று தலைப்புகளிலும் சில அடிப்படை ஆய்வுகளையும் மேற்கொண்டு, கடந்த கால எனது தொழில், வாழ்க்கை  அனுபவங்களை வைத்து எழுத ஆரம்பித்தேன்.

மகாவலித்திட்ட அணைகள்; வரைபடம் - நன்றி - மகாவலித்திட்ட இணையத்தளம்

 

- தென்னிலங்கையில் கட்டப்பட்டுள்ள மகாவலித்திட்ட அணைகள் -

நக்கீரனால் எழுதப்பட்டு Tamilcnn இல் பதிவான கட்டுரையில் மகாவலித்திட்டம் பற்றியதும், அதன் நோக்கம், பயன்பாடுகள், அதில் ஈடுபட்டோர் ஆகியோரது விபரங்கள் சரியாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. எனது மகாவலித்திட்டத்தில் 1976-77 குறுகிய காலம் உக்குவெல (Ukuwela), போவத்தன (Bowatena) ஆகிய இடங்களில் தொழில் பார்த்த அனுபவப்படி, மின்நிலையங்களும், நீர்ப்பாசனமுமே அதிமுக்கிய நோக்கங்களாகவும், திட்டம் அக்காலத்தில் வடமத்திய மாகாணத்திற்கு கீழே, அதாவது அனுராதபுரத்திற்குக் கீழேயே நடைபெற்றும் திட்டமிடப்பட்டும் வந்தன. நக்கீரனின் கட்டுரையில் குறிப்பிட்டது போல, காலத்திற்கு காலம் வெவ்வேறு  யூ.என். பீ. பிரமுகர்களின் ஈடுபாட்டுடன், மகாவலித்திட்டம் ஒரு யூ.என்.பீ. திட்டமாகவே அண்ணளவாக அரை நூற்றாண்டு காலம் நடைபெற்று வந்துள்ளது. எனது மகாவலித் திட்ட வேலையைத் தொடர்ந்து வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொறுப்பான மின்பொறியியலாளராக, அனுராதபுரத்தில் தங்கியிருந்து, சிறீ லங்கா நீர்வழங்கல்  வடிகாலமைப்பு சபையில் தொழில் பார்த்தேன். இக்காலகட்டத்தில், 1980ம் ஆண்டளவில், அனுராதபுரத்தில் நீர்வழங்கலுக்கு நீரிறைக்கும் நுவரவேவ (Nuwara Wewa) வாவியின் நீர்மட்டம் குறைந்து கொண்டு போனது. அதனால் வழமை போல் நீர்வழங்க முடியாமல் போக, எமது அட்டவணையைப் பரிசீலித்து வழங்கலைக் குறைத்து சீரமைக்க வேண்டியிருந்தது. இக்கால கட்டத்தில் சிறீ லங்கா சுதந்திரக்கட்சியே ஆட்சியில் இருந்தது.

நிலைமையை சீர்செய்ய ஒரேவழி, எங்கிருந்தாவது நீரோட்டத்தைத் திருப்பிவிட்டு நுவரவேவவின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். எனக்கு இந்தத் துறையில் பாண்டித்தியம் இல்லாததால், அதிகம் புரிதல் இல்லாத நிலையிலும், மகாவலியிலிருந்து அக்குறிச்சியில் நீர்பெற்றுக் கொள்ளும் ஏதோ ஒரு நீர் சேகரிப்பிலிருந்து இப்பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று உணர்ந்து, உயர் அதிகாரிகளுக்கு கடித மூலமும், நேரடியாகவும் அறிவித்தும் பயனில்லை. இவ்வளவிற்கும் எமது நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக் காரியாலயத்திற்கு அண்மையில்தான் அந்நாளில் பிரபலமான சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சரும், முக்கியஸ்தருமான மைத்திரிபால சேனநாயக்க வாழ்ந்து வந்ததுடன், அந்தத் தொகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியுமாக இருந்தார். யூ.என்.பீ. கையில் மகாவலித்திட்டம் இருக்கும் போது, ஏன் நுவரவேவ நீர்மட்டம் உயர மேலதிகாரிகளினால் எதுவும் செய்ய முடியாமல் போனது என்பது இப்போது நன்கு புரிகிறது. தமக்கு எதிரான ஆளும் கட்சியினர் மீது மக்களுக்கு வெறுப்பு வரும்வரை, எந்தத் திட்டத்திலும் ஒத்துழைக்காமல் இருப்பது அல்லது தடை செய்வது என்பது, அப்பாவி மக்களை பணயம் வைத்து விளையாடும் ஒரு அரசியல் விளையாட்டு. ஆகவே சிங்கள மக்களே செறிவாக வாழும் அனுராதபுரத்தில் நீர்பற்றாமையால் மக்கள் இன்னல் பட்டாலும் பரவாயில்லை, எமது அரசியல் விளையாட்டும், வெற்றியும் தான் முக்கியமென அரசியல் நடத்தியவர்தான் யூ.என்.பீ. கட்சியினர். அவர்கள் எதிர் பார்த்ததும், விரும்பியதும் போல் அடுத்து ஆட்சிக்கும் வந்தனர். ஒவ்வொரு அரசியல் அசைவிலும் ஒரு அரசியல் லாபம் இருக்க வேண்டும். இது பொதுவாக எந்தவொரு கட்சிக்கும் இருக்கும் நடைமுறைக் கொள்கையாகும். எந்த மட்டத்தில், எவ்வளவு, எவ்வாறான லாபம் என்பது கட்சிக்கு கட்சி வேறுபடும். மக்களுக்கான நன்மைகளும், அபிவிருத்திகளையும் மட்டுமே அரசியல் லாபமாகக் கருதும் அரசியல் தலைவர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள். மக்கள்தான் தேர்தல் காலத்தில் அவர்களைக் கவனத்தில் எடுப்பதில்லை. ஏனைய காலங்களில் இவர்களைத்தான் தேடுவார்கள்.

இந்த முல்லைத்தீவு  மகாவலித்திட்ட திருப்பம் பற்றியதிலும், சில சிங்கள மக்களைக் குடியேற்றுவதனால் தமிழ் மக்கள் அதை எதிர்க்க வேண்டும் என்பது தேசியம், சமஷ்டி கோரும் தமிழ் அரசியல்வாதிகளினதும், கத்தோலிக்கப் பாதிரிமாரின் நிலைப்பாடுமாக இருந்துள்ளது. முல்லைத்தீவு மக்களின் உடனடி நீர்த் தேவையினைக் கருத்தில் கொள்ளாது, தமது விருப்பு, வெறுப்புகளையும், சுயலாபத்தையும் முன்வைத்து, மக்கள் மூலம் அவற்றை எதிரொலிக்கச் செய்திருந்தார்கள். நக்கீரனின் கட்டுரையில் தரப்பட்ட இரு அட்டவணைகளை கீழே  படமாக இணைத்துள்ளேன். அவற்றை  உற்று நோக்கினால், 2012 ம் ஆண்டு வரை முல்லைத்தீவில் ஏற்பட்ட குடியேற்றங்களால் சனத்தொகை கணிப்பீடு பின்வருமாறு உள்ளது:


நக்கீரனின் கட்டுரையில் தரப்பட்ட இரு அட்டவணைகளை கீழே  படமாக இணைத்துள்ளேன். அவற்றை  உற்று நோக்கினால், 2012 ம் ஆண்டு வரை முல்லைத்தீவில் ஏற்பட்ட குடியேற்றங்களால் சனத்தொகை கணிப்பீடு பின்வருமாறு உள்ளது:

- நக்கீரனின் கட்டுரை அட்டவணை 1 -

நக்கீரனின் கட்டுரையில் தரப்பட்ட இரு அட்டவணைகளை கீழே  படமாக இணைத்துள்ளேன். அவற்றை  உற்று நோக்கினால், 2012 ம் ஆண்டு வரை முல்லைத்தீவில் ஏற்பட்ட குடியேற்றங்களால் சனத்தொகை கணிப்பீடு பின்வருமாறு உள்ளது:

- நக்கீரனின் கட்டுரை அட்டவணை 2 -


மாந்தை கிழக்கு பிரிவு (பாண்டியன்குளம் நகரம்) - 6277 சிறீ லங்காத் தமிழர் மத்தியில், 10 சிங்களவர், 634 இந்தியவம்சாவழித் தமிழர், 8 இஸ்லாமியர்;
மரிதி மேறம்பட்டு பிரிவு (Maritimepattu) (முல்லைத்தீவு நகரம்) - 25,976 சிறீ லங்காத் தமிழர் மத்தியில், 1071 சிங்களவர், 150 இந்தியவம்சாவழித் தமிழர், 1678 இஸ்லாமியர், 34 ஏனையோர்;

ஓட்டுசுட்டான் பிரிவு ( ஓட்டுசுட்டான் நகரம்) - 14,158 சிறீ லங்காத் தமிழர் மத்தியில், 626 சிங்களவர், 792 இந்தியவம்சாவழித் தமிழர், 51 இஸ்லாமியர், 31 ஏனையோர்;
புதுக்குடியிருப்பு பிரிவு (புதுக்குடியிருப்பு நகரம்) - 23,480 சிறீ லங்காத் தமிழர் மத்தியில், 50 சிங்களவர், 215 இந்தியவம்சாவழித் தமிழர், 19 இஸ்லாமியர், 6 ஏனையோர்;
துணுக்காய் பிரிவு (துணுக்காய் நகரம்) - 9180 சிறீ லங்காத் தமிழர் மத்தியில், 150 சிங்களவர், 391 இந்தியவம்சாவழித் தமிழர், 2 இஸ்லாமியர், 2 ஏனையோர்
வெலி ஓயா பிரிவு - முந்நாள் மணலாறு (எஹட்டுகஸ்வேவ) - 10 சிறீ லங்காத் தமிழர், 6937 சிங்களவர், 0 இந்தியவம்சாவழித் தமிழர், 2 இஸ்லாமியர், 0 ஏனையோர் ஆவர். அடைப்புக் குறிக்குள் தமிழில் எழுதப்பட்டவை, அப்பிரிவுகளின் அதிபெரிய நகரங்களாகும்.

அத்துடன் நக்கீரன் அவர்கள் கூறுவது, “1984 இல் தொடக்கப்பட்ட வெலி ஓயா குடியேற்றத் திட்டம் 1988 ஆம் ஆண்டு அசுர வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. இதற்காக ஸ்ரீலங்காவின் முழு அரச இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.

1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் ஒரு சிறப்பு அரசதாள் (Gazette) மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அது மட்டும் அல்லாது ஸ்ரீலங்காவின் 26 ஆவது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டு அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.”

கூகுல் தேடலில் (Google search இல்) கண்ட சிறீ லங்கா அரச தரவுகளின்படி வெலி ஓயா என்பது இன்னும் 2012ம் ஆண்டின் நிலைப்படி வடமாகாணத்திற்குள்ளேயே அடங்கியிருக்கிறது. சில தரவுகள் சிறீ லங்காவின் மாவட்ட எண்ணிக்கை இன்னும் 25 ஆக உள்ளதாகவே காண்பிக்கின்றன. ஆனால் நக்கீரன் அவர்களின் கட்டுரைப் பிரகாரம் இவற்றில் பாரிய மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெலி ஓயா என்பது கொக்கிளாய் குளம் (lagoon) ஊடாக ஓடுவது. மணலாறு என்பது வெலி ஓயாவின் வடக்கே அதிக தூரத்தில் தண்ணிமுறிப்பு குளத்தினூடாக, நாயாறு குளம் (lagoon) ஊடாக குமுழமுனைப் பகுதிக்கு அண்மையில் ஓடுவது. வெலி ஓயா என்றோர் ஆறு ஏற்கனவே இருந்திருந்தால், அதைச் சுற்றியுள்ள இடம் வெலி ஓயாவாகவும், மணலாற்றைச் சுற்றியுள்ள இடம் மணலாறு ஆகவுமே இருந்திருக்கும். நக்கீரன் அவர்களால் தரப்பட்ட அட்டவணையில் உள்ள வெலி ஓயா, அதாவது முந்நாள் மணலாறு எனும் மாவட்டத்தில், தமிழர் குடியிருப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கலாம். முன்பு மணலாறு வெலி ஓயாவை உள்ளடக்கிய பிரிவாக இருந்திருக்க வாய்ப்புண்டு.  

நக்கீரனின் கட்டுரையில், “1988-89ல் வெலி ஓயாவில் முதல் கட்டமாக 3,364 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கிறிமினல் குற்றவாளிகள் ஆவர். இரண்டாம் கட்டமாக 35,000 பேர் குடியமர்த்தப் பட்டார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது. தமிழர் குடியிருப்பு மிகவும் குறைவாக இருந்து அவர்கள் வெளியேறி ஏனைய பிரிவுகளுக்கு சென்று குடியேறி, அந்த எண்ணிக்கை 10 ஆகக் குறைந்து, 3,364 சிங்களக் குடும்பங்களாக 1988-89 இல் ஆரம்பித்தது 2012ம் ஆண்டளவிலும் 6937 பேர்களாகவே இருந்துள்ளது. இதைக் கூறுவதற்குக் காரணம் ஏனைய முல்லைத்தீவு பிரிவுகள் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகவும், இந்திய வம்சாவழித் தமிழர், இஸ்லாமியர், ஏனையோர் என்று இணைந்து வாழ்ந்துள்ளனர். இந்த 10 தமிழரின் இருக்கையை நாம் இன்னோர் விதமாகவும் நோக்கலாம். முல்லைத்தீவு மாவட்டத்தின் குடியிருப்புகள் அதிகமாக வாழ்வாதாரத்தை நோக்கமாகக் கருதி, கடலோரங்களை அண்டி செறிவாக இருந்தும், ஒட்டுசுட்டான், துணுக்காய் போன்ற பிரிவுகள் நிலப்பரப்புகளுடன் ஏனைய மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களை அண்டி இருந்ததால் சாதாரண செறிவான குடியேற்றத்துடன் இருந்ததை அவதானிக்கலாம். ஆனால் முந்நாள் மணலாற்றுப் பிரிவு அனுராதபுர மாவட்டத்தின் இரு பிரிவுகளை எல்லைகளாகக் கொண்டிருந்ததால் சிறீ லங்காத் தமிழ் மக்கள் அப்பிரிவினைப் புறக்கணித்தும் இருக்கலாம். இந்நிலையில் அப்பிரிவினை பயனுள்ளதாக்க சிறீ லங்கா அரசு சிங்கள மக்களை குடியமர்த்த தீர்மானம் எடுத்து, 1988-89 இல் வெலி ஓயா குடியேற்றத்திட்டத்தை ஆரம்பித்திருக்கலாம்.

தமிழர் சிலர் நான் கூறப்போவதையும் அறிந்திருப்பர். தமிழர் எவ்வளவுதான் சிறீ லங்காவில் இன ஒடுக்குதல் என்று முறையிட்டாலும், கணிசமான தொகையினர் அரசாங்க உத்தியோகங்களிலேயே இருந்தனர். இன்னும் இருக்கின்றனர். அவ் உத்தியோகத்தின் நிரந்தரமான தன்மையினாலும், அதனால் கிடைக்கும் சலுகைகளினாலும், எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பென்சனினாலும்,  அதுவே அநேகருக்கு பிடித்தமான தொழில் வாய்ப்பும், அதுவே சமூகத்தில் அதி கெளரவமாகக் கருதப்படும் தொழிலுமாகும். இந்நிலையில் சிங்கள அரசு அநேகமான இராணுவ செயற்பாடுகளைத் தவிர, வேறெதையும் தமிழருக்குத் தெரியாமல் இரகசியமாக செய்ய முடியாத நிலை. அதற்கும் மேலாக தமிழ் அரசியல்வாதிகளுக்கு, வேறு நல்ல விடயங்களை தமிழர்களுக்கு செய்கிறார்களோ இல்லையோ,  சிங்களக் குடியேற்றம் என்றால், வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது மாதிரி மென்று தள்ளி விடுவார்கள்.  இந்த சிங்களக் குடியேற்றம் என்பது வெலி ஓயா அல்லது முந்நாள் மணலாறு பிரிவு தமிழர் குடியமராமல் இருந்திருந்தாலும், சிங்களக் குடியேற்ற முன்னெடுப்பைப் பற்றி அறிந்தவர் மற்றவருக்குத் தெரிவிக்க, ஒரு பத்துப் பேரையாவது தமிழர் பெயருக்கு கொண்டு போய் முன்கூட்டியே இருத்தியிருக்கும். அந்தப் பத்து பேர்தான் பட்டியலில் இன்னும் உள்ளனரோ என்றும் தெரியவில்லை.

மேலும் நக்கீரன் கூறுவது, “இந்தக் குடியேற்றங்களைப் பாதுகாக்க சிங்கள இராணுவ முகாம்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டன.” அது போர்க்காலச் சூழல். தமிழ்ப் பிரதேசங்களை எல்லைகளாகக் கொண்ட பிரிவுகளில் வாழும் அல்லது வாழ குடியமர்த்தப்பட்ட  சிங்கள பொதுமக்கள் தமக்கு பாதுகாப்பு கோரி இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டும் இருக்கலாம்.

நக்கீரன் கூறுகிறார், முதலில் குடியமர்த்தப்பட்ட 3,364 குடும்பங்களில் பெரும்பான்மையோர் கிரிமினல் குற்றவாளிகளாம். இது போன்ற விடயங்கள் உலகளாவ நடைபெறுகின்றன. இருப்பினும், அவர்களது வாழ்வாதாரங்களும், உயிருக்கான பாதுகாப்பும் கூட அவசியம். அவுஸ்திரேலியா நாடே பிரித்தானியர்கள் குற்றவாளிகள் என இனங் கண்டவரை அங்கு அனுப்பி கட்டியெழுப்பப்பட்டது. அங்கு ஏராளம் சிறீ லங்காத் தமிழர்கள் இப்போது வாழ்கிறார்கள்.

இரண்டாம் 35,000 பேர் கொண்ட சிங்களக் குடியேற்றம் அரச தரவுகளில் காணப்படாவிட்டாலும், வெலி ஓயாப்பகுதியில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை கூகுல் வரைபு காண்பிக்கிறது. அது சிறீ லங்கா அரசின்  தேவையோடு சார்ந்ததாகும். இந்த வெலி ஓயா மாவட்டப்பிரகடனம் மணலாற்றுப் பகுதியை ஆக்கிரமிப்பதாக நக்கீரன் அவர்களின் கட்டுரையில் கூறப்பட்டது. அது எவ்வளவு பாதிப்பை சிறீ லங்காத் தமிழருக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பது பற்றிக் கூறுவது கடினமாகவே உள்ளது. நில ஆக்கிரமிப்பு என்பது பயனுள்ளதாக அனுபவித்து வந்த நிலம் பறித்தெடுக்கப்பட்டதா அல்லது பயன்படுத்தாமல், எமது சொந்தம், உரிமை மட்டும் கோரிக் கொண்டிருந்த நிலம் சுவீகரிக்கப்பட்டு, வேறு பயனுள்ள தேவைக்குப் பயன்படுத்தப்பட்டதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இது சிறீ லங்கா அரசினையும்,  இராணுவத்தினையும்  பொறுத்தவரையில் மிகப் பயனுள்ள விடயமே.

நக்கீரனது கட்டுரையில், “இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் சேவையை ‘மெச்சி’ தண்ணிமுறிப்பு ஜானகபுரவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது”. முல்லைத்தீவு-கொக்கிளாய் வீதியிலிருந்து பிரிந்து ஜானகபுர றோட் ஆரம்பித்து, வெலி ஓயா றோட்டினை சந்திக்கிறது அல்லது வெலி ஓயா றோட்டின் ஒரு பகுதியே ஜானகபுர றோட்டாக இருக்கிறது.  முல்லைத்தீவு-கொக்கிளாய் வீதியின் பிரிவிற்கும் வெலி ஓயாவிற்கும் இடையில் ஜானகபுர அமைந்திருக்கிறது என நம்பப்படுகிறது. தண்ணிமுறிப்புக்குளம் மேலும்  வடக்கே உள்ள போது, எவ்வாறு தண்ணிமுறிப்பு என்றொரு இடம் ஜானகபுரவாக மாற்றப்பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கீழேயுள்ள படம் Mahaweli Development Programme System ‘L’ - General Map என்று குறிப்பிடப்பட்டது  ஆகஸ்ட் 29, 2018 அன்று Aathavan Gnana என்பவரால் முகநூலில் பதிவிடப்பட்டது. வேடிக்கை என்னவென்றால் நண்பர் Giritharan Navaratnam அவர்களின் பதிவின் உள்ளடக்கத்தையே வேறு சிலரும், ஏற்கனவே இணைக்கப்பட்ட படம், அட்டவணைகள் இன்றி அல்லது வேறு படங்களை இணைத்து பதிவேற்றுகின்றனர். அதை ஆதரவாகச் செய்கிறார்களா, எதிர்த்து செய்கிறார்களா என்று புரியாத நிலை. நான் குறிப்பிட்ட படம் Janakapura  என்பது வெலி ஓயா பாதையில் உள்ளது என்பதையும், வடக்கே மணல்ஆறு ஓடும் பாதையில் உள்ள தண்ணிமுறிப்பு நிச்சயமாக ஜனகபுர (Janakapura) வாக பெயர் மாற்றம் அடைந்திருக்க முடியாது.

கீழேயுள்ள படம் Mahaweli Development Programme System ‘L’ - General Map என்று குறிப்பிடப்பட்டது  ஆகஸ்ட் 29, 2018 அன்று Aathavan Gnana என்பவரால் முகநூலில் பதிவிடப்பட்டது.

 

 கீழேயுள்ள படம் Mahaweli Development Programme System ‘L’ - General Map என்று குறிப்பிடப்பட்டது  ஆகஸ்ட் 29, 2018 அன்று Aathavan Gnana என்பவரால் முகநூலில் பதிவிடப்பட்டது.



இவற்றிற்கும் மேலாக செப்டம்பர் 6, 2018 தினம் இது நம் தேசம் முகநூல் பக்கத்தில், “மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் எனும் பதிவு வெளிவந்தது. இக்கருத்தினை முல்லைத்தீவில் நடந்த ஆர்பாட்டத்தில் கஜேந்திரகுமார் தெரிவித்தாராம். அதே படத்தில் Accelerated Project Area என்று மஞ்சள் நிறப்பகுதி மணல் ஆறைத் தொடவேயில்லை. கஜேந்திரகுமார் பேரன் வழி சட்டவியல் நிபுணணராக மக்களை ஏமாற்றும் விடயங்களையும் கூறி, தவறான பாதையில் இட்டுச் செல்ல முனைகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது.

வெலி ஓயா ஒரு ஆபத்தான திட்டம், வடதமிழீழத்தையும் தென்தமிழீழத்தையும் தரைமார்க்கமாக தொடுக்கும் பாதையைத் துண்டிக்கும் இராணுவம் சார்ந்த அரசியல் முயற்சி என்கிறார். அதாவது தமிழ்ப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் ஒரு முயற்சி என்று கூறாமல் கூறுகிறார். அத்துடன் அவர் வடதமிழீழம் எனக் குறிப்பிட்டது வடமாகாணங்களையும், தென்தமிழீழம் எனக் குறிப்பிட்டது கிழக்கு மாகாணங்களும் எனக் கருதி, வடக்கையும் கிழக்கையும் துண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதில் சில உண்மைகள் இருந்தாலும், முதலில் அவர் கட்டுரையில் தரப்பட்ட விபரங்களின் உண்மை நிலையினையும், துல்லியத்தனையும் ஆராய வேண்டும். அதன் பின்னரே அவர் கூறும் விடயங்களினால் ஏற்படும் தாக்கங்களை நியாயப்படுத்தவும், ஏற்றுக் கொள்ளவும் முடியும்.

கூகுல் தேடலில் காணப்படும் சிறீ லங்கா அரச தரவுகளின் படி, முல்லைத்தீவில் உள்ள ஆறு DS பிரிவுகள் ( Divisional Secretariats (DS) Divisions ) உள்ளன. அவை மாந்தைகிழக்கு (7117), மரிதி மேம்பட்டு (28973), ஒட்டுசுட்டான் (15721), புதுக்குடியிருப்பு (23824), துணுக்காய் (9699), வெலி ஓயா (6904) என்பன. தரவுகள் 2012 இலிருந்து மாற்றம் இடம் பெறவில்லை ஆயின்,  மேற்கூறிய தகவல் பிரகாரம் வெலி ஓயாவின் 2012 க்கான சனத்தொகை 6904, 175 சதுர கிமீ பரப்பளவு, சனத்தொகை அடர்த்தி, 39.45/சதுர கிமீ ஆகும். ஆனால் மரிதி மேம்பட்டு,  புதுக்குடியிருப்பு  போன்ற DS பிரிவுகளின் சனத்தொகை அடர்த்தி 60/சதுர கிமீ  க்கு மேலுள்ளது.  மேற்குறிப்பிட்ட வெலி ஓயா இன்னும் முல்லைத்தீவில் உள்ளதா, அல்லது நக்கீரன் கட்டுரைப் பிரகாரம் தனிப்படுத்தப்பட்டதா என்பதை ஆராயாமல், நக்கீரன் அவர்கள் தந்த தரவை ஏற்று வெலி ஓயா பற்றியதை ஆராய முற்பட்டேன். கூகுல் (Google) வரைபுகள் பிரகாரம் நிச்சயமாக வெலி ஓயா குடியேற்றத்திட்ட மாற்றங்கள் பெருமளவில் ஏற்பட்டுள்ளன என அனுமானிக்கலாம். அவை தேவையோடு ஒட்டியதாகவே தென்படுகின்றன.

வடமாகாணத்தின் முல்லைத்தீவில் இருக்கும் மரிதி மேம்பட்டு (Maritimepattu) என்பதே வெலி ஓயா விற்கு அருகேயுள்ள பிரிவு. அதேவேளை கிழக்கு மாகாணத்தின், திருகோணமலையில் இருக்கும் குச்சாவெளி DS பிரிவின் ஒரு சிறிய எல்லையையும் இவ் DS பிரிவு தனது எல்லையாகக் கொண்டிருந்தது. அத்துடன் வெலி ஓயாவின் மற்றைய எல்லைகள் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தின், பதவிய DS பிரிவின் எல்லையாகவும், வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு DS பிரிவின் எல்லையாகவும் இருக்கிறது. அதி தீவிர போர்க்காலத்தில் வெலி ஓயாக் குடியேற்றத்தையும், அதன் சிறீ லங்காவின் 26வது மாவட்டமான பிரகடனத்தையும், அதற்கான காரணங்கள் பாதுகாப்பு, இராணுவம் சார்ந்தது என்பதையெல்லாம் மறுக்க முடியாது. ஒரு இராஜதந்திரியும், தனது நாட்டைப் பாதுகாக்க முற்படுபவரும் அவ்வாறான தீர்மானத்தை எடுத்து நடத்துவதில் ஆச்சரியமில்லை. இது போன்ற முயற்சிகளைத்தானே புலிகளும் அவ்வப்போது தமது யுக்திகளாகக் கையாண்டனர். அதனால் தமிழ் மக்கள் எத்தனை இடர்களுடன் இடம் மாறி, இடம் மாறிச் சென்றனர். சிறீ லங்கா அரசிற்கு அம்மாற்றங்களைச் செய்யும் சக்தியும், வளமும் இருந்திருக்கும். அதனைப் பயன்படுத்தியிருக்கும்.

நக்கீரன் அவர்கள் தந்த முதலாவது அட்டவணைப் பிரகாரம் வெலி ஓயா அல்லது முந்நாள் மணலாறு எனும் பிரிவைத் தவிர்ந்து ஏனைய அனைத்துப் பிரிவுகளிலும் சிறீ லங்காத் தமிழரே ஏறத்தாழ 90% வாழ்கிறார்கள். சிங்களவரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளன. ஆகவே தமிழர்களினால் தாக்குப் பிடிக்க முடியாத அளவு கலாச்சார மாற்றம் இங்கே நிகழுமா?  பொருளாதார ரீதியாக அல்லது தமது சொந்த நிலவளமாக பாரிய இழப்புகள் ஏற்பட்டிருக்குமா? அவை ஈடு செய்யப்பட முடியாதனவா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தோற்றமளிக்கின்றன. சிங்களவர்கள் முதலில் குறைவாகவே வந்திறங்குவர், காலப்போக்கில் எண்ணிக்கையில் அதிகரித்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுவர் என்றெல்லாம் அநேகமாக புலம்பெயர் தமிழர் கூறுவதைக் (புலம்புவதைக்) கேட்டுள்ளேன். சிங்கள மக்களும் தமக்கு வசதியான, பழக்கப்பட்ட, அதற்கான சூழலில் வாழத்தான் விரும்புவார்கள். அதனால் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தவறேதுமில்லை. அதை மறுப்போரிடம் நான் கேட்பதை கீழே தந்துள்ளேன்.

ஈழத்தில் வாழும் தமிழ் மக்களை தற்போதைக்கு விட்டு, கனடாவாழ் தமிழ் மக்களை சற்று கனேடிய வாழ்வினையும், அந்த அனுபவங்களையும் சற்று சிந்திக்குமாறு கேட்கிறேன். 1984 இல் நான் வேறு மாகாணத்திலிருந்து ஒன்ராறியோ வந்திருந்தேன். மார்க்கம்/ஷெப்பார்ட் க்கு அப்பால் நாம் கண்டதெல்லாம் வயற்காணிகளும், வெற்று நிலங்களும் தான். அந்த இடங்கள்தான் இப்போது தமிழர்களினதும், சீனர்களினதும் வாழ்விடங்களாக மட்டுமல்லாது, இந்நாட்டில் பல சந்ததிகளாக வாழ்ந்த வெள்ளைக்காரரும் வந்து தேர்தலில் போட்டியிட முடியாதவாறு, 7 தமிழர்களே ஒரே பதவிக்கு போட்டியிடும் நிலைக்கு சில தொகுதிகளைக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல் வெவ்வேறு இனமக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். இதை ஆக்கிரமிப்பு என்று சொல்வதா, பயனுள்ள குடியேற்றம் என்று சொல்வதா? கனடாவில் பயன்படுத்தப்படாத நிலப்பிரதேசம் ஏராளம் உண்டு. ஒரு காலத்தில் ஆதிகுடியினரை நிர்ப்பந்தமாக வேறு இடங்களில் குடியமர்த்திய வரலாறு இருந்தாலும், தற்போது இந்நாட்டில் வலுக்கட்டாயமாக, அதுவும் புதிய குடிவரவாளர்களை குடியமர்த்தியதாக அறிந்ததில்லை. அவ்வாறு அமர்த்திய போதும் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின், அனுமதி பெற்று அல்லது பெறாமல் மாறிச் செல்ல வாய்ப்புண்டு. இவ் ஒழுங்குகள் அவர்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதில் இடையூறின்றி இருப்பதற்காகவே உள்ளன.

இதை நான் எடுத்துக் கூறிய போது, தாம் கனடாவில் செய்வது தமது முயற்சியினால் செய்த அபிவிருத்தி (Development) என்று கூறுகின்றனர். சிறீ லங்காவில் எந்த முயற்சிகளும் இன்றி சில சிறீ லங்காத் தமிழ் மக்களே வாழ்ந்து கொண்டிருந்த வெலி ஓயாவில் சிங்கள மக்களை குடியமர்த்தி அதில் பல மக்கள் வாழக் கூடிய இடமாக மாற்றுவது அபிவிருத்தி இல்லையா?

சிங்களவர் தாம் பிறந்த நாட்டில் எங்கெல்லாம் வந்து சீவிக்கக் கூடாது என்று நிபந்தனையிட்டு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தமிழர்களே. ஒரு நாட்டை ஆள்பவர் அல்லது அரசாங்கம் அந்த நாட்டின் வளங்கள் மக்களுக்குப் பயன்பெறுவதாக அமையுமானால், மக்களும் இசைந்தால், ஒத்துழைத்தால், அதை செய்வதில் தயக்கம் காட்டக்கூடாது. கல்லோயாத் திட்டத்தில் தமிழரைக் குடியமர்த்த, முதலில் இசைந்து உதவி பெற்று, பிறகு ஒத்துழைக்காமல் திரும்பி வந்திருந்தால், மீண்டும் அரசு அதே வழிமுறையைக் கையாளாது, வேறு முறைகளைத்தான் கையாளும். நான் ஒருதடவை மட்டக்களப்புக்கு போயிருந்த போது, அங்கே தொழிலில்லாமல் இருந்தவர்களை விவசாயம் செய்யக் குடியேற்றக் காணிகளில் குடியமர்த்த, சிலநாட்களில் அதை விரும்பாது திரும்பி விட்டனர் என, அங்கு கற்பித்த ஆசிரியர் ஒருவரே கூறினார். அங்கு வேறு பகுதிகளில் வாழ்ந்த வேறு இன மக்கள், சிங்கள, முஸ்லிம் மக்கள், குடியேறி தாமும் மேம்பட்டு, வயற்காணிகளையும் மேம்படுத்தினர் என்றார். நானும் அந்த இடத்தைப் பார்வையிட்ட போது கண்ணுக்கெட்டாத தூரம் வரை விவசாயம் பரந்திருந்தது. அதைத்தான் ஒரு அரசு விரும்பும். எமது சொந்தம் என்று கூறிக்  கொண்டு நிலங்களைத் தரிசாக்க அரசு விரும்பாது.

கனடாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாகாணத்தின் தலைநகரமும், அதன் சுற்றுப்பகுதிகளும், புதிய குடிவரவாளரையே செறிவாகக் கொண்டுள்ளது. உதாரணமாக ரொரன்ரோவும், ரொரன்ரோ பெரும்பாகமும் கணிசமான தமிழரைக் கொண்டுள்ளது. இங்கே தெருக்களில் தேர் இழுத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழர் தினம் என்று வீதிகள் அடைத்து அங்கு கொண்டாடுகிறார்கள். இதற்குமுன் பெரும்வீதிகளை மறித்து எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தினார்கள். பாரிஸ் நகரில் வீதியை அடைத்து திருவிழா நடத்தி, தேரிழுத்து, குவிக்கப்பட்ட  எண்ணற்ற தேங்காய்கள் உடைத்து கொண்டாடுகிறார்கள். சிங்கள மக்களும் பல நாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் அவர்களது கொண்டாட்டங்களும் விசேஷங்களும், பலரையும் வரவேற்று, வீதிகளில் அல்லாது,  மண்டபங்களிலேயே நடைபெறுகின்றன.

சிறீலங்காத் தமிழர்களின் வாழ்வினை நோக்கினால், தொடர்ந்து வந்த இனக்கலவரங்கள் பின்பும் சிறீ லங்காவில் தென்பகுதியில் வெள்ளவத்தையை தமிழர் தம்வசமே வைத்துள்ளனர். அதற்கேற்ப அங்குள்ள வியாபாரிகளையும், வியாபார, சேவை ஸ்தலங்களையும், கோவில்களையும் வைத்துள்ளார்கள். அதைவிட வெள்ளவத்தை சந்தையில் இருக்கும் அனைத்து சிங்கள வியாபாரிகளையும் தமிழில் பேச வைத்து சிறீ லங்காத் தமிழரின் கொள்வனவுகள் நடத்தப்படுகின்றன. சிறீ லங்காத் தமிழரின் அநேகமான இளைஞர், யுவதிகள் தமது வாழ்வின் மேம்பாட்டிற்காக, பலர் புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர் உதவியோடும் கல்வியில் ஈடுபட, அவர்கள் போன்ற இந்திய வம்சாவழித் தமிழர் இளைஞர், யுவதிகளை சிறீ லங்காத் தமிழர் வாழும் இடங்களுக்கு வரவழைத்து வியாபார, சேவை ஸ்தலங்கள் மூலம்  சேவகம் பெற்றுக் கொள்ளும் மாற்றம் ஏற்படுத்தும் வல்லமையுயும், சிறீ லங்காத் தமிழர் தக்க வைத்துள்ளனர். இவையெல்லாம் வசதியாக வாழக் கிடைத்த  சிறீ லங்காத் தமிழருக்காக ஏற்படும் மாற்றங்களும், தன்னிச்சையான குடியேற்றமும் என்பதை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டும். மனச்சாட்சியுள்ள எவருக்கும் அவையெல்லாம் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை ஆயின், சிறீ லங்கா அரசு அமுல்படுத்தும் சிறு சிறு குடியேற்றங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே!

எமது கருத்தப் பரிமாற்றங்கள் நடுவே P. A. Jayakaran Arullingam மகாவலி திட்டம் எவ்வகையாக இனமுரண்பாட்டை கூர்மைப்படுத்தியது தொடர்பாக கனடியரான ரோஷ் மாலிக் அவர்கள் ஆய்வொன்றை மேற்கொண்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தார் என்பதைத் தெரிவித்திருந்தார். அதிலிருந்து சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு தேடல் சஞ்சிகையில் வெளியானது என்பதையும், ஏனைய தேசிய இனங்களை ஒடுக்குவற்கான ஆயுதமாவே மகாவலி பாவிக்கப்பட்டதென்பதே வரலாறு எனவும் கூறியிருந்தார். ஏனைய தேசிய இனங்கள் அச்சம் கொள்வற்கான காரணத்தை அரசே தக்கவைத்துள்ளது. தேசிய இனப்பிச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வைக்காமல் செய்யப்படும் அபிவிருத்தி முயற்சி பிரச்சினையை இன்னமும் கூர்மைப்படுத்தவே விளையும் எனவும் கருத்தில் கூறி முடித்தார். இவை அனைத்தும்  P. A. Jayakaran Arullingam கருத்துக்களா, கனடியரான ரோஷ் மாலிக் அவர்களின் கருத்துக்களா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

அக் கருத்தினையொட்டி, Giritharan Navaratnam, “மகாவலித்திட்டம் நல்ல திட்டம். அது அத்துறையில் அனுபவம் வாய்ந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை இலங்கையின் அரசுகள் அரசியல்ரீதியாக, ஏனைய இனங்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றுவதற்குப் பாவிப்பதுதான் தவறானது. 2009ற்குப்  பின்னான இச்சூழலில் 'திட்டம் தேவை. ஆனால் முறையற்ற குடியேற்றத்திட்டம் தேவையில்லை' என்பதை வலியுறுத்துவதுதான் நல்லது என்பது என் எண்ணம். ஏன் வட பகுதி விவசாயிகள், மக்கள் கிடைக்கும் நதி நீரின் பயனை ஏனைய தென்னிலங்கை மக்களைப்போல் அனுபவிக்கக்கூடாது?” என்ற கருத்தினையும், கேள்வியையும் முன்வைத்தார்.

இவற்றையும் தந்து எனது கருத்துக்களையும் கண்ணோட்டத்தினையும் கூறுவது, தர்க்கரீதியாக இல்லாமல் எவ்வாறெல்லாம் வெவ்வேறு பின்னணியையும், அனுபவத்தையும் கொண்டவர் சிந்திக்க முடியும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.  

நண்பர் Vijaya Baskaran புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2018 தினம் தனது முகநூல் பதிவில் கூறியது, “இலங்கையின் சனத்தொகையில் தமிழர்கள் 20 வீதம் மட்டுமே. இதில் பெரும்பாலான தமிழர்கள் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்தபோதும் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பிரதேசமாக அடையாளப்படுத்தப்படுகிறது .இந்த நிலப்பரப்பு இலங்கையின் 29 சதவீதமானது. இங்கே பெரும் பகுதி நிலங்கள் மக்கள் பாவனை இன்றி காடுகளாகவே இருந்தன.”.

எனது கருத்து  கடந்த காலங்களில் வேறு இடங்களில் தமிழ் மக்கள் ஒத்துழைக்காமல் இருந்து, விவசாயம் மகாவலித் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமாக இருக்கையில், அதன் பயன்பாடு தவறலாம் என்பதால் குடியேற்றம் தமிழ்ப்பிரதேசங்களிலும் ஒரு அங்கமாக அமைந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. தென்னிலங்கையில் சிங்களப்பிரதேசங்களில் ஒவ்வொரு மகாவலித்திட்டத் திருப்பமும் மக்கள் குடியேற்றங்களுடனேயே நடந்தன. நான் 1976 இல் தொழில் பார்த்த உக்குவெல என்ற இடத்தில் மகாவலித் திட்டத்தின் முதல் மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அது அமைக்கப்படும் போது அந்த இடம் வெற்று இடமாகவும், பிற இடங்களில் இருந்து வேலை  பார்த்தவர்களுக்கு, அநேகமாக பொறியியலாளர், தொழில்நுட்பம் சார்ந்தவரகள், தங்குவதற்கு தற்காலிக வீடுகள் அமைத்தும் கொடுக்கப்பட்டன. வேற்று நாட்டவர், Contractors and Consultants ஆகப் பணியாற்றிய ஜப்பானியர், யூகோஸ்லாவியர், பிரென்ஞ்ச் ஆகியோர் கண்டியிலிருந்து அன்றாடம் பிரயாணம் செய்தனர். அவர்களால் வேலைக்கமர்த்தப்பட்டு நிர்மாணப்பணியில் ஈடுபட்ட உள்ளூர்த் தொழிலாளர் வத்தேகம, மாத்தளை போன்ற இடங்களில் இருந்து வந்தனர். தொழில் பார்த்தவரில் பெரும்பான்மையோர் சிங்களவராக இருந்தாலும், ஒரு சிலர் இந்திய வம்சாவழித் தமிழராகவும், இஸ்லாமியத் தமிழராகவும் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அந்த விபரம் என் கைவசம் இருக்கவல்லை. இருப்பினும் தமிழ், சிங்கள ஆண் பொறியியலாளர் தங்கியிருந்த தற்காலிக வீட்டில், வயதில் முதிர்ந்த இந்திய வம்சாவழித் தமிழர் சமையல் செய்பவராகப் பணியாற்றினார். அவரது நிரந்தர வதிவிடம் வத்தேகம அல்லது மாத்தளை போன்ற இடமாக இருந்திருக்கும், அத்துடன் நீண்ட காலம் அங்கே வாழ்ந்துள்ளார்.
நாம் பொருட்கள் வாங்குவதானால் வத்தேகம எனும் கிராமத்திற்கோ அல்லது அண்மித்த நகரான மாத்தளைக்கோ அல்லது சற்றுத் தூரத்தில் பெருநகரான கண்டிக்கோ செல்ல வேண்டும். இவ்வாறான அனுபவங்கள் மேன்மேலும் திட்டங்கள் அமுல்படுத்தும் வேளையில் துரித கதியில் நிறைவாக்கம் செய்தலை ஊக்குவித்திருக்கலாம்.

அந்நிலையிலே நிர்மாணம் நிறைவு பெற்ற மின்நிலையம் அமைக்கப்பட்ட உக்குவெல, பல வருடங்கள் பின், இனம் கண்டு கொள்ள முடியாதபடி மாறிவிட்டது. மிகுந்த சன நடமாட்டமும், தொழில் நிறுவனங்களும் என்று பயனுள்ள இடமாகி விட்டது. அது மாத்திரமல்ல அந்த இடத்தில் சிங்கள மக்கள் மட்டுமல்ல, இந்திய வம்சாவழித் தமிழரும், இஸ்லாமியத் தமிழரும் குடியேறியிருந்திருப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. வத்தேகம எனும் இடமும் மேலும் விருத்தியடைந்திருந்தது. எனது இளைய சகோதரி வத்தேகமவில் ஆசிரிய நியமனம் பெற்று அங்கு சில வருடங்கள் கற்பித்தார். இவற்றையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் சிறீ லங்காவில் எந்தவொரு இடமும் 100% சிங்கள மக்கள் மட்டுமே வாழ்பவர்கள் என இனங்காண்பது வெகு அரிதாகவே இருக்கும்.  ஆகவே இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்த குடியமர்த்தலும், குடியேற்றமும் ஒரு தேசிய இனத்தைக் கருதிச் செய்வதென்பதை விட, ஒரு நாட்டின் வளங்கள் சீராக பயன்படுத்தப்படுவதற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், அத்திட்டங்களுடன் ஒத்துழைக்கும் மக்கள் பயன்பெறவே நடைபெறவேண்டும், பல நடைபெறுகின்றன. தேசியம் கோரும் தமிழர் யாழ் குடாநாட்டு கட்டமைப்பினையே சிறீ லங்காவின் அனைத்துப் பிரதேசங்களிலும் எதிர்பார்த்து தமது உரிமைகளைக் கோருகிறார்கள். ஒரு இடத்தை அல்லது பிரதேசத்தை அனுபவிப்பது என்பது வெறும் சொந்தம் கொண்டாடுவதும், உரிமை கோருவது மட்டுமல்லாது, அது மக்களுக்குப் பயனுள்ளதாகவும், அங்கு அமுல்படுத்தப்படும் திட்டத்தின்படி வழியொழுகுவதாகவும், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருத்தல் அவசியம்.

சிறீ லங்காத் தமிழர் வாழ் பிரதேசங்களில், கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் மக்கள் இதுபற்றி அக்கறை கொண்டாலும், அவர்களின் விருப்பு வெறுப்புகளைக் கேட்பதில், பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அக்கறை காட்டுவதுமில்லை, அவர்களுக்கு அவை முக்கியமுமில்லை. அதனாலும் அவற்றின் பயனை மக்கள் பூரணமாக அனுபவிக்க முடியாமல் தடைப்பட்டுப்  போய்விடுகிறது.

நண்பர் Karunakaran Sivarasa ஆகஸ்ட் 30, 2018 தனது முகநூல் பதிவில் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளியிட்டிருந்தார், “இப்பொழுது வன்னிக் கிணறுகள் பலவற்றில் நீரில்லை. அந்தளவுக்குக் கடுமையான நீர்ப்பற்றாக்குறையும் வரட்சியும். வான்பயிர்களே வாடுகின்றன. இதற்குக் காரணம், நிலத்தடி நீர்ச்சேகரிப்பில்லை. நிலத்தடி நீரைச் சேகரிக்க முடியாமைக்குக் காரணம் அதற்கான பொறிமுறைகள் இல்லை. சனத்தொகை அதிகரிக்கும்போது குடிப்பரம்பல் விரிவடையும். குடிப்பரம்பல் விரிவடைய விரிவடைய நீர்ச்சேகரிப்பு மையங்களும் அதிகரிக்க வேணும். ஆனால், இங்கே நடந்தது என்னவென்றால்,  வரவரக் குளங்களின் தொகை குறைந்து கொண்டிருப்பதுவே. பல குளங்களை அழித்து, மண் நிரப்பி, அவற்றைக் குடியிருப்பாக்கியாச்சு. இதைச் செய்தவர்களில் பலரும் படித்தவர்கள். செல்வாக்குள்ளவர்கள். இது பெருந்தவறு. இதற்கு உடந்தையாக இருந்தது அரச நிர்வாகம். இது ஆகப் பெரிய தவறு. குளங்களைத் தூர்வாரிய காலம்போய், அவற்றை மூடிக் குடியிருக்கும் காலம் வந்ததே. அதனோடு வந்ததே வரட்சி. யாரை நோவோம். யார்க்கெடுத்துரைப்போம்?”

முல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்களுடன், மிகக் குறைவான செறிவுடனே குடியேறும் சிங்கள மக்கள் முல்லைத்தீவில் மிகச்செறிவாக வாழும் தமிழ் மக்களுக்கு என்ன இடையூறு விளைவிப்பார்கள். முல்லைத்தீவில் நீர்வளம் குன்றிப் போயுள்ளது. சில பாகங்களில் நிலத்தில் மண்ணின்றி மணலேயுள்ளது. நிலங்கள் சாதாரண வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கும் இசைவாக இல்லை. நிலத்தடி நீரின்றி கிணறுகள் வற்றிப் போகின்றன. சாதாரண குழாய் கிணறுகளுக்குப் போதிய ஆழத்தில் நிலத்தடி நீரில்லை. மக்களுக்கும் நீரில்லை, கால்நடைகளுக்கும் நீரில்லை, தாவரங்களுக்கும் நீரில்லை. அநேகரது குடும்பத்தில் ஒருவராவது சிறுநீரகம் பாதிப்புற்ற நிலையில் சிகிச்சை பெறுவதற்கு இலட்சக்கணக்கில் செலவிற்காக முகநூலில் புலம்பெயர்ந்தோரிடம் கோரிய வண்ணம்  உள்ளனர். அண்மையில் பெருஞ்செலவில்  135 அடி ஆழத்தில் குழாய்க்கிணறு புலம்பெயர்ந்தோர் உதவியுடன் முல்லைத்தீவில்  குடிநீர் தேவையை ஈடுசெய்ய அமைக்கப்பட்டது.  நிலத்தடி நீருக்கு, நிலமட்ட நீர் தேவை. நிலமட்ட நீர் சேர்க்க இருந்த குளங்கள் புதுப்பிக்கப்படாமல், மூடி நிரவப்பட்டு வீடுகளும், கட்டிடங்களும் அவற்றின் மேல் கட்டப்பட்டு விட்டன. இவற்றை கொண்டு நடத்துபவர் வசதி படைத்தோரும், அரசியல்வாதிகளும், அவற்றிற்கு அனுமதி வழங்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுமே. நிலமட்ட நீர் அனைத்தையும் முடக்கியதும் மழை வீழ்ச்சியும் குறைந்துவிடும், நிலத்தடி நீர் சேகரிப்பும் நடைபெறாது. தொடர்ந்த வரட்சியையும், நீர் பற்றாக்குறையினையும் மக்கள் எதிர்நோக்க வேண்டியதாகும். முல்லைத்தீவு மக்கள் தம்மிடம் தாமே கேட்டுக் கொள்ள வேண்டியது, ஒரு சில தம்மைப் போன்ற சிங்கள மக்களுடன் வாழ்ந்து, தமது பிரதேசத்தைப் பரிணமிக்கச் செய்து தாமும் பயனடைந்து வாழ்ந்து, வளமிக்க பூமியை எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரும்புவார்களா அல்லது தாமும் பயன் பெறாது, ஒரு வரண்ட பூமியை விட்டுச் சென்று எதிர்காலச் சந்ததியினரின் சாபத்திற்கு உள்ளாக இசைவார்களா? என்பதுதான்.

முல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்குத் தேவையான நிலமட்ட நீரும், நிலத்தடி நீரும் மகாவலித் திட்டத்தால் வந்தடைவது, அவர்களுக்குக் கிடைக்கும் அரிய பொக்கிஷம். தமது சுயலாபங்களுக்காக அதைத் தடை செய்பவரான பிறர் சொல் கேட்டு, இத்திட்டத்தை உதாசீனம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரசியல்வாதிகள் தமது வாக்கு பலம் குறைந்துவிடும் என்று அஞ்சுகின்றனர். மதத் தலைவர் தமது மதத்தின் செல்வாக்கிற்கு இடையூறு வந்துவிடும் என்று பயப்படுகின்றனர். அவற்றை மறைத்து மக்களுக்கு சிங்களக் குடியேற்றம் பயங்கரமானது எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர். இந்தப் பயங்காட்டுபவர்கள் அங்குள்ள பொதுமக்களைப் போல் நீருக்காகத் தவிப்பவர் அல்லர். அவர்கள் தமது நிரந்தர வாழ்விடங்களில் சகல வசதிகளுடனும் வாழ்பவர்கள். இந்த ஏமாற்றுக்காரருடன் அரசியல் செய்வதைவிட இனக்குரோதமற்ற, தம்மைப் போன்ற தேவைகளுடன் உள்ள, அப்பாவி சிங்கள மக்களுடன் கூடி வாழலாம். அதனால் பயனும் அடைவார்கள். தமிழ் அரசியல்வாதிகள், சிங்கள அரசியல்வாதிகளுடன் கூட்டாக விருந்துண்ணலாம், அவர்களிடம் சலுகைகளைப் பெறலாம், ஏன் உறவு முறைகள் கூட பகிர்ந்து கொள்ளலாம், ஆனால்  சாதாரணப் பிரஜைகள் தமது அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய ஒன்றாக வாழக் கூடாது என்பது எந்தவிதத்திலும் நியாயமில்லாத கோரிக்கை. முல்லைத்தீவு மக்கள் அரசியல்வாதிகளையும், மதத்தலைவர்களையும் ஒதுக்கிவிட்டு, மகாவலித்திட்டம் வேண்டும் என்று அடித்துக்  கூறி, தமது நிபந்தனைகளை தாமே முன்வைக்க வேண்டும்.

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் உயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவரும் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் பற்றிப் படித்தோம். ஏழைத் தமிழன் குடும்பத்து நிலை கண்டு, இணைந்து செயற்பட்ட நிகழ்ச்சி இது. ஒன்றாக இறக்கலாம், ஒன்றாகப் புதைக்கலாம் என்றால், ஏழைமக்கள் ஒன்றாக நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி  வாழ முடியும்.

நண்பர் Vijaya Baskaran தனது பதிவில் 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்த காலமுதல் எவ்வாறு வன்னியிலும் வசதி படைத்த தமிழர் நிலங்களைத் தமக்குள் பங்கிட்டு, நிலமற்ற ஏழைகளுக்கு எதுவும் அளிக்காதது பற்றியும் எழுதியிருந்தார்.

மேலும் Vijaya Baskaran தனது பதிவில் அம்பாறை, கந்தளாய் திட்டங்களால் தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய போதும், அன்றைய காலங்களில் காணி அதிகாரம் அரச அதிபர், பிரிவுக் காரியாதிகாரி, மாவட்டக் காணி அதிகாரிகளிடமே இருந்தது எனவும் இந்தக் குடியேற்றங்களில் தமிழர்களுக்கும் பங்குகள் கிடைத்தன என்றும் கூறுகிறார். அன்றைய காலங்களில் கிழக்குத் தமிழர்கள் போதியளவு நிலவளங்களோடு வாழ்ந்ததனால், இந்தக் குடியேற்றங்களில் அக்கறை கொள்ளவில்லை எனவும், அங்கே குடியேற்ற தகுதியான மக்களை தமிழ்அரசியல்வாதிகள் தேடவில்லை எனவும், இப்பொழுதும் அம்பாறை, திருகோணமலையில் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லை என்பதையும் தெரிவிக்கிறார். இன்றளவும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த மக்கள் பற்றிய கரிசனை இல்லாமல் இருப்பவர்கள் என்பதை எடுத்துக் காட்டி, தவறுகள் யாருடையது எனக் கேட்கிறார்.

அத்துடன் Vijaya Baskaran தனது பதிவில் 1977 இல் இலங்கையில் தமிழர்கள் தொகை 35 இலட்சம், அதில் 20 இலட்சம் வடகிழக்கு தவிர்ந்த தென் பகுதிகளில் வாழ்ந்தார்கள், மீதி 15 இலட்சம் இதில் பத்து இலட்சம் தமிழர்கள் குடாநாட்டில் வாழ்ந்தார்கள், மீதமுள்ள 5 லட்சம் மக்கள் வன்னி, மன்னார் மற்றும் கிழக்குப்பகுதியில் வாழ்ந்தார்கள் என்கிறார். அந்த 5 லட்சம் மக்களை வைத்துக்கொண்டு எவ்வாறு வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்? எனக் கேட்கிறார்.

அன்றைய கல்லோயா, கந்தளாய் திட்டங்கள் தொடங்கி இன்றுவரை சிங்கள அரசியல்வாதிகள் நிலமற்ற ஏழைகளுக்கே காணிகளை வழங்குகிறார்கள். அன்று வடக்கு யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலரிடம் காணிகள் இன்றி, வறுமையானவர்களாகவே வாழ்ந்தார்கள் என்றும், இவர்களை இந்தப் பகுதிகளில் குடியேற்றி இருந்தால் இன்று பூர்வீக நிலவளம் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்றும், இன்றைய யாழ்பாண மக்கள் நெருக்கடி குறைந்திருக்கும் தனது கருத்தினை Vijaya Baskaran தெரிவித்திருந்தார்.   இங்குதான் தேசியம், சமஷ்டி கோரும் தமிழ் அரசியல்வாதிகளின் தந்திர புத்தி என்பது எனது கருத்து. தமது வாக்குகள் பலத்தை சிதறடிக்கவிடாது காப்பாற்றுவதும், இனவாதத்தை தமிழரிடையே தூண்டிவிடுவதுமான செயல்களை மிகவும் நாசூக்காக செய்து கொண்டு வந்தனர். இன்னும் தொடர்கின்றனர்.  

தமிழ்அரசியல்வாதிகளின் இத்தன்மையை 1972 இல் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை, தென்னமரவாடி பகுதிகளை அரசாங்கம் அனுராதபுரத்தோடு இணைத்தபோது தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்துப் போராடாதது புல்மோட்டை இஸ்லாமியர்கள் செறிவாக வாழுமிடம் என்பதாலும், அவர்கள் வாக்குப் தமக்கு சேராது எனக் கருதியதாலும், மேலும் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் கவலைப்படவுமில்லை என்று கூறி Vijaya Baskaran தெளிவுபடுத்தினார். ஏற்கனவே புல்மோட்டை இணைப்பால் வடக்கும் கிழக்கும் நிலப்பரப்பு துண்டாடப்பட்டு விட்டது, இதை மறுபடி இணைப்பதற்கு போராடாமல் குறுக்கே நிற்பது மதவாதமும், அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை என்பதுவேயாகும் என்றும் கூறுகிறார்.

நண்பர் Vijaya Baskaran இன் கணிப்பின்படி 1977 இலிலேயே ஐந்து லட்சம் தமிழ் மக்கள் வன்னி மற்றும் கிழக்கில் வாழந்தார்கள் என்றால் 1948-50 களில் தமிழர் தொகை குறைவாகவே இருந்திருக்கும். அதன்படி இலங்கை சனத்தொகையில் பத்து சதவீத தமிழர்களின் கையில் 29 சதவீத நிலம் இருந்திருக்கிறது. இவர்களால் 29 சதவீத நிலத்தையும் தக்க வைப்பது சாத்தியமும் இல்லை, அதற்கான திட்டங்கள் தமிழ் அரசியல்வாதிகளிடமும் இல்லை என்கிறார். ஆனால் அந்த அரசியல்வாதிகள் இதை வைத்து இனவாத தீயை மூட்டி,  ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள் என்கிறார்.

மேலும் நக்கீரன் தனது பதிவில் 1984 இல் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும் வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் எனவும் சிங்கள இராணுவம் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியது என்றும் வெளியேற்றப்பட்ட கிராமங்கள், குடும்பங்கள் எண்ணிக்கை அனைத்தையும் பட்டியல்  போட்டுத் தந்திருந்தார். இவற்றைவிட ஒவ்வொன்றும் 1000 ஏக்கர் கொண்ட பின்வரும் 14 குத்தகைக் காணிகளில் (99 ஆண்டுக் குத்தகை) குடியிருந்த தமிழ்க் குடும்பங்களும் பெரும்பாலும் மலையகத் தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டன. இந்தக் காணிகள் சொந்தக்காரர்களால் பெரிய பொருட் செலவில் மேம்படுத்தப் பட்டு அதில் கமம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறி, 14 பெயர்களைப் பட்டியலிட்டு அவர்கள் பொலிஸ் அதிபரால் விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இது பற்றிய எனது கருத்து யாழ்குடா நாட்டை அடியாகக் கொண்ட பல தமிழருக்கு நெருடலாகவும், ஆத்திரமாகவும் இருக்கும். நக்கீரன் அவர்கள் மேலே கூறியது 1983ம் ஆண்டு சிறீலங்காவில் நடந்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து 1984 ம் ஆண்டு நடந்த நிகழ்வாகக் கருதலாம்.

ஆகவே இந்த விபரம் இப்போது சிங்களக் குடியேற்றத்தைத் தவிர்க்கவும், ஜெனீவா, சுவிற்ஸலாந்தில் சிறீ லங்கா அரசுக்கு எதிராக கேஸ் ஃபைல் பண்ண, புள்ளிகள் சேர்க்க (points score) இழுத்து விடப்படும் சங்கதியே. பெரும்பான்மை யாழ் குடாநாட்டு அடியினரால் கோரப்படும் தேசியவாதம் அவ் அப்பாவி வவுனியா, முல்லைத்தீவு மக்கள் மேல் கொண்ட அக்கறையுடனான, கரிசனை அல்ல என்பதே எனது கருத்து.

முல்லைத்தீவிற்கு தற்போதைய நீர்வளப் பற்றாக்குறை நிலையில் மகாவலி திட்டம் அவசியமானது. மகாவலியில் போதிய நீர் உண்டா? இல்லையா? என்பது திட்டம் சார்ந்து செயற்படுபவர்கள் தீர்மானிக்க வேண்டியது. அரசியல்வாதிகள், மதவாதிகளின் இடையூறு இல்லாவிடின் முல்லைத்தீவிற்கு மகாவலித் திட்டம் சாத்தியமாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.