வாசகர் கடிதங்கள் சில.From: Siva Ananthan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்." <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Tuesday, July 24, 2018 2:14 PM
Subject: 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.....

ஐயா, தங்களுடைய மேற்படி கட்டுரை வாசித்தேன். அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பின்னூட்டங்களுக்கு அங்கே இடமில்லை. காரணம் என்ன?
ஆயினும் ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
1983 இல் நடந்தது இனக்கலவரம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். அது தவறென்பது என் கருத்து. கலவரம் அல்லது Riot என்றால் இரு பகுதியினர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது. 83 இல் நடந்தது தமிழரைச் சிங்களக் காடையர் கொலை செய்து கொள்ளையடித்தமை. அது இனக்கலவரம் அல்ல. இனப் படுகொலை அல்லது தமிழரின் படுகொலை. அதை அவ்வாறு கூற நாமே ஏன் தயங்குகின்றோம் என்று புரியவில்லை.
நன்றி.
அன்புடன்,
ஆனந்தன்.

வணக்கம் ஆனந்தன்,கலவரம் என்பது சமூகச்சீர்குலைவு அல்லது சீரழிவு. இதனை ஒரு குழு வன்முறையின் மூலம் அதிகாரிகளுக்கு எதிராக, உடமைகளுக்கு எதிராக மற்றும் மக்களுக்கு எதிராகப் புரியும் சீரழிவுச் செயல் என்றும் கூறலாம். 1983, 1977 மற்றும் 1958 போன்ற ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள இனத்துவேசிகளால் புரியப்பட்ட படுகொலைகள், உடமை அழிப்புகள், பாலியல் வன்முறைகள் எல்லாவற்றையும் எவ்விதம் அழைப்பது?

சிங்களக் காடையர்களின் குழுக்கள் மூலம் தமிழ் மக்கள் மீதும், அவர்கள்தம் உடமைகள் மீதும் புரியப்பட்ட வன்முறை. இதனை இனவன்முறை , இனக்கலவரம் என்று அழைப்பதில் எவ்விதத்தவறுமில்லை. இனக்கலவரம் என்பது பொதுவான சொல். இனக்கலவரத்தின் இன்னுமோர் வடிவமே இனப்படுகொலை (Genocide)  . இனக்கலவரம் என்னும்போது சம்பந்தப்பட்ட இனங்கள் ஒருவருடன் ஒருவர் மோதினால் மட்டுமே இனக்கலவரம் என்பதில்லை. ஓரினக் குழு இன்னுமொரு குழுவின் மீது வன்முறையினைப் பாவித்து அழிவு நடவடிக்கைகளைச் செய்தாலும் அதுவும் இனக்கலவரமே.

இலங்கையில் 1983இல் நடைபெற்ற தமிழ் மக்களுக்கெதிரான வன்முறையின்போது, அப்போது ஆட்சியிலிருந்த இனத்துவேசம் மிக்க அமைச்சர்கள் சிலரால் திட்டமிடப்பட்டு அவர்கள்தம் காடையர்கள் குழுக்களால் நாட்டின் தென்பகுதிகளிலிருந்த தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளை, அவை அரசியல்வாதிகள் அல்லது  படையினரின் முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கைகள் என ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கலாம். குறிப்பிட்ட இன மக்களின் ஒரு பகுதியினர் மீது திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட அவர்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்ட இனரீதியிலான வன்முறை என்பதால் அதனை இனப்படுகொலை வரைவிலக்கணத்தின்படி இனப்படுகொலை (Genocide)  எனவும் கூறலாம். Pogrom எனவும் கூறலாம். ஆனால் இவையெல்லாமே இனவன்முறை, இனக்கலவரம்தாம் என்று கூறுவதும் தவறில்லை. இனக்கலவரம் அல்லது இனவன்முறை என்று கூறுவது உலகம் முழுவதும் வழக்கிலுள்ள சொற்றொடர். இவ்விதம் எழுதுவதற்கு சட்டரீதியிலான் ஆதாரங்கள் எவையும் பாவிக்கப்படும் மொழியைப் பொறுத்துத் தேவையில்லை. ஆனால் இனப்படுகொலை என்று கூறுவதற்குச் சர்வதேசச்சட்டரீதியாகப்பல விடயங்களை நிரூபிக்க வேண்டியுள்ளது. எனவேதான் ஊடகங்கள் பொதுவாக இனக்கலவரம் அல்லது இனவன்முறை என்னும் பதங்களைப்பாவிக்கின்றன. 1983 இனவன்முறை அல்லது 1983 இனக்கலவரம் என்று கூறுவதால் அக்கலவரத்தின் உண்மைத்தன்மை எவ்விதத்திலும் நீர்த்துப்போய்விடுவதில்லை.