1. மௌனம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மழையை ஏந்திய இலையிலிருந்து

மெதுவாகக்கீழிறங்குகிறது மழைத்துளியொன்று

எண்ணெய்வாசனை கமழும் சமையலறை  தயாராகிறது

நாவின் மொட்டுக்களைத்தூண்டும்

செம்மண் தோட்டத்துக் கத்தரி

கிண்ணங்களில் அடங்குகின்றது

முத்துக்களெனத் திரண்ட மல்லிகை மொட்டுக்களை

நிமிடத்தில் கட்டி முடித்துவிடும் விரல்களின்

களி நடனம் மிளிர்கிறது

இணையின் பெயரை அழகாக உச்சரிக்கும் இதழ்களுக்குள்

உமை விடுபட்டு விடுகிறாள் அவ்வப்போது

அர்த்தநாரி இழந்துபோக

சிவனின் தாண்டவம்

சிந்தையில் செங்கொடி படர்ந்த நாட்களில்

படிந்த நிழல்

சித்தன்ன வாசல் ஓவியமாய்ப் பூத்திருக்கிறது

விழி நோக்கி

உன் பேச்சு அதிகமென்று

வேலியிட்ட மணித்துளிகளில்

பொங்கியெழும் பேரலயென மேலெழுந்து அடங்கும் மனம்

ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக்கொள்கிறது

மௌனத்தினுள் காளியின் நீண்ட நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது

சிந்தும் இரத்தத்துளிகளுடன்.

 

2. ஒழிந்து போனவள்


உக்கிரமாகப் பாய்ந்த சூரியனின் ஒளிக்கதிர்கள்

வேகத்தைக்குறைத்துக்கொள்கின்றன

மதியம் கடந்து கொண்டிருக்கிறது

மெதுவாக

முகடுகளும் நீர்ச்சுழிகளும்

உடலில் மையங்கொள்ளக் கொள்ள

குருதி பாய்கிறது வெளியெங்கும்

அடைகாக்க முடியாத சிறுமி

மஞ்சள் சிவப்பு எனச்சாயம் பாய்ந்து

ஒளியிழந்து நிறங்களுக்குள்

காணாமல் போகிறாள்.

 

3. கூர்வாள்

பொங்கி வருகிறது நதியின் பிரவாகம்

காற்றில் அலைய வரும் கூந்தலில்

நட்சத்திரங்களைச் சூடியிருக்கிறாள்

தோளில் படியும் விரல்களில்

அன்பின் வன்மையை உணர்கிறேன்

எவரும் அறியாத கோடுஒன்றைச் செதுக்கியிருக்கிறாள்

அவளைத்தொட்டுவிட முடியாத

எல்லைக்கோடது

தாண்ட நினைத்த மாத்திரத்தில்

கூர்வாளென உருமாறி நகைக்கிறது.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.