கவிதை வாசிப்போம் வாருங்கள்!

வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

பாலா,

எங்களையெல்லாம் விட்டு

திடீரென பிரிந்துவிட்டீரே.....!

இதுவென்ன கொடுமை.....?

நாங்கள் என்ன குறை செய்தோம்......?

பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு

இரண்டு நாட்களுக்கு

முன்புதானே கொண்டாடினீர்.........?

நேற்று இருந்தோர்

இன்றில்லை என்ற கதையாகிப்போனதே..........!

 

கிள்ளான் வாசகர் எழுத்தாளர் இயக்கம்

இந்நாட்டு இலக்கியவாதிகளின்

அரவணைப்பு இல்லம்

அவ்வில்லத்தின் வரவேற்பு மன்னன்

அமுது படைக்கும் கலங்கமில்லா ஆத்மா நீ..........!

 

அரசு நகர்வலத்தில்

உன்னை அடையாளம் கண்டது போல்

இந்நாட்டு இலக்கியவாதிகள்

கனவிலும் வேறு யாரையும்

கண்டதில்லை............!

 

எழுத்தைவிட எழுத்தாளனை

அதிகம் நேசித்தவன் நீ

படைப்பாளியின் உள்ளம் அறிந்து

உதவிடும் கருணையாளன் நீயன்றோ...........!

 

 

எழுத்துலகில்

பண்முகம் படைத்து

மக்களைப் பரவசமாக்கிய

அற்புதக் கலைஞன் நீ

இன்முகம் காட்டி குழந்தையும்

வசிகரிக்கும் மாயம் யாருக்கு வரும்.......!

 

வாழும் காலத்தில்

நல்லது செய்யும் குணம் உனக்கு

தலைமையேற்ற இயக்கத்துக்கும்தான்

துவண்டு போன எத்தனையோ

எழுத்தாளர்களுக்கு நம்பிக்கை

ஒளியேற்றி ஊக்கமாய்

நடமாடவிட்டு அழகு பார்த்தவன்

பாதியிலேயே சென்றாயே

எத்தனை எழுத்தாளர்கள்

மகுடம் சூட்டாமலே

விதி பிதுங்கிப் போனார்கள்.........!

 

இயக்கமும் குடும்பமும் என்றால்

இயக்கத்துக்கு முதலிடம் தந்தே

இலக்கியம் செழிக்க நாடு முழுவதும்

வண்டாய்ச் சுற்றி வந்தாய்

ஆங்காங்கே இலக்கிய வட்டம்

பிறப்பெடுக்க வழி சொன்னாய்

நீண்ட வரிசையில் நிற்கும்

இயக்கங்கள் இனி

உன் பெயரைச் சொல்லித்தான்

செயலில் இறங்கும்..........!

இந்நாட்டு இலக்கியத்தில்

உன் பெயர் நிலைக்கும்

‘எஸ்.எம்.எஸ். கிங்’ என்றே

நினைவில் நிற்பாய்

புனிதமான உன் ஆத்மா சாந்தி பெறட்டும்

பாலகோபாலன் நம்பியார் என்றும்

நம்மோடு வாழட்டும்

அவரது குடும்பத்தாருக்கு

ஆழ்ந்த இரங்கலைச் சொல்வோம்............!

9.5.2015

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.