- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்
தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது
அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்
அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது
ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது
அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி
ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்
அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்
ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்
அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !
நீரில்லா நிலையினிலே நிலம்வரண்டு வீணாகும்
போர்வந்து சேர்ந்துவிடின் பொலிவெல்லாம் மறைந்தொழியும்
பார்செழிக்க வேண்டுமெனில் பரந்தமனம் எழவேண்டும்
ஊரழிக்கும் நினைப்பொழிந்தால் உலகவளம் உயிர்த்துவிடும் !

குண்டுமழை பொழிவதனால் குடிதண்ணீர் பாழாகும்
குடிதண்ணீர் இல்லையெனில் குடிகள்நிலை என்னாகும்
வளங்கொழிக்கும் வயலனைத்தும் வரண்டவனம் போலாகும்
நிலமிருக்கும் மாந்தர்நிலை நினைப்பதற்கே பயமாகும் !

காடுகள் அழியும் களனிகளும் சேதமுறும்
மாடுமனை அத்தனையும் மண்ணுக்குள் மாய்ந்துவிடும்
கேடுநிறை அத்தனையும் கிடுகிடென வந்துவிடும்
நாடுகின்ற ஆராய்ச்சி நல்வழியை மறந்துவிட்டால் !

ஆணவத்தின் வசத்துக்கு ஆராய்ச்சி ஆள்பட்டால்
அகிலத்தின் துன்பமெலாம் அப்பக்கம் தெரியாது
ஆக்கத்தின் பக்கமாய் ஆராய்ச்சி அமைவதுதான்
அகிலத்தில் வெளிச்சம்வர அருந்துணையாய் அமையுமன்றோ !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.