-    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

புத்தாண்டே    நீ    வருக
புத்துணர்வை  நீ  தருக
நித்தமும்   நாம்   மகிழ்ந்திருக்க
நிம்மதியை  நீ   தருக
சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
சுப ஆண்டாய்  நீவருக
எம்தமிழர் வாழ்வில் என்றும்
இன்பம்  பொங்க  நீவருக

வாருங்கள்   என   அழைத்து
வரும்  மக்கள்  வரவேற்கும்
சீர்  நிறைந்த நாட்டிலிப்போ
சீர்  அழிந்து நிற்கிறது
யார்  வருவார்  சீர்திருத்த
எனும் நிலையே  இருக்கிறது
நீ வந்து புத்தாண்டே
நிலை  திருத்தி  வைத்துவிடு

 

ஆட்சி    பீடம்  ஏறுகின்றார்
அறம்  வெறுத்து   ஒதுக்குகிறார்
ஆட்சி  பீடம்  அமரச்செய்தார்
அல்லல்  பட்டே  உழலுகிறார்
அறம்  வெறுத்து  நிற்பவர்கள்
அறம்  பற்றி  உணர்வதற்கு
திறல் உடைய மருந்துடனே
நீ    வருவாய்   புத்தாண்டே

மதம்  என்னும்  பெயராலும்
இனம்  என்னும்  பெயராலும்
மனித  உயிர்  மாய்க்கின்ற
மாண்பற்ற செயல் ஆற்றும்
ஈனத்  தனம்  மிக்கோர்க்கு 
இரக்கம் பற்றி உணர்த்துதற்கு
இரண்டு ஆயிரத்து பத்தொன்பதே
எழுந்து  வா  எழுச்சியுடன்

நல்ல  வல்ல   தலைவர்கள்
நமை  விட்டுச்  சென்றுவிட்டார்
நல்ல பல  செய்திவந்தும்
நம்மில்  பலர்  திருந்தவில்லை
சொல்ல வல்ல வாழ்க்கையினை
எல்லோரும் வாழ்ந்து  நிற்க
வல்ல ஒரு ஆண்டாக
மலர்ந்து விடு புத்தாண்டே

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..a