வெறி   கொண்டு    அலைகின்ற 
நெறி  பிறழ்ந்த  கூட்டமதால்
கறை   படியும்  காரியங்கள்
கண்  முன்னே  நடக்கிறது
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் என்னாளும்
கதி  கலங்கிப்   போகின்றார்   !

மதம்  என்னும்  பெயராலே
மதம் ஏற்றி  நிற்கின்றார்
சினம்  என்னும் பேயதனை
சிந்தை கொள  வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி  உற்று  திரிகின்றார்  !

மொழியுணர்வை மத உணர்வை
இன உணர்வை அழிக்கின்றார்
பழிதீர்க்கும் வெறி உணர்வை
பாடம்  என புகட்டுகிறார்
கொன்று விட்டால் சுவர்க்கமென
கொள்கை தனை பரப்புமவர்
கொன் றெழிக்கும் பாங்கினிலே
கோர நடம் ஆடுகிறார்     !

வெறி கொண்டார் நெறிதிரும்ப
வேண்டி  நிற்போம் இறைவனிடம்
நெறி பிறழ்து போவாரை
வழி மாற்ற  முனைந்திடுவோம்
வள்ளுவனார்  ஆழ் கருத்தை
உள்ள எல்லாம் பதித்திடுவோம்
நல் இணக்கம் சமாதானம்
நாட்டில் ஓங்கச்  செய்திடுவோம்  !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.