ஶ்ரீராம் விக்னேஷ்“பஞ்சத்தில்   உழன்று  :  பட்டினி   கிடந்தாலும்….
பட்டதாரி  ஆக்கிப்  :  பார்க்க வேண்டும்  தம்மகனை….”
நெஞ்சத்தில்  நினைப்போடு  :  நிறையப்   பெற்றோர்கள்,
நெருக்கடிகளைச்  சுமந்து  :  நேரகாலத்  தையும்மறந்து ….,

பட்டணம்  அனுப்பிவைத்துப் :  பட்டதாரி  ஆக்கிவிட்டு,
பட்டயம்  பெற்றதனைப்  :  படம்பிடித்து  மாட்டிவைத்து,
தொட்டதனைப்   பார்ப்பதிலே  :  சுகமொன்றைக்  கண்டுவிடும்,     
பெற்றோர்க்கும்  பிள்ளைகட்கும்  :  இக்கவிதை  சமர்ப்பணமாம் !

பட்டம் பெறுவதில்தான் :  பற்றெல்லாம்  இருந்ததனால்,
பழகியே  எத்தொழிலும்  :  பார்ப்பதற்கு  வாய்ப்பு  இன்றிப்,
பாவம்  இவன் நிலைமை  :  பயனற்ற  அலைச்சலிலே…….
பணிகள்   பலதேடிப்   :  படியேறி  இறங்குகின்றான்…..!

ஒரு ரூபாச்  சீட்டினிலே  :  ஒரு  லட்சம்  கனவுகாணும்….
உருப்படார்  வரிசையிலே :  உள்ளபடி  இவனும் ஒன்று !
“உனக்கும்  கீழுள்ளோர் : ஒருகோடி  என அவரை,
நினைத்துப் பார்   அதிலே :  நிம்மதியை  நாடு”  என்று….,

செப்பிய  கவிஞர்  தன் : சிந்தனை  வரிகளை….
திருப்பியே  பார்த் துணர்ந்து : திருந்தியே  கொள்ளுங்கள் !
“உனக்கும்  முன்னே : உள்ளவர்  பலரே….
உத்தியோகம்  பெற்றோர் : ஒருவர்  சிலரே….! ”

என்கின்ற  உண்மையை : ஏற்றிட  மறுத்தே,
இன்னும்  வாழ்க்கையை :  இழந்திட  வேண்டாம் !
பட்டம்  பெறுவதும் : படிப்பில்  உழல்வதும்,
“பாபச்  செயல்” என்று பகர்ந்திட  வில்லை !

”பட்டதாரி  ஆவதால் : பலமான  மதிப்பும்,
கிட்டுமே  உத்யோகம் : உயர்வும்  வருமென்று…..”
முட்டாள்  தனமாய் : முடிவினி  வேண்டா……
முறையாய்  தொழில்கற்று : முன்னேற்றம்  பெற்றால்……,

கையிலே  திறமையும் : கனமான  தொழிலுமே,
வையகம்  வாழ்த்தும் : வசமான  பட்டங்கள்….!
பொய்யான  வாழ்க்கைக்கும் : பொருளற்ற  பட்டத்துக்கும்,
மெய்யதனை  வருத்தியே : மெலிவைத்தான்  காணாதீர் !

பொய்யாலும்  புரட்டாலும் :  புழுத்துப்போன  லஞ்சத்தாலும்,
ஐயாமார்  வாழ்கின்றார் : அரசு  உத்யோகத்தில்…..!
உச்சத்து  மதிப்பென்று : உள்ளூர  நினைத்தாலும்,
பிச்சைக்கார  வாழ்க்கையைத்தான் : பெரும்பாலோர்  வாழ்கின்றார் !

எளியோர்தம்  வயிறெரிய  :  ஈனத்  தனமாக
இலஞ்சம்  பெறுவதில்தான் : இவர் வாழ்க்கை  நகர்கிறது !
பாட்டாளிகள்  சிந்தும் : பச்சை  வியர்வையில்தான்,
பாவிஇவர்  வீட்டுணவுப் :  பண்டமே  ருசிக்கிறது !

பாமரரின்  ரத்தத்தைப் : பகிர்ந்தே  குடிப்பதில்தான்,
பாழ்படுவார்  இவர்தமது : பக்குவமே  தெரிகிறது !
பட்டணத்தில்  கற்றுப் : பட்டம்  பெற்றதெல்லாம்,
பாபத்துக்குத்  துணைபோகும் : பட்டாக்கத்தி  ஆகிறது !

குப்பையைக்  கிளறிவிடக் : குவிவதுவோ  துர்நாற்றம் !
இப்படித்தான்  இவர்கதையும் : எல்லாமே  படுமோசம் !!
உள்ளபடி  சிந்தித்து : உறுதியாய்  முடிவெடுப்பீர்….
ஊருலகில்  நடப்பதனை : ஒருகணம்  நினைத்திடுவீர் !

உத்தியோக  எண்ணத்தில் : உயர்படிப்பைப்  படிக்காதீர்!
உள்ளபடி  கைத்தொழிலில் : ஒன்றைத்  தெரிந்திடுவீர் !!
காகிதப் பூ  செய்வதிலே : காலத்தைக்  கழிக்காதீர்….!
மல்லிகைச்  செடிவளர்க்க : மண்ணைத்  தயார்செய்வீர்…..!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.