எளிய மக்கள் வரலாறு - மக்கள் மொழி என்பவை பற்றிய நோக்கில் நடுகல் கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகளை விளங்கச் செய்வதே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கம். நடுகற்கள் குறித்த அறிமுக உரை ' தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ' என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரையாக வரையப்பட்டுவிட்டது. அதன் இரண்டாம் பகுதியே இக்கட்டுரை. தமிழ முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. நடுகல் கல்வெட்டுகளில் சிறப்பாக ஆளப்பட்டு உள்ள மருமக்கள் > மருமகன், மக்கள் > மகன், சேவகன், அடியான் ஆகிய சொற்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ள படைவீரர்களைக் குறிக்கின்றன. ஒரு வேந்தனுக்கு அவன் தனியாகப் பேணுகிற நிலைப் படை (Reserve Army) தவிர படை உதவிகள் அவனுக்கு அடங்கிய மாமன்னர், மன்னர் ஆகியோரிடம் இருந்தே வந்தன. ஆதலால் ஒரு வேந்தனுக்கு மன்னன் எனபவன் படைத்தலைவன் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டான். அவ்வாறே ஒரு மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்ற பல சிற்றரசர் அவனுக்கு படைத் தலைவர் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டனர். ஒரு சிற்றரசனுக்குக் கீழ் இருந்த வேள், கிழான் எனும் ஊர்த் தலைவன் படைத்தலைவன் ஆவதால் மகன், சேவகன் எனப்பட்டான். ஈண்டு, வேந்தன் குலோத்துங்கனுக்கு பல்லவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாய் இருந்ததை எண்ணுக.

ஒரு வேந்தனுடைய வெற்றியைத் தீர்மானிகக அவன் உடைய நிலைப்படை மட்டும் அல்லாது மன்னர், சிற்றரசர், வேள், கிழார்கள் நல்கும் துணைப்படை உதவியும் இன்றியமையாத இடம் பெற்று இருந்தது. இதனால் வேந்தனுடைய ஆட்சிப் பரப்பில் அடங்கிய நிலம் ஊர், நாடு, கோட்டம், மண்டலம் என பிரிக்கப்பட்டு முறையே கிழார்கள், வேள், சிற்றரசர், மன்னர் அல்லது மாமன்னர் என்போரால் ஆளப்பட்டன. இவர்கள் தத்தம் நிலைக்குத் தக்கவாறு தம் படைக்கு ஆள் சேர்த்து பயிற்சி அளித்தும், படையை ஒழுங்கமைத்தும், பேணியும் வரவேண்டும் என்பது பொறுப்பு. இப்பொறுப்பிற்காக இவர்களுக்கு வேந்தனோ மாமன்னனோ பணம் ஒதுக்குவதில்லை மாறாக இவர்கள் ஆளும் பகுதியில் வரி திரட்டி அதில் ஒரு பங்கைத் தம் படைப் பேணலுக்குச் செலவிட்டு இன்னொரு பங்கைக் கப்பமாகத் தன் மேல்ஆட்சியாளனுக்கு செலுத்த வேண்டும் என்பது ஒரு வழிவழி உடன்பாடு.

எனவே நிலமும் கப்பத் தொகையும் படைப் பேணலுக்கு ஒரு முகாமையான பங்கைப் பெற்றிருந்தன என்பது தெளிவு. இதில் முறண் ஏற்படும் போது மேலாட்சியாளன் தூண்டுதலில் கீழ் உள்ள இரு அதிகார நிலையினர் இடையே போர் மூளுகின்றது. அதே நேரம் வெளியே இருந்தும் பிற வேந்தரால் போர் திணிக்கப்படுவதும் உண்டு. நிலக்கட்டுப்பாடு ஆதிக்கமே பெரும்பால் போருக்கு வழிகோளின எனலாம். ஏனெனில் அதுவே படைக்கு வேண்டிய செல்வத்தை உண்டாக்க வல்லது. இதனால் படைத் தொடர்பான ஆள்திரட்டல், பேணல் ஆகிய தகுதிகளை நோக்கியே சிற்றரசர் (அரைசர்), வேள், கிழார் என்போர் மன்னர்களாலும், வேந்தர்களாலும் அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டனர். பலவேளைகளில் புதிதாக அப்பொறுப்புகளில் அவர்கள் அம்ர்த்தப்பட்டனர் என்றே கொள்ளலாம். இந்த தகுதி கருதியே வேட்டுவர், புலையர், வணிகர் பரவர் என குமுகத்தின் எல்லாத் தரப்பினரில் இருந்தும் தக்கவர் இப்பதவிகளில் இருந்ததை நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. தீண்டாமையும், குமுக ஒடுக்குமுறையும் விசயநகர ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் வரை ஆழமாக வேர் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.

நாடுபிடிச் சண்டைக்கு ஆநிரைப் போர் ஒரு தொடக்கச் சடங்காக வழவழி மரபாக மேற்கொள்ளப்பட்டு வந்து உள்ளது. தொறு கவரும் வெட்சிப் போர் தரப்பினரிலும், தொறு மீட்கும் கரந்தைப் போர் தரப்பினரிலும் பல வீரர்கள் மாண்டனர். இப் போர்களில் வீர சாவடைந்த மறவர்களை சிறப்பித்தும் தெய்வமெனத் தொழவும் அது பொருட்டு மாண்ட வீரரின் உறவினர்களால் அல்லது ஆண்டைகளால் அவர் நினைவில் நிறுத்தப்பட்டவையே நினைவு கற்கள் எனும் நடுகற்கள். மாண்டவர்க்கான இந்த சிறப்புச் செய்கையானது அடுத்து வரும் தலைமுறையினரை படையின் பால், போரின் பால் ஈர்க்க உதவுவதற்கே எனப் புரிந்து கொள்ளலாம்.  மாண்ட மறவருக்கு நெய்த்தோர் பட்டி எனும் நிலக்கொடையும் வழங்கப்பட்டன.  இந்நடுகற்களில் ஒரு நடைமுறைக்காவே (formality) வேந்தனின் பெயரும் அவன் ஆட்சி ஆண்டும் குறிக்கப்பட்டன. பெரும்பாலும் வேந்தனுக்கு இதில் நேரடித் தொடர்பு கிடையாது. நடுகல்லின் ஏனைய செய்திகள் யாவும் எளிய வீரனைப் பற்றியவை. இக் கல்வெட்டுகள் நிகழ்ந்த போரின் காட்சிகளை உள்ளபடியே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துபவை. இதில் விவரிக்கப்படும் வரலாற்று நிகழ்வு எளியோருடைது, படிக்கப் படிக்க தீஞ்சுவை ஊட்டுவது.

தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி தொடங்கி அடுத்தடுத்து வந்த அரசர்கள், சமணர், பௌத்தர், பிராமணர், நாடு பெயரும் வணிகர் என 3% அளவேயான மக்கள் தமிழுடன் பிராகிருத சமற்கிருத சொற்களைக் கலந்து செயற்கையான ஒரு மொழியை உண்டாக்கி மற்ற 97% அளவுள்ள மக்களுக்கு விளங்காத அந்த செயற்கை மொழியில்தான் செப்பேடுகள், கல்வெட்டுகள், ஓலை ஒப்பந்தங்கள் என எல்லா ஆவணங்களையும் வெளியிட்டனர். அம் மொழியிலேயே மத புராண இலக்கியங்களையும் உண்டாக்கினர். இந்த செயற்கை மொழி இன்னும் கீழ்மட்டத்தில் உள்ளோரின் வழக்கு மொழியாகப் பரவுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆயின. அதுவரை அந்த 97% மக்கள் தம்முன்னோர் பேசிய பேச்சு வழக்கு மொழியையும் அதன் இலக்கிய நடையையுமே கைக்கொண்டனர். ஆயினும் மக்கள் மொழியின் தன்மை, நிலை குறித்து அறிய அம்மக்கள் நிறுத்திய நடுகல் கல்வெட்டுகள் மட்டுமே சான்றாக உள்ளன. இவ்வாறான கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிகச் சிலவே ஆகும் (2%). மாறாக அறிஞர்கள் கருத்தில் கொள்ளும் செயற்கை மொழியில் அமைந்த 98% உள்ள கல்வெட்டுகளும், செப்பேடுகளும் 3% அளவே உள்ள மக்களால் ஆக்கப்பட்டவை என்பதை அறிஞர்கள் உணரவில்லை. இதனால் அறிஞர்கள் மக்கள் மொழி குறித்து அறிவிக்கும் முடிவுகள் யாவும் தவறானவையாக உள்ளன. காட்டாக, தொடக்கக் கால மலையாள இலக்கியங்கள் நம்பூதிரி பிராமணர் மற்றும் அரசரால் செயற்கைக் கலவை மொழியில் ஆக்கப்பட்டன. ஆனால் மக்கள் மொழி என்னவோ இதனினும் வேறுபட்ட வட்டார வழக்குத் தமிழாய் இருந்தது என்பதே உண்மை. இப்படித் தான் ஆந்திரத்திலும், கருநாடகத்திலும் மக்கள் மொழி அரைத் தமிழாய் இருந்து உள்ளது. ஆனால் அரசருடைய கல்வெட்டு, செப்பேட்டு மொழி செயற்கைக் கலவை மொழியில் அமைந்திருந்தது என்பதற்கு அங்கத்து நடுகல் கல்வெட்டுகளே சான்று.

தமிழ்நாட்டில் பல்லவர் கால நடுகற்களில் நல்ல தமிழ்ச் சொற்களும், மக்கள் பேச்சு வழக்குச் சொற்களும் உள்ளன. அவற்றில் ஒரு சமற்கிருதச் சொல்லோ, கிரந்த எழுத்தோ தொடக்கக்கால பல்லவர் நடுகல் கல்வெட்டில் இல்லை. மாறாக சமற்கிருத பெயர்களில் உள்ள சமற்கிருத எழுத்துகளை நீக்கி தமிழ் மரபிற்கு தக்கவாறு அவை தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டு உள்ளன. நடுகல்லில் உள்ள மொழி வழக்கு சங்ககாலத்தின் இடையறாத தொடர்ச்சியே எனலாம். ஆந்திரம் கருநாடகம் போல தமிழகத்தில் இதுவரை பிராகிருத, சமற்கிருத நடுகல் கல்வெட்டு ஒன்று கூட அறியப்படவில்லை. இதற்கு காரணம் தமிழகத்தில் நடுகல் கல்வெட்டுகளை மக்களே, மாண்ட வீரரின் உறவினரே பொறித்தனர். மன்னர், வேந்தர் எவரும் நடுகல் பொறித்திடவில்லை. அவருக்கும் நடுகல் பொறிக்கப்படவில்லை.  அப்படிப் பொறித்திருந்தால் அதை செயற்கைக் கலவை மொழியிலேயே பொறித்திருப்பர் எனலாம். ஒரிரு சமற்கிருத சொல் கொண்ட நடுகல் ஒன்றிரண்டு சிற்றரசர்களுடையன ஆகும். இரண்டாம் நந்தி வர்மப் பல்லவனுக்குப் பிறகு தமிழ் எழுத்திலும் நடுகற்கள் வெட்டப்பட்டு உள்ளன. தந்தி வர்மன் காலம் வரை நடுகல் கல்வெட்டுகள் சுருக்கமாகவே இருந்து உள்ளன. இதன் பின் பல்லவர் கால நடுகற்கள் சற்றே விரிவாக உள்ளன. தந்திவர்மனுக்கு முற்பட்ட நடுகற்களில் ஆண்டு எண்கள் எழுத்துகளிலேயே குறிக்கப்பட்டன. சோழர் கால நடுகல் கல்வெட்டுகளில் மொழி ஆளுமையும் சொல் ஆளுமையும் மாறுபட்டிருப்பதை உணர முடிகின்றது. சமய எழுச்சி காரணமாக தமிழகத்தில் சோழர் ஆட்சியில் நடுகல் வழக்கம் குன்றி விட்டது. ஆனால் அடித்தட்டு மக்களிடம் நடுகல் ஒரு வழிபாடாக இன்றும் நிலவி வருகின்றது. இனி, மக்கள் வரலாற்றை, மக்கள் மொழியை நேரடியாக கல்வெட்டு பொறிப்பில் அதன் விளக்கத்தோடு காணலாம்.

மேற்கோல் நூல் சுருக்கம்

செங். நடு. > செங்கம் நடுகற்கள்
தரும. கல். > தருமபுரி கல்வெட்டுகள்
நடு. > நடுகற்கள்
ஆவ. இதழ் > ஆவணம் இதழ்
தரு. நடு. அகழ் > தருமபுரி நடுகல் அகழ்வைப்பகம்
தொல். வே. அர. > தொல்குடி - வேளிர் - அரசியல்
கிரு. மா. கல். >  கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

S. I. I. > South Indian Inscriptions, ASI
E. I. > Epigraphica Indica
E.C. > Epigraphica Carnatica

பொருள் கொள்ள உதவிய அகராதிகள்

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி (செ. சொ. பி)
Monier - williams, A Sanskrit English dictionary, 1899

பிராமண நடுகல்

பிராமணர் படைத் தலைவர்களாய் இருந்துள்ளனர் என்றாலும் அவருள் எளியோர் எவரும் போரில் பங்கு பெற்று உயிர் துறந்த செய்தி இல்லை. ஒரு கோயில் மேலாளரான தன் ஆசானைப் பூசகன் தாக்கிக் கொல்ல வந்த போது அவருடைய மாணாக்கன் அதை தடுக்க முற்பட்டுள்ளான்.  அதனால் ஆத்திரமுற்ற கோயில் பூசகன் மாணாக்கனைக் கொன்று உள்ளான். அவனுடைய வீரத்தை மெச்சி அவனது ஆசான் அவனுக்கு நடுகல் நிறுத்தி உள்ளார். இது மிக அரிதான ஒரு நிகழ்ச்சி. கல்வெட்டுச் செய்தி ப்ல்லவனையும் சோழனையும் இணைத்து ஒரு நூற்றாண்டு கால நிகழ்வை ஒருசேர குறிப்பது தான் முரணாக உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் சென்னி வாய்க்கால் எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் கோபுர வாயிலில் ஒரு நடுகல் உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. (S.I.I.  Vol. 12 No. 56 (ARN NO 144 of 1928-29)

ஸ்வதிஸ்தி ஸ்ரீ தெள் / ளாற்றெறிந்து / ராஜ்ய(மு)ங் கொ / ண்ட நந்திப் /  பொத்தரையர்(க்) / கு யாண்டு இரு / பத்தொன்றாவது /  பராந்தக புரத் / து அறிந்தி / கை ஈஸ்வர க்ர / ஹம் ஸரஸ்த / தாலுடையொ / ரும் - - - / - - -  தளி / யிலாதாகி நின்ற bhaட்டரென் மாவலியநி / dhaஸ்தாந மாள்வான் செ(வணற்குண்டு) கொ / ண்டு வந்து மடமுஞ் சுட்டுக் காத்த ஷிguர / வரையு மெறிந்து இவர் ஷிஷ்யந் ஒரு ப்ராம் / ஹனன் சத்திமுற்றத் தேவந் றுண்டு ப / ட்டான் வல்லுவ(னாட்)டான்

ராஜ்யம் - அரசு; க்ரஹம் - கோயில், வீடு; ஸரஸ்த(sa-rush) - சினம், கோவம், கடுகடுப்பான [anger, enraged] : Bhaட்டரென் - கோவில் பூசகன்; இdhaஸ்தாநம் - இந்த கோயில் [this domain, region (of gods)] ; ஷிguரவன்(शिग्रु) - அப்படியாகப்பட்ட மனிதர் (of a man) ; ஷிஷ்யன் - மாணாக்கன்; ப்ராம்ஹனன் - வேதவினை மறையவன் (இவை யாவும் சமற்கிருதச் சொற்கள்)

போத்தரையன் - பல்லவன்; தால் - நாவு; தளி - கோயில்; மாவலியன் - வலிமை மிக்கவன்; உண்டு - உணவு, சோறு; மடம் - மடைப்பள்ளி; சுட்டு - விறகுஎரித்து சமை(வடை சுடு என்பதை நோக்குக); காத்த - பேணிய (Maintain); எறிந்து - அழித்து; துண்டு - வெட்டப்பட்டு; பட்டான் - வீரசாவடைந்தான்

மூன்றாம் நந்தி வர்மப் பல்லவனுடைய தெள்ளாற்றுப் போர் வெற்றியையும் அவன் தன் நாட்டாட்சியை மீட்டதையும் சிறப்பித்துக் கூறும் இக்கல்வெட்டு அவனுடைய இருபத்தொன்றாம் ஆட்சி ஆண்டு (868 CE) நிகழ்வு ஒன்றை நடுகல்லில் குறித்து உள்ளது. பராந்தகபுரமான இச்சென்னிவாய்க்கால் அறிஞ்சிகை ஈச்சுவரச் சிவன் கோயிலில் கோபத்துடனும் கடுகடுப்புடனும் பேசும் நாவுடையவரும், கோயிற் பணி இழந்த உடல் வலிமை மிக்க இக் கோயில் பூசகனான பட்டரன் இக்கோயில் நிருவாகம் ஆளும் செவணருக்கு சோறு கொண்டு வந்தும், கோயில் மடைப்பள்ளியில் விறகுஎறித்து திருத்தளிகைக்கான சமையற் பணியைப் பேணியும் வருகின்ற அப்படியாகப்பட்ட மனிதரைத் தாக்கி அழித்ததோடு அல்லாமல் செவணரின் மாணாக்கனான சத்திமுட்டத் தேவன் என்ற பிராமணனைத் துண்டாக வெட்டிக் கொன்றான். இந்த சத்திமுட்டத் தேவன் வள்ளுவ நாட்டினன்.

மேற் கூறிய கருத்திற்கு இணங்க இக்கல்வெட்டில் இடம்பெறும் மாந்தர்களான பட்டரன், செவணர், சமையல்காரன், சத்தி முற்றத் தேவன் ஆகியோர் பிராமணர் என்பதால் இக்கல்வெட்டில் எட்டு சமற்கிருத சொற்கள் திணிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மக்கள் வழக்கு மொழி தமிழை நன்கு அறிந்திருந்தாலும் மதப்பற்று, தம் சமற்கிருத புலமை காட்டல் ஆகியவற்றின் காரணமாக செயற்கைக் கலவையாக ஒரு மொழியை உருவாக்கி உள்ளார்கள். இவ்வாறான மொழிநடை உள்ள மதத்துறை, ஆட்சித்துறைக் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு பெருவாரியான மக்கள் பேச்சு மொழி இது என்று அறிஞர்கள் தீர்மானிப்பது தவறானது எனலாம். இந் நடுகல்லை நட்டு கல்வெட்டு பொறிக்க ஏற்பாடு செய்தவர் செவணர் என்பது புலனாகின்றது. பட்டரன் வேலையில் ஏதோ குற்றம் புரிய அவனைப் பணியில் இருந்து செவணர் நீக்கியதால் கோயில் வேலை இழந்து பிழைப்பிற்கு வழியின்றிப் போகவே அதற்கு பழிதீர்க்கும் எதிர்வினையாகச் செவணரை பட்டரன் கொல்ல் முற்பட்டுள்ளான் என ஊகிக்க முடிகின்றது.

தென்னிந்திய நடுகற்கள் எனும் நூலில் இக்கல்வெட்டிற்கு விளக்கம் கூறியுள்ள வெங்கட சுப்பைய்யர் பெரு வலிமையன் என்ற பொருளுடைய மாவலியன் என்ற சொல்லை மாவலிவாணராயன் என்ற வாண மன்னனாகத் தவறாகப் உணர்ந்து அதனுடன் பொருத்தி, அவன் வடக்கே இருந்து படை எடுத்து வந்து மடைப்பள்ளி என்ற பொருளுடைய மடம் என்ற சொல்லை துறவிகள் மடம் எனத் தவறாகப் பொருள் கொண்டு அவன் மடத்தையும் அழித்து அதைத் தடுக்க வந்த சத்திமுற்றத் தேவனை அம்பால் கொன்றுவிட்டதாகவும் சொல்லி உள்ளது மேற்சொன்ன கல்வெட்டு விளக்கத்துடன் பொருந்தி வராததை உணரமுடிகின்றது.

நாராய் ! நாராய்! செங்கால் நாராய்! என்ற சங்கப் பாடலில் இடம்பெறும் சத்திமுற்றத்தைச் சேர்ந்தவன் என்பது இவன் பெயராலும் அது குமரி மாவட்டத்தில் உள்ள ஊர் என்பது வள்ளுவ நாடன் என்ற கருத்தாலும் வெளிப்படுகின்றது. றகரம் பண்டு டகரமாய் ஒலித்தது. அதன்படி முற்றம் முட்டம் எனப் பலுக்கப்படல் வேண்டும். சத்தன் என்ற ஆள் பெயர் இகர ஈறு பெற்று சத்தி என வழங்கும். தமிழ முன்னோர் அயல் நாகரிகங்களை அமைத்தனர் என்பதற்குச் சான்றாக சில அயல் நாகரிக மன்னர் பெயர்கள் தமிழாக உள்ளன. அதில் துருக்கியின் ஒரு மித்தானி அரசன் பெயர் Suttarna I 1490 - 1470 BC > சத்தரண(ன்). அதே போல் ஒரு Gija  வழிவந்த கொரிய மன்னன் பெயர் Sudo 634 - 615 BC >  சத்த(ன்) 

நவக்கண்ட நடுகல்

பிறர் நலன் கருதி ஆடவர் தம் இன்னுயிரைத் தாமே தற்கொலையாக தெய்வத் திருவுரு முன் தம்மை பலியிட்டு உள்ளனர். தமிழில் இது தலைப்பலி எனப்பட்டது. தெலுங்கில் மிடிதலா அல்லது கண்டதலா என்று அழைக்கப்பட்டது. கன்னடர் இதை சிடிதலா என்றனர். தம் உடலை ஒன்பது துண்டுகளாக, ஒன்பது பாகமாகக் கூர்மையான வாளால் தாமே வெட்டிக் கொள்வது நவக்கண்டம் ஆகும். அவ்வாறான ஒரு நவக்கண்ட செய்தி கூறும் கல்வெட்டு கீழே:

நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் எனும் சிற்றூரில் உள்ள சுப்ரமணியர் திருக்கோயிலின் செவ்வகக்கல்லில் நவக் கண்டம் கொடுக்கப்பட்ட செய்தி கல்வெட்டாக பதிவாகி உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. (S.I.I. Vol. 12 No. 106 / A.R.N No.498 of 1908).

கம்ப பருமற்கு யாண்டு இருபதாவது (ப)ட்டை பொ(த்) / த(னு)க்கு ஒக்கொண்ட நாகன் ஒக்கதிந்தன் பட்டை பொத்தன் மே /  (தவம்) புரிந்த தென்று bhaடாரிக்கு நவக் கண்டம் குடுத்து / (குன்றகத்) தலை அறுத்துப் பிடலிகை மேல் வைத்தானுக்கு தி / ருவான்முர் ஊரார் வைத்த பரிசாவது எமூர்ப் பறைகொட்டிக் கல்(மெ) / (டு செய்தாராவிக்கு)க் குடு(ப்) பாரானார் பொத்தனங் கிழவர்களும் தொ (று) / (ப்ப)ட்டி நிலம் குடுத்தார்கள் இது அன்றென்றார் கங்கயிடைக் குமரிஇ / (டை) எழுநூற்றுக் காதமும் செய்தான் செய்த பாவத்துப் படுவா / ர் அன்றென்றார் அனறாள் கோவுக்கு காற்ப் பொன் றண்டப் படுவார்.

பட்டை (பட்டம்) - ஒரு பறை வகை; பொத்தன் - அடிப்பவன்; குன்றகம் - சிறுகுவடு போன்ற மேடை; பிடலிகை - தட்டு; கிழவர் - உரியவர், தலைவர்; படுவார் - வீழ்வார்;  தண்டம் - தண்டனைத் தொகை, Fine.

பல்லவன் கம்பவர்மனுடைய இருபதாவது ஆட்சி ஆண்டில் (883 CE) பறை அடிப்பவனான பட்டை பொத்தனுக்கு, அவன் தந்தை ஒக்கொண்ட நாகன் ஓக்கதிந்தன் பட்டை பொத்தன் மேன்மையான தவம் செய்யக் கருதியவனாக படாரி எனும் துர்க்கைக்குப் படையலாக தன் உடலின் ஒன்பது பகுதிகளிலிருந்து தசைகளை வெட்டிய பின் சிறு குவடு போன்ற மேடை மேல் தன் கழுத்தை இருத்தித் தன் தலையைக் கத்தியால் தானே அறுத்து கொண்டையைப் பிடித்தபடி அத்தலையைத் தட்டின் மேல் வைத்தான். இச்செயலை மெச்சிய திருவான்மூர் ஊர் மக்கள் அதற்கு பரிசாக அவர் ஊர்ப் பறை கொட்ட நடுகல் மேடு நிறுவச் செய்தார்கள். ஒக்கதிந்தன் ஆவிக்கு பறை அடிப்புக்கு (பொத்தனம்) உரியவர்கள் நிலக் கொடையாக, உயிர் ஈகம் செய்யும் வீரனுக்கு இணையாக அவனைக் கருதி தொறுப்பட்டி நிலத்தைக் கொடுத்தார்கள். இந்த அறத்தை ஏற்காதவர்கள் கங்கைக்கும் குமரிக்கும் இடைப்பட்ட எழுநூற்றுக் காதமுள்ள இந்த இந்தியப் பெருநிலத்தில் வாழுநர் செய்யும் பாவத்தை ஏற்பர் அதோடு அவர் வாழுங் காலத்தில் அரசாளும் மன்னவனுக்கு கால் பொன் தண்டம் செலுத்த வேண்டும் எனவும் இவ்வாறு சாவித்தும் தண்டனை வழங்கியும் கல்வெட்டு பொறித்து உள்ளனர்.

கம்ப வர்மனுடைய ஆட்சி வடக்கே நெல்லூர் வரை பரவி இருந்துள்ளது. திருவான்மூர் என்ற ஊரே இன்றைய மல்லாம் அல்லது அதன் அண்டை ஊர் எனலாம். திரு என்ற இதன் தமிழ் வடிவமே வேங்கடத்திற்கு அப்பாலும் தமிழ் வழங்கும் நிலம் 1,000 ஆண்டுகளுக்கு முன்னம் வரை இருந்ததற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று.

விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார் கோட்டை சிவன் கோவிலில் உள்ள 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. (வெ. வேதாசலம், ஆவ. இதழ் 10,1999)

சூரங்குடி / நாட்டு ஆ / தனூராந / கையம் / ஊர்கிழவன் / ஸ்ரீ வேழா / ன் சீலப்பு / கழான் க / லியுகக்கண் / டடி தன் / ம செட்டிக்கு / கோன் நோ / ற்றி தலை / தந்தான்

கிழவன் - ஊர்த்தலைவன்; வேள் > வேழ் - சிற்றரசன்; சீலம் - நல்ஒழுக்கம்; கண்டடி(கண்டு + அடி) - அடிக்கரும்பு; நோற்றி - நோன்பு இருந்து; தலைதந்தான் - தலைப்பலி கொடுத்தான்.

எட்டயபுரப் பகுதியில் இருந்த சூரங்குடி நாட்டின் பகுதியான ஆதனூரின் கையமூர் எனும் ஊருக்கு வேள் ஸ்ரீ வேழான் சீலப்புகழான் கலியுகக் கண்டடி என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் தன்ம செட்டிக்கு நலம் வேண்டி கோன் என்பவன் நோன்பு இருந்து தன் தலையை வெட்டிப் பலி தந்து உள்ளான்.

வேழான் என்பது சிற்றரசானவன், சீலப்புகழான் என்பது நன்னடத்தையால் புகழுற்றவன், கலியுகக் கண்டடி என்பது கொடுமையான கலியுகத்தில் இனிக்கின்ற அடிக்கரும்பு போன்றவன் ஆகிய பொருளில் ஏற்றிப் போற்றப்பட்ட தன்ம செட்டி மன்னர்களைப் போல் புகழப்படுகின்றான். இவன் காலத்தில் சோழப் படை எடுப்பால் பாண்டியர் ஆட்சி குலைந்ததால் பாண்டிய வேந்தர் பெயரும், ஆட்சி ஆண்டும் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை போலும். தன்ம செட்டியால் பயனடைந்த குடும்பத்தவன் அல்லது நிலக் கொடையை எதிர்ப்பார்த்து தன்னை பலி கொடுத்த ஏழை தான் கோன் எனபவன் என்று கொள்ளலாம். இதில் நவக் கண்டக் குறிப்பு இல்லாவிடினும் அது போன்ற ஒரு உயிர்ப்பலி தான் இந்த தலைப்பலியும்.

சதிக்கல்

கணவன் இறந்ததும் அவன் மனைவியும் இறந்துவிட இருவருக்கும் எடுக்கப்படும் நினைவுச் சின்னம் தான் சதிக்கல். கணவன் சிதையுடன் மனைவியும் உடன்கட்டை ஏறுவது வடநாட்டில் எளிய மக்களிடத்தும் நிலவிய குமுக வழக்கமாக இருந்தது. ஆனால் தென்னாட்டில் இந்த வழக்கம் அரசர், அமைச்சர், படைத் தலைவர் குடும்பங்களில் மட்டுமே நிலவியது. வேந்தனிடத்தில் அமைச்சராயும், படைத்தலைவராயும் இருந்தவர் மன்னரும், சிற்றரசருமே எனலாம். இவ்வாறு உடன்கட்டையேறி இறந்த பெண்கள் தெய்வம் என மதிக்கப்பட்டு பூசிக்கப்பட்டனர். அவ்வாறான சதிக்கல் கல்வெட்டு ஒன்று கீழே:

தருமபுரி மாவட்டம் கிருஷணகிரி வட்டம் ஜகதாப் மோட்டூர் எனும் ஊரில் அமைந்த சதிகல் கல்வெட்டு. காலம் 11 ஆம் நூற்றாண்டு. (ஆவ. இதழ். 12, பக். 21)

ஸ்வத்தி ஸ்ரீ இரட்டபாடி ஏழரை இலக்கமுங் கொ / ண்டு கொல்லாபுரத்து ஜயத்தம்ப நாட்டி / ப் பேராற்றங்கரைக் கொப்பத் தாகவ மல் / லனை ஐஞ்சுவித்தருளி அவந் ஆனை கு / திரை பெண்டிர் பண்டாரமகலப் பட்டவித்து / வீராஸிங்காசநத்து வீற்றிருந்தருளிந கோ / ப்பரகேசரி பந்மரான உடையார் ஸ்ரீ ராஜே / ந்தர தேவர்க்கு யாண்டு ஐஞ்சாவது /  விஜைராஜேந்திர மண்டலத்துத் தகடூர் /  நாட்டுக் கங்க நாட்டுப் புல்ல மங்கலத்து / அவனமச்சி பள்ளியில் இவந் மகந் சாமுண் / டந் பாம்பு கடிச்சு செத்தாந் இவந் மணவா / ட்டி விச்சக்கந் தீபாஞ்சாள் அவள்.  ம- - -/ ண்ப - - - மாக நட் - -

பண்டாரம் - கருவூலம்; பட்டவித்து - சிறப்பு அழித்து, ஆட்சி ஒழித்து; அமச்சி - அமைச்சர்; பள்ளியில் - சிற்றூர், அரண்மனை, இடம்; மணவாட்டி - மனைவி; தீப்பாஞ்சாள் - உடன்கட்டை ஏறினாள்

சோழப் பெரு வேந்தன் ராஜேந்திரனுடைய ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1017) பொறிக்கப்பட்ட இந்நடுகல் கல்வெட்டு முதலில் அவனுடைய வெற்றிச் சிறப்புகளை கூறித் தொடர்கின்றது. இச்சதிக்கல் கல்வெட்டில் ராஜேந்திரச் சோழன் மேலைச் சாளுக்கியன் ஜெயசிம்மனிடம் இருந்து இரட்டப்பாடி ஏழரை இலக்கத்தையும் கைப்பற்றி கொல்லாபுரம் எனும் இன்றைய கோலாப்பூரில் இதற்காக வெற்றித் தூண் நாட்டியதையும், பேராற்றங்கரைக் கொப்பத்தில் (துங்கபத்திரை) மேலைச் சாளுக்கியன் ஆகவ மல்லன் எனும் சோமேசுவரனை அச்சப்படுத்தி வென்று பரிவு காட்டி அவன் யானைப் படை, குதிரைப் படை, அரண்மனைப் பெண்டிர், கருவூலம் என எல்லாவற்றையும் கைப்பற்றி அவன் எல்லாச் சிறப்புகளையும் அழித்துப் பின் வீரத்திற்கு இலக்கணமான அரியணையில் அமர்ந்து ஆண்டான் எனக் குறிப்பிடுகின்றது. அவன் ஆட்சிக்கு உட்பட்ட விஜயராஜேந்திர மண்டலத்தின் பகுதியான தகடூர் நாட்டின் கங்க நாட்டுப் பிரிவான புல்லமங்கலத்தில் ராஜேந்திரச் சோழனுடைய அமைச்சரின் அரண்மனையில் இவன் மகன் சாமுண்டன் பாம்பு கடித்து நஞ்சேறி இறந்தான். சாமுண்டனின் மனைவியான விச்சக் கந்தி என்பாள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். அதன் நினைவாக இந்நடுகல் நடப்பட்டது. இறுதி இரு வரிகள் ஆங்காங்கே சிதைந்து உள்ளன.

வேந்தனுடைய அமைச்சராக அவனுக்கு கீழ்ப்பட்ட மன்னரே இருந்தனர் என்பதுடன் அரச குடும்பத்தவரே உடன்கட்டைப் வழக்கத்தை கைக்கொண்டனர் என்ற கருத்தை நோக்க அவனமச்சி என்ற சொல் ஆள் பெயரல்ல என்று தெளியலாம். அது இராசேந்திரனுக்கு அமைச்சராக இருந்த பெயர் குறிக்கப்படாத ஓர் அரசனைத் தான் குறிக்கின்றது என்பது விளங்கும். இவன் மகன் சாமுண்டனே இறந்துள்ளான். அவன் மருமகள் விச்ச கந்தி என்பவள் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறினாள்.

நாய்க்கு நடுகல்

மக்கள் மனிதர் தம் சிறப்பு வினைக் கருதி அவர்தம் நினைவில் நடுகல் நிறுத்தியது போலவே தாம் செல்லமாக வளர்த்த கிளி, கோழி, எருது, குதிரை ஆகிய பறவைகள் விலக்குகள் முதலியனவற்றுக்கும் நடுகல் எழுப்பி உள்ளனர். அவ்வாறே ஒரு ஆண்டை தான் செல்லமாக வளர்த்த தன் இரு நாய்களின் நினைவாக நினைவுக் கல் நிறுவி உள்ளான்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் உள்ள அம்பலூரில் உள்ள நடுகல் நாய்களுக்காக நடப்பட்டுள்ளது. இதன் காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு. (ஆவ. இதழ். 12, 2001 பக்.3)

ஸ்வஸ்தி ஸ்ரீ - - - -ந - - - அம்ம - - - / ற் கோவந் நாய் முழகனும் வந்திக்கா / கத்தியும் சேரிடு - - - - த நிப் பன்றி /  கொன்று செத் /  தந

சேரிடு - பிணைந்து ( to tie or fasten together)

மன்னன் பெயரும் ஆட்சி ஆண்டும் சிதைந்து உள்ளன. அம்மலூர் என்று வழங்கப்பட்ட இன்றைய அம்பலூரில் கோவன் என்பவன் இரு நாய்களை வளர்த்திருந்தான். அவ்வூருள் புகுந்த காட்டுப் பன்றி ஒன்றுடன் அவனுடைய நாய்களான முழகனும், வந்திக் காகத்தியும் பிணைந்து சண்டையிட்டுப் போராடிப் பன்றியைக் கொன்றன தாமும் செத்தன எனக் கல்வெட்டு பொறித்த கோவன் குறித்து உள்ளான்.

செல்ல விலங்குகளுக்கு நடுகல் எடுக்கப்பட்ட செய்தி மிக அரிதாகவே தமிழகத்தில் பதிவாகி உள்ளது.தொல் காப்பியத்தில் கூறப்பட்டு உள்ளது போல செல்ல விலங்குளுக்கு மனிதரைப் போல் இங்கு பெயர் இடப்பட்டு உள்ளது.

பல்லவர் ஆட்சி நடுகல்

பல்லவராட்சி தமிழகத்தில் விஷ்ணு வர்மன் (கி.பி. 477) காலம் முதல் முழுமையாக நிலைகொண்ட செய்தி இருளப்பட்டியில் கிடைத்த அவனது நான்காம் ஆட்சி ஆண்டு (கி.பி. 480) நடுகல் மூலம் நிறுவப்பட்டு உள்ளது. அவன் பின்னே வந்த சிம்ம வர்மன், சிம்ம விஷணு ஆகியோர் கால நடுகற்களும் அறியப்பட்டு உள்ளன. பல்லவ மன்னர் நேரடியாகப் போரில் ஈடுபட்டதோ அவர் நடுகல் ஆனதோ குறித்து செய்தி கொண்ட நடுகல் எதுவும் இதுவரை கிட்ட வில்லை. அவருக்குக் கீழ்ப்படிந்த பாணர்கள் போரில் ஈடுபட்டு அதில் இறந்த மறவர்களுக்கு எழுப்பப்பட்ட நடுகற்களே பெருமளவில் கிட்டி உள்ளன. தமிழ்நாட்டில் கிட்டிய பெரும்பால் நடுகற்கள் பல்லவர் காலத்தவை. இது சங்க கால நடுகல் மரபின் இடையறாத் தொடர்ச்சியின் விளைவே எனலாம்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மேல் சிறுவளூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள 6 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட நடுகல் உள்ளது. (சி. வீரராகவன் மங்கையர்க்கரசி - ஆவ. இதழ். 7,1996, பக். 26)

கோவிசய பருமற்கு இருபத்து நால்காவது / கீழ்க் கோவலூரு குன்றட்டரைசரு மக்கள் சிங்க /  மஞிச்சியாரோடு எறி / ந்த ஞான்று / நீலகண்ட / ரைசரு மக்க /  ள் பொன்னு /  ழதனார் சேவகரு /  கரியாரு மக்கள் /  - - - நீலகண்ட /  ரு பட்ட கல்

மக்கள் - மகன் என குறிக்கப்படும் படைஅதிகாரி; எறிந்த - வென்ற; சேவகன் - படை அதிகாரி; பட்ட - வீரசாவுற்ற; கல் - நடுகல்.

பல்லவன் சிம்ம வர்மனா, சிம்ம விஷ்ணுவா என்று குறிப்பிடாமல் கோவிசைய என்று மட்டும் குறிப்பிட்டு ஆட்சி  ஆண்டை இருபத்து நான்கு என்று குறிப்பிடுகின்றது இக் கல்வெட்டு. அப்போது கிழக்கு கோவூரை ஆளும் குன்றட்டு அரைசர்க்கு மகன் எனும் அதிகாரப் பொறுப்பு உள்ள சிங்க மஞ்ஞிச்சி என்பவனை எதிர்த்துப் போரிட்டு வென்ற போது நீலகண்ட அரைசர்க்கு மகன் எனும் பொறுப்பு அதிகாரியான வேள் பொன் உழத்தன் என்பவனுடைய படைஅதிகாரி கரியான் என்பவனுடைய படைஆள் நீலகண்டன் வீரசாவு அடைந்ததன் நினைவில் நிறுத்தப்பட்ட நடுகல்.

கோவலுர் இன்றைய திருக்கோவிலூர் ஆகலாம். ஒருவர் அரசர் நீலகண்டர் மற்றொருவர் எளிய போர் வீரர். போரில் சிங்க மஞ்ஞிச்சி தோற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மேல் சிறுவளூர் எனும் ஊரில் உள்ள வட்டெழுத்து பொறிப்பு உள்ள 6 ஆம் நூற்றாண்டு நடுகல் மேல் உள்ள கல்வெட்டு மாந்தர்களுடன் தொடர்பு உடையது. (ஆவ. இதழ். 7, 1996)

கோவிசய பற்மற்கு இருபத்தொன்பதாவது நீலகண்டதிய / ரைசரு மக்கள் பொற் சாத்தன்னாரு தண்சூர திரைச சம்பவி / னாரோடு எறிந்த ஞான்று பொன்னுழ(த்த) / (னாரு) சேவகரு - - - ராண்ட சிற்றரை வீரத்தனாரு க - - - /  எறிந்து ப / ட்டான்.

அதிஅரைசர் - வேந்தனுக்கு படை உதவி நல்கும் அதிஅரசனாகவும் தன்னிலையில் மாமன்னனாகவும் இருப்பவர்

பல்லவ வேந்தனுக்கு அதிஅரைசர் நிலையில் உள்ள மாமன்னன் நீலகண்டன் என்பவனுடைய மகன் எனும் பொறுபபு அதிகாரியான பொன் சாத்தன் எனும் சிற்றரசன் தண்சூர் ஆளும் அதிஅரைசர் மாமன்னன் சம்பவின்னான் என்பவனுடன் போரிட்டு வென்ற போது பொன் உழத்தன் என்ற சிற்றரசனுடைய படைத்தலைவனும் (பெயர் சிதைந்த) ஊரை ஆண்ட வேளும் ஆன சிற்றரையைச் சேர்ந்த வீரத்தன் (ககரத்தில் தொடங்கும் பெயர் சிதைந்த) ஊரை அழித்து வீர சாவடைந்தான். இதில் வரும் சிற்றரை எனும் ஊரே இன்றைய சிறுவளூர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (ஆவ. இதழ். 20, 2010, பக். 196)

கோவிசைய சீபரும்மற் கிரு /  த்தொன்பதாவது ஆட்டி தி / ங்கள் புணரு பூசது ஞா(ன்)று தகடு /  ருப் பிடி மண்ணேரிக் கீழ் உடை / யாரு தண்டத்தோடு இலாட / ரைசரோடும் மழவரைசரோடும் /  எறிந்து பட்டாரு கங்கதி அ / ரைசரு சேவகரு மாதப் பெருதிரை /  சரு கன்னாடு

ஆட்டி - ஆடி; திங்கள் - மாதம்; கீழ் - கிழக்கு; தண்டம் - படை; சேவகர் - படைத் தலைவர்; கன்னாடு - கல் + நாடு

பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர்

ஒரு தமிழ் நடுகல்லில் மாதமும் நட்சத்திரமும் முதன்முதலாகக் குறிக்கப்படுவது இதுவே எனலாம். இவ்வகை பல்லவ நடுகல் செய்தி மிக அறிதாகவே உள்ளது. கீழ்ப் பிடி மண்ணேரி அரசருடைய பெயர் கல்வெட்டில் குறிக்கப்பட வில்லை.

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கானம்பாடி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது. (தரும. கல். 1973/2 பக்.76)

கோவிசைய சிங்கவிண்ண பரும(ற்)கு / இருப(த்)தேழா(வ)து கொரு நாட் / டு  கொண்ட ப _ றி(த்) தொறு (க்கொ)ள உரை எறிந்து இடுவித்து (பட்டான்) வதி / செலாவன் கல்.

கொண்ட - கவர்ந்த; இடுவித்து - விடுவித்து

பல்லவன் சிம்ம விஷ்ணுவின் இருபத்தேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 577) கோவூர் நாட்டைச் சேர்ந்த பகைவர் கவர்ந்து சென்ற நிரைகளை மீட்க உறையிலிருந்து வாளை உருவிப் பகைவரை அழித்து நிரையை மீட்டு விடுவித்து வீர சாவடைந்தான் வதி செலாவன் என்பவன். அவன் நினைவில் நடப்பட்ட நடுகல் இது.

கோவூர் என்பது கொரு எனப் பிழையாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. சிதைந்த சொல் பன்றி என்பதா எனத் தெரியவில்லை. அப்படியானால் பன்றி மேய்த்தோரும் உளர் எனக் கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் எனும் ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டு தருமபுரி நடுகல் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள வட்டெழுத்து பொறிப்பு பெற்ற நடுகல். (தரு. நடு. அகழ். பக். - 32)

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய மயி / ந்திர பருமற்கு யாண் / டு ஏழாவது பெரும் / பாண விளவரைசர் / சேவகன் நைய வ / டுகன் (சாத்துழான்) தொ / று மீட்டு பட்டான்

மகேந்திர வர்மனின் ஏழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 597) அவனுக்குக் கட்டுப்பட்ட பெரும் பாண இளவரைசனின் படைத் தலைவன் நைய வடுகன் (சாத்துழான்) ஆநிரைகளை மீட்டுப் வீர சாவடைந்தான்.

வடுகர் அசோகன் தந்தை பிந்துசாரன் காலத்தில் மௌரியப் படை தமிழகத்தின் மேல் படை எடுத்து வர உதவினர். அப்படி வந்தவர்கள் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் குடியேறி விட்டனர் போலும்.

நய்யன் ஒரு பழந்தமிழ்ப் பெயர்.  மேலை நாகரிக வரலாற்றில் இடம் பெரும் ஒரு மன்னன் பெயர் Bel Nirari 1370 BC > வேள் நய்யர்அரி என்பது.

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் போத்தன் கோட்டை எனும் ஊரில் கல்லாற்றுக் கரையில் இருந்து பெறப்பட்ட வட்டெழுத்து பொறிப்பு உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது. (தரும. கல். 1972/23, பக்.93)

கோவிசைய மயீந்திர பருமற்கு / ப் பதினைந்தாவது கோவூர் நாட்டுக் கீ / ழ் வழிப்ப / ள்ளகூர் இருந்து / வாழுந் நஞ்சுணி / ஆர் மகன் கொற் / றாடை தொறு / மீட்டுப் ப / ட்டான் கல்

கீழ்வழி - கிழக்குத் திசை வழி; இருந்து - தங்கி

மகேந்திர வர்மனின் பதினைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 605) கோவூர் நாட்டின் கிழக்கு வழியில் அமைந்த பள்ளக்கூர் எனும் ஊரில் தங்கி வாழும் நஞ்சுண்ணி என்பவர் மகன் கொற்றாடை என்பவன் பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். அவன் நினைவில் நிறுத்திய நடுகல் இது.

ஆநிரைகளைக் கவர்ந்தவர் குறித்த சேதி கல்வெட்டில் இல்லை. பள்ளக்கன் என்பது ஒரு பழந் தமிழ் ஆள் பெயர். அவ்வூர் அவருக்கு கொடையாக வழங்கப்பட்டதாலோ அல்லது அவரை அடையாளப்படுத்தியோ பள்ளக்கூர் என ஊர் பெயர் வழங்கி இருக்கலாம். கடைசியாக ஆண்ட மேலை நாகரிக Scythia மன்னன் பெயர் Palakus > பள்ளக்கு என்பது. இவனுடைய தந்தை அலெக்சாந்தரின் தந்தை இரண்டாம் பிலிப்பால் கொல்லப்பட்ட Ateas 339 BC > அதிய(ன்) என்பவன். இதனால் சித்தியர் தமிழர் தொடர்பு வலுப்பெறுகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சொரகொளத்தூர் எனும் ஊரில் ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு. (தொல். வே. அர. பக். 145)

ஸ்வஸ்தி ஸ்ரீ / கோவிசைய நந்தி விக்கிர/  ம பருமற்கி யாண்டு பதினேழாவ / து பல்குன்ற கோட்டத்து மண் / டை குள நாட்டுச் சுரைக் குளத்துத் தொறு கொளில் /   பட்டார் நிலம் பேறூர் நாயகர் ஆதட் / டியார் மகனார் செருவலியார்

யாண்டு - ஆண்டு; கோட்டம் - ஆட்சிப் பிரிவைக் குறிக்கும் வட்டம்; தொறு - ஆநிரை; கொளில் - கவர்தலில்; நாயகர் -  சிற்றரசர் அல்லது படைத் தலைவர்;  மகன் - படைஆள்.

இரண்டாம் நந்தி வர்மப் பல்லவனின் பதினேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 748) பல்குன்றக் கோட்டத்தில் அடங்கிய மண்டைக்குள நாட்டின் பகுதியான சுரைக்குளத்து ஊர் ஆநிரைகளைக் கவரும் போது நிகழ்ந்த பூசலில் நிலம்பேரூர் ஆளும் சிற்றரசர் ஆதட்டி என்பவருடைய படைஆள் செருவலி என்பவன் வீர சாவடைந்தான்.

சுரைக்குளமே இன்று சொரகுளத்தூர் எனப்படுகின்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாப் பேட்டை வட்டம் கீழைசாத்து எனும் சிற்றூரில் ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது (கி. குமார், ஆவ. இதழ் 7, 1996, பக். 15)

கோவிசைய நந்தீசுர பருமற்க் / கு யாண்டு முப்பத்தேழா / வது வள்ளிப்பேடு நாடுடைய விக் / கிரமாத்திய நாடு மாரிகப்பா / கிழார் மகன் வக்கடி பட்டான்

கிழார் - ஊர்த்தலைவன், உரிமையாளன்

இரண்டாம் நந்தி வர்மனுடைய முப்பத்தேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 754) வள்ளிப்பேடு நாட்டின் பகுதியான விக்கிரமாதித்திய நாட்டின் ஊர்த்தலைவர் மாரிகப்பா என்பவருடைய மகன் வக்கடி என்பவன் வீர சாவடைந்தான்.

போர் குறித்த மற்ற எந்த சேதியும் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் குழிதிகை எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டுக் கால நடுகல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. (E. I. Vol. 22,No.18, Pg. 113)

ஸ்ரீ கோவிசைய நந்தி / ச்சுர பருமர்கு யாண்டு / அம்பத்திரண்டாவது / பெருமானடிகள் மேல் / வல்லவரையன் படை வந் / து பெண்குழிக் கோட்டை அ / ழிந்த நான்று வாணரை / யர் மாமடி திருக எனத் திரிந்து பட்டார் கற்காட் / டு உடைய கங்கதி அரை / யர் கன்னாடு பெருங் க / ங்கர்

நான்று - ஞான்று, அப்போது ( at the time of); மாமடி - மாமன், மாமனார்; திருக - போருக்கு செல் என ஏவல்; திரிந்து - போர் மேல் சென்று;  அதிஅரையர் - சிற்றரசர், படைத் தலைவர்.

பல்லவன் நந்தி வர்மனுடைய ஐம்பத்து இரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 783) பல்லவனான பெருமானடிகள் மேல் இராட்டிரக் கூடனான வல்லவரையன் படை நடத்தி வந்து பெண்குழிக் கோட்டையை அழித்த போது பல்லவனுக்கு அடங்கிய வாண அரையனானத் தன் மாமன் (அ) மாமனார் போருக்கச் செல் என்று ஏவ, உடனே போர் மேல் சென்று போரில் வீர சாவடைந்தார் கற்காட்டை ஆளும் கங்க அதி அரையர். அவர் நினைவில் கல்நாட்டு உடைய பெருங் கங்கர் இந்நடுகல் நிறுத்தினார்.

இக்கல்வெட்டில் குறிக்கப் பெறும் யாவரும் அரசர்களே எளியோர் எவரும் இலர். ஓர் அரசனுக்கு தமிழ்நாட்டில் இது போல் நடுகல் நடப்படுவது அரிதானது. பெருங் கங்கர் தந்தையாக இருக்கலாம். கற்காடு என்பதே களக்காட்டூர் ஆகும். இதில் குறிக்கப்படும் இராட்டிரக்கூடன் துருவன்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில் உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர., பக். 147) & (செங். நடு. 71/1978)

ஸ்ரீ கோவிசைய பர (மேச்) சுவர பருமற்கு /  யாண்டு ஒன்பதாவது (அரி) மிறையார் /  வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்

கோயில் - அரண்மனை; பட்டன்(ர்) - உண்மையாளன்; நான்று - அப்போது எனக் குறிக்கும் ஞான்று; பாரம் - கவசம் (பிங்.) [coat of Mail];  தா - வலிமை, தா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்; மகன் - படைஆள், வீரன்; மட்டான் - பட்டான், வீர சாவடைந்தான்.

தந்தி வர்மனுக்கு முன் ஆண்ட பல்லவன் பரமேச்சுர வர்மனுடைய ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செங்கை எனும் இடத்தல் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப் படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் ஐகன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.

பகைவர் எளிதில் அணுகிவிடாதவாறு படைக்குக் கவசமாக ஒரு படைஅணி செயற் பட்டதை இக்கல்வெட்டு தெளிவாக உணர்த்துகின்றது. மேற்செங்கை மாப்படை வேணாட்டின் படை ஆகும். கோவூர் அரண்மனைப் படை இறுதியில் தோற்றதாலேயே ஐகன் வீர சாவடைந்த பின்னும் அவனுடன்வந்த பாரமதாயரின் படைஆள்களால் ஆநிரையை மீட்க முடிந்தது. கோயில் என்பது கோஇல் என பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது. தொடக்க காலத்தில் கோயில் என்ற சொல் அரசனின் வீடு என்ற பொருளிலேயே வழங்கியது. இக்கல்வெட்டு குறிக்கும் இச் சொல்லின் உட்பொருள் அரசன் அல்லது அரச குடும்பம் என்பதாகும். கோயில் பட்டர் என்றால் அரச குடும்பத்திற்கு விசுவாசமான படைத்தலைவர் (person loyal to palace) என்று பொருள். செங்கையே இன்றைய செங்கம் எனலாம்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மடவாளம் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு இது. (தொல். வே. அர., பக்.146)

கோவிசைய ஈச்சுர பருமற்கி /  பதிநொன்றாவது மைற்றம்பள் / ளிப் பசுக் கொண்ட ஞான்று / - - - - யார் சேவகர் வெள்ளை ஏறனார் தொறு இடுவித்துப் பட்ட /  தொ - - - பா / ழ் ஆள்வார் / மக்கள்

சேவகர் - படைவீரன்; இடுவித்து - விடுவித்து;  மக்கள் - மகன் எனும் பொறுப்பு உள்ள படைஅதிகாரி

பரமேச்சுர வர்மனாகலாம் இவர் எனக் கருதப்படும்  ஈச்சுர வர்மனின் பதினொன்றாவது ஆட்சி ஆண்டில் மைற்றம்பள்ளி எனும் ஊரின் பசு நிரைகளைக் பகைவர் கவர்ந்த போது (பெயர் சிதைந்த) சிற்றரசரின் படைஆள் வெள்ளை ஏறன் என்பவன் பசுநிரைகளை மீட்டு விடுவித்து வீர சாவடைந்தான். அவனுக்கு தொ(க்கைப்) பாழ் ஆள்வான் என்பவனுடைய மகன் பொறுப்பு அதிகாரி இந்த நடுகல்லை நிறுத்தியவன்.  வேள் தொக்கை பாழ் ஆளவான் பெயர் சிதைந்த சிற்றரசனின் ஆளுகையை ஏற்றவன் ஆகலாம்.

தமிழின் நான்காம் வேற்றுமை ஆன 'கு' பருமன் என்ற சொல்லில் 'கி ' எனக் குறிக்கப்படுவது பண்டு மக்கள் வழக்கில் அது சில பகுதிகளில் 'கே' என்றும் 'கி' என்றும் சிறு அளவில் வழங்கி இருக்கலாம் என்ற ஊகத்திற்கு இடம் அளிக்கின்றது. மக்களின் இந்த கொச்சை வழக்கே கன்னடத்திலும் தெலுங்கிலும் செம்மை வழக்காக இன்று நான்காம் வேற்றுமைக்கு ஆளப்படுகின்றன என்பது நோக்கத்தக்கது.

தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் அனுமந்தபுரம் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (தொல். வே. அர., பக். 147)

கோவிசைய ஈச்சுரபருமற்கி /  யாண்டு பதினேழ்ழாவதன் / கட் காட்டிறைகள் செயிக்க வரசர் / மாற்றுடை சென்று தான் அறுபட்டான் /  காட்டிறைகள்

மாற்றுடை - மாறு வேடம்;  அறு - வெட்டுப்படு

ஈச்சுர வர்மனுடைய பதினேழாவது ஆட்சி ஆண்டில் பல்வனுக்குக் கீழ்ப்பட்ட அரசன் கள் காட்டிறைகள் போரில் ஈடுபட, தன் அரசனான கள் காட்டிறைகள் போரில் வெற்றி பெறுவதற்காக அவரைப் போல் மாறு வேடம் பூண்டு பகைவரால் போர்க் களத்தில் சூழப்பட்டு அவரால் வெட்டப்பட்டு வீர சாவடைந்தான் காட்டிறைகள் என்பவன்.

காடு + இறை என்பது காட்டை ஆண்ட அரசன் என்று பொருள் தருகின்றது. இந்த காட்டிறைகள் என்பவன் அரசன் கள் காட்டிறைகளின் தம்பியாவோ அல்லது உறவினனாகவோ இருக்கலாம். ஜயம் என்ற சமறகிருதச் சொல்லை மூலமாகக் கொண்டு உருவான ஆன செயிக்க என்ற சொல் வெல்ல என்ற தமிழ்ச் சொல்லுக்கு மாற்றாக இங்கு ஆளப்பட்டுள்ளது. இக்கலப்பு இவர்கள் அரச குடும்பத்தவர் என்பதால் ஆகலாம். ழகரம் இயல்புக்கு மாறாக இங்கு இரட்டித்து உள்ளது.

தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் அனுமந்தபுரம் எனும் சிற்றூரில் மேல் உள்ள கல்வெட்டு நிகழ்வுடன் தொடர்புடையது இந் நடுகல் கல்வெட்டு உள்ளது.  (தொல். வே. அர., பக். 147)

கோவிசைய / ஈச்சுர பரும / ற்கி யாண்டு பதினேழ்ழாவத / ன் கட் கணையூர் மாற்றுடைப / டத் தான் அறுபட்டான் காட்டிறைகள் சேவகன் பூதூர் சாத்தன்

படு(பட) - தோன்று;  பட்டான் - வீர சாவடைந்தான்

ஈச்சுர வர்மனுடைய பதினேழாவது ஆட்சி ஆண்டில் கள் கணையூர் அரசர் போர்க்களத்தில் மாறுவேடத்தில் தோன்றவே காட்டிறைகளின் படை ஆள் பூதூர் சாத்தன் என்பவன் இதனால் மதிமயக்கமுற்று பகைவரால் சூழப்பட்டு வெட்டுண்டு வீர சாவடைந்தான்.

மேலுள்ள இரு கல்வெட்டுகளையும் ஒப்பு நோக்க கள் காட்டிறைகள் போல மாறுவேடத்தில் காட்டிறைகள் போர்க் களத்தில் போர் புரிந்தது போல் எதிரணியின் அரசன் கள் கணையூரனும் மாறுவேடத்தில் போர்க களத்தில் தோன்றியதால் அவனை எளிதில் அறிய முடியாமல் தேடித் தேடி அவனுடைய படை ஆள்களிடமே சிக்கிப் பூதூர் சாத்தனும் காட்டிறைகளும் வெட்டுப்பட்டு இறந்தனர் என ஒருவாறு ஊகிக்க முடிகின்றது. பண்டு மாறுவேடத்தில் போர்க்களம் செல்வது இயல்பாக நிகழ்ந்துள்ளது என்பதற்கு இக் கல்வெட்டுகள் சான்று ஆகின்றன.

துருக்கியை ஆண்ட மித்தானி அரசர்கள் சாத்த என்ற பெயரைக் கொண்டிருந்தனர் Sattuara I 1320 - 1300 BC >  சாத்து அர; அவனுடைய மகன் Vashasatta 1300 - 1280 BC > வச சாத்த(ன்).

வேலூர் மாவட்டம் வாணியம் பாடி வட்டம் ஆலாங்குப்பம் எனும் ஊரில் 9 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது. (ம. காந்தி, ஆவ. இதழ் 11, 2000, பக். 7)

ஸ்ரீ கோவிசைய தந்தி விக்கிரம பரு / மற்க்கு யாண்டு பதின் நா / ல்காவது அடையாறு நாடு ம /லையன்னாராள ஒருகில் மணற் / ச் சுனை மேற் படை வர ஊர் அழியா / மைய் காத்து பட்டான் சத்தி /  ம வகிலவன் வீரையர்க் கல் / பென்னை

பல்லவன் தந்திவர்மனுடைய பதினான்காவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 810) அடையாறு நாட்டை மலையன் + ஆர் ஆண்டு கொண்டிருக்க அப்போது அதன் ஒரு பகுதியான ஒருகில் மணற்சுனை மீது பகைப் படை வந்தது. இந்த ஒருகில் மணற்சுனை எனும் ஊர் பகைப்படையால் அழிக்கபபடாமல் காத்துப் போரிட்டு வீர சாவடைந்தான் அவ்வூர் சத்திம வகிலவன் புதல்வன் வீரையன் என்பவன். அவன் நினைவில் பென்னை என்பவர் இந்நடுகல்லை நிறுத்தினார். ஸ்ரீ என்ற கிரந்த எழுத்து மங்கலச் சொல் தந்தி வர்மன் காலத்தில் பல்லவர் கல்வெட்டுகளில் நிரந்தமாக இடம் பிடிக்கத் தொடங்கியது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் இந் நடுகல் கல்வெட்டு உள்ளது. (E.I. Vol - IV, Pg 182)

ஸ்ரீ கோ விசைய நிரு / ப தொங்க விக்கிரம பரு / மற்க்கு யாண்டிருபத்தாறாவ / து படுவூர்க் கோட்டத்து மே / ல் அடையறு நாட்டு ஆமையூர் / மேல் நுளம்பன் படை வந்து தொறுக் கொள்ள பிரு / தி கங்கரையர் சேவகர் பெரு / நகர் அகரக் கொண்டக் காவிதி அகலன் கட் / டுவராயர் மகன் சன்னன் தளரா வீழ்ந்து பட்டான்

காவிதி -  படைத் தலைவருக்கு அரசன் தரும் ஒரு பட்டம்;  தளரா - மனங்குலையாமல், இளைப்பாராது

பல்லவன் நிருபதுங்க வர்மனுடைய இருபத்தாறாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 895) படுவூர்க் கோட்டத்தில் அடங்கிய மேற்கு அடையறு நாட்டுப் பகுதியான ஆமையூர் எனும் இன்றைய ஆம்பூர் மீது நுளம்பன் படை வந்து ஆநிரைகளைக் கவர்ந்தது. அப்போது பல்லவனுக்கு கட்டுப்பட்ட பிருதி கங்க அரையரின் படைத் தலைவனான அகலன் கட்டுவராயன் என்பவனுக்கு மகன் பொறுப்பு படைஅதிகாரி சன்னன் என்பவன் மனங்குலையாமல் போரிட்டு வீழ்ந்து வீர சாவடைந்தான். பெருநகர் அகரக் கொண்டக் காவிதி அகலன் கட்டுவராயனின் தந்தை ஆகலாம்.

இக் கல்வெட்டில் குறிக்கப்படும் கங்க மன்னன் பிரிதி கங்க அரையன் என்பவன் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி ஆவான். சன்ன்ன் என்ற பெயர் Silla  வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயரில் வழங்கிகின்றது, Chungnyeol 1274 - 1308 AD >  சன் நய்யல் > சன்(னன்) நய்யன். சீனத் தாக்கத்தால் கொரியத்தில் ன் > ங் எனத் திரியும். மேலே ஒரு கல்வெட்டில் நய்ய வடுகன் என்ற பெயரையும் நோக்குக.

அகலன் என்ற பெயர் எதியோபிய நாகரிகத்திலும் உண்டு Agalbus Sepekos 500 - 478 BC > அகலவ(ன்) சிப்பிக(ன்); இன்னொருவன் பெயர் Agalbul  70 BC > அகலவல் என்பது.   

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆசனம்பட்டு எனும் ஊரில் 9 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது. (தொல். வே. அர., பக். 149)

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப பருமருக்கு /  இருபத்தொன்பதாவது படுவூர் கோட்டத்து பாலி / நாட் டொச்சூர் சந்திரசேகரராள குளைய மாரன் தொறு கொள்ள சிறுபாழ்நாட்டு அச் / சமங்கலமுடைய / வேட்டரடி வியம / ன் தொறு மீட்டுப் பட்டார்

அடி - சேவகன் எனும் படைஆள்

பல்லவன் கம்ப வர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 898) அவன் ஆளுமையை ஏற்ற படுவூர்க் கோட்டத்தில் அமைந்த பாலி நாட்டின் ஒச்சூரை சந்திரசேகரன் எனும் சிற்றரசன் ஆண்டு கொண்டிருந்தான். குளைய மாரன் என்பவன் ஒச்சூர் ஆநிரைகளைக் கவர்ந்து விட சிறுபாழ்நாட்டு அச்சமங்கலத்தைச் சேர்ந்த வேடனுக்கு அடியான் வியமன் எனபவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.

புராண கருத்துகள் குமுகத்தில் வேரூன்றியதற்கு சான்றாக சிற்றரசனுக்கு சந்திரசேகரன் என்ற சமற்கிருத பெயர் அமைந்து உள்ளது. வியமன் என்ற பெயர் இகர > எகரமாகத் திரிந்து வேமன் என ஆகி ஆந்திர நாட்டில் வழக்கூன்றியது.

தமிழில் பெயர் ஈறாக அன் மட்டும் அல்லாமல் அல், அம் ஈறுகளும் வழங்கின. அவ்வாறு வழங்கிய தங்கன் வழி வந்த ஒரு கொரிய வேந்தன் பெயர் Beoleum BC 1661 - 1610 > விய்யல் இயம் > விய்யன் இயன். வியமன் 'மன்' ஈறு பெற்ற விய்யன் ஆகும்.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையில் விழுப்புரத்திற்கு 6 கி. மீ. வடக்கே அமைந்துள்ள ஏரியின் தலைமடைக்கு முன் நடப்பட்டுள்ள பலகைக் கல்லில் இந் நடுகல் வெட்டப்பட்டு உள்ளது. (நடு. பக்.470) / [விசய வேணுகோபால், பாண்டி, த. தொ. க. இதழ். பக். 15]

பிரையகம் யெறிந்த / க் கால்லப் போருட்ப / ட்டான் தெருக்கால்லா / ரு மகன் நீலகண்ட(ரைச) / ன் கல்

கால்லர் - காலாட்படை (Infantry); தெருக்கால்லார் - தெருக் காவல் மேற்கொள்ளும் காலாட்படை தலைவர்

பிரையகம் என்ற இடத்தை அழித்த காலாட்படையின் போரில் தெருக்காவல் மேற்கொள்ளும் காலாட்படைத் தலைவரின் மகன் நீலகண்ட அரைசன் வீரசாவடைந்தான். அவன் நினைவில் நட்ட நடுகல் இது.

பண்டு நகரங்களின் தெருக்காவலுக்கு காலாட்படையே ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறான ஒரு படை பிரையகம் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டு அதை அழித்து உள்ளது. இது நகர் முற்றுகைப் போர் ஆகலாம். அப்போரில் அப்படையின் ஒரு ஆள், இதாவது, அரைசர் பொறுப்பில் இருந்த நீலகண்டன், படைத் தலைவரின் மகன் இறந்துள்ளான். எளியோரும் அரைசர் ஆகி உள்ளனர் என்பதற்கு நீலகண்டன் ஒரு சான்று. கல்வெட்டில் அரசன் பெயர், ஆட்சி ஆண்டு குறிப்பிடாமல் உள்ளது. இக்கல்வெட்டு தமிழ் பிராமியில் இருந்து வட்டெழுத்து பிரியும் காலகட்டத்து எழுத்து பொறிப்பில் உள்ளது, மெய்எழுத்து புள்ளிகளுடன் உள்ளது. எனவே விஷ்ணு வர்மனின் இருளப்பட்டி கல்வெட்டிற்கும் முந்தையது இது எனலாம்.  இதை 3 - 4 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம்.

தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் கொளகத்தூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (கிரு.மா. கல். 86/1974)

மாந்த பருமற்கு இரபத்திரண்டா / வது வரி ஊரி நாட்டுவர் கரு இரும்புரை / சாத்தன்னோ / டு கற்றொறு /  கொள்ளுட் ப / ட்டாரு கல்

கற் - கன்று; கொள்ளுட் - கவர்தலில்; கல் – நடுகல்

யாருக்கும் அடங்காமல் தனி ஆட்சி செலுத்திய மாந்த வர்மனுககு இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 728) வரி ஊர் நாட்டவரான கரு இரும்பொறை சாத்தன் என்பவனோடு சேர்ந்து கன்றையும் ஆநிரையையும் கவரும் போது எதிரணிப் படை நடத்திய காப்புப் போர் தாக்குதலில் வீர சாவடைந்தான் பெயர் குறிக்கப்படாத படைவீரன்

இதில் இடம்பெறும் ஆள் பெயர்களை நோக்க இவர்கள் சேர மரபினரோ என ஐயம் ஏற்படுகின்றது. ஒரு சப்பானிய வேந்தன் ஈமப் (Posthumous) பெயர் Montoku 850- 858 CE > மாந்தக்கு (மாந்த + அக்கு) எனும் தமிழ்ப் பெயர்

கங்கர் ஆட்சி நடுகல்

கங்கர் முதலில் பல்லவருக்குக் கட்டுப்பட்ட மன்னர்களாயும், பின்பு பேரரசுச் சோழருக்குக் கட்டுப்பட்டவராயும் இருந்துள்ளனர். இவர்கள் சில போது பல்லவருடனும் பெரும்பாலும் பாணர் நுளம்பருடனும் போரிட்டும் உள்ளனர்.தருமபுரியின் தகடூர், செங்கம் பகுதிகளில் ஆட்சி செலுத்தி உள்ளனர். இவர்களுடைய நடுகற்கள் இருபத்து ஐந்திற்கு மேல் கண்டறியப்பட்டு உள்ளன.

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நவலை எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற நடுகல் கல்வெட்டு உள்ளது (தரும. கல். 1974/61)

ஸ்ரீ சிவமார பருமற்கி யாண்டு மூன்றாவது / கந்தவாண்ணாதியரையர் புறமலை நாடாள /  வாண பெருமன் கூடல்லெறிந்த ஞான்று சாத / வப்பன் / னார் படை / த்தன் கொட் /  டி உண்ணி / பட்டான்

தன் - தன்னை; கொட்டி - அடித்து

கங்க மன்னன் முதலாம் சிவமாறனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 682) அவனுக்கு அடங்கிய சிற்றரசன் கந்தவாண் அதிஅரையன் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது வாணபெருமன் கூடல் எனும் தீர்த்தமலையை அழித்த போது சாதவப்பன் என்பவனுடைய படை தன்னை அடித்து வீழத்த உண்ணி என்பவன் வீர சாவடைந்தான்.

வாண பெருமன் வாண மன்னனாக இருக்கலாம். உண்ணி என்ற பெயர் எகிபதிலும் வழங்கி உள்ளது. அங்கு ஐந்தாம் ஆள் குடியில் ஒரு மன்னன் பெயர் Unas also refered as unis > உண்ணி.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கணப்பனூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள 8ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (தரும. கல். 47/1973, பக். 7)

ஸ்ரீ சிவமார /  பருமற்கு யாண்டு நாற்பத்தேழாவது கந்தவாணதி அரைசரு புறமலை நாடா / ள அவர் மகனார் தெளிய நி(ஓர்)ஆர் சேவகர் வாணிக / ச் சடைனார் வெட்டக்கியார் கூடல் (வந்துவிட) அவர் / மே ஆனயாடி நின்று செ / ன்று பட்டார்

ஆனையாடி - யானை மேல் அமர்ந்து போரிட்டு; நின்று - இருந்து; சென்று – நீங்கி

கங்க மன்னன் முதலாம் சிவமாறனின் நாற்பத்தேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 726) அவருக்கு அடங்கிய கந்தவாண் அதிஅரைசர் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் அவருடைய மகன் தெளிய நிஓர்ஆர் உடைய படைத் தலைவர் வாணிகச் சடையன் என்பவன் கூடல் எனும் தீர்த்த மலையை ஆளும் வெட்டக்கி எனபவன் வேற்றிடம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து விட அவன் மேல் யானை மீது அமர்ந்து போர் புரிந்து (காயம் ஏற்பட்டதால்) போர்க் களத்திலிருந்து நீங்கி பின்பு வீரசாவடைந்தான்.

வெட்டக்கி வென்றான் வாணிகச் சடையன் தோற்றான். வேந்தன் ஆணையை ஏற்று சடையன் வெட்டக்கி மேல் போர்த் தொடுத்தான் போலும். யானைப் போர் குறித்த அரிய பதிவு இது எனலாம்.                    

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள சந்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட  வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு தருமபுரி அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (கிரு. மா. கல். 74/2005)

ஸ்வஸ்தி ஸ்ரீ / கட்டானை பருமற்கு யாண்டு முப்பதாவது பெரும் பாணி / ளவரைசர் எயிநாட்டு சந் / திரபுரம் எறிந்த ஞான்று ப / ட்டார் (மிணலூர்) சேட்டனார்

எறிந்த - அழித்த; ஞான்று - அப்போது; பட்டான் - வீர சாவடைந்தான்

கங்க மன்னன் ஸ்ரீ புருஷன் எனும் கட்டானை பருமருடைய முப்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 758) பெரும் பாண் இளவரைசர் எயில் நாட்டுப் பகுதியான சந்திரபுரம் எனும் சந்தூரை அழித்த போது ஏற்பட்ட போரில் மிணலூர் சேட்டன் வீர சாவடைந்தான்.

சேட்டன் என்ற பெயர் இகர ஈறு பெற்று சேட்டி எனவும், உகர ஈறு பெற்று சேட்டு எனவும் வழங்கும். சேட்டு என்ற பெயர் கொண்டோர் வட ஆர்க்காடு பகுதியில் இன்றும் உளர். தேனி அருகே உள்ள ஓர் ஊர் பழனிசேட்டி பள்ளி. எகிபதில் 6 ஆம் ஆள் குடியில் ஒரு வேந்தன் பெயர் Seti > சேட்டி என்பது. துருக்கியின் திராய் நகர அரச குடியில் ஒருவர் பெயர் Zetes > சேட்டி என்பது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டம் சந்தூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற நடுகல் கல்வெட்டு உள்ளது. (கிரு. மா. கல். 71/2005)

ஸ்வஸ்தி ஸ்ரீ கட்டானை பருமற்கி யாண்டு நாற்பத்தைந்தாவது பெரும் /  பாணிளவரைசர் வேளால நாடாள பெருமுகை கலியட / க்கியார் சேவகன் கட்டிய விச்சன் / புலிக் குத்திப் பட்டான்
குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று;  பட்டான் - புலியிடம் காயம் பட்டு இறந்தான்

கங்க மன்னன் ஸ்ரீ புருஷன் எனும் கட்டாணை பருமனுடைய நாற்பத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 773) அவருக்கு அடங்கிய பாணன் பெரும்பாண் இளவரைசர் வேளால நாட்டை ஆள அவருக்கும் அடங்கிய பெருமுகை ஆளும் வேள் கலியடக்கி என்பவருடைய படைஆள் கட்டிய விச்சன் என்பவன் ஊரில் புகுந்து அச்சுறுத்தி வந்த புலியை ஆய்தத்தால் குத்திக் கொன்று தானும் காயம் பட்டதால் வீர சாவடைந்தான். கலியடக்கி என்றால் போர் அடக்கி என்று பொருள்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சின்னாங்குப்பம் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது.(தரும. கல். 18/1973)

ஸ்ரீ சிரீ புருச பருமற்கு - - - - / தாவது பிருணிதுவியார் புறமலை / நாடாள மழவூர்த் தொருக் கொண்ட ஞா / ன்று செருப்பச் சடையன் பட்டான்

கங்க மன்னன் ஸ்ரீ புருஷ பருமன் ஆட்சி ஆண்டு சிதைந்து உள்ளது. அவனுக்கு அடங்கிய பிருணிதுவி என்பவன் புறமலை நாட்டை ஆளும் காலத்தில் அவருடைய படையினர் மழவூர் ஆநிரைகளை கவர்ந்த போது அங்கத்து காவல் படையினரால் தாக்கப்பட்டு செருப்பச் சடையன் என்பவன் வீர சாவடைந்தான். கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்.

தருமபுரி அகழ் வைப்பகத்தில் படுத்தான்கொட்டாய் எனும் ஊரில் இருந்து கொண்டுவரப்பட்ட நடுகல் கல்வெட்டு. (தரும. நடு. அகழ். பக். 27)

சிரி பிரிதி கங்கதி கட்டாணை பரு / மற்கு யாண்டு பத்தாவது கோவூர் / சிங்க /  வரும /  ராள அவர் சே /  வகர் கி / ளகன் பாடி / படை வாணிகத் தாழமர் /  தொறு மீட்டுப் பட்டான்.

ஆள - ஆட்சி புரிய;  சேவகர் - படைத் தலைவர், படைஆள்; தொறு - ஆநிரை; பட்டான் - வீர சாவடைந்தான்

கங்க மன்னன் ஸ்ரீ புருஷனூடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய கோவூர் நாட்டை சிங்க பருமன் என்பவன் ஆண்டு கொண்டிருக்க அவருடைய கிளகன் பாடிப் படையைச் சேர்ந்த வாணிகத் தாழமன் என்ற படைத் தலைவன் பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்டு வீர சாவடைந்தான். ஆட்சி ஆண்டை கல்வெட்டியலார் இரா. பூங்குன்றன் 26 என படித்து உள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)

ஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு அருங்கள்வர் கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)

கட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை

பாண்டியர் ஆட்சி நடுகல்

பாண்டியர் ஆட்சிக் கால நடுகற்கள் மிகக் குறைவாகவே கிட்டி உள்ளன. இது பாண்டிய நாட்டில் நடுகல் மரபு அருகியே வழங்கியதைக் காட்டுகின்றது. பாண்டிய நாட்டில் தலைப்பலி நடுகற்கள் கூடுதலாக இருப்பது நோக்கத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே உள்ள கழுகுமலை குசக்குடித் தெருவில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று காணப்படுகின்றது. (S. I. I. Vol. 14 No.31)

ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு யாண்டு இருபத்து மூன்று / அவ்வாண்டு மலை நாட்டு சடையங் கரு நந்தனார் / மேற் படை போய் அருவி ஊர்க் கோட்டை அழித்து / நன்று செய்து பட்டார் / பெரு நேச்சுறத்து எட்டி மண்ணனாயின மங்கல ஏனாதிகள் வீட்டு /  கோயிற் சேவகரிருவர் அவனிலோருவன் /  றொண்டை நாட்டு பூந்தண்மலி வினையந் தொழு சூரன் / ஒருவன் பேரேயிற் குடிச் சாத்தனக்கன்

நன்று - பெரிது, சிறப்பு, நல்லது; எட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன், அரசன் வழங்கும் ஒரு பட்டம்; கோயில் – அரண்மனை

பாண்டியன் மாறன் சடையன் எனும் பராந்தக வீரநாராயணன் ( கி.பி. 866 - 911) உடைய இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 889) மலை நாட்டை ஆளுகின்ற சடையன் கருநந்தன் மீது படை கொண்டு போய் அவனது அருவி ஊர்க் கோட்டையை பெருநேச்சுரம் எனும் ஊரை ஆளும் செட்டி மன்னனான மங்கல ஏனாதி என்பவனுடைய அரண்மனையில் காவல்பணி செய்யும் படைத் தலைவர்களான தொண்டை நாட்டின் பூந்தண்மலியைச் சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனும் மற்றொருவன் பேர் எயில் குடியைச் சேர்ந்த சாத்த நக்கன் என்பவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அழித்து பெருஞ் செயல் புரிந்து வீர சாவு எய்தினர்.

சடையன் கருநந்தன் சேரநாட்டின் மலைநாட்டை ஆண்ட ஆய் மரபு மன்னன்.  மங்கல ஏனாதி பாண்டியனுக்குக் கீழ்ப்பட்டு பெரு நேச்சுரம் எனும் கழுகு மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். இவன் சார்பில் போரிட்டு மாண்ட இரு மறவர்களும் வட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல்லவர் ஆட்சிப் பகுதி நடுகறகளில் உள்ள சொற்களும் பாண்டியர் நடுகல் சொற்களும் வேறுபட்டிருக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள மொழி அமைப்பு இக்கால் உள்ள மொழிஅமைப்பு போலவே இருப்பது நோக்கத் தக்கது.

தமிழ முன்னோரே கொரிய நாகரிகத்தை அமைத்தனர் என்பதற்கு சான்றாக சூரன் என்ற தமிழ்ப் பெயரைக் கொண்டு ஒரு மன்னன் ஆண்டுள்ளான். தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Churo BC 1062 - 997 > சூர(ன்). அதே போல் தென் அமெரிக்கப் பெருவின் இன்கா நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Manco Ca'pac I 1200 AD > மங்க காப்பக்(கன்).  மங்கன், மங்கலன் ஆகியன பண்டு வழங்கிய தமிழ்ப் பெயர்கள். ஒரு இரண்டாம் நிலை Chouchi அரசின் சீன வேந்தன் பெயர் Yang Nandang 429 -441 AD > யாண் நந்தன் என்பது. சீனத்தில் ன் > ங் எனத் திரியும்.

போசள ஆட்சி நடுகல்

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கொண்டம்பட்டி எனும் ஊரில் வட்டெழுத்துப் பொறிப்பில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (தரும. கல். 6/1972, பக். 78)

ஸ்வஸ்தி ஸ்ரீ சகரையாண் / டு நுளம்ப வீர சோழன் ஆளா நிற்க தள் / ளப்பாடி ஊர் ஏறிஞ்சு கன்று காலி கொண் / டு போகா நிற்க கொட்டு பூசல் சென்று பட்டான் / உதப்பியூர் உடைய னுங்கிலன் தொண் / டயன் மகன் மூக்கயன்

சகரயாண்டு - சக ஆண்டு; ஆளா நிற்க - ஆள; ஏறிஞ்சு - அழித்து; காலி - பசு, ஆநிரை; போகா நிற்க - போக, செல்ல;  கொட்டு பூசல் - தெருச் சண்டை [street fight, skirmish], பூசலோடு

சக ஆண்டு எத்தனை என்று குறிப்பிட வில்லை. போசளனான நுளம்ப வீர சோழன் ஆண்டு கொண்டிருக்க அவன் ஆட்சிக்கு உட்பட்ட தள்ளப்பாடி எனும் ஊரை அழித்து அவ்வூர்க் கன்றுகளையும் ஆநிரைகளையும் பகைவர் கவர்ந்து கொண்டு போக அதைத் தடுக்க நிகழ்ந்த தெருச் சண்டையில், பூசலில் உதப்பியூரைச் சேர்ந்த நுங்கிலன் தொண்டயன் என்பவனுக்கு மகன் மூக்கய்யன் என்பவன் வீர சாவடைந்தான்.

வீர சோழனை தமிழ்நாடு தொல்லியல் துறை போசளன் எனக் குறிப்பிடுகின்றது. இதில் ஆளா நிற்க, போகா நிற்க ஆகிய சொற்றொடர்கள் எதிர்மறையான சொற்பொருளில் குறிக்கப்பட்டு உள்ளன. மெக்சிகோவின் மாயப்பன் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Mooch Cocom 1203 - 1211 AD > மூக்(அன்) கக்கம்.

சோழர் ஆட்சி நடுகல்

சோழர் கால நடுகற்களில் செய்திகள் நீண்டதாயும் வட்டெழுத்து ஒழிந்து தமிழ் எழுத்து பொறிப்பு பெற்றுதாயும் ஒப்பீட்டில் பல்லவர் கால எழுதும்முறை, சொல்லாட்சி ஆகியவற்றினின்று மாறுபட்டதாயும் உள்ளன. சோழர் ஆட்சியில் தமிழகத்தில் வட்டெழுத்து கைவிடப்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கீழ் முட்டுகூர் எனும் ஊரில் தமிழ் எழுத்தில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (E. I. Vol  4, Pg. 179)

ஸ்ரீ மதிரை கொண் / ட கோப்பரகேசரி பன் / மர்கு யாண்ட் இருபத்தொ / ன்ப(தா)வது பெருமான / டிகளான் முக்கு / ட்டூர் தொறு /  (கொள்)ள மீ(ட்டுப்) பட்டா / ன் வடு(ந) / (வா)ரண்ட (வா)ரதன் தா / ண்டன்

பாண்டியனை வென்று மதுரையைத் தன் ஆட்சியின் கீழ் கொண்ட கோப்பர கேசரியான முதலாம் பராந்தகச் சோழனின் இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 936) பெருமானடிகளால் முக்குட்டூர் ஆநிரைகள் கவரப்பட அவற்றை மீட்டு வீரசாவடைந்தான் வடுந வாரண்டன் மகன் வாரதன் தாண்டன் என்பவன்.

வடுந என்பது வடுக என்பதாக இருக்கலாம். வார, வாரத ஆகிய தமிழ்ப் பெயர்கள் எதியோபிய நாகரிகத்திலும் பரவி உள்ளன. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Tsawi Terhak Warada Nagash 730 - 681 BC > சவ்வி தேர்காக்(அன்) வாரதன் நக்க(ன்).

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கீழ் முட்டுகூர் எனும் ஊரில் தமிழ் எழுத்தில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இன்னொன்று உள்ளது. (E. I. Vol  4, Pg. 179)

ஸ்ரீ / மதிரை கொ /  ண்ட கோப்பர / கேசரி வந்மற்கு யா /  ண்டு முப்பத்து இர(ண்)டாவது வடகரை முக்குட்டூர் கு / மார நந்தை புழ / (ல)ப்பன் பு / லி குத்தி / ன கரைனா /  டு

குமாரன் - மைந்தன் (son of the soil), குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று; கரைநாடு - ஆற்றங்கரை ஊர்

முதலாம் பராந்தக சோழனுடைய முப்பத்து இரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 939) பாலாற்றின் வடகரையில் அமைந்த முக்குட்டூர் எனும் ஊரில் புகுந்த புலியை அவ்வூரின் மைந்தன் (குமாரன்) அந்தை புழலப்பன் என்பவன் அப் புலியை ஆய்தத்தால் குத்திக் கொன்ற ஆற்றங்கரையில் அமைந்த ஊர் இது. அவன் இறந்தது பற்றி கல்வெட்டில் குறிப்பு இல்லை. அவன் வீரம் மட்டும் மெச்சிக் கூறப்பட்டு உள்ளது. அத்தகையோன் ஊர் இது என ஊர்ப பெருமையே கல்வெட்டில் விஞ்சி நிற்கின்றது.

நாமக்கல் மாவட்டம் கூளிப்பட்டி பெருமாள் கோவில் அருகே கிணற்றோரம் உள்ள 10 ஆம் நூற்றாண்டு நடுகல். (ஆவ. இதழ் 7, 1996, பக். 29)

மதிரை கொண்ட கோப்பர - - - - / கொடுக்க / மங்கலத் / தூராழ்வான் / சடையமரைய / ன் காலி கொ/ ள்ள மகனை /  ச் சேமஞ் செய்து / எதிரே / ய் நட / ந்து / சென் / று பட்டா / ன் ச / டை / ய மரை / யன் மகன் /  ஆரை / யன் / ஆயி / ரவன் / கல் பொ / றிப் / பிச் / சான் / தந் / தையா / ரைச் / சாத்தி

ஆழ்வான் - ஆள்பவன்; காலி - பசு, ஆநிரை; கொள்ள - கவர; சேமம் - ஏமம் [ச் + ஏமம்], காப்பு; கல் பொறிப்பி - நடுகல் நிறுத்தி கல்வெட்டு பொறித்து; சாத்தி -  ஒருவர் பெயர் நிலைத்திருக்கும் நோக்கில் அவர் நினைவாக ஒன்றைச் செய்தல் (செ. சொ. பி)

முதலாம் பராந்தகனின் (907 - 953) ஆட்சி ஆண்டு சிதைந்து உள்ளது.  கொடுக்க மங்கலத்து ஊரை ஆளும் சடையமரையன் என்பவன் பகைவர் ஆநிரைகளைக் கவரும் போது அதைத் தடுக்க ஏற்பட்ட போரில் தன் மகன் மேல் நிகழ இருந்த தாக்குதலில் இருந்து அவனைப் பாதுகாப்பாக அனுப்பி அவன் உயிர் காத்து தான் பகைவர்க்கு முன்னே சென்று போரிட்டு அதில் தாக்கப்பட்டு வீர சாவடைந்தான். தன்னைக் காக்கத் தன்னுடைய இன்னுயிரையும் ஈகம் செய்த தந்தையின் பெயரை நிலைக்க வைக்கும் நோக்கில் மகன் ஆரைய்யன் ஆயிரவன் நடுகல் நிறுத்து தந்தையின் ஈகத்தை அதில் எழுத்தில் பொறித்தான்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வெங்கட்டூரில் தமிழ் எழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (ஆவ. இதழ் 5,1995, பக். 16/17)

வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி / பன்மற்கு யாண்டு மூன்றாவது செங்குன்றத்து /  தூம்படைப்பூர் சாத்தயன் திருவூறல் சோள / நூர் ஊரழிஞ்சி தொறுக் கொள்ள கொட்டுப் பூ /  சல் போய் தொறு மீட்டுப் பட்டான்

தூம்பு அடைப்பு - வாயில் [gateway] அடைப்பு, கொட்டு பூசல் - தெருச் சண்டை, பறை அடித்து போருக்குச் செல்வது

வீரபாண்டியனின் தலைகொண்ட கோப்பர கேசரியான ஆதித்த கரிகாலச் சோழனுடைய மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 953) செங்குன்றத்தில் அடங்கிய தூம்படைப்பூரில் வாழும் சாத்தய்யன் திருவூறல் என்பவன் சோழனூரை அழித்து ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து விட அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூசலில் பங்குகொண்டு ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.

திருவூறல் உடன் பட்டான் / முத்தரையன் தும்பன்

அதே தொறுப் பூசலில் திருவூறல் என்பானுடன் சேர்ந்து போரிட்டு முத்தரையன் தும்பன் என்பவன் வீர சாவடைந்தான்

வீர பாண்டியனைத் தலைகொண்ட கோப்பர கேசரி /  பன்மற்கு யாண்டு மூன்றாவது செங்குன்றத்து தூம்ப / டைப்பூர் விக்கிரமாதித்தனாகிய தின்ம செட்டி மகன் / சாத்தயன் சோளனூர் ஊரழிஞ்சு தொறுக் கொ / ள்ளக் கொட்டுபூசல் போய்த் தொறு மீ /  ட்டுப் பட்டார்

சோழன் ஆதித்த கரிகாலனுடைய மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 953)  செங்குன்றத்தில் அடங்கிய தூம்படைப்பூரில் வாழும் விக்கிரமாதித்தனாகிய தி(ன்)ம்ம செட்டி என்பவனுடைய மகன் சாத்தய்யன் என்பவன் சோழனூரை அழித்து ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து விட அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூசலில் பங்கு கொண்டு ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்

சாத்தயன் உடன் பட்டான் அடியா / ன் ஊர் பேர(ய)ன் முத்தரை(ய)ன் காரி

அதே தொறுப் பூசலில் சாத்தய்யன் உடன் அவனுடைய படைஆள் ஊர்ப்பேரயன் முத்தரைய்யன் காரி என்பவன் வீர சாவு அடைந்தான். ஒரே பூசலில் ஆநிரைகளை மீட்க நால்வர் மடிந்த செய்தி தனித் தனியே வெட்டப்ப்டுள்ளது என்பது அந் நால்வருக்கும் தனித் தனியே மதிப்பு செய்யப்பட்டதைக் குறிக்கின்றது. திருவூறல் பெயர் முத்தரையன் தும்பன் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பதில் இருந்து அவன் திருவூறலுக்கு அடியான் என்பது புலனாகின்றது.

ஒரு சப்பானிய வேந்தனின் ஈமப் பெயர் Korei 290 -215 BC > காரி என்பது தமிழாகும்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் காட்டேரி என்ற ஊரில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இக்கால் வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (நடு. பக். 245)

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவீர பாண்டியனை / முடித்தலை கொண்ட /  கோப்பரகேசரி பருமற்கு / யாண்டு நாலாவது பானைச் சுணையைப் பூத்து வாண்டை வந்தழித்த விடத்து ஒந் / டப்படுத்து எதிரே பத்தரம் மு / ருவிப் பட்டினத்துப் பட்டா / ன் தோவி டென்.

ஒண்ட - பதுங்கி, மறைந்து,ஒளிந்து; பத்திரம் - குற்றுவாள், அம்பு; பட்டினம் - கடற்கரை ஊர், காவிரிப் பூம்பட்டினம்.

சோழன் ஆதித்த கரிகாலன் உடைய நான்காம் ஆட்சி ஆண்டில் (கி.பி.954) சோழனுக்குப் படைத் தலைவனாய் இருந்த பூத்து வாண்டை என்பவன் பானைச் சுணை எனும் ஊர் மேல் படை கொண்டு வந்து அழித்த இடத்தில் மண்ணோடு மண்ணாகப் பதுங்கிப்படுத்து கொண்டிருந்த தோவிடன் என்ற படைஆள் வாண்டைப் படை தனக்கு அருகே வந்ததும் திடீரென்று எழுந்து திகைப்புற எதிரே தோன்றி குற்றுவாளை உருவிப் போரிட்டு கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தில் வீர சாவடைந்தான்.

வாண்டையார் என்ற பெயருடையோர் இன்றும் உள்ளனர். இவர்களுடைய முன்னோர் சோழப் பேரரசில் படைத்தலைவராய்  பொறுப்பில் இருந்து உள்ளனர். காவிரி கடலில் கலக்கும் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை ஊரான காவிரிப் பூம்பட்டினம். அத்து என்ற சாரியை பூம்புகாரில் என்று பொருள் தருவதால் கடல் கொண்ட பின் சிற்றூராகிப் போன புகாரின் ஒரு அண்டைப் பகுதியில் பானைச் சுணை என்ற ஊர் இருந்து உள்ளது எனலாம். எனவே போர் சோழ நாட்டில் நடைபெற்று உள்ளது. ஆனால் மாண்ட தோவிடன் வாணியம்பாடி வட்டம் காட்டேரி ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவன் நினைவில் இந் நடுகல் அவன் உறவினரால் அங்கு நடப்பட்டது. எனினும் தோவிடன் யார் சார்பில் போரிட்டான் என்ற செய்தி கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கெரஹோடஹள்ளி எனும் ஊரில் தமிழ் எழுத்து பொறிப்பில் ஒரு நடுகல் கல்வெட்டு அறியப்பட்டுள்ளது. (தரும. கல். 139/1974)

ஸ்வஸ்தி ஸ்ரீ பூர்வ தேசமும் கங் / கையும் கிடாரமும் கொ / ண்ட கோப்பர கேசரி பந் / மரான உடையார் ஸ்ரீ ரா / ஜேந்திர சோழ தேவற்கு / யாண்டு 20 ஆவது நுளம் / ப பாடியாகிய நிகரிலி / சோழ மண்டலத்து / புறமலை நாட்டுப் /  பாகலப்பள்ளி ஊர் அ / ழிய எதிரே எறிஞ்சு /

பட்டான் வேசாலிப் பேர / ரையர் மருகன் அண்ணயன் மக /  ன் பப்பையன் இவன் மகன் / பாலிதேவன் இக்கல் நிறுத்தி / னான்

எறிஞ்சு - அழித்து; மருகன் - மருமகன்; நிறுத்தினான் - நட்டுவித்தான்

முதலாம் இராஜேந்திரச் சோழனின் 20 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி. 1032) நிகழ்வை ஒட்டி எழுந்த இக்கல்வெட்டு அவன் பூர்வ தேசத்தையும் கங்கையையும் கிடாரத்தையும் வென்று கைப்பற்றிய வெற்றிச் சிற்ப்புகளைக் முதலில் கூறத் தொடங்குகிறது. (இராசராசன் காலத்தில்) நிகரிலிச் சோழ மண்டலமாக நுளம்பப்பாடி மாற்றப்பட்டதையும் சுட்டுகின்றது. அந்த நுளம்பப்பாடியில் அடங்கிய புறமலை நாட்டின் பாகலப்பள்ளி எனும் ஊர் அழிப்பில் நிகழ்ந்த ஆநிரைப் போரில் ஆநிரைகளை மீட்க பகைவர் படையை எதிர்த்து அழித்து வீர சாவடைந்தான் வேசாலிப் பேரரையரின் மருமகனும் அண்ணயனின் மகனுமான பப்பைய்யன் என்பவன். இதை நினைவு கூறும் வகையில் பப்பைய்யன் மகன் பாலிதேவன் என்பவன் இந்த நடுகல்லை நட்டுவித்தான்.

அண்ணய்யன், பப்பைய்யன், பாலிதேவன் ஆகியோர் நுளம்ப மரபு அரசர்கள். நுளம்பன் ஐய்யப்ப தேவனின் இரு புதல்வருள் ஒருவன் இந்த அண்ணய்யன் இவனுடைய தமபி திலீப்பரசன் என்பவன்.                                                                                                                                         
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பட்டாலிக் கிராமம் எனும் ஊரில் கொங்கு சோழ அரசன் ஆட்சியில் இந்நடுகல் கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது.(ஆவ. இதழ் 7, 1996, பக். 31)

ஸ்வஸ்தி ஸ்ரீ /  கோ அபி / மான சோ / ழ ஸ்ரீ ராஜாத் ராஜ தேவ / ற்குத் திரு / வெழுத்திட்டு / ச் செல்லா நின்ற திரு / நாளி யாண் / டு பத்தாவ / து நாயக / விச்சி நாக / ந் சிலம்பி /  யேந் குறும் /  புள்ளரில் எ / ந் மணவாள / ந் காவன் அ / ரையனைச் / சாத்தி எடுப் / பிச்ச பிடாரி / கோயில் இ / து ரக்ஷிப்பா / ந் காலிற் பொடி / எந் தலை மேலிது

திரு எழுத்திட்டு - கோரிக்கை மடல் எழுதி; செல்லா நின்ற - நடக்க, நடக்கின்ற; நாயகன் - தலைவன், சிற்றரசன்; மணவாளன் - கணவன்; சாத்தி - ஒருவர் பெயர் நிலைத்திருக்கும் நோக்கில் அவர் நினைவாக ஒன்றைச் செய்தல்; எடுப்பித்த - கட்டிய; ரக்ஷிப்பான் - காப்பவன்; பொடி – தூசு
கொங்குப் பகுதியை ஆண்ட சோழருள் அபிமான சோழ இராசராசனுக்கு கோரிக்கை மடல் எழுதி நடக்கின்ற திரு நாளி பத்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1090) குறும் பிள்ளர் தலைவன் விச்சி நாகன் என்பவனுக்கு மகளான சிலம்பி எனும் நான் என் கணவன் காவன் அரையன் என்பவன் பெயர் நிலைத்து இருக்கும் பொருட்டு கட்டிய பிடாரிக் கோயில் இது. இதை அழியாமல் காப்பவனுடைய கால் தூசியை என் தலை மேல் இட்டு பூசை செய்வேன்.

குறும் பிள்ளர் வேட்டுவ இனத்தவர் ஆவர். மனைவி ஒருத்தி தன் கணவனுக்காக எடுப்பித்த நடுகல் இது. அரையன் என்ற பெயர் எதியோபிய நாகரித்திலும் உள்ளது. ஒரு மன்னன் பெயர் El Aryan 3914 - 3836 BC > எல் அரையன். ஒரு சப்பானிய வேந்தனின் ஈமப் பெயர் Kobun 672 AD > காபன் > காவன் என்பது. இவனுடைய இயற்பெயர் Otomo > ஓடம(ன்).

சித்தூர் மாவட்டம் புங்கனூர் வட்டம் நெலப்பள்ளி எனும் ஊரில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது.(ஆவ. இதழ் 12, 2001, பக். 2)

ஸ்ரீ மாவலிவாண விச்சாதிரரான / புழலம் மரையர் மகன் ஸ்ரீ கண் /  டைய்யன் முகப்பு வேட்டையில் சேதட்டியார் / மகன் இந்தப்பன் அவர் கோயிற்றமன் புலி குத்தி / ய்ப் புலியுந் தானுமுடனேய் பட்டான் இதுக்குக் கு / டுத்த மண்ணழித்தான் க(ங்)கை யொ - / (டுகு)மரியிடை (ய்) ச் செய்த பாவங் கொள்வான் 

முகப்பு - முதன்முதல், தொடக்க, முன்; கோயிற்றமன் - கண்காணிப்பில், கண்முன்னே;  குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொனறு

வாண மரபு அரசருள் சில நடுகல் கல்வெட்டில் மாவலி வாண அரையன் என்ற இவன் பெயர் இடம் பெறுகின்றது. குடியாத்தம் வட்டம் கொண்டத்தூர் நடுகல் கல்வெட்டில் சக ஆண்டு 932 என குறிக்கப்படுவதால் இவன் கி.பி. 1010 இல் ஆட்சி செய்தவன் என அறிய முடிகின்றது. இவனுக்கு விச்சாதிரராய் விளங்கும் புழலம்ம(ன்) அரையன் என்பவனுடைய மகன் ஸ்ரீ கண்டைய்யன் என்பவன் முதன்முதலாக வேட்டைப் பழகும் போது அவனுடன் வேட்டைக்கு சேதட்டி என்பவனுடைய படைஆள் இந்தப்பன் என்பவன் சென்றான். அப்போது திடீரென்று ஸ்ரீ கண்டைய்யன் கண்காணிப்பில் அல்லது கண்முன்னே ஒரு புலி இந்தப்பனை தாக்கி அழிக்க உடனே இந்தப்பன் ஆய்தத்தால் அதைக் குத்திக் கொல்ல புலியும் அவனும் என இருவரும் அதே இடத்தில் இறந்தனர். இதற்காக இந்தப்பனுக்கு நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது. இந்தக் கொடை மண்ணை அழித்தவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழ்வோர் செய்த பாவத்தை அனுபவிப்பான் என சாவிக்கப்பட்டுள்ளது.

Vicchad (विच्छद)  என்பதற்கு மானியர் உவில்லியம்சின் ஆங்கில சமற்கிருத அகராதியுள் uncover, unclothe ஆகிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாவலி வாணராயனுக்குப் போர்ப் பயிற்சியின் போதும், போரின் போதும் அணிவிக்கும் காப்புக்கவச ஆடையைக் களைய உதவுபவன் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. புழலம்ம(ன்) அரையன் ஒரு சிற்றரசனாகவோ அல்லது படைத் தலைவனாகவோ மாவலிவாணராயனிடத்து பணி செய்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.

தென்னிந்திய வீரக் கற்கள் எனும் நூலுள், 2008,  வெ. கேசவராஜ் மேற்கோல் காட்டி உள்ளது, தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் குரும்பட்டி எனும் ஊரில் உள்ள நடுகல் கல்வெட்டு. ( தரு. கல்.1974 / 66)

ஸ்ரீ மாவலி வாண கொட்டி வேங்கை மீடிந்த / ஞான்று புலய மன்னர் புறமலை நாடாள / அவர் அடியான் இநொட்டைப் பெருவணயன் மகன் மகன் பட்டான் தாழன் அவர்க்கு / நெற்றமை பட்டி தீர ஏரிக் கீழ் அறு செறுவு / பேர் ஏரிக் கீழ் கருமீன் விற்று மணட்டி / இது அரமழித்தான் பாதகன்

கொட்டி - அடித்து; வேங்கை - வங்கத்து பெரும் புலி வகை; மடிந்த - செத்த; அடியான் - சேவகன், படைஆள்;  மகன் - படைஆள்; கீழ் - கிழக்கே; செறுவு - வயல், அரசன் வழங்கும் நிலக் கொடை; மணட்டி(மணை + அட்டி) - தாழ்வான மண் தடுப்பு மேடை, மண் தடுப்பு; பாதகன் - துரோகி.

மாவலிவாண ராயனுக்குக் கீழ்ப்படிந்து புறமலை நாட்டை புலைய மன்னன் ஒருவன் ஆண்டு வரும் போது அவனுக்கு படைத் தலைவனாக விளங்கும் இநொட்டைப் பெருவணயன் என்பவனுடைய படைஆள் ஒருவனது மகன் தாழன் என்பவன். மாவலி வாணராயன் வேட்டையில் இருக்கும் போது தாழனை ஒரு வேங்கைப் புலி தாக்கிவிட அவன் வீர சாவு எய்துகிறான். அதே வேளையில் மாவலி வாண ராயன் அந்த வேங்கை மீது அம்படிக்க அது செத்துப் போகின்றது. மாவலிவாண அரையன் கண்முன்னே தாழன் இறந்ததால் அவனுக்கு நெய்த்தோர் பட்டி நிலமாக தீர ஏரிக்குக் கிழக்கே ஆறு அளவை வயலும், பேர் ஏரிக்குக் கிழக்கே கருமீன் விற்பதற்கு மண்தடுப்பு மேடையும் தானமாக வழங்கப்பட்டது. இந்த அறம் அழித்தவன் ஒரு பாதகன் என சுட்டப்பட்டு உள்ளது. அல்லது மிடிந்த (மிடுக்கு) என்பது விரைந்த என்று பொருள்படுமானால். மாவலி அடித்த அம்பிற்கு மிரண்டு விரைந்து ஓடிய வேங்கை எதிரே மறித்த தாழனைக் கொன்றது அதனால் அவனுக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது எனக் கொள்ளலாம்.

இக்கல்வெட்டின் வாயிலாக 10 ஆம் நூற்றாண்டில் புலையரும் நாடாண்டு உள்ளனர் எனத் தெரிகின்றது. மதம் நன்கு வேரூன்றியதற்கு அடையாளமாக பாதகன் என்ற சமற்கிருத சொல் ஆளப்பட்டு உள்ளது. ஈரானின் எலாம் நாகரிகத்தில் Simashki ஆள்குடியில் ஒரு மன்னன் பெயர் Tazitta I 2040 - 2037 BC > தாழித்தன் [தாழ்(அன்) + இத்தன்]-     

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் - ஊத்தங்கரை சாலையில் கொரட்டி எனும் ஊரில் தமிழ் எழுத்தில் அமைந்த 9 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது.(ம. காந்தி & ப. வெங்கடேசன் ஆவ. இதழ் 12, பக் 5)

ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது / வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி / யுமாள காடு வெட்டிப் படை ஆறு (கு)ழுகூர் மேல் /  வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ / யிற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு /  குதிரையும் மேலரையும் குத்திப் பட்டான் நெ / த்தோர் பட்டி

எறிந்த - அழித்த; ஞான்று - அது போது; கோயிற்றமன் - கண்காணிப்பில், கண்முன்னே; மேலர் - மேல் அமர்ந்தோர்

வலியடக்கியார் எனும் சிற்றரசருக்கு ஏழாவது ஆட்சி ஆண்டில் வலியடக்கியார் போவூர் நாட்டு ஐநூற்று நிலத்தை ஆண்டு கொண்டிருந்த போது பல்லவக் கிளை மரபினனான காடு வெட்டியின் படை ஆறு குழுகூர் மீது வந்து ஊரழித்த போது நடந்த போரில் வலியடக்கியார் கண்முன்னே வாணிகனான வாண் இளவரையன் காடு வெட்டிப் படையின் இரு குதிரைகளையும் அதன் மேல் அமர்ந்துள்ள வீரர்களையும் ஆய்தத்தால் குத்திக் கொன்று வீர சாவடைந்தான். அதற்கு போரில் குருதி சிந்தியமைக்கு அரசனால் வழங்கப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வாணிக வாண் இளவரையனுக்கு வழங்கப்பட்டது.

வலியடக்கியார் எந்த வேந்தனுக்குக் கீழ் ஆண்டார் என்ற செய்தி குறிக்கப்பட இல்லை. ஒருகால் பல்லவர் ஆட்சி சிலகாலம் குலைந்திருக்கலாம். அப்போது இவர் தனி ஆட்சி செலுத்தியவராகலாம்.

கன்னட நடுகல் ஓர் ஒப்பீடு

தமிழ் நாட்டு நடுகல் மரபு போன்றே கருநாடகத்திலும் போரிலும், தொறுப் பூசலிலும் வீர சாவடைந்த மறவர் நினைவில்  நடுகல் நிறுத்தும் மரபு பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ்நாட்டை விட கருநாடகத்தில் தான் அதிக அளவான வீரக்கற்கள் எனும் நடுகற்கள் நிறுவப்பட்டு உள்ளன. 20 வகைத்தான சற்றொப்ப 2,650 நினைவுக் கற்கள் கருநாடகத்தில் கண்டறியப்பட்டு உள்ளன என Memorial stones என்ற தம் நூலுள் S. Settar குறித்துள்ளார். மிகப் பழைமை வாய்ந்த கன்னட நடுகல் கல்வெட்டு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழ் நடுகல் கல்வெட்டு போலவே கன்னட நடுகல் கல்வெட்டிலும் வேந்தன் அல்லது மன்னன் பெயர், அவன் ஆட்சி ஆண்டு, அவன் கீழ் உள்ள படைத் தலைவர் பெயர், போர் பற்றிய செய்தி,  அதில் மாண்ட மறவர் ஆகியன குறித்த செய்திகள் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழ்கக் கல்வெட்டில் இல்லாத சக ஆண்டு, நாள், நட்சத்திரம் ஆகியனவும் குறிக்கப்படுவது அதன் சிறப்பு ஆகும். இனி, கன்னட கல்வெட்டு செய்தி:

கோலார் மாவட்டம் முல்பகல் வட்டம் பைராகூர் எனும் ஊரில் 10 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி பொறிப்பு கொண்ட நடுகல் கல்வெட்டு. (கல்லெழுத்தில் காலச் சுவடுகள் எனும் நூல் Dr.  சூ. சுவாமிநாதன், E.C., Vol. 10 ,Mulpagal No.23) )

 சுவத்தி ஸ்ரீ மதிரை கொண்ட கொப்பரகெசரி / வர்ம்மகெ வரிஷம் இருபத்தொன்பத்துள் / பைய்தாகூர் ரவி நாடா மாரயம்மா மம்மா / கணிபராமன் துறவந் இக்கிசி அழகி சத்தான் / கல்நாடு பெர்ம்மாடிய சாமந்தப்பந் கொட்ட கழநி / ஒக் கண்டுகம் கெறைய கிழகெ

 வர்ம்மகெ - வர்மர்க்கு; பைய்தாகூர் - இன்றைய பைராகூர்; மம்மா - மருமான்; துறவந் - தொறு எனும் ஆநிரையை; இக்கிசி - மீட்டு; அழகி - குலைதல், பதனழிதல் எனும் பொருளுடைய அழுகி எனும் செப்பச் சொல்; சத்தான் - பட்டான், வீர சாவடைந்தான்; கொட்ட - கொடுத்த என்பதன் கருநாடக வட்டார வழக்கு; கழநி - வயல், உழவு நிலம்; ஒக் - ஒரு என்பதன் தெலுங்கு வழக்கு; கண்டுகம் - ஓர் அளவு; கெறைய - கரை உடைய, கரையின்; கிழகெ – கிழக்கே

பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றிய முதல் பராந்தகச் சோழனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.936) பைய்தாகூர் எனும் இனறைய பைராகூரில் இரவி நாட்டைச் சேர்ந்த மார அம்ம(ன்) என்பவனுக்கு மருமகன் எனும் படைஅதிகாரியான கணிபராமன் என்பவன்  பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டபோதும் பகைவர் தாக்குதலில் உடல் உருக்குலைந்து வீர சாவு அடைந்தான். இதற்காக கல்நாட்டை ஆளும் பெருமானடி சாமந்தப்பன் என்பவன் நெய்த்தோர்ப் பட்டியாக கொடுத்த கழனி ஒரு கண்டுகம் அளவாகும். அது கரைக்கு (ஆற்றுங் கரையா அல்லது ஏரிக் கரையா என்று குறிக்கப்படவில்லை) கிழக்கே உள்ளது.

கோலார் அன்று சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கல்நாடு ஆண்ட பெருமானடி சாமந்தப்பன் என்பவன் அவனுக்கு அடங்கிய சிற்றரசன் ஆகலாம். மாரயம்மன் சாமந்தப்பனின் ஆட்சியை ஏற்ற ஊர்த் தலைவன் அல்லது வேள் எனலாம்.

யாழ்பாண அகராதி இக்கு என்பதற்கு ஆபத்து என்றும் இசி என்பதற்கு இழு, வலி என்றும் பொருள் தருகின்றது. ஆக இக்கு+ இசி = இக்கிசி என்பதை இடரிலிருந்து இழுத்தல், விடுவித்தல் இதாவது, மீட்டல் என பொருள் கொள்வது சரியானதே. தமிழுக்கே சிறப்பாக உரிய ழகரம் இக் கல்வெட்டில் அழகி, கழனி ஆகிய இரு சொற்களில் பதிவாகி உள்ளது. வருஷம் என்ற சொல்லுக்குப் பின் வரும் சொற்கள் எவையும் சமற்கிருத வழிவந்தவை அல்ல யாவும் தமிழே. ஆனால் செப்பமான வழக்காக அல்லாமல் சிதைந்து வழங்குகின்றன. இதைத் தமிழ் என ஏற்பது இகழ்ச்சி. இதன் மூலம் 10 ஆம் நூற்றாண்டு வரை கருநாடக மக்களுடைய பேச்சு வழக்கு மொழி தமிழின் கொச்சைத் திரிபான அரைத் தமிழ் என முடிபு கொள்ளலாம். இதை மூல கன்னடம் (proto kannada) என்று கூறுவதும் தவறு. கன்னடத்தில் கெரை எனப்படும் கரை எனும் சொல்லை தமிழக ஊர்ப்புற மக்கள் இன்றும் கெர எனறே வழங்குகின்றனர். செத்தான் என்பது சத்தான் என எ > அ திரிபில் வழங்குகின்றது. தமிழின் தொறு துற என திரிந்துள்ளது. 'கு' எனும் தமிழின் நான்காம் வேற்றுமை கன்னடத்தில் 'கே' என வழங்கின்றது. சில தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும் 'கு' என்பது 'கே' எனப் பதிவாகி உள்ளது என்பது தமிழக மக்கள் வழக்கிலும் சிறு அளவில் 'கே' நான்காம் வேற்றுமையாக வழங்கியது என்பதைக் காட்டுகிறது.

தென்னிந்திய வீரக்கற்கள் எனும் நூலில் வெ. கேசவராஜ் மேற்கோல் காட்டிய ஒரு கன்னட நடுகல் கல்வெட்டு. (E.C., Vol. X, Cm. no. 69)

Svasti sri kolattura toru gole / sevaga Mudude toruva Ikkisi Sattan / idak amange kottodu ay-gole-kalani

ஸ்வஸ்தி ஸ்ரீ கொளத்தூர தொறு கொளி / சேவக முதுடே தொறுவ இக்கிசி சத்தன் / அமங்கே கொட்டொடு ஐ கொளி களநி

தொறு - ஆநிரை; கொளி - கொளில், கவர்வில்; சேவக - சேவகன் எனும் படைஆள்; தொறுவ - தொறுவை, ஆநிரையை; இக்கிசி - மீட்டு; சத்தன் - பட்டான், செத்தான்; இதக் - இதற்கு; அமங்கே - அவன்கே > அவனுக்கு; கொட்டொடு - கொடுத்தனர்; ஐ - ஐந்து; களநி - வயல், உழவு நிலம்.

இந்த நடுகல் கல்வெட்டில் அரசர் பெயரோ ஆட்சி ஆண்டோ குறிக்கப்படவில்லை. கொளத்தூர் ஆநிரைகளை பகைவர் கவர்ந்து விட்டனர். அதை அடுத்து நிகழ்ந்த மீட்புப் பூசலில் அவ்வூரின் படைஆள் முதுடை என்பவன் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். அதற்காக அவனுக்கு (ஊரார்) ஐந்து அளவான கழனியைக் தொறுப்பட்டியாகக் கொடுத்தனர். அரசர், ஆட்சி ஆண்டு, போர்க் காரணம் முதலான செய்திகள் குறிக்கப்படவில்லை.

இதில் உள்ள அரைத் தமிழ்ச் சொற்கள் மேலும் சிதைவுறுவது சேவகன் > சேவகா, கழநி > களநி ஆகிய சொற்களில் விளம்பத் தோன்றுகின்றது. இது கன்னடம் மெல்லத் தனித் தன்மை பெற்றுவருதை சுட்டுகின்றது. தமிழின் உடைய எனும் ஆறாம் வேற்றுமைச் சொல்லின் உடை என்ற முன் இரண்டு ஒலிகள் கெட்டு ய = ய்+அ என்ற இறுதி ஒலியில் உள்ள அகரம் மட்டும் தங்கி நிலைத்து கன்னடத்தில் ஆறாம் வேற்றுமை ஆனது எனலாம். எனவே கன்னடம் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னீடேயே ஒரு முழு வளர்ச்சி பெற்ற தனி மொழியாக உருவானது என்று கொள்வதில் தவறு இல்லை. அதற்கு முன் கருநாடகத்தில் அது அரைத் தமிழாய் (Demi Tamil)  இருந்துள்ளது என்பதே உண்மை.

தெலுங்கு நடுகல் ஓர் ஒப்பீடு 

தமிழ்நாட்டு நடுகல் மரபு போன்றே ஆந்திரத்திலும் தெலுங்கு நடுகல் மரபு வழங்கி வந்துள்ளது. மொழி வேறுபாடு தவிர மற்ற எல்லாவற்றிலும் தமிழ்நாடு, கருநாடக நடுகற்களை முழுவதும் ஒத்ததாக உள்ளது.  Heroes, Cults and Memorials - Andhra Pradesh 300 - 1600 AD, 1994, என்ற தம் நூலில் சந்திர சேகர ரெட்டி என்பவர் இது குறித்து விரிவாக எழுதி உள்ளார். ஆந்திரத்தில் மொத்தம் 476 நடுகற்கள் அறியப்படுள்ளன. இது தமிழ்நாட்டை விட எண்ணிக்கையில் அதிகம். என்றாலும் இவை பெரும்பாலும் இராயலசீமைப் பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இனி,  Inscriptions of Andhra Pradesh , Cuddapah District, Vol - 1, 1977, P V Para Bhrama Sastry,  எனும் நூலில் இடம் பெறும் சில நடுகல் கல்வெட்டுகளை ஆய்வோம். 

கடப்பை மாவட்டம் இராயசோடி வட்டம் குருகுபள்ளி எனும் ஊரில் 10 நூற்றாண்டைச் சேர்ந்த பழைய தெலுங்கு எழுத்து பொறிப்பில் உள்ள நடுகல் இது. (165 / No. 492 of 1968)
Svasti Sri Kadasanditallu magaanru / e(npuna) kaala prayiti singhabupule / podichi chadi podichi / padiyen

ஸ்வஸ்தி ஸ்ரீ கடஸந்திதல்லு மகான்று /  எ(ன்புன) கால ப்ரய்தி ஸிங்கbuபுலி / பொடிசி சடி பொடிசி / படியேன்

மகான்று - மகன் எனும் படைஆள்; கால - காலை; ப்ரய்தி(சமற்) - முன் இழுத்து செல்; ஸிங்கbuபுலி -probably a tiger என விளக்குகிறார் பரப்பிரம்ம சாத்திரி; பொடிசி > தமிழில் பொடித்து > பொடிச்சு > பொடிச்சி < பொடி - அழித்து , கெடுத்து ( to destroy); சடி > தமிழில் சடிலம் - அரிமா, நெருங்கிய பிடரி மயிர்(சடை) உள்ள சிங்கம் (செ.சொ.பி); படியேன் - பட்டான், வீர சாவடைந்தான், தமிழில் வீழ்தல் எனும் பொருளுடைய படு என்பது தெலுங்கில் படி எனத் திரியும்

வேட்டையின் போது எதிர்பாராத வகையில் ஒரு புலி கடஸந்திதல்லு என்பவனுடைய மகன் எனும் அதிகாரப் பொறுப்புள்ள படைஆள் என்பு உடைய காலைக் கவவி முன்னோக்கி தொலைவாக இழுத்துச் சென்று அவனை அழித்தது. சாகும் முன் அவன் அந்த சிங்கத்தை அழித்து வீர சாவடைந்தான்.

தமிழில் எறிந்து பட்டான் என்பதே தெலுங்கில் பொடிசி படியேன் என்று வழங்குகின்றது என்பது தமிழ் நடுகற்களை படிப்பவர் புரிந்து கொள்ள முடியும். தமிழில் பண்டு றகரம் டகரமாக ஒலித்ததை கருத மகான்று என்பது மகான்டு என்றே பலுக்கப்படவேண்டும். இதற்கு தெலுங்கில் வாடு, வீடு, எவடு என ஆண் பால் ஒருமை ஈறாய் இன்றும் வழங்குவது நோக்கத்தக்கது. சிங்கம் புலி ஆகிய இரு சொல்லும் ஒருசேரக் குறிக்கப்படுவதால் புலியாக இருக்கலாம் என்று ஐயப்படுகின்றார் பரப்பிரம்ம சாத்திரி. இதில் ஆளப்படும் சடி என்ற சொல் சிங்கத்தைக் குறிப்பதால் அது தவறு என்று உணரலாம். பொடித்து என்பது தமிழில் அழித்து என்று பொருள்படும். அதன் பேச்சு வழக்கு சொல் தான் இங்கு ஆளப்படும் > பொடிச்சு > பொடிச்சி >  பொடிசி என்பது. prayata என்ற சமற்கிருத சொல்லுக்கு Monier Wiliams உடைய சமற்கிருத ஆங்கில அகராதியில் far extended என பொருள் கூறப்பட்டுள்ளது. இச்சொல்லைத் திரித்து ப்ரய்தி என்ற சொல்லை முன்னே தொலைவாக இழுத்துச் செல் என்பதற்கு உருவாக்கி இருக்கலாம். கன்னடத்தில் போல உடைய்+அ என்ற ஆறாம் வேற்றுமை உருபுச் சொல்லில் ஈற்றில் உள்ள அகரம் மட்டும் நிலைத்து முன் உள்ள பிற எழுத்துகள் கெட்டன. ஆதலால் என்பு உடைய என்பது என்புன என இங்கு குறிக்கப்படுகின்றது. வீழ்ந்தான் என்பதை இக்கால் தெலுங்கில் படேடு என வழங்குவர் ஆனால் இங்கு படியேன் என அன் ஈறு இட்டு குறிப்பிடுவது இதை தமிழோடு நெருக்கமாக வைக்கின்றது. இதனால் தான் பல கல்வெட்டு சொற்களுக்குப் பொருள் விளங்கவில்லை என்று குறிக்கின்றார் பரப்பிரம்ம சாத்திரி. இதில் சிதைந்த தமிழ்ச் சொற்கள் வழங்குவதால் இதை அரைத்தமிழ் என்று கூறலாமே அன்றி தெலுங்கு என்றோ, மூல (proto) தெலுங்கு என்றோ உரைப்பது தவறு. ஆக 10 ஆம் நூற்றாண்டு வரை ஆந்திர நாட்டு மக்கள் மொழி அரைத் தமிழாய் இருந்தது என்பதே உண்மை நிலை.

கடப்பா மாவட்டம் புலிவேண்டுல வட்டம் சகலேரு எனும் ஊரில் சிவன் கோயில் முன் உள்ள மேடையில் பொறிக்கப்பட்டு உள்ள நடுகல் கல்வெட்டு (34 / No. 239 of 1968)

Svasti Sri (Anna - - - ma) / gaanthru ( -) ddi (- - - -) / gambu cheng(leru) / toru dinina / peddini po / dichi padiye

ஸ்வஸ்தி ஸ்ரீ (அண்ண - - - ம) / கான்று ( - ) த்தி ( - - - ) / gaம்பு செங்க(லேரு) / தொறு தினின / பெத்தினி பொ / டிசி படியே

தொறு - ஆநிரை; தினின - தின்ற; பெத்தினி -  ஒரு பேருரு கொண்ட விலங்கை; பொடிசி <  பொடித்து - அழித்து; படியே < பட்டான் - வீர சாவடைந்தன்.

அண்ண - -  - என்பவனுடைய மகன் எனும் படைஆள் - - - த்தி கம்பு எனபவன் செங்கலேரு ஆநிரைகளைத் தின்ற பெத்தியை அழித்துத் தானும் இறந்தான்.

பெத்தினி என்ற சொல்லில் உள்ள 'னி' என்ற தெலுங்கின் இரண்டாம் வேற்றுமை இதில் வருவது அம்மொழி தனித் தன்மை பெற்று வருவதைக் காட்டுகிறது. யாழ்பாண அகராதி பெந்தை < பெத்தை என்பதற்கு அருவருப்பாய் பருத்த (Monstrosity) எனப் பொருள் தருகின்றது. எனவே ஊருள் புகுந்து விலங்குகளை உண்பது புலி, சிறுத்தை என அறியப்படுவதால் பெருத்த என்ற இதன் விளக்கத்தை இதனோடு பொருத்திப் பார்த்தால் அது பெரும் புலியான வேங்கை என்பது தெளிவு. பெருத்த > பெத்த எனத் திரியும். தெலுங்கில் பெத்த என்றால் பெரிய எனப் பொருள்.

கடப்பா மாவட்டம் இராயச்சோடி வட்டம் இராயவரம் எனும் ஊரில் 9 அம் நூற்றாண்டு தெலுங்கு எழுத்தமைதியில் நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது.(31 / No. 358 of 1968)

Svasti sri nidla kaama / raajula urelki klo / kila  adiyamma / nadarura toru / gona jachchen

ஸ்வஸ்தி ஸ்ரீ நிட்லகாம / ராஜுல ஊரெள்கி க்ழோ / கில அடியம்ம / நதரூர தொறு / கொண ஜச்சென்

ஊரெள்கி < ஊர் எல்கி - ஊர் எல்லைக் காவலன்; தொறு - ஆநிரை; கொண - கொணர (மீட்டு); ஜச்சென் < சச்சென் < சத்தென் < சத்தான் - பட்டான், வீர சாவடைந்தான்

நிட்ல காமராஜுல் உடைய ஊர் எல்லைக் காவலன் கூழ் ஓகில(ன்) அடியம்ம(ன்) என்பவன் நதரூர் உடைய ஆநிரையை பகைவரிடம் இருந்து கொணர (மீட்டு) வீர சாவடைந்தான்.

ராஜுல மற்றும் நதரூர ஆகிய பெயர்ச் சொற்களில் ஈறாக வரும் அகரம் உடைய்+அ என்ற தமிழின் ஆறாம் வேற்றுமை உருபுச் சொல்லின் ஈற்றொலி ஆகும். முன் உள்ள மற்ற ஒலிகள் கெட்டு அகரம் மட்டும் தங்கி அதன் பொருளான உடைய என்பதையே கன்னடத்தில் குறிக்கின்றது. அந்த கன்னட வேற்றுமை உருபு தெலுங்கில் பயன்படுத்தப்பட்டிருப்பது இவ் இரு மொழிகளும் தொடக்கத்தில் ஒரே மூலத்தைக் கொண்டிருந்ததை இக்கல்வெட்டு சுட்டுகின்றது.

எல்லை என்ற சொல்லுக்கு எல்கை என்ற மற்றொரு திரிபுச் சொல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் குறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த எல்கை என்ற சொல்லில் இருந்தே எல்கி என்ற சொல் எல்லைக் காவலனைக் குறிக்க உருவாகியது எனலாம். கொணர என்பது தெலுங்கிலும் கன்னடத்திலும் Gona என்று திரிந்து மீட்பு என்னும் பொருளைக் குறித்தன. சச்சன் என்பது கொடுங் கொச்சையாக ஜச்சன் எனத் திரிந்து உள்ளது. ஆயினும் அன் என்ற தமிழ் ஆண் பால் ஒருமை ஈறைக் கொண்டுள்ளது. கன்னடம் போல் தெலுங்கிலும் 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழுக்கே சிறப்பாக உரிய ழகரம் வழங்கி இருப்பதையும் இத் திரிபுகளையும் கருத்தில் கொண்டு பார்த்தால் ஆந்திரத்தில் 10 ஆம் நூற்றாண்டு வரை அரைத் தமிழே மக்கள் பேச்சு மொழியாக இருந்தது என்று எண்ணத் தோன்றுகின்றது. ழகரம் அரசர் வெளியிட்ட கல்வெட்டுகளிலும் பயில்கின்றது.

ஆந்திர கருநாடக வடபகுதிகள் மௌரியர் ஆட்சிக்கு முன்னீடேயே நந்தர் ஆட்சியில் மகதத்திற்கு கட்டுப்பட்ட பகுதியாக ஆகிவிட்டன. எனவே அங்கு அரசு மொழியாக பிராகிருதம் நிலை பெற்றுவிட்டது. அதோடு வடநாட்டைச் சேர்ந்த சமண பௌத்த வேத நெறிகள் தக்காணத்தின் இப்பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியதன் காரணமாக பிராகிருதமே சமய மொழியாகவும் அப்பகுதிகளில் திணிக்கப்பட்டதால் அங்கு வழங்கிய தமிழ் மொழி சில நூற்றாண்டுகளில் மக்கள் பேச்சு வழக்கில் சிதைந்து விட்டதோடு இலக்கிய வழக்குத் தமிழ் முற்றாக அரசு சமய தளங்களில் போற்றுவாரின்றி ஒழிந்ததால் அங்கு தமிழ் அரைத் தமிழ் நிலையை அடைந்தது என ஊகிக்க முடிகின்றது. எனினும் சாதவாகனர் ஆட்சி வரையில் அங்கு செப்பமான தமிழ் ஒரளவிற்கேனும் வழங்கி இருத்தல் வேண்டும். அல்லாக்கால், வசிட்டி மகன் திரு சதகணி என்றும், அரசனுக்கு கவுதமி புதக்கு என்றும் தமிழில் சாதவாகனர் காசு வெளியிட்டு இருக்கமாட்டார்கள். இவர்கள் ஆட்சி கிருஷணா ஆற்றோடு முடிந்து விட்டது என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. பின் ஏன் இவர்கள் தமிழில் காசு வெளியிட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அங்கு மக்கள் மொழியாய் தமிழ் இருந்தது என்பதே இதற்கு விடை ஆகும்.

இவ்வாறு மக்கள் பேச்சு வழக்கில் சிதைவும், பிராகிருத சமற்கிருத சொற்கலப்பும் நேர்ந்ததால் அரைத் தமிழாகிப் போன மக்கள் மொழி 10 ஆம் நூற்றாண்டு வரை அவ்வாறே வழங்கிப் பின் தெலுங்காகவும், கன்னடமாகவும் தனித் தனியே பிரிந்து முழுவளர்ச்சி பெற்ற மொழிகள் ஆயின என்பதற்கு மேலே படிக்கப்பட்ட நடுகற் கல்வெட்டுகளே நேர்ச் சான்று. அரசர் மதத்துறையோர் வெளியிட்ட செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் அரை சமற்கிருத பயன்பாடு அதிகம் இருப்பதால் 10 ஆம் நூற்றாண்டுக்கு முன் மக்கள் பேசிய மொழி குறித்து அவற்றில் துலக்கமாக அறிய முடியாது.  ஆனால் அறிஞர் பலரும் அவற்றைத் தான் தம் ஆய்விற்கு துணையாகக் கொண்டு அவர் முடிவுகளை வெளியிடுகின்றனர். திரு பிரபாத் ரஞ்சன் சர்க்கார் மட்டுமே இதில் தெளிவான கருத்தை வெளியிட்டு உள்ளார் அவரது கருத்துகள் கீழே:
 
Tamil is one of the oldest languages of India. It is more than four thousand years old. Tamil had two daughters: Northern Demi - Tamil and southern demi - Tamil. There are two languages in the Northern Demi - Tamil group - Telegu and kannad. Southern Demi - Tamil also has two languages - Tamil and Malayalam. In addition there is the Tulu language which is a mixture of Northern Demi - Tamil and Southern  Demi - Tamil by Prabhat Ranjan Sarkar on 24 July 1963, Calcutta. Published in Varna Vijinana, Chapter: More on Suffixes and Prefixes (Discourse - 6)

Regarding the five Dravidian languages, including kannada, Tamil, Malayalam and Telugu, their pronouns, verb endings and case endings are of old Dravidoid tongue, but their vocabularies are demi - sanskritic. These languages use old Dravidoid and Sanskritic vocabularies. But the percentage of Samskrta words varies from 3% in Tamil to 74% in Malayalam. Old Tamil is 5,000 years old. It is very old language.

by Prabhat Ranjan Sarkar on 25 september 1990, calcutta. Published in: Prout in a Nutshell Part 17 The Evolution of Indian Languages

பார்வை நூல்கள்

Inscriptions of Andhra Pradesh, Cuddapah Dist. Vol I, Para Brahma Sastry, 1977
South Indian Memorial Stones - Rajan .K, 2000
செங்கம் நடுகற்கள் , தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1972
தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி I, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1975
தொல்குடி - வேளிர் -  அரசியல் (செங்கம் நடுகற்கள் ஓர் ஆய்வு), பூங்குன்றன் . ஆர், 2001 தமிழோசை பதிப்பகம்
நடுகற்கள், கிருஷ்ணமூர்த்தி .ச, 2004, மணிவாசகம் பதிப்பகம்
கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2007
கல்லெழுத்தில் காலச் சுவடுகள், Dr. சூ. சுவாமிநாதன்
தென்னிந்திய வீரக்கற்கள், கேசவராஜ் .வெ, 2008, காவ்யா வெளியீடு
ஆவணம் இதழ் 1991 - 2011, தொல்லியல் ஆய்வுக் கழகம் வெளியீடு, தஞ்சாவூர்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.