ஒரு பொம்மையின் வீடு- ஸ்ரீரஞ்சனி -ஆண், பெண் சராசரி மாதிரிகளையும், திருமண உறவில் ஒரு பெண்ணின் பங்கினையும் விமர்சனத்துக்குள்ளாக்கும் A doll's house என்ற Henrik Ibsenஇன் நாடகம் அந்த நேரத்தில் ஐரோப்பாவில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருந்ததாக அறிகின்றோம். அந்த நாடகம் முன்வைக்கும் கேள்விகள் இன்றும் எங்களுக்குப் பொருத்தமானவையாகவே உள்ளன, துரதிஷ்டவசமாக சமூகம் இன்னும்தான் மாறவில்லை.

இந்த நாடகத்தின் தமிழ் வடிவம் 'ஒரு பொம்மையின் வீடு' என்ற பெயரில் 'மனவெளி'யின் கடந்த அரங்காடலின்போது அரங்கேறியிருந்தது. மே மாதம் 4ம் திகதி மீண்டும் அதனைத் திரையில் பார்க்குமொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தது.  இந்த நாடகத்தின் ஒத்திகை ஒன்றைக் கடந்த மே மாதத்தில் பார்த்தபோது - அரசியின் அற்புதமான வெளிப்பாட்டை, இந்த நாடகம் சொல்லும் முக்கியமான கருத்துக்களை, சொற்களை மனதில் சிறைபிடிக்கச் சொல்லும் பி. விக்னேஸ்வரனின் அழகான தமிழ் மொழிபெயர்ப்பை அனைவரும் பார்க்கவேண்டுமென நான் ஒரு பதிவிட்டிருந்தேன். பின்னர் நாடகம் பற்றிய விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டுமென விரும்பினேன். ஆனால், அதற்கு நேரம் ஒத்துழைக்கவில்லை. இதனைத் திரையில் பார்த்த அனுபவம் பற்றி எழுதும்படி மனவெளி செல்வன் கேட்டபோது நேரம் சவாலாக இருக்கின்றது என மீண்டும் தவிர்க்க முடியவில்லை. சிறந்ததொரு கலைப்படைப்பினை வழங்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அனைவரினதும் கடமை என்பதற்கேற்ப அதுபற்றிய எனது சில மனப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கான பொருள்களுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வரும் நோறாவின் வருகையுடன் இந்த நாடகம் ஆரம்பமாகிறது. அப்படியொரு அலங்காரப் பொருளாகத்தான் நோறா வாழ்கின்றாள் என்பதற்கான படிமம் இது எனலாம். வந்ததும் வராததுமாக மக்றோன்களை வாயில் போட்டுவிட்டு அவற்றைச் சாப்பிடுவது கணவர் ஹெல்மருக்குப் பிடிக்காது என அவற்றை ஒளித்துவைக்கும் நோரா குழந்தைத்தனமான, கணவனுக்குப் பயந்த அல்லது கணவனைத் திருட்டுத்தனமாகவேனும் மேவ விரும்பும் ஒரு பெண்ணாக எங்களுக்கு அறிமுகமாகிறார்.

என்ரை சின்ன அணில் குஞ்சு என ஹெல்மர் அழைக்கும்போது அதில் பரவசப்படுவபவராக, அவரிடம் செலவுக்கு கையேந்தும் அப்பாவியாக, ஹெல்மருக்குப் பிடிக்காது என அடிக்கடி சொல்லிசொல்லி அவர் விரும்பாதவற்றைத் தவிர்க்கும் ஒரு கீழ்ப்படிவுள்ள, அன்பான மனைவியாக வெளிப்பார்வைக்குத் தோன்றும் நோறா, ஒளிப்பு மறைப்புள்ளவளாகவராகவும், தனக்குப் பிடித்தவற்றைப் பெறுவதற்காக சரசமாடக்கூடியவராகவும், தன்னைப் பற்றிப் பீற்றிக்கொள்ளும் சுயநலமிக்கவராகவும்கூட இருக்கிறார். முடிவில் கணவனின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுயிரை மாய்க்கக்கூடத் துணியும் நோறா, குடும்ப நலனுக்காக அவர் செய்த தவறிலிருந்து அவரைப் பாதுகாப்பாரென கணவன்மீது அவர் கொண்டிருந்த எதிர்பார்ப்புப் பொய்த்தவுடன் கிளர்ந்தெழும் ஒரு புரட்சிகரப் பெண்ணாக மாறிவிடுகிறார். இத்தனை வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட அந்த நோறா பாத்திரத்தை அரசி விக்னேஸ்வரனைத் தவிர வேறு எவரால் செய்யமுடியும் என நினைக்குமளவுக்கு மிகச் சிறப்பாக அதை வெளிக்கொணர்ந்திருந்தார் அரசி.

கடன் வாங்கக்கூடாது, பொய் சொல்பவர்கள் அவர்களது பிள்ளைகளையும் சூழலையும் நஞ்சாக்குகிறார்கள் என்றெல்லாம் ஹெல்மர் சொல்லும்போது சரிதானே, நல்ல வாழ்க்கைப் பெறுமதிகள் உள்ள ஒரு கணவர் என்று பாராட்டத் தோன்றுகிறது. அதேபோல் மனைவியை அழகாகப் பார்க்க விரும்பும் அவர் என்ரை சின்ன அணில், வானம்பாடி என்றெல்லாம் செல்லமாகச் சொல்லும்போது காதல்மிகுந்த ஒரு கணவராகத்தான் தெரிகிறார். ஆனால், நோறா பொய் சொல்லியிருக்கிறார், சட்டவிரோதமான செயலைச் செய்திருக்கிறார் என்றதும், எந்தச் சந்தர்ப்பத்தில் எதற்காக அவர் செய்தார் என்பது பற்றி எதுவும் யோசியாது தன் கெளரவத்தைப் பற்றி மட்டும் கவலையுறும்போது அதே ஹெல்மர் உச்சச் சுயநலத்துக்கே போய்விடுகிறார். சமூகம் பற்றிய பயமும், சமூகத்தின் அங்கீகாரமுமே அவருக்குப் பெரிதாகத் தெரிகின்றன. பிள்ளைகளுடனும் உறவில்லாமல் வெறும் பெயருக்காக மட்டும் வாழ்ந்துகொள் என ஆத்திமாகக் கத்தும்போதும், பின்னர் தன் கெளரவத்துக்குப் பங்கம் ஏற்படப் போவதில்லை என அறிந்ததும் மன்னிக்கவும், நோறாவுக்கு தன் வழிகாட்டல் மேலும்தேவை என வழிநடத்தத் தயாராகும்போதும், தன்னை ஒரு பொம்மை போல நடாத்தும் அத்தகைய கணவன் ஒருவன் வேண்டாமென விலகும் நோறாவிடம் தன் ஆதங்கத்தைக் காட்டும்போதும் அந்த ஹெல்மராகவே மாறிவிடுகிறார் ஹெல்மராக நடித்த ஜெயப்பிரகாஸ்.


 ஒரு பொம்மையின் வீடு  - ஸ்ரீரஞ்சனி -

கணவன் மனைவியிடையே நேர்மை வேண்டும் என்ற கொள்கையுடன் பிழை செய்தவர்களின் சூழல் அறிந்து அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியான மனபாவமுள்ள சினேகிதியாக நடித்த பவானி, நோறாவில் தகாத காதலைக் கொண்டிருந்த குடும்ப நண்பராக நடித்த குரும்பசிட்டி ராஜரட்ணம், சூழலின் பாதிப்புக்களின் எதிரொலியான நடத்தைகள் கொண்டவராக நடித்த செந்தில்நாதன், நானியாக நடித்த மாலினி பரராஜசிங்கம் ஈறாக அனைவருமே நன்றாக நடித்திருந்தனர். நாடகப் பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு அருமையாக இருந்தது.

இதனாலும் மனதைப் பற்றிப்பிடிக்கும் வசனங்களாலும் திரையில் பார்த்தபோதும் 'ஒரு பொம்மையின் வீடு' நன்றாக இருந்து. சாதாரணமாக ஒரு திரையிடலில் உள்ள விடயங்கள் எதுவுமின்றி உரையாடல்கள் மட்டும் நிறைந்தாக இந்த அளிக்கை இருந்தபோதும்கூட திரையிலும் இது வெற்றிபெற்றுள்ளது.  'ஒரு பொம்மையின் வீட்'டை அழகாகக் காட்டும் ஆரம்பக் காட்சி முதல் தேவையான இடங்களில் எல்லாம் பல்வேறு கோணங்களில் நடிகர்கள் ஒவ்வொருவரினதும் உணர்ச்சிகளைக் காட்டுவது ஈறாக கமெராவும் எடிற்றிங்கும் இதன் திரையிடலுக்கு மிகவும் வலுச் சேர்த்துள்ளன. இதனால் உலகம் பூரா உள்ளவர்கள் இதனைப் பார்ப்பது சாத்தியமாகி உள்ளது.

ஒரு பொம்மையின் வீடு

சுய அடையாளம், உறவு, திருமணம், பெண் என்பவற்றைச் சற்று விளங்கிக்கொள்ள இந்த நாடகம் உதவிசெய்யுமென்று நம்புவோம். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சட்டத்துக்குப் பிறம்பாக நடக்கலாமா, அந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்களின் பங்கென்ன, கணவன்-மனைவி இடையே ஒளிப்புமறைப்பு இருக்கலாமா, உறவுகளைக் காயப்படுத்தும் சமூக அங்கீகாரம் முக்கியமா, எதையும் வெள்ளையும் கறுப்புமாகப் பார்ப்பது வாழ்க்கையில் எப்படியான பிரச்சினைகளை உருவாக்கும், மனைவியையும், மக்களையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டியது தன் கடமை என நம்பும் கணவர்மார், அவர்களது யதேச்சையான போக்கால் பெண்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், பாலியல் தேவைக்கானவர்களாகவும் நோக்கும் மனப்பான்மையால் தொடர்பான பெண்களை மனரீதியாகத் தொலைத்துவிடுவது எவ்வளவு வாஸ்தவமானது என்பவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய இந்த நாடகத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.