எழுத்தாளர் சார்வாகனன் மறைவு!தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளரும் தொழுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்ற சார்வாகன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை  சென்னை திருவான்மியூரில் வால்மீகி நகரில் மறைந்தார். இவருக்கு 86 வயது. தமிழகத்தில் வெளியான இலக்கியச்சிற்றிதழ்கள் எழுத்து -கணையாழி - ஞானரதம் - தீபம் - தளம்  ஆகியனவற்றில் எழுதியவர். ஒருதடவை இலக்கியச்சிந்தனை அமைப்பின் பரிசும் பெற்றார். சென்னை வாசகர் வட்டம் 1970 களில் வெளியிட்ட அறுசுவை குறுநாவல் தொகுப்பில் இவருடைய அமரபண்டிதர் கதையும் இடம்பெற்றது.

காஃப்கா பாணியில் கதை எழுதுபவர் என்று இலக்கிய விமர்சகர்களினால் மதிப்பீடுசெய்யப்பட்ட சார்வாகனின் இயற்பெயர் ஸ்ரீநிவாசன். இவருடைய நூல்களை தமிழ்நாடு க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவருடைய மனிதநேய மருத்துவசேவையை பாராட்டிய இந்திய மத்திய அரசு ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இவருடைய மருத்துவ ஆய்வுக்கு தமிழ்நாடு மருத்துவக்கல்லூரியில் ஸ்ரீநிவாசன் கருத்தியல் (Srinivasan Concept) என்ற அங்கீகாரம் கிடைத்ததுடன் மாணவர்களின் பயன்பாட்டுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் தென் அவுஸ்திரேலியா மாநிலத்தலைநகரம் அடிலைற்றில் நடந்த தொழுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணர்களின் மாநாட்டிலும் கலந்துகொண்ட சார்வாகன் அங்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த கேர்ணல் ஹரிஹரன் - திரைப்படக்கலைஞர் டில்லி விசுவநாதன் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரரான சார்வாகன் - இலங்கை தமிழ் அறிஞர் கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதி கி.லக்ஷ்மண அய்யரின் துணைவியார் இலக்கிய ஆர்வலர் திருமதி பாலம் லக்ஷ்மணனின்;  நெருங்கிய உறவினருமாவார். 1951 இல் இவர் மருத்துவக்கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் இலங்கை வந்து சில கல்லூரிகளில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளிலும் கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.