இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2009 இதழ் 115  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை - 7
அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் ரம்யா நாகேஸ்வரன்
- ஜெயந்தி சங்கர் -

ரம்யா நாகேஸ்வரன் ஜெயந்தி சங்கர்சுமார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்ரன் எடுத்துக் கொள்ளும் வேலையில் ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்காரர். 1970ல் பிறந்த இவர் இந்தியாவில் தனது வழக்கறிஞர் பயிற்சியை முடித்த பிறகு அமெரிக்கா, ஸ்விட்சர்லந்து, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து பணியாறியவர். குழந்தைகளுக்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தலைவியாகி விட்டார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ரம்யாவின் வாழ்க்கைத் துணைவர் முனைவர் திரு. அனந்த நாகேஸ்வரன் பன்னாட்டு வங்கி ஒன்றின் உயரதிகாரி. இவர் ஒரு econimist மட்டுமின்றி 'Mint' போன்ற இதழ்களின் பத்தி எழுத்தாளரும் ஆவார். இவரை BBC போன்ற பல்வேறு ஊடகங்களின் நேர்காணல்களில் அடிக்கடி காணலாம். இவர்களுக்கு ஒன்பது வயதில் தன்யா என்ற ஒரு மகளும் ஏழு வயதில் வ்யாஸ் என்ற ஒரு மகனுமுண்டு.

தாய் நாட்டை விட்டு வெளியே பல வருடங்களாக வாழ்ந்து வந்தாலும், தன் நாட்டு மக்களுக்கு தம்மால் முடிந்த அளவில் உதவும் நல்லெண்ணம் கொண்ட சில வெளிநாட்டு இந்தியர்களில் ஒருவர் ரம்யா. இதற்கு இவருக்கு இவரது கணவரது தொடர் ஊக்கமும் நல்லாதரவும் இருந்து வருகிறது. சிங்கப்பூரில், 'Focus India Forum' எனும் அமைப்பை நிறுவி ஐந்தாண்டுகளாக நடத்தும் ரம்யா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நல்ல நோக்கங்களுக்கான பல நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர். நிதி திரட்டி பங்கீடு செய்வதுடன் நன்கொடையாளருக்கும் பயன்பெறுவோருக்குமான பாலமாகவும் இயங்கி வருகிறார். அத்துடன் முறையாகச் செயல்படும் நன்கொடை நிறுவனங்களைக் குறித்த விழிப்புணர்வையும் கொணர விரும்புகிறார். இதன் நீட்சியாக இந்தியாவிலிருந்து இவ்வாறான நிறுவனத் தலைவர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்து உள்ளூர் இந்தியர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக 'GOONJ' ன் நிறுவனர் திரு. அன்ஷ¤ குப்தாவை 2008ம் ஆண்டு வரவழைத்திருந்தார். அன்ஷ¤வுடன் 'Focus India forum' அமைப்புடன் இணைந்து ஐந்தாண்டுகளாகப் பணியாற்றியுள்ளார்.

ரம்யாப் பொருத்தவரை இலக்கியம் என்பது மனிதனை மேலும் ஆழமானதும் உயரமானதுமான ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியது. மனித இயல்புகளையும், இசை போன்ற கலைகளையும் உலகின் அனைத்தையுமே முன்பைவிட நெருக்கமாகவும் தெளிவாகவும் அறிய இலக்கியமானது பயன்பட வேண்டும். வாசகனை உற்சாகப்படுத்தியும் பண்படுத்தியும் அவனை மேம்பட்ட மனிதனாக்க வேண்டும். வாசித்த பிறகு, ஒரு விஷயத்தைக் குறித்த அவனின் பார்வை வேறொரு பரிமாணத்தை அடைதல் வேண்டும். சிறுகதைகளில், முகத்தில் அறைவது போல 'நீதி'யைச் சொல்வது கூடாது. இருப்பினும், வாசித்த பிறகு, ஒருவரைச் சில நொடிகளேனும் நிதானித்து யோசிக்கச் செய்தல் சிறப்பு என்பார்.

எழுத்தின் மொழிக்கோ கருவுக்கோ படைப்பாளியைப் பொறுப்பாக்குதல் சரில்லையென்று என்று கருதும் இவர் சொல்ல நினைக்கும் விஷயத்தை உளப்பூர்வமாகச் சொல்லி வாசனை வாசிப்பதில் முழுமையாக ஈடுபடச்செய்வது படைப்பாளிக்கு இருக்கும் முக்கிய பொறுப்பு என்பார். தன் கருத்துக்கும் கொள்கைக்கும் புறம்பானவற்றை வாசகனில் ஒரு வெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தவென்றே படைப்பாளி எழுதுவது கூடாது என்றெண்ணும் இவர் இன்னொன்றையும் சொல்வார். நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்கிற ஒரு படைப்பாளி கண்டிப்பாக பகிரக் கூடியவற்றை மட்டுமே ஈடுபாட்டுடனும் ஆத்மார்த்தமாகவும் எழுதுதல் வேண்டும்.

சிறுவயதில் பொழுதுபோகாமல் தொந்தரவு செய்யும் ரம்யாவை அவரது தந்தை சென்னை புத்தகக் கடைகளுக்குக் கூட்டிக்கொண்டு போய் விடுவாராம். நூறு இருநூறு என்று அவர் கையில் பணத்தைக் கொடுத்து, உனக்குப் பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல்வாராம். அப்படித்தான் இவரக்கு வாசிப்பிலும் அது தரும் மகிழ்ச்சியிலும் ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது.

ரம்யாவுக்கு எழுதுவதற்கான உந்துதலைக் கொடுத்தது - பெருநகரங்களின் மேல்த்தட்டு மத்திய வர்க்கத்தினரைக் குறித்து அதிகமும் எழுதி மறைந்த எழுத்தாளர் ஆதவனின் எழுத்துக்கள். மிகச் சாதாரண மனிதர்களையும், விஷயங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து எழுதிட விரும்பும் ரம்யா வாசகனை முன்பைவிட ஆழமாகச் சிந்திக்க வைக்கவே முயல்கிறார். பாத்திரங்களின் மனங்களில் ஊடுருவி, பாத்திரத்தின் சிந்தனைத் திசைகளையும் முறைமைகளையும் கற்பனை செய்து எழுத இவருக்குப் பிடிக்கும். தனக்குப் புரிந்ததும் தோன்றியதுமான சிறுதுளியைத் தன் வாசகனுடன் பகிர்ந்து கொள்ளும் விழைவு இவரில் உண்டு.

சம்பவம் சார்ந்தும் காட்சிப்படுத்துதல் சார்ந்தும் எழுதுவதையும் விட உணர்வுகள் மற்றும் அவை சார்ந்த சிந்தனையோட்டங்களைக் கொண்டு சிறுகதை புனையும் முறையில் இவர் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். இவரது திறன்கள் அனைத்தையும் வெளிப்படாதிருக்கின்றன என்பதை இவர் அறிவாரா என்று தெரியவில்லை. தொடர்ந்து எழுத்து முயற்சிகளில் இறங்காமலிருக்கும் இவர் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து எழுதினால் எழுத்தில் மேலும் மேலும் மேம்படலாம். அதற்கான அனைத்துத் திறன்களும் ரம்யாவுக்கு உண்டு. இதுவரை பல்வேறு தமிழக சிங்கப்பூர் இதழ்களில் பிரசுரமாகியுள்ள 22 சிறுகதைகளை எழுதி, அதில் ஐந்திற்கு பரிசுகள் வாங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 'தங்கமுனைப் பேனா விருது' போட்டியில் 'முகவரிப் புத்தகம்' எனும் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறார். கல்கி இதழ் வருந்தோறும் நடத்தும் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் இவரது சிறுகதைகள் பரிசுக்கும் பிரசுரத்துக்கும் தேர்வாகியுள்ளன. இது தவிர, ஆனந்த விகடன் ஏற்பாடு செய்து நடத்திய 'தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு' தொடர்பான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடந்த சிறுகதைப் போட்டியில் பரிசும் பெற்றுள்ளார்.

என்னுடன் இணைந்து விகடன் பிரசுரத்தின் வெளியீடாக 'சிங்கப்பூர் வாங்க' என்ற நூலை எழுதியுள்ளார். அது தவிர, புதுதில்லியைச் சேர்ந்த ரோலி புக்ஸ் என்ற பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'Pregnancy Care Made Easy' என்ற ஒரு ஆங்கில நூலையும் தன் தோழியுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.
 


ஒரு பிரசவ டைரி
- ரம்யா நாகேஸ்வரன்
-

ரம்யா நாகேஸ்வரன் சிங்கப்பூர்குளிர்..குளிர்.. இந்த ஒரு செய்தி மட்டும் மூளைக்குச் சென்றது. இலவச இணைப்பாய் ‘இருட்டு’. மாலை மணி ஆறு தான் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள். நட்டநடு ராத்திரி போன்ற அடர் இருள். ஐந்து வருட ஸ்விஸ் வாழ்க்கையில் பழகியது தான். மாற்றம் சீதோஷண நிலையில் இல்லை. என் உடம்பில் தான். இந்த முறை குளிரும், இருட்டும் சற்று மிகையாகத் தெரிந்தது. நான் திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு கருவுற்றிருக்கிறேன் என்பதோ, தற்பொழுது அதிகமாகச் சோர்வுற்றிருக்கிறேன் என்பதோ ஸ்விஸ் குளிருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. லேசாக மழை வேறு பெய்ய ஆரம்பித்தது. கைப்பையில் இருந்த குடையைப் பிரித்தேன். சே! வழக்கம் போல் கையுறைகளை மறந்துவிட்டேன். இன்னும் இரண்டே நிமிடத்தில் குடையை பிடித்திருக்கும் விரல்கள் தந்தியடிக்கத் தொடங்கிவிடும். எப்பவும் போல் குளிர் கோட்டின் பைகளின் உள்ளே கைகளை மறைத்துக் கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்தேன். மழை வந்து படுத்திவிட்டது. தினம் காலையில் இந்த குளிருக்கு உடை உடுத்துவதே ஒரு சடங்கு. முதலில் அலுவலக உடுப்பு. பிறகு கால்களில் நீள சாக்ஸ், குளிர் பூட்ஸ், காதை மறைக்க மப்ளர், கையுறைகள், நீண்ட குளிர் கோட். ஏதாவது ஒன்றிரண்டை மறந்து விடுவேன் அல்லது வேண்டுமென்றெ அணியமாட்டேன். கணவர் நிதானமாக எல்லாவற்றையும் அணிந்து கொள்வார். “அவ்வளவா குளிர் இருக்காது. எதுக்கு இவ்வளவு முன் ஜாக்கிரதை?” என்று கேலி செய்வேன். “ இதுக்கு பேர் தான் விஷ்புல் திங்கிங். நீ தான் கடைசியில் கஷ்டப்படப் போறே.” என்பார். எப்பவும் அவர் சொன்னது போல் தான் நடக்கும். இருந்தாலும் ஏதாவது ஒரு பொருளை ‘மறப்பதை’ நான் நிறுத்தவில்லை.

அலுவலகத்திலிருந்து ட்ரெயின் பிடித்து வீட்டுக்குச் செல்ல வேண்டும். ட்ரெயின் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்குச் செல்ல ஐந்து நிமிடம் நடக்க வேண்டும். நாங்கள் இருந்த ரோட் ஒரு டெட் எண்ட் என்பதால் நடமாட்டமே இருக்காது. மழையினால் சாலையில் மேல் மெல்லிய ஐஸ் படிந்திருந்தது. வழுக்கி விழாமல் கவனமாக நடந்துச் சென்றேன். அதிர்ஷ்டம் இருந்து, நாளைக் காலை சூரிய பகவான் லேசாக வெளியே வந்தால் சிறிது உருகும். இல்லையேல் காலையிலும் இதே நிலைதான்.

சூரிக் நகரில் வருடத்திற்கு எட்டு மாதங்கள் மழை அல்லது குளிர் தான். ஒரு மூன்று, நான்கு மாதங்கள் தான் வெயிலடிக்கும். ஒரு மாதமாவது இந்தக் குளிரிலிருந்து தப்பிக்க நானும் என் கணவரும் கவனமாக வருட ஆரம்பத்திலிருந்தே திட்டமிடுவோம். முதலில் இந்த வருடம் இருவருக்கும் அலுவலகத்தில் எவ்வளவு விடுமுறை நாட்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். இருவருக்குமே பன்னாட்டு வங்கிகளில் வேலை. அதுவும் என்னுடன் வேலை செய்பவர்களில் பெரும்பாலோர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆண்டிறுதி விடுமுறைக்கு அனைவரும் தங்கள் நாடுகளுக்குச் செல்ல விரும்புவார்கள். அதனால், சில மாதங்கள் முன்னதாகவே அவர்களுடன் கலந்து பேசி யார் எப்பொழுது செல்கிறார்கள் என்று பார்த்து நாம் அதற்கேற்றபடி விடுமுறையில் செல்ல வேண்டும். எல்லோரும் ஒரே சமயத்தில் செல்வதை எங்களுடைய ஒரு பிரசவ டைரி

அமெரிக்க பாஸ் விரும்பமாட்டார். நாங்கள் இருவரும் ஜூன் மாதமே எங்கள் இஷ்ட தேதிகளை முடிவு செய்து, அலுவலகத்தில் கலந்து பேசி, ஜூலைக்குள் டிக்கெட் புக் செய்துவிடுவோம். அதைச் செய்து விட்டால் பாதி தூரம் இந்தியா சென்றது போல் ஒரு திருப்தி. அப்பொழுதிலிருந்தே எந்த நண்பரிடம் பேசினாலும், "டிசம்பர் 5ஆம் தேதி இந்தியா போறோம்." என்று சொல்ல ஆரம்பித்து விடுவோம், ஏதோ அடுத்த வாரமே செல்வது போல! அவர்களும், "அப்படியா! எந்த ஏர்லைன்ஸ்? நாங்களும் புக் பண்ண வேண்டியதுதான். இந்த வீக்-கெண்ட் பண்ணிடுவோம்," என்பார்கள்.

இப்படி கவனமாகத் திட்டமிட்ட விடுமுறை முடிந்து இந்தியாவிலிருந்து சூரிக் திரும்பும் பொழுது எனக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்படும். ஊரில் வீட்டார், நண்பர்களுடன் அரட்டை, அம்மாவின் பில்டர் காபி, சரவண பவனில் தோசை, பாண்டி பஜார் ஷாப்பிங், சீசன் கச்சேரிகள் என்று நேரம் போவதே தெரியாது. வீட்டிற்கு வந்தால் ஜெட்லாக் புண்ணியத்தில் தூக்கம் வராது. வந்த சில நாட்கள் முகத்தில் அறைவது போல் தெரிவது இங்குள்ள குளிர் மற்றும் நிசப்தம். 'எல்லோரும் உயிருடன் தான் இருக்கிறார்களா?' என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள சிறிது நேரம் ஜன்னலருகே நிற்பேன். குளிர்காலம் முடியாததால் நடமாட்டம் கம்மியாகத்தான் இருக்கும். கண்ணில் தென்படும் ஓரிருவரும் தலையைக் குனிந்து கொண்டு, நீளமான குளிர் கோட்டிற்குள் கைகளை மறைத்துக் கொண்டு, வேகமாக நடந்து சென்று கொண்டிருப்பார்கள். அல்லது விர்..விர்ரென்று கார்கள் தான் தலைதெறிக்கச் சென்று கொண்டிருக்கும்.

இந்நாட்டு மக்களின் மனநிலைக்கும் சீதோஷணத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. சூரியன் வந்து விட்டால் போதும் ! அனைவரையும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எதிரே வருபவர்களைப் பார்த்து புன்னகைப்பார்கள். குழந்தைகளைக் கவனிப்பார்கள். ட்ராம் நிறுத்தங்களில் சிறிது பேசக் கூட செய்வார்கள். மணிக்கணக்கில் நதிக்கரையில் அமர்ந்திருப்பார்கள். கும்பல் கும்பலாக சைக்கிளில் நீண்ட தூரம் செல்வார்கள் அல்லது கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். இரவு ஒன்பது மணி வரை வெளிச்சம் இருக்கும். ராத்திரி பன்னிரண்டு மணி வரை ரோட்டில் எதாவது நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே குளிர் காலம் வந்து விட்டால் நேர் எதிர். யாரும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக் கொள்ளாமல் விரைந்து வீட்டைச் சென்று அடைவதிலேயே முனைப்பாக இருப்பார்கள். தங்கள் உடம்பை ஒடுக்கிக் கொண்டு, குளிர் கோட்டிற்குள் ஒளிந்துக் கொண்டு, உருவமும், உணர்வுகளும் முற்றிலும் தலைகீழாக மாறிவிடும்.

நாங்கள் இப்பொழுது தான் எங்கள் வருடாந்திர விடுமுறையை முடித்துக் கொண்டு இந்தியாவிலிருந்து திரும்பினோம். வந்த சில நாட்களிலேயே ஆறு வார கர்ப்பம் உறுதியானது. எல்லா விடுமுறையும் எடுத்துக் கொண்டு விட்டதால் அலுவலகத்துக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். கூட வேலை செய்யும் ஸ்பானியப் பெண்மணி அரியானா விடுமுறையில் சென்று ஒரு பிரசவ டைரி

இருக்கிறாள். நான் இந்தியாவில் இருந்த பொழுது என் அத்தியாவசிய வேலைகளையும் சேர்த்துச் செய்தவள். இப்பொழுது என் முறை.

மசக்கை என்பதைச் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒரிரு முறை லேசாக வாந்தி எடுத்து விட்டு, வெட்கத்துடன் புளியைத் தின்று விட்டு ஓய்வெடுக்கும் ஹீரோயினைத் தான் எனக்குத் தெரியும். என் அதிர்ஷ்டம் எனக்கு ஒவ்வொரு மாலையும் தலைச் சுற்றலும், வாந்தியும் தவறாமல் வந்து மிகுந்த தொல்லை கொடுத்தது. சமயலைறைக்குள் நுழையவே முடியவில்லை. ஏதோ ஒரு வாசம் வயிற்றைப் பிரட்டியது. ஊரிலிருந்த வந்துமே கணவர் லண்டனுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை.

தெருவில் நுழைந்தவுடன் வீடு தெரிந்தது. இருட்டாக இருந்தது. வழக்கம் போல் வீட்டின் சொந்தக்காரரும் ஊரில் இல்லை போலிருக்கிறது. நாங்கள் இருந்தது ஒரு தனி வீடு. வீட்டின் சொந்தக்காரர் கீழே இருந்தார். நாங்கள் மாடியில் இருந்தோம். அவர் விவாகரத்தானவர். அவரின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவ்வபொழுது வருவான். அவன் நன்றாகவே ஆங்கிலம் பேசுவான். ஆனால், அவரோ ஸ்விஸ்-ஜெர்மன் மட்டும் தான் பேசுவார். உற்சாகமான மனிதர். அவர் மொழியை எங்களால் சரளமாக பேச முடியாவிட்டாலும் எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டுத்தான் நகர்வார். ஆனால், பாதி நாட்கள் வீட்டிலேயே இருக்க மாட்டார்.

இப்படியே வீட்டைக் கடந்து நடந்து சென்று கொண்டே இருந்தால், அதோ தெரியும் அந்தத் திருப்பத்தில் கலகலப்பான டி.நகர் வந்தால் எப்படி இருக்கும்? அடிக்கடி வரும் அபத்தமான கற்பனை.

வீட்டிற்குள் நுழைத்து வேகமாக விளக்குகளுக்கும், அறை ஹீட்டர்களுக்கும் உயிரூட்டினேன். இன்னும் அரை மணி நேரத்தில் வீடு சூடாகும். போன் அடித்தது. கணவர் தான். தினம் காலையில் ஒரு முறை அலுவலகத்துக்கு பத்திரமாக வந்து சேர்ந்தேனா என்று ஒரு போன். பிறகு மாலையில் வீடு வந்து சேர்ந்தேனா என்று மற்றொரு போன். இன்னும் நான்கு நாட்களில் வந்து விடுவதாகச் சொன்னார்.

நிசப்தத்தைப் போக்க டி.வியை உயிர்ப்பித்தேன். கணவர் ஊரில் இல்லாத நாட்களில் அது ஒன்று தான் எனக்குத் துணை. பெரியதாக நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகள் என்று எதுவும் இல்லை. வீட்டில் யாரும் இல்லாத குறையை ஓரளவு போக்குவதற்கு மட்டுமே டி.வி. பயன்பட்டது. ஸ்விஸ் மக்கள் ஜெர்மன், ப்ரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழிகள் மூன்றுமே பேசுவதால் எல்லா மொழிகளிலும் சானல்கள் உண்டு. வழக்கமாக மாலை எழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை நிகழ்ச்சிகளை ஓட விட்டுக் கொண்டிருப்பேன். CNNனின் அமெரிக்க ஒரு பிரசவ டைரி

அக்கா, டாயிச்ச வெல்லேயின் ஜெர்மனிய அத்தை அல்லது ராய் ஒன்னின் இத்தாலிய சித்தப்பா வென்று அனைத்து சானலின் படைப்பாளிகளுக்கும் நானே பெயர் வைத்துள்ளேன். இவர்களில் யாராவது ஒருவர் என் வரவேற்பறையில் உரையாற்ற வரும் உறவினர். தனிமையினால் எனக்கு லேசாகப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று கூட யோசித்து சிரித்துக் கொள்வேன்.

ஒரு கப் பாலைச் சுடப் பண்ணிக் கொண்டு டி.வி முன் அமர்ந்தேன். இதுவும் ஒரு மணி நேரம் கூட வயிற்றில் தங்காது. மத்தியான வேளைகளில் தான் சிறிது சாப்பிட முடிந்தது. ஆனால் வீட்டிலிருந்து எதாவது செய்து கொண்டு செல்ல பாதி நாள் நேரம் இருப்பதில்லை. எழுந்திருக்கும் போதே மிகவும் சோர்வாக வேறு இருந்ததால் சமையல் செய்யவே முடியவில்லை. அம்மாவின் ஞாபகம் திரும்பத் திரும்ப வந்தது. அம்மாவின் கையால் சூடாகச் சமைத்து எடுத்துக் கொண்டு போனால் எப்படி இருக்கும்? அலுவலகத்தின் அருகே நல்ல வெஜிடேரியன் உணவு என்பது குதிரைக் கொம்பு. அதற்கு ட்ராமில் ஏறி எட்டு ஸ்டாப் தாண்டி இருக்கும் இந்தியக் கடைகள் உள்ள ஏரியாவிற்கு செல்ல வேண்டும். அதற்கெல்லாம் நேரம் ஏது? குளிரில் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே வெளியே தலைகாட்ட மனசு வராது. அதனால், அலுவலக காண்டீனில் கிடைக்கும் சூப்பும், சாலடுமே பாதி நாட்கள் பகல் உணவு. அங்கு வேலை செய்த ஒரு ஜெர்மன் பாட்டி என் நிலை தெரிந்து சில நாட்கள் எனக்கு பிர்கர் ம்யூசிலி என்ற உணவைச் செய்து தருவாள். ஓட்ஸ் மற்றும் சீரியலில் பல விதமான பழங்களைப் போட்டு அதில் தயிரைக் கலந்து செய்வார்கள். சத்தானது ஆனால் சுவை பெரியதாக கிடையாது. சில்லென்று வேறு இருக்கும். மிளகு, ஜீரா ரசம் அல்லது அம்மாவின் உருளைக் கிழங்கு கார கறி என்பதெல்லாம் கற்பனையில் மட்டுமே கிடைக்கக்கூடிய எட்டாக்கனிகளாகிவிட்டிருந்தன.

‘இதெல்லாம் தெரிந்து தானே வெளிநாட்டுக்கு வந்தாய்?’ என்று கேட்டது உள்மனம். பெரியதாக யோசித்தோ, திட்டமிட்டோ ஒன்றும் வரவில்லை. மூன்று பெண்கள் இருந்த வீடு. எல்லோரையும் நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அம்மாவின் தினப்படி கவலை. அவளுடன் ஐந்து நிமிடம் யார் பேசினாலும், ஆறாவது நிமிடம், "நம்ம வசந்தாக்கு நல்ல வரன் இருக்கா?" என்று ஆரம்பித்துவிடுவாள். முதலில் வசந்தாவிற்கு மும்பை வரன் அமைந்தது. கூட்டுக் குடும்பம். மாமியார் நல்ல திறமைசாலி. மாமனார் தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பவர். ஒரு தனியார் நிறுவனத்தில் அத்திம்பேருக்கு வேலை. பெரியதாகப் பிரச்சனைகள் எதுவுமில்லாத சராசரி வாழ்க்கை. இரண்டாவது அக்கா விஜயா. அவளுக்கு துபாய் மாப்பிள்ளை. அங்கே அவளும் டீச்சராகப் பணியாற்றுகிறாள். மூன்றாவதாக நான், வனிதா. எனக்கு நல்ல இடம் தானாக வந்தது. என்னுடன் சென்னையில் வேலைப் பார்த்த ஒரு தோழியின் உறவினர் என் கணவர். என்னை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அவரின் குடும்பத்தாரிடம் தீவிரமாக என்னைப் பற்றிச் சொல்லி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டாள். என் கணவரின் தந்தை கானடாவில் ஒரு எண்ணை நிறுவனத்தில் வேலையில் இருந்தார். அந்த காலத்து ஐ.ஐ.டி. மாமியார் வீட்டிலிருந்தபடியே ஸாப்ட்வேர் துறையில் கன்ஸல்டண்டாக ஒரு பிரசவ டைரி

இருந்தார். இவர் ஒரே மகன். பல நாடுகளில் வளர்ந்திருந்தாலும் இந்தியாவை மிகவும் விரும்புகிறவர். திருமணச்செலவைப் பற்றி கவலைப்படாமல் மிகவும் ஆடம்பரமாக அவர்களே திருமணத்தை நடத்தினார்கள். பிறகு அவரின் அப்பா, அம்மா கானடா சென்றுவிட்டனர். நாங்கள் சூரிக்கில் தனிக் குடித்தனம் தொடங்கினோம். வருடத்தில் இரண்டு வாரங்கள் தான் எங்களுடன் இருக்க மாமியார், மாமனாருக்கு நேரம் இருந்தது. நாங்கள் கானடா சென்றாலும் இரண்டு வாரங்கள் தான் இருப்போம். கணவருக்கு இந்தியா செல்வதில் தான் அதிக விருப்பம். அங்கே அவரின் உறவினர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். கும்பகோணம் அருகில் அவர் மாமா வீட்டினரும், பாட்டியும் இருந்தார்கள்.

எல்லோரும் திருமணத்தின் பொழுது வனிதாவுக்கு தான் நல்ல அதிர்ஷ்டம் என்றார்கள் ‘அப்படித்தான் போலிருக்கு’ என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். அவர்களின் அபிப்ராயத்தை ஒப்புக் கொள்வதற்கோ அல்லது மறுத்து பேசுவதற்கோ அது வரை ஏற்பட்டிருந்த என் அனுபவம் போதுமானதாகயில்லை. எனக்கு அதிர்ஷ்டமா இல்லையா என்று முடிவு செய்ய இவர்களிடம் என்ன எதிர்காலத்தை காட்டும் கருவியா இருக்கிறது? வாழ்ந்து பார்த்த பிறகு தானே முடிவு செய்ய முடியும்!

யார் எனக்கு அதிர்ஷ்டம் என்று திட்டவட்டமாக நம்பினார்களோ இல்லையோ நிச்சயமாக வசந்தா அக்கா அதைத் தீவிரமாக நம்பினாள். விஜயாவிற்கு வெளிநாட்டு மாப்பிள்ளை வந்ததே அவளுக்குச் சிறிது வருத்தம். ஆனால், விஜயாவின் புகுந்த வீட்டினர் சற்று வசதி குறைந்தவர்கள். அத்திம்பேர் சம்பாத்தித்து தன் தம்பியை படிக்க வைத்து கொண்டு, குடும்பம் நடக்க பணமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விஜயாவும் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. அதனால், தன் ஏமாற்றத்தை வசந்தா அவ்வளவு தூரம் காண்பிக்கவில்லை. எனக்கு வரன் வந்த பொழுது ஒரு பக்கம் உண்மையிலேயே சந்தோஷப்பட்டாலும் இன்னொரு பக்கம் தன் அப்பா அம்மா தனக்கு அவ்வளவு அக்கறையுடன் வரன் தேடவில்லை என்ற அவளின் நெடுநாள் ஆதங்கத்தை நூறாவது முறையாகச் சொன்னாள். அம்மாவும் நூறாவது முறையாக, “உனக்கு என்னடி குறைச்சல்? மாப்பிள்ளை தங்கமானவர். அதுக்கும் மேலே ப்ராப்தம்னு எது இருக்கோ அதுதாண்டி வசந்தா நடக்கும்,” என்று சமாதானமாக சொன்னாள்.

பால் வயிற்றை குமட்ட ஆரம்பித்தது. மீண்டும் வாந்தி எடுத்து விட்டுச் சோர்வாக சோபாவில் சாய்ந்தேன். ‘ஒரு வென்னீர் கொடுக்கக் கூட நமக்கு ஆளில்லையே,’ என்ற சுயபச்சாதாபம் மேலிட லேசாகக் கண்ணில் நீர் கசிந்தது. டி.வியில் இத்தாலிய சித்தி, சித்தப்பா எதற்கோ பெரியதாகச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் அலுவலகத்தில் அரியானா வந்து விட்டாள். சற்று வேலைச் சுமை குறைந்தது. அரியானா புகை பிடிக்கும் பழக்கம் உடையவள். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு ஒரு பிரசவ டைரி

முறை புகை பிடிப்பதற்கு என்று ஒதுக்கி இருந்த அறைக்குள் சென்று பிடித்து விட்டு வருவாள். இத்தனை நாட்கள் தெரியாத சிகரெட்டு நாத்தம் மசக்கையினால் பூதாகரமாகத் தெரிந்தது. குமட்டலுடன் இப்பொழுது தலைவலியும் சேர்ந்து கொண்டது. ‘எப்படா சனி, ஞாயிறு விடுமுறை வரும் ’, என்று மனம் ஏங்கியது.

ஒரு வழியாக சனிக்கிழமை வந்தது. கணவரும் இன்றிரவு வந்து விடுவார். சென்னையில் என் அத்தை பேத்தியின் திருமணம். அதற்காக எல்லோரும் வந்திருப்பார்கள். நாங்கள் எப்பொழுதும் மார்கழி மாதம் இந்தியா செல்வதால் திருமணங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பே வரவில்லை. சில வாரங்கள் முன்பே திரும்ப வேண்டி இருந்ததால், இதோ இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் இழந்துவிட்டேன். கல்யாண சாப்பாடு சாப்பிட்டுத்தான் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன?

அம்மாவிடம் பேசலாம் என்று போன் செய்தேன். மசக்கை பற்றி, என் உடம்பு பற்றி எல்லாம் விசாரித்து விட்டு, “வசந்தா வந்திருக்கா கல்யாணத்துக்கு. இந்தா ,பேசு,” என்றாள். “ஆங்.. வனிதா கங்கிராட்ஸ்.. அம்மா சொன்னா போன்ல.. உனக்கு என்னடிம்மா? ஸ்விஸ் சீசும், சாக்கலேட்டும் சாப்பிட்டு அமுல் பேபி மாதிரி குழந்தையப் பெத்துப்பே. நீ இருக்கிறது சொர்க்க பூமின்னா..எங்களை மாதிரியா தூசியிலேயும், கும்பல்லேயும் அல்லாடிண்டு... ” என்று ஏதேதோ பேசிக் கொண்டே போனாள்.

நான் பெரிதாகச் சிரித்ததைக் கேட்டு ‘வனிதா இப்படி வாய்விட்டுச் சிரிக்கிற மாதிரி நாம ஒண்ணும் சொல்லலையே’ என்று புரியாமல் நிச்சயம் முழித்திருப்பாள் வசந்தா!

sankari01sg@yahoo.com


 
aibanner