பதுளை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது நித்தியஜோதி அவர்களின் மகுட வைரங்கள் என்ற கவிதைத் தொகுப்பு. கல்வியமைச்;சில் பிரதிக் கல்வி அமைச்சின் ஊடக செயலாலராகவும், அதிபராகவும் கடமை புரிந்துள்ள இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது கவிதை நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறார். இணையத் தமிழ் இலக்கிய மன்றம் வெளியீடாக, 76 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 43 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. மலையக மக்களின் வாழ்கையைப் புடம் போட்டுக் காட்டும் ஓரிரு கவிதைகளையும், காதல் கவிதைகளையும், ஆன்மீகம் சார்ந்த சில கவிதைகளையும் இந்நூலில் தரிசிக்கலாம்.
இணைய தளத்தில் இலக்கியங்களைத் தேடி தகவல்களை சேகரித்த அனுபவம் கவிஞர் நித்தியஜோதி அவர்களுக்கு உண்டு. வாழ்க்கை என்னும் இணையப் பத்திரிகையை நெனசல நிலையம் ஊடாக வெளியிட்டு இலங்கை முழுவதும் இணைய வாசகர்களுக்கு இலக்;கியம் வாசிக்கத் தந்தவர். ... நவீன காலத்திற்கேட்ப தகவல் தொழில்நுட்பம், இணையம் என்பவற்றில் ஈடுபாடும், அவற்றின் பயன்பாடும் தமிழ் இலக்கியத் துறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற ஆவல் அவரிடம் அதிகமாகவே காணப்படுகிறது என்று தனது வெளியீட்டுரையில் கௌரிசங்கர் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பூனாகலை பௌர்ணமி கலை இலக்கிய வட்டத்தின் தலைவரான ஆறுமுகம் கலையரசு அவர்கள் இக் கவிதை நூலுக்கு அணிந்துரையை வழங்கியுள்ளார்.
அப்புத்தளை தமிழ் இலக்கிய ஆய்வு மன்றத்தின் செயலாளர் பௌஸர் நியாஸ் தனது பதிப்பாசிரியர் உரையில் இந் நூலிலுள்ள கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. நவீனத்துவம் மிளிர்ந்து கவிதைகள் நடை போடுகின்றன. கவிதைகளின் உருவம், சொல்லாட்சி, உள்ளடக்கம் என்பன ஏனைய கவிஞர்களின் கவிதைகளில் இருந்து இக்கவிஞரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார்.
காதல் சொன்ன கண்ணாளன் என்ற கவிதையில் (பக்கம் 18) காதலி தனது உள்ளத்தை கூறியிருக்கிறார். மேலும் கண்களால் கேட்கும் கேள்விகளுக்கு செயலால் பதில் கூறும் தனித்திறமை தனது காதலுக்கு கிடைத்த முதல் மரியாதை என்கிறார் கவிதையின் நாயகியான அந்தப் பெண். மனதினால் தான் மனைவியாகிவிட்டதாக கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.
சிங்கார சிரிப்புகள்
நாகரீக மூட்டத்தினுள்ளே
முகம் கழுவும் நாளில்
வெட்கத்திற்கு மட்டும்
மரியாதை தந்தவனே..
உந்தன் வேள்வியால்
நானே
மனைவியாகிறேன்
மன ஊஞ்சலில்...
காதலில் விழுந்தவர்கள் நேரெதிர் மாற்றங்களான விடயங்களை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே விளங்காத ஒரு அதிசய உலகத்தில் அவர்கள் இருப்பார்கள். அதே நிலை நீ ... என்றும் நான்... (பக்கம் 46) என்ற கவிதையிலும் நயமாக உரைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக கீழுள்ள அடிகளைக் குறிப்பிடலாம்.
புரிந்து கொண்டும்
பதிலைத் தேடுகின்றாய்..
நானோ...
வினாவைத் தேடுகின்றேன்..
கவிதையில் ஆர்வம் காட்டி வரும் கவிஞர் நித்தியஜோதி அவர்கள் இன்னும் காத்திரமான கவிதைகளைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!
நூலின் பெயர் - மகுட வைரங்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கவிஞர் நித்தியஜோதி
வெளியீடு - இணைய தமிழ் இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0729068724
விலை - 200 ரூபாய்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
http://www.rimzapoems.blogspot.com/
< Prev | Next > |
---|