எழுத்தாளர் முருகபூபதியின் பார்வையில் : "சூரியகுமாரி பஞ்சநாதன் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி, நுஃமான் , சித்திரலேகாவின் மாணவி. அத்துடன் கவிஞர் சிவரமணியின் தோழி.  சூரியகுமாரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் சிறிதுகாலம் பணியாற்றியவர். பின்னர் கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது துபாயில் பணியாற்றுகிறார். அங்கு சென்றபின்னர், எழுதுவதும் குறைந்துவிட்டது.  சிறந்த ஆற்றல் மிக்க விமர்சகர்."


சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் தனித்து முத்திரை குத்துமளவிற்குத் தன்னை வித்தியாசமாகவும் தனித்துவத்துடனும் வெளிப் படுத்திய சிவரமணி தற்கொலை செய்ததன் மூலம் தனது ஒரு சில கவிதை ஆக்கங்களை மட்டுமே எமக்கு எச்சமாக விட்டுச் சென்றுள்ளார்.

தனித்துவமிக்க அவருடைய 22 கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பானது "சிவரமணி கவிதைகள்” என்ற தலைப்புடன் பெண்கள் ஆய்வு வட்டத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது.

மேற்படி நூலில் சித்திரலேகா மெளனகுரு அவர்களின் "சிவரமணியின் வாழ்வும் கவிதையும் ஒரு அறிமுகம்” என்ற குறிப் பேட்டின் மூலம் சிவரமணியின் வாழ்க்கை நோக்கினையயும் இவருடைய கவிதை ஆளுமையையும் அறியக்கூடியதாகவுள்ளது. சிவரமணி ஏன் தற்கொலை புரிந்தார்? அச்சம்பவத்தின் மூலம் அவர் சமூகத்திற்கு எதனை உணர்த்த விழைந்தார்? என்பன போன்ற வினாக்களுக்கு எம்மால் இன்றும் தெட்டத் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியாமலே உள்ளது.

சிவரமணியுடன் ஒன்றாகக் கல்வி கற்ற போது அவருடைய வித்தியாசமான தன்மைகள் பல சந்தர்ப்பங்களில் என்னை வெகுவாக ஈர்த்திருந்தன. ஒரு சிலரிடையே நட்பினைக் கொண்டிருந்த சிவரமணி, யதார்த்த சமூகத்தின் முரண்பாடுகள், சமூக வரையறைகள், பெண்கள் அடக்குமுறை, மூன்றாம் உலக நாடுகளின் பொதுவான பிரச்சினையாகிய வறுமை, அதிலும் பெண் சமூகம் மட்டுமே எதிர்கொண்ட இரட்டைச் சுமை பற்றி எல்லாம் அதீத ஈடுபாட்டுடன் அவற்றினைக்களையும் விதத்தில் நண்பர்களுடன் மட்டும் நின்றுவிடாது சுயாதீனமாக இயங்கும் பல பெண்கள் அமைப்புக்களுடனும் சேர்ந்து நடைமுறைக்கு ஏற்ப செயற்படவும் தொடங்கினார்.

பெண்விடுதலை பற்றித் தீவிரமாகத் சிந்தித்த சிவரமணி அதனோடு மட்டும் நின்றுவிடாது ஒட்டு மொத்தமான சமூக விடுதலை பற்றியும், ஆரோக்கியமாகச் சிந்தித்து அதற்கான வழிவகைகளையும் தீர்க்கமாக முன்வைத்தார். 1985 ஆம் ஆண்டு தொடக்கம் அவரால் எழுதப்பட்ட கவிதைகளை நோக்கும் போது அவருடைய உண்மையான மனஉணர்வுகளையும் அரசியல், சமூக, பொருளாதாரம் பற்றிய அவரது கருத்து ஆழ்ந்த நோக்கும் புலனாகின்றமையை நாம் அவதானிக்கலாம்.

"எனது ஊர்க் கோவில் திருவிழா நடந்தது" என்ற கவிதையில், 'ராகம் இல்லாத நாதஸ்வர ஒலமும் அண்டம் அதிரும் மேளத்துடனும்', என்ற வரிகள் மூலம் காலங்காலமாக எமது பண்பாட்டில் மங்கலக் குறியீடாக வரும் நாதஸ்வர, மேள ஒலிகளை ஒலமாகவும் , அண்டம் அதிரும் ஓசையாகவும் , வெளிப்படுத்தியிருப்பதனைச் சற்று வித்தியாசமாக நாம் உணரக் கூடியதாயுள்ளது. கோவில்களில் வாசிக்கப்படும் நாதஸ்வரத்தை எவரும் தமது கவிதை ஆக்கங்களில் இவ்வாறு வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. எள்ளல் சுவையுடன் சமூகத்தின் அபத்த நிலையினை நேர்மையாகவும் துணிவுடனும் இங்கு சிவரமணி தமது கவிதையில் சித்திரிக்க முயல்வதினை நாம் அவதானிக்கலாம்.

எனது ஊர்க் கோவிலில் திருவிழா நடந்தது. வழக்கமான ஆண்டுகள் போன்று கடுக்கன் போட்டு காதுகள் கிழிந்த கச்சான் ஆச்சி ஐஸ்பழக்காரன் சரிகைச் சேலையைச் சரிபார்க்கும் பெண்கள் பேசிப்புறுபுறுக்கும் கிழவர் கூட்டம். இத்தனைக்கும் நடுவே, மக்கள் பார்வையில் நழுவிய ஒரு சிறு கறுப்புக் கொடி ஆனாலும் வழக்கம்போல் திருவிழா நடந்தது மீண்டும் ஒரு நாள் இரத்தத் துளிகள் மண்ணிலே தெளிக்கப்படலாம் மீண்டும் ஒருவன் வருவான் இந்தக் கொடி கிழிந்திருக்கும் இதற்குப் பதில் இன்னுமோர் கறுப்புக்கொடி ஏற்றி வைப்பான் எனினும் என் ஊர்க் கோவிலில் வழக்கம் போல் திருவிழா நடைபெறும்.

சமூகத்தின் யதார்த்த நிகழ்வுகளூடு அரசியல் இரண்டறக் கலந்துள்ள தன்மையினை மேற்படி கவிதையானது இனங்காட்ட முனைகிறது. கடுக்கன் போட்டுக் காதுகள் கிழிந்த கச்சான் ஆச்சியும், ஜஸ்பழக்காரனும் சரிகைச் சேலையைச்சரிபார்க்கும் இளம் பெண்களும், பேசிப்புறுபுறுக்கும் கிழவர் கூட்டமும் மிக இயல்பாக யதார்த்தத்தினின்றும் வேறுபடாது மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்னர். இத்தகைய இயல்பான சம்பவங்களுடனே மக்கள் பார்வையில் நழுவிய ஒரு சிறு கறுப்புக் கொடி, மீண்டும் ஒரு நாள் இரத்தத் துளிகள் மண்ணிலே தெளிக்கப்படலாம், மீண்டும் ஒருவன் வருவான் இந்தக் கொடி கிழிந்திருக்கும். இதற்குப் பதில் இன்னுமோர் கறுப்புக் கொடி ஏற்றி வைப்பான் என்ற அடிகள், அரசியல் புரட்சி என்பன மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்பதனை சிவரமணி ஆணித்தரமாக எமக்குப் புரிய வைக்கிறார்.

கறுப்புக் கொடிக்கான காரணத்தைச் சமூகம் பெரிதுபடுத்தாது தன்பாட்டில் வழக்கம் போலவே இயங்குகின்றமையை சாதாரண குறியீடுகள் மூலம் புலப்படுத்திய சிவரமணி காலங்காலமாக ஒருவரேனும் விடாப்பிடியாகக் கறுப்புக் கொடியை ஏற்றிவைப்பதன் மூலம் இளம் சமுதாயத்தினரின் மூலம் சமூகத்தினின்றும் வேறுபட்ட அல்லது இளம் சமுதாயத்தினரின் எதிர்ப்புணர்வை ஏதோ ஒரு வகையில் புலப்படுத்த எத்தனிப்பதாகவே அமைகிறது. தீர்மானமாக, உண்மை விடுதலையினை மட்டுமே அவாவி நின்ற சிவரமணி

"எங்களிற் சிலரது விடுதலை
மட்டும்
விலங்கோடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்" என்று கூறியதுடன் நின்று விடாது

விலங்குகளுக் கெல்லாம் விலங்கொன்றைச் செய்த பின் நாங்கள் பெறுவோம் விடுதலை ஒன்றை என்கிறார். இதன் மூலம் இவர் அரைகுறை விடுதலையின் தாக்கத்தை எமது சமூகத்தின் அனுபவ வாயிலாகப் பெற்றமையால் இனியும் எமது இளந் தலைமுறை ஏமாற்றமடையக்கூடாது என்ற மனப்பாங்குடன் இக்கவிதை உருக்கொண்டிருக்கலாம்.

"காதல்" உணர்வினை வெளிப்படுத்தும் கவிதையாக,

மஞ்சள் சந்தனத்தில் மூழ்கி வரும்
வானமகளின் வண்ண நெற்றியிலே
ஆதவன் பொட்டு இடும் அந்தி வேளைகளிலே
உன்னை நினைக்கிறேன்.
எனது இதய ரோஜாவின் ஒவ்வொரு செவ்விதழும்
காதல் காணிக்கையால் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு
எஞ்சியிருப்பது பூவைத்தாங்கிய வெற்றுக் காம்புதான்.
என் இதயத்தில் நான் தாங்கியுள்ள வெற்றுக் காம்பு
இன்னும் எறியப்படவில்லை அன்பே
புது பிரசவத்துக்காய் இங்கே காத்துள்ளது.
ஆனால் அந்தப் பிரசவம் அந்தக் காதல் மலர்
நானும் நீயும் காத்துள்ள
நாளைய உலகென்னும் இளம் தேசத்தில்
நிச்சயம் மணம் வீசும்

என்ற கவிதை வரிகளில் கூட சிவரமணி "காதலை புதிய பிரசவத்தின் எதிர்கால நம்பிக்கைக்குரிய கருப்பொருளாகவே இனம்காண்கின்றமையை நாம் அவதானிக்கலாம். அதாவது புதிய பிரசவத்தின் எதிர்கால நம்பிக்கையில், காதலின் காத்திருப்பு சிவரமணியினால் தூய உருவினைப் பெறுகின்றமையையே நாம் காணக்கூடியதாக உள்ளது.

அடுத்து “வையகத்தை வெற்றி கொள்ள" என்ற தலைப்புடன் 1986இல் எழுதப்பட்ட கவிதையானது கடமை நம்பிக்கையினையும், வாழ்வு பற்றிய நம்பிக்கையினையும் சுட்டுவதாக அமைகிறது. மேலும் அக்கவிதையில் பெண்களின் அர்த்தமற்ற நேர இழப்புக்கள் சுட்டிக் காட்டப்படுவதுடன் புதிய வாழ்வு பற்றிய சிந்தனையை நோக்கிக் கவிதை நகர்வதனை நாம் அவதானிக்கலாம்.

என் இனிய தோழிகளே இன்னுமா தலைவார கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே வேளைகள் வீணாகின்றன.
ஆடையின் மடிப்புக்கள் அழகாக இல்லை என்பதற்காகக்
கண்ணிர் விட்ட நாட்களை மறப்போம்.
மண்ணால் கோலமிட்டு அழித்தது போதும் எங்கள் செந்நீரில்
கோலமிட்டு வாழ்க்கைக் கோலத்தை மாற்றி வரைவோம்.
சாரிகைச் சேலைக்கும் கண்நிறைந்த காதலர்க்கும் காத்திருந்த காலங்கள்
அந்த வெட்கம் கெட்ட காலத்தின் சுவடுகளை அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம்.
வாருங்கள் தோழியரே!

என அறைகூவல் விடுக்கிறார், இன்றைய பெண்களிடம்.

1986 காலப்பகுதியில் எழுதப்பட்ட "முனைப்பு" என்ற கவிதை, நம்மைச் சூழ உள்ள சமூகத்தினதும் ஆணாதிக்க உணர்வுளுடனும் எமது பெண்கள் சிக்கித்தவிக்கும் அவலத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

பேய்களால் சிதைக்கப்படும் பிரேதத்தைப் போன்று சிதைக்கப்பட்டேன்.
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம் இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும் மண்ணிற்குள்ளும் மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்த அவர்களின், குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும் என்னைச் சுட்டெரித்தன.
எனது ஆசைகள் இலட்சியங்கள் சிதைக்கப்பட்டன.
என் வேதனை கண்டு ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என் தலை குனிந்து போனதாய்க் கனவு கண்டனர்.
ஆனால் நான் வாழ்ந்தேன்.
வாழ்நாளெல்லாம் நானாக இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன் இன்னும் வாழ்கிறேன்.

ஒரு பெண்ணின் ஆத்மார்த்த உணர்வு சமூகத்தின் கயமைத்தனத்தால் தீண்டபப்டும் அவலத்தினை இக் கவிதையில் சிவரமணியினால் பயன்படுத்தப்பட்ட சொற் பிரேயாகங்கள் முடிந்தளவு எல்லைக்கோட்டில் நின்று அதன் அர்த்தத்தினைப் புலப்படுத்தியுள்ளமையை நாம் அவதானிக்கலாம். கொடூரமான உணர்வுகள் ஒரு மனித ஜீவியினை எவ்வெவ்வகையில் பாதித்தன அல்லது பாதிக்கும் என்பது பற்றி மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. இக் கவிதையில் அவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லினையேனும் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இன்னொன்றினை நாம் சேர்த்துப் பார்த்தால் அக்கவிதையின் நிறைவின்மையை நாம் கண்டு கொள்ளலாம். எனவே சிவரமணி நல்ல ஒரு கவிஞருக்குரிய சொல்லாக்கப் பண்பினையும் ஆளுமையையும் கொண்டிருந்தமை அக்கவிதையின் மூலம் நன்கு புலனாகிறது. தடித்த எழுத்துக்களிலுள்ள வரிகள் அவரின் கவித்துவத் திறனையே சுட்டி நிற்கின்றன.

அடுத்து 1985இல் சிவரமணியினால் எழுதப்பட்ட அன்றைய, இன்றைய முரண்பாடுகள் பற்றிய கவிதையை நோக்குமிடத்து அவர் அழகியலின் பால் மட்டும் தனித்து ஈர்க்கப்பட்ட கவிஞராக அல்லாது ஓராயிரம் சம்பவங்களால் வெறியூட்டப்பட்ட கவிஞராகவே தன்னை இனங்காட்டுகிறார்.

ஆதவனின் ஒளி கண்டு மலரும் ஆம்பலின் அழகு கண்டு
அதிலே மொய்க்கும் வண்டின் மோகநிலை கண்டு கவிதை வரைவதற்கு நான்
நீ நினைக்கும் கவிஞன் அல்ல .
என்னை வெறிமுட்ட இங்கு ஓராயிரம் சம்பவங்கள்.
அன்றைய பொழுதும் இன்றைய பொழுதும்
ஒரே சூரியன் ஒரே சந்திரன் - ஆனால்
அன்றோ ஒரு உறக்கம் நிகழ்வுகள் புரியாத 
நிம்மதிப் பெருமூச்சு.
இன்றோ உறக்கங்கள் தோல்வி கண்ட விழிப்பின் பரிதவிப்பு.
நானோ இருபதாம் நூற்றாண்டின் வசந்தத் தென்றல் அல்ல.

- சிவரமணி குறித்த எனது இந்தக் கட்டுரை 1994 இல் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படட "நிவேதினி" சஞ்சிகையில் வெளியானது .நன்றி  'நூலகம்.நெற்' (noolaham.net) -

பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி