முன்னுரை

நீரால் தழைக்கும் நிலம், பிள்ளைப் பேரால் தழைக்கும் குலம். இயற்கை வரப்பிரதாசம் நீர் ஆகும். மனிதனின் முயற்சியின்றி அமைந்தவை இயற்கை நீர்நிலை. முயற்சியால் அமைந்தவை செயற்கை நீர்நிலை. உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது நீர். நம் உடலில் நீரே மிகுதியாக உள்ளது. உடலில் நீர்ச்சத்து நீங்கிவிடின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை உணரலாம்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்பார் வள்ளுவர். மழையின் மாற்று வடிவங்களே அருவி, ஆறு, ஓடை, கடல், ஏரி, குளம், இன்னபிற. ஐம்பெரும் பூதங்களுள் ஒன்று நீர். இறை வழிபாட்டிற்கு நீர் மிகவும் முக்கியமானதாகும். மங்கல நிகழ்ச்சியாயினும், அமங்கல நிகழ்ச்சியாயினும் அவற்றிற்கு முதல் தேவையாகக் கருதப்படுகிறது நீர். நீரின் தத்துவத்தில் அமைந்த ஆலயம் திருவானைக்கால் ஆகும்.

நீரின் ஏற்பட்ட வளர்ச்சி
நீரின் வளத்தினாலே ஆற்றங்கரையோரங்களில் சிறந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக நகரங்கள் திகழ்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிக வளர்ச்சி சிந்துநதியில் வளர்ந்தது. நைல் நதியில் எகிப்து நாகரீகம் தழைத்து ஓங்கியது. எல்லா உயிர்களுக்கும் ஊட்டமளிப்பது நீர்தான்.

நீரின் சிறப்பு
நீரில்லாவிடில் வாழ்வில்லை. நீரின்றி அமையாது உலகம் என்பது வான்மறைந்த தந்த வள்ளுவர் கூற்று. அத்தகைய நீரின் சிறப்பாக காவியம் பேசுவது அரசர் முன்னின்று நடத்திய விழா நீர் விழாவாகும். நீர் விழாவின் போது கொடுங்குற்றம் செய்தவர்கள் கூட மன்னிக்கப்பட்டனர். மக்கள் பாவங்களைக் கழுவும் ஆற்றல் நீருக்கு இருப்பதாக நம்பிய நிலையும் காவியத்தில் இடம்பெறக் காண்கிறோம். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்கின்றது நல்வழி.

அப்பூதிகள் திருநாவுக்கரசு பெயரால் தண்ணீர்ப்பந்தல் அமைத்து நீரறம் செய்து வந்ததைப் பெரியபுராணத்தால் அறிகின்றோம். இறந்தவர்களுக்கு நதியில் நீர்க்கடன் செய்தல் மரபு. நீர்க்கடன் செய்தாலே வீடுபேறடைய முடியும்.

நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றால் தான் துறக்கத்தினை அடைய முடியும் என்பது கிறித்துவ சமயக்கோட்பாடு. இயேசுநாதர் போர்தான் நதியில் மூழ்கி ஞானஸ்தானம் பெற்ற செய்தியும் நீரின் சிறப்பினைச் சிந்திக்க வைக்கின்றன.

மழை
மழையென்பது ஒரு கூட்டுமுயற்சி. மழை பெய்ய பூமி, சூரியன், காற்றுமண்டலம் தேவை. ஈரப்பிரதேசங்களில் உள்ள நீர், சூரியன் பூமியை சூடாக்குவதால் ஆவியாகிவிடுகிறது. மேல்நோக்கிச் செல்லும் வெப்பக்காற்று மேலே செல்லச்செல்ல குளிரடைகிறது. ஆவியில் உள்ள நீர் விடுபட்டு மேகமாகிறது. மேகங்களுக்குள் சின்னச்சின்ன நீர்த்துளிகள் சேர்ந்து கனத்துடன் கூடிய பெரிய நீர்த்துளிகளாகி கீழே விழுகிறது.

மழை தேவதை
-------- --------
சதிராடுகிறாள்

இந்த மழைத்துளியின் ஓசை இனிமையை தன் எண்ணத்தில் உயிரோட்டமாக சில தூறல் சொற்களால் வருணிக்கிறார் இக்கவி.

நீராடல்
சூரிய வெப்பத்தால் மேலெழுந்த நீராவி குளிர்காற்றால் தாக்குண்டு மழை பொழிய, அவைகளே நதிகளாக ஓடிவருகின்றன. மழைக்காலத்தில் நதியில் தண்ணீர் நிரம்பப் பெற்று ஓடிவருவதைக் கண்டவுடன் நீராடத் துடிக்கும் துடிப்பைக் காட்டுகிறார்.

நீச்சல் அறியாமல்
---------- ---------
மீண்டும் புனலாடியதும்

இயற்கை கூட விதிகளுக்குப்பட்டு செயல்படுகிறது. மனித உயிர்க்கு மூன்று முறை மரியாதை கொடுக்கிறது. நாம் என்ன செய்கிறோம்?

நீரின் தேவை
நீரின் தேவை உணர்ந்தே மீட்சிப்படலத்தில் தேவர்களும், பரத்துவாச முனிவனும் இராமனிடம் வேண்டும் வரம் கேள் என்று கூறியதும், இரு இடங்களிலும் குரங்களுக்கு நீர் வேண்டும் என்று கேட்கிறான். பகீரதன் முப்பதினாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து கங்கையாற்றினைக் கொண்டு வந்தது போன்ற இங்கு இராமனிடம் நீர் வேண்டுமென்று வரம் கேட்கிறான். இதிலிருந்து வரம் வேண்டிப் பெறும் அளவிற்கு நீர் மிக இன்றியமையாதது என்பது புலனாகும். மக்கள் தேவைக்காக காடுகளை அழிப்பதால் மழை பொழிவு இல்லை. மழைப்பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் குடிநீருக்கு பெண்கள் படும் அவலநிலை இக்கவிதை வரியில் வழிந்தோடுவதை காண்போம்.

தண்ணீர் கேட்கும்
தன் பிள்ளைக்குத்
தாய்ப்பால் தந்தே உருகுகிறான்

என்ற வார்த்தையில் சாவுக்கு வைத்து சுழற்றுவது போல் உள்ளது. தண்ணீர் இந்த ஒற்றை சொல் இன்று நாடு. இனம், மொழி, நிறம், கடந்து சர்வதேச சிக்கலாக உருவெடுத்து நிற்கிறது. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று எச்சரிக்கிறார்கள் அறிஞர்கள்.

காதல்
காதலைப் பாடாத கவிஞரே இல்லை. காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம். காணமுண்டாம் என்று காதலைப் போற்றிப் புகழ்ந்தவர் பாரதியார். ஆணும், பெண்ணும் காதலில் இணைந்து இருப்பது பேரின்ப நிலையாகும். இப்போது உலகத்து இன்பங்கள் இவர்கலைத் தீண்டுவதில்லை. காதலின்பம் இவற்றைவிடப் பெரிது.

நிலத்தடியில் மறைந்திருக்கும் நீரோட்டத்தைக் கண்டறிவதைப் போல தன் காதலியின் மனம் அறிந்து பேசுகிறாள்.

எங்கே நான் புறந்தாலும் என்ன பெண்ணே – தினம்
இளைப்பாற உன்மடிதான் எனக்கு வேண்டும்
கங்கைநதி ஊரெல்லாம் திரிந்தால் என்ன? அடி
கடலில்தான் அது சென்று சேர வேண்டும்

நிழலானது சேற்றில் விழுந்தாலும், சந்தனத்தில் விழுந்தாலும் அதை ஒட்டி வருவதில்லை. நிழலைப் போல் மனதை வைத்திருக்கிறான் என்பதை இவ்வரிகளில் காதலன் தன்நிலையை புலப்படுத்துகிறாள்.

காதலின் ஆபத்து
கண்ணை காதல் ஆசைச் செய்தியை அச்சிடும் ஏடு என்றும், ஓசை தவிர்த்து ஊமை மொழியில் உலாவும் தூது என்றும் கூறலாம். காதல் அற்புதம் என்று பல கவிஞர் கவிதையில் போற்றினாலும் கூட, மறுபுறம் சில கவிஞர்கள் காதல் என்பது நோய் என்றும், அது படுமோசமான விளைவை ஏற்படுத்தும்.

தேவதாஸ் என்னானான்?
----------- ---------- ------------
----- கரை ஒதுங்கினான்

இக்கவிதையில் மதுப்பழக்கம் தொடக்கக் காலத்தில் போதைக்குரியதாகத் தென்பட்டாலும் அதுவே அதிகமாகி விடுகின்றபோது மரணத்திற்குச் சென்று விடுகின்றதல்லவா? அதைப்போன்று காதலும் மிகவும் அபாயகரமானதென்றும் எச்சரிக்கும் வண்ணமாகக் இக்கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன.

நீரும் பறவையும்
சமுத்திரம் கடக்க முடிந்ததும்
கண்மாய் கடக்கமுடியவில்லையே யென்று
கலங்கியிருக்கலாம்

கடல் தாண்டி பறவையால் கண்மாய் தாண்ட முடியவில்லை. இந்துமதக் கொள்கைப்படி தெற்குத்திசை எமன்திசை என்பார்கள். இந்தப் பறவைகள் இனவிருத்திக்கு தெற்குதிசை நோக்கி வருவதால் அகிம்சா தேசத்து மனிதர்களால் வேட்டையாடப்படுகிறது. நம் நாட்டிற்கு வந்த பறவைகளின் நிலை எண்ணிய கவிஞர் பெற்றவள் குடலை மாவாய்ப் பிசைந்து. கவலை என்பது போல் துடிக்கிறாள். மனிதர்களின் செயலால் மண்ணில் ஓடிய ஆறு காதல் பறவைகளின் கண்ணில் ஓடியது.

இறைநீர்
வா! சித்திரைப் பெண்ணே
ரத்தத் துளிகள்
வற்றுவதற்குள்
மழைத்துளிகளைப்
பரிசளி!

என்ற கவிஞரின் கவிதை சொற்களின் ஆழம் கண்டுபுரிந்து செயல்படுவார்கள் ராஜஸ்தான் மக்கள். நாஜஸ்தான் மக்கள் நீர்நிலைகளை இறைவனாகக் கருதுகின்றனர். மழைநீரைச் சேமிக்க செயற்கை ஏரிகள் வெட்டப்படுள்ளன. ஏரியின் பெயரையே மாவட்டத்தின் பெயராக ராஜஸ்தானில் வைக்கப்படுகிறது. சமந்த் என்ற சொல்லுக்கு ராஜஸ்தான் மொழியில் கடல் என்று அர்த்தமாகும். கடல் எதுவும் இல்லாத ராஜஸ்தானில் ஏரிகளுக்கே கடல் எனப் பெயர் சூட்டப்படுள்ளது.

முடிவுரை

மொத்த நீரில் நமக்குக் கிடைக்கும் நன்னீர் 0.5%க்குக் குறைவு. எஞ்சிய நீர், துருவங்களில் பனிக்கட்டியாகவும், கடல்நீராகவும் உள்ளது. உலக நன்னீர் வளம் ஆண்டுதோறும் கிடைக்கும் 40,000 – 50,000 கன கிலோமீட்டர் மழைநீரால் புத்தாக்கம் பெறுகிறது. சுகாதாரமற்ற குடிநீரால் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். 8 நொடிக்கு ஒரு குழந்தை இறப்பதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.