சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள்  . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே  வாருங்கள் " கூட்டிச் சென்றான்.  வாடகையில்  'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு   வந்தாரை வாழ வைக்கும் .  வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது .  அந்த காலத்தில், முருகைக்கற்களை  வைத்து  சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த   இதே போன்ற  வீட்டை  திருத்தி  புது வீடாக்கி இருக்கிறார் . "  பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப்  போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி  ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் .  அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது .

          எங்க வீட்டின் கதை ஆச்சரியமானது . சொந்தக்காரர் ஒரு இன்ஜினியர் . தனது கனவு இல்லமாக கட்ட வெளிக்கிட்டாராம் . டையினிங் ரூமை வாசிகசாலை பெரிய மேசை வைக்கக் கூடிய மாதிரி நீட்டி  மண்டபமாக்கி விட்டிருந்தார் . நிஜமாகவே மண்டபத்துண்டு தான் .  மூன்று பக்கமும் ஜன்னல்களுடன் பின் வாசல்  கதவு . அப்படியே இறங்கி தோட்டத்திற்குள் ( வளவுக்குள் ) பிரவேசிக்கலாம் . வரிசைக்கு நல்ல இடைவெளியுடன் வைக்கப்பட்ட தென்னை மரங்கள் . பூவரச மரங்களுடன் கூடிய (கம்பி) வேலி வீடு வீதியோடு ஒட்டிய தோடு இருக்கிற நீளத்திற்கு  சற்று தூரம் வரையில் உயர்ந்த மதில் சுவர் .அடுத்து சிறிய நீளத்திற்கு செவவரத்தை மரங்கள் .செடி மரம் போல வளர்ந்த்து பூக்களாக பூத்து தள்ளும் . காலையிலே ஐயர் வீட்டினர் வீதியிலே இருந்தே பூவை பறித்து விட்டுச் செல்வர் . பின்வளவு மூலையில் பெரிய புளியம் மரம் ,அடுத்து வீட்டுப் பக்கமும் கிளையை பரப்பு பகிர்ந்து கொண்டு கம்பீரமாக நிற்கிறது  . பின்வளவின் மத்தியிலே இரண்டு கழிவறைகளுடன் நிற்கும் கூண்டு . இடதுபுறமாக சிமேந்துப்பலகை மூடிய கிடங்கு . அதில் பொறியியல் இன்னமும் தேவைப்படுவதாக நினைக்கிறான். அவர்கள் நினைக்கிற வட்டம் ....நடைபெறுவதில்லை எனப்படுகிறது . உக்கப்படுவதை ஊக்குவிக்க ஏதாவது இரசாயனம் சேர்க்கப்பட வேண்டுமோ ?

         முதலில் இந்த மண்டபத்தையும் இறகு போல இரண்டு பெரிய படுக்கை அறைகளையும் வயிற்றுப் பகுதியில் சிறிய வசிப்பு பகுதியையும் கீறி கட்டப்பட்டிருக்க வேண்டும் . பிறகு   இடது பக்கம் நாற்சாரத்துடன் வெளிக்கதவுடன் , முன்னும் ,பின்னும் வெறும் வாராந்தா ,வேலிப்பக்கமாக வீட்டை விலகிய சமையல் கூடம் , ஸ்டோர் அறையைக் கொண்ட தொகுதியைக் கட்டி இருக்கிறார்கள் .  படுக்கை அறைகளுக்குச் செல்ல ஜன்னல்களுடன் நடைபாதை  கொரிடார் . முன் பக்கம்  வசந்த மண்டபம் போல பெரிய போர்ட்டிக்கோ . கார் வைத்திருக்கிறார் . போர்ட்டிக்கோவூடாக ஓடி கிணற்று மறைப்பு மதிலைச் சுற்றி பெரிய மாட்டுக் கொட்டில் போல ஓடுடன் கூடிய கட்டிடத்தில் கராஜ் . ஐய்யா ,குட்டிச்சாமிப்பிள்ளைப் போல தான் வாழ்ந்திருக்கிறார் . உள்ளே டாணா வேலியிலே ஐந்தடிக்கு தள்ளி அன்னமுன்னா செடிமரங்களாக வைத்திருக்கிறார். பறங்கி அன்னமுனா மரம் ஒன்று கூட . எல்லாமே நல்லாய்க் காய்த்தன . பக்கத்து வீட்டுத் தாத்தா , " இவன் முழுமண்ணை அள்ளி விட்டு நிரப்பு மண்  ..போட்டு தான் வைத்தவன். அது தான் ( மாமரம் , சீமைப்பழம் ...)எல்லாமே காய்த்துக் கொட்டுற சோலையாய் இருக்கிறது " என்றார் .

         வீட்டின் பெயரும் கூட ரட்னஹரி. அவன்ர அண்ணரின் பெயர் ஹரி . அதனாலே அம்மாவிற்கு வீடு நல்லா பிடித்து விட்டது . காய்க்கா விட்டாலும் கிராமத்திலே அந்த வீட்டிலே தான் பேரீச்சை மரம் ஒன்றும் நின்றது .  அவர்கள் குடி புகுந்த போது வசிப்பு கூடங்களின் சுவர்கள் எல்லாம்  ரவிவர்மாவின் நளதமயந்தி , சீதாவின்  என பலரின் அற்புத ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன . கலைக்கூடத்திற்குள் புகுந்த மாதிரி இருந்தது .அவருக்கு மூன்று பையன்களே பிறந்தார்கள் . மூவருக்குமாக  வலது பக்க கூரைச் சரிவை இன்னும் கூடுதலாக நீட்டி  அடைப்புகளைப் போட்டு நாலு சிறிய அறைகளாக்கி இருக்கிறார் . பிறகான இணைப்பு என தெரிந்தது . கொழும்பிலே தான் சீவியம் . சித்தப்பாவின் பொறுப்பிலே இருந்தது . " அப்பரின் கனவு வீடு  எனவே பராமரித்தார்கள் .  நல்ல மாதிரியே இருந்தார்கள் . அதை விற்காமல் சந்ததி சந்ததியாக  காப்பாற்றி   வைத்திருக்கவே   வேண்டும் . போர்க்காலத்தில் அழிபட விட்டு , மூன்று பங்காக்கி விற்றும் விட்டார்கள் . ஒரு காலத்தில் இருந்த அந்த  அற்புதச் சுவடு தெரியாமலே போய் விட்டிருக்கிறது .

       வரந்தா இணைப்பில் முதல் இருந்த   சிறிய அறையை தனது ஒவிஸ் ரூமாக்கிக் கொண்டார் .  அதிலேயும் ஒரு  புதுமை  அலுமாரியை சுவருக்குள்ளேயே பதித்து விட்டார்  .  கதிரையும்,மேசையும் மட்டுமே அறையில்  இடம் பெற்றன  .  பைல்கள்  ,  மற்றைவை எல்லாம் சுவர்ப் பொந்துகளில்  அடக்கம்   .   அதிலே,நம்ம சலீம் சுவரோட சிறிய கட்டிலை மட்டும்  போட்டிருக்கிறான்  .  கதிரை மேசை ஒன்றும் கிடையாது .  கட்டிலில் , ஜன்னல் (கட்டு)லே வந்தவர்கள் எல்லாரும் இருந்தார்கள்.சலீம்மின் தங்கச்சி ஜானகி,இங்கிதம் தெரிந்து எல்லாருக்கும் தேனீர்(சிறிய வெள்ளித் தம்ளரில்) குவளைகளைக் கொண்டு வந்தாள்.என்ன நம்ம ஆள் ‘சலீம்’ என பெயர் வைத்திருக்கிறான் என பார்க்கிறீர்களா ?  இயக்கத்தில் , அரச படைகளிடம் கைதாகினால்.....அவர்களை குழப்புவதற்கே    எல்லா மதப்பெயர்களிலும்   புனைப்பெயர்களை வைக்கச் சொல்லி ஊக்குவிக்கிறார்கள்  .   ரஞ்சனின் பெயர் கிராமத்தில் சிற்ர ரஞ்சன் பெயர் பழகி போய் விட்டது. வெளியிலே  புதுப்பெயர் " போல் ".

        தோழர்களில் கணிசமானவர்கள் , அரைவாசி சீமேந்திலும்,கூரை ஓலையிலும், ஒலைத் தட்டிகளாலும்..என பல்வேறு விதமாக கட்டப்பட்டவையில் வாழ்கிறவர்கள் . அங்கே,மெல்ல மெல்ல தான் முழு வீடாகிறது ...  உருபெறுகிறது  .  அவர்களின் பெரும்பாலோனர் வீடு ஓலை வீடுகளாகவே இருக்கின்றன. எனவே  , இந்த  இஞ்ஜினியர்  வீட்டால்...   மனதில்  அரற்றுவது  ஆச்சரியமில்லை . இனி  ,  வந்தப் பிரச்சனையைப் பார்ப்போம். மாட்டு வியாபாரி   தியாகர் ,  சைக்கிளில் திரிந்து திரிந்து  வாங்கி கசாப்புக் கடைகளிற்கு விற்கிறவர் .  சிலவேளை தானே வெட்டி பங்கும் போடுவார்  .  கிழமாடு  ,  தீடீரென இறந்த மாடு எல்லாம் கூட வியாபாரமாகி விடும்  . அது அவரவர் வியாபார தந்திரம் (ரகசியம் ) ,  கஸ்ட   நட்டம் அப்படி ஆட வைக்கிறது  .  எல்லா வியாபாரத்திலும்  , தில்லுமுல்லு கிடக்கவே செய்கிறது  .
     
         ஒரு வீட்டினர்  ,  வயிற்றில் கன்றுடன் இருந்த மாட்டை விற்க ,  அதை இவரால்  கசாப்புக் கடையில் விற்க முடியாததலால் வெட்டி பங்கு போட்டிருக்கிறார் .  மாட்டு வியாபாரத்தை பழக்குவதற்காக அவர் தனது மருமகப் பெடியனையும் கூட கூட்டிப் போறவர்  .  என்ன இருந்தாலும் ...அந்த மாட்டை வெட்டுற ரகசிய இடத்திலிருந்து அவனை விலத்தி இருக்க வேண்டும்  .  பார்த்துக் கொண்டிருந்த அவனை வயிற்றிலிருந்து கன்றை எடுத்தது...என்னவோ செய்து விட்டது  .  இது சரி இல்லை , என அக்காட்சி அவனை பயமுறுத்திக் குழப்பிக் கொண்டிருந்தது  .      வாசிகசாலைப் பெடியளிடம் சொல்லி விட்டான் .  அவர்களும் பங்கு   கேட்டிருந்தவர்கள்   .  கேட்டு திகைத்துப் போனார்கள்  . அசாத்திய கோபம் பொங்கி வர பங்கெல்லாம் வேண்டாம் என மறுத்து விட்டார்கள்  .  இறைச்சியை யாரும் வாங்கவில்லை  .  தியாகரிடம் நேர்மையும் இருந்தது  .  ரஜனிகாந்தைப் போல வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார் .      தியாகர் இறைச்சி எல்லாத்தையும் தனது சகாவிடம் கொடுத்து கசாப்புக் கடைக்காரனுக்கு அனுப்பி விட்டார்  .  அதை பெடியள்  தடுக்கவும் இல்லை ,  மறிக்கவும் இல்லை .

     ஆனால்  ,  இவர் இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது? . என்பதற்காக ஏதாவது படிப்பினை  , தண்டனை  கொடுத்தே ஆக வேண்டும்'  என கோபத்திலே இருந்தார்கள். அது , எம்மை ஏமாந்த சோனகரியாக நினைத்து ஏமாற்றப் பார்த்தாரே'என்ற கெளரவப் பிரச்சனையும் கூடத் தான்  என அவ்விடத்துப் பெட்டைகள் கூறுகிறார்கள் . உள் வீட்டுப் பிள்ளையாக பிழங்குவதால்  தோழர்களின் சகோதரிகளும்  இவர்களோடு .  "  அண்ணே..." என்று  இயல்பா  கதைப்பவர்கள்  .   பெடியள்  , தண்டனையையும் தீர்மானித்து விட்டார்கள் . உள்குறிச்சியில் , மாட்டின் குடலை எடுத்து அவருடைய கழுத்தில் போட்டு ஊர்வலம் நடக்க தயாராகி விட்டது  .  பல இயக்கங்கள் இருக்கின்றன  .  சிலவேளை அவர்களுடைய இயக்க தோஸ்துகள் கொளுவ  வரலாம்  .....என்பதால் பாதுகாப்புக்கு ஊர்வலத்தில் நாங்களும்  கலந்து கொள்ள வேண்டும் என்பது பெடியள்களது விருப்பம் .

   ஒரு பொது அநியாயம் நடந்திருக்கிறது . மனிதனுக்கு நடந்திருந்தால் 'போர்க்குற்றம்'என சொல்கிறோமில்லையா ?  அதுவே  , மற்ற உயிர்கள் என்றால் குற்றமில்லையா  என்ன ? . அப்புறம்  என்ன  தமிழன் ?  எல்லா உயிர்களும்  ஒன்று தான்  .  எந்த வலத்திலும் எதிர்ப்பைக் காட்டத் தான் வேண்டும்  .  "  போய் கலந்து கொள்வோமடா " என்றது  சலீமுக்குப் புரிய அவர்களோடு  சேர்ந்து  புறப்பட்டுப் போனான் . இவர்கள் கலந்து கொண்டதால் வாசிகசாலைப் பெடியள்களால் சுதந்திரமாக கோசம் போட முடிந்தது .  இது , பழைய கால கழுதையில் ஏற்றி கரும்புள்ளி,செம்புள்ளி குத்திப் போறது மாதிரி இருக்க வேண்டும் .  இங்கை கழுதையும் இல்லை.தவிர,அதிகமாக தண்டிப்பதும் பிழை என்ற நிலமையும் இருந்தது  .  நாமும் மாட்டிறைச்சி சாப்பிடுறோமே  .  இதற்கென்ன தான் தீர்வு  ?  மாட்டை கொஞ்ச நாள் வாழ விட்டு,கன்றைப் போட்ட பிறகு, மாட்டையும் கன்றையும் வெட்டி சாப்பிடலாம்  .  யாரும் எதும் கேட்க  . போவதில்லை   .  ஆனால்  , இங்கே தாய்மை அவமதிக்கப்.பட்டிருக்கிறது  ,  அது சரி   இல்லை  ,  பிழை !  எனவே தான் கலந்து கொண்டோம்’ என்பது  விமர்சினம் .   விமர்சனம்   ! சலிமின் வாதமும்  கூட .

     தியாகர் அவர்களில் ஒருத்தர்.அவருடைய பெடியள்கள் தான் செய்கிறார்கள். அவர் அந்த நிகழ்வை தூசை தட்டிக் கொள்வது போல தட்டிக் கொள்ளலாம்  .  நாளை , அவ்விடத்து மக்களே அதை மறந்து போய் விடுவார்கள் .  அந்த ஊர்வலம் எதற்கும் பயன் படப் போவதில்லை . அதற்காக ...  நிகழ்வை லாப நட்டம் பார்த்து கழித்து விட முடியாது .

     எதிர்ப்பைக் காட்டுவது? அவசியம்  ஒரு சிக்கலுக்கு   .... தோள் கொடுக்கவே வேண்டும்  . சரி , பிழை பிறகு தான் ஆரம்பமாகிறது  . அடுத்த நாள்,கடையடியில்,கழுகுப் பெடியள் "மாட்டுக்காரனுக்கு கயல் இயக்கம் தண்டனை கொடுத்திருக்கிறது  "  சலீம்மைப் பார்த்தும் பாராது போல நின்று  காது பட பேசிக் கொண்டிருந்தார்கள்  .  திரும்பி வரும் வழியில் சந்திரா அக்கா,செல்வத்தின் மனைவி  எதிர்ப்பட்டார்  .  செல்வம்  ,  கடிகாரம் திருத்துற தொழிலாளி  .  அவர்களிற்கு எல்லாப் பிள்ளைகளும் பெட்டைகளே !  அவர்க்கு சலீமின் மீது பாசம் .  "  தம்பி , கொஞ்சம் நில்லு உன்னோடு தனிய பேசனும் " என நிறுத்தினார் .   சிறிது தள்ளி கூட்டிச் சென்று   "  நீ படிச்ச பெடியன் , ஊர்வலத்தை நிறுத்தி இருக்க வேண்டாமா , அவன் வியாபாரி  .  அது அவன்ர தொழில் இல்லையா ? "    எனக் கேட்டார் .  "  நாங்கள் நடத்தவில்லையக்கா  "  என்று அவன் பதில் அளிக்க ,  "  நீ சொன்னால் கேட்பாங்களில்லையா  ? "  என ஒரு போடு போட்டார் .  அவன் என்ன பதில் சொல்வான்  .  "  ஆனால் , அந்த செய்தியைக் கேட்க ஒருமாதிரி இல்லையா அக்கா  "  என திருப்பிக் கேட்டான் .  "  இருக்கிறது தான் .  ஆனால் ,  ஊர்வலம் போனது பிழை தான் " என்றார்  . "எங்களிற்கு எதிர்ப்பைக் காட்டுறது நல்லம் எனப் பட்டது  .  அது தான் கலந்து கொண்டோம்  "  என்று கூறினான் . அவரிற்கு அது புரிந்திருந்தது  .  ஆனால் , இனிமேல் இப்படியான விசயங்களில் கவனமாக இரு  " என்று எச்சரித்தார்  .

       இவர்களை  மேலிடம்"கத்திக் குத்து,வெட்டு...விசயமாக இருந்தாலும்  ,  அந்த இடத்தில் பிரசன்னமாக வேண்டும்  "  என சொல்கிறது  .  இவன் ஊர்ப் பிரச்சனையை மேலிடத்திற்கு கொண்டு போக விரும்புறதில்லை  .  என்ன இருந்தாலும் மேலிடம் பொலிஸைப் போல பலத்தை பிரயோகிக்கிற அமைப்பு  .  அவன் ஊராக்களை தேவையில்லாமல் கொண்டுப் போய் மாட்டி விட்டு ,  அடி வாங்கிக் கொடுக்க விரும்புறதில்லை  .  கூடுமானவரை அவர்களையே பேச வைக்கிறான்  .  அவர்களே பேசி ஒரு தீர்வை எட்ட முயல்வதையும்   ஊக்குவிக்கிறான்  .  தீர்வு அமுலாகிறதுக்கு பெடியளுடன் சேர்ந்தும்    ஆதரவாகவும்  ,நிற்கிறான்   .   சலிம்  , சனி,ஞாயிறுகளில் தொழினுட்பகல்லூரியில் வகுப்புகள் வேறு எடுக்கிறான். பக்கத்து எ.ஜி.எ பிரிவுக்குள்ளாக சைக்கிளில் செல்கிற போது கெளரியை சந்தித்தான்  .   "   என்னடாப்பா நீங்க சமூகப்பிரச்சனைகளிற்கு தண்டனைகள் எல்லாம் கொடுக்கிறீங்களாம்  "  என்று கேட்டான்  .  "  நாங்க அந்த ஊர்வலத்திலே போய் கலந்து கொண்டது மட்டும் தான்  .   மற்றப்படி வாசிகசாலைப் பெடியள்களே...  தீர்மானித்து நடத்தியதெல்லாம்  .   எங்களிற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை"என்று விளக்கினான்  .

      "   நீ   நேரடியாய் தொடுற மூக்கை,சுத்தி வளைத்து தொடுறாய் . ஆனால் உதுவெல்லாம் மக்களுக்கு விளங்காது "  என்று சொல்லி  சிரித்தான்  .

 மத்தியபகுதியிற்கு   "அமைப்புக்கள் கட்டுப்பாடில்லாமல் கண்டறிமாட்டுக்கு இயங்குகின்றன "என்ற  குற்றசாட்டும் சென்றவாரே இருக்கின்றன  . நல்லாவே விமர்சிக்கப்படுகிறார்கள்.

(  ரஸ்யப் புரட்சியின் போது  நடந்தவற்றை  இப்படி  குட்டிக்கதைகளாகவே நாவல் போல எழுதி வைத்திருக்கிறார்கள் . அந்த அருட்டலில் எழுதியது .  )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.