01

வயிற்றிலடிக்கிற போது
ஒரு கொடிப் போராட்டமும்
ஒரு எதிர்ப்புச் சுலோகமும்
ஒரு பெரும் புரட்சியை
எவ்வாறு நிகழ்த்தும்!

ஒரு துண்டு பாணும்
ஒரு பால்மா பையும்
ஒரு கலன் எரிபொருளும்
இன்னும்
மின்வெட்டும்....
அதை எவ்வாறு நிகழ்த்தும்!

பசியின் நெருப்பிலிருந்து
புரட்சியின் முதல் பொறி
பற்றுகிறதெனின்...
உண்டாறும் காலம் வருகையில்
அதன் சுவாலை என்னவாகும்!

ஒரு புரட்சியை நிகழ்த்தும்
அதிகாரக் கதிரையின் கால்களை
விலை ஏற்றம் அசைக்கும்
என்ற நம்பிக்கையை
எங்கிருந்து பெறுவேன்!

'எதிர்' என்றொரு சொல்லை
எங்கு நடலாம்?
எவ்வாறு வளர்க்கலாம்?

02

கடலருகில் எழும்
எதிர்ப்புச் சிறு குடில்கள்
அரச மாளிகையை
விழுங்கத் துடிக்கின்றன...

இரும்பாலும்
இறுகிய செங்கல்லாலும்
பெருஞ் சுவராய்க் கட்டிய
மாளிகையை,
மழை கழுவும் துணிக் குடில்கள் அச்சுறுத்துகின்றன.

மாளிகைச் சுவர்களில்
பீதி பொங்கி வழிகிறது.
பசியின் கரங்கள்
பறித்துண்ணுமோ எனும் அச்சத்தில்
அதன் ஓரங்களில்
உள்ளிருக்கும் இரும்புகள்
துருப்பிடிக்கின்றன.

சிறு குடில் பசியால் உண்டானது.
பசியோ மாளிகையால் உண்டானது.
எனின்,
சிறு குடில் பசியாற
மாளிகையை விழுங்குமன்றோ!

03

ஒரு கடற்கரையை
புரட்சி அலைகள்
ஆர்ப்பரிக்கக் காண்பது
எவ்வளவு மேலானது.

உயரும் குரல்களின்
கோபத் தழலை
உப்புக் காற்றுச்
சுமந்தெழுகிறது.

குரல்கள்
உயர உயர எழுகின்றன.
கொடிகளைத் தழுவி,
கோட்டையின் முகடுகளை முட்டி,
முகிலைத் தொட்டு,
மேலெழுந்து,
விரிந்து,
வானத்தை இடித்து,
சூரியனைக் கழற்றி வருகின்றன.

இரவில் மழை பெய்கிறது.
கூடாரங்களும்
விரித்த புத்கங்களும்
வீசிப் பறந்த கொடிகளும்
நனையுமா என்ன!

பிடித்து உயர்த்திய
சுலோக அட்டையின்
சிவப்பு எழுத்துக்கள் கரையாதிருக்கின்றன.

சூரியன்
நிலத்துக்கு வந்திருக்கிறது.

04

உன் நாவை
வாழ்த்துகிறேன்...
வற்றாத பெரும் பசியில்
என் மொழியிலும்
நீ கீதம் இசைப்பதால்.

என் நாவையும் வாழ்த்துகிறேன்...
உனது பசிப் போரில்,
உன் குரலோடு பின்னி
உன் மொழியிலும்
கீதம் இசைப்பதால்.

ஒரே உணர்வோடு எழும்
ஓர் இசையில்
காலிமுகத்தில்
காற்று உயிர்க்கவில்லையா?
கடல் அலைகள்
நுரை தெளித்துப் பாடவில்லையா?

புரட்சி மலர்
மாவுக்கும் பாணுக்கும்
மலர்வதில்லை,
என் அன்பனே...!

அது மலர்கிறது...
மொழி புரியா ஓர் இசையில்
நீயும் நானும் இசைக்கும்
இரு மொழியின்
ஒரு கீத நிழலில்.

05

ஒரு மாலைப் பொழுதில்...

அழுத்திச் சீவிய
மண்ணிறச் சிரட்டையில்,
நுரைகள் முளைத்து,
பொங்கி வழிய,
உடனிறக்கிய
பனங் கள்ளை
உனக்குப் பரிசளித்தேன்.

நீயோ...
கீழிருந்து விரிந்து மேலொடுங்கும்,
ஒரு வெண்ணிறக் குடுவையில்,
குட்டி நீர்த்துளிகள்
அடர்த்தியாய் மேலெழ,
அக்கணமே இறக்கிய
கித்துல் ராவைப் பரிசளித்தாய்.

என்னவொரு
அழகான போதை ஏறியது
நம்மிருவருக்கும்...
அடேயப்பா..!

நான்
'மால ஹிரவியே...' இசைக்க,
நீயோ
'என்னடி ராக்கம்மா' இசைத்தாய்...

அன்ப...!
இருவரும் சேர்ந்து
எதைப் பரிமாறினோம் என்பதை இப்போதாவது அறிவாயா...?

சொல்கிறேன் கேள்...!

என் அப்பனும்
உன் அப்பனும்
ஒருவருக்கொருவரர்
'மாத்தையா' ஆகினர்!

என் அப்பனுக்கு நீயும்
உன் அப்பனுக்கு நானும்
'புத்தா' ஆகினோம்!

இவற்றுக்கும் மேலாக,
உனதும் எனதுமான
நம்மிரு அம்மாக்களையும்
நாமிருவரும்
'அம்மா'
என்றே அழைத்தோம்.

அறிவாயா?

பின் இருண்ட பொழுதொன்றில்...

என்னை நீயோ...
கீரிமலைக்குரியவன்
கீரிமலைக்குரியவன்
கீரிமலைக்குரியவன்
என்று குரைத்தாய்!

நானோ உனக்கு...
சிவனொளிபாத மலையிலேதான்
சூரியோதயத்தைக் காண விரும்புகிறேன்,
மகாவலி கங்கையில்தான்
உடலாறக் குளிக்க விரும்புகிறேன்,
களனிக் கங்கையோரந்தான்
காலாற நடக்க விரும்புகிறேன்,
கட்டுநாயக்காவில் இருந்துதான்
விமானம் எடுத்துப்
பறக்க விரும்புகிறேன்,
என்றெல்லாம்
மறுபடியும் மறுபடியும் கூறினேன்.

நீயோ
என் முகத்தில், என்னையே நோக்கி
'நீ கீரிமலைக்குரியவன்!
நீ கீரிமலைக்குரியவன்!
நீ கீரிமலைக்குரியவன்!'
என்று பலமுறை கூவி அறைந்தாய்...

காலத் தீயில்
இருவரும் எரிந்தோம்!
அதன் பின்பும் நீயோ,
கீனாயானம், மகாயானம் மறுத்து,
மயானமே வழியெனத்
தேர்ந்தாய்...

அன்பனே...
நாடே மயானம் ஆயிற்று!

உன்னவர்
எனது உறவுகளை எரித்த போது
காணாமலாக்கிய போது
கை, கால்களை வெடிய போது
'புத்தம் சரணம்' என்றாய்...

பின்னொரு காலையில்...

நாம் இருவரும்
கண்ணயர்ந்த போது...
உனது
பத்தும்
பொலஸ் கறியும்
கால் மாஸும்
பருப்பும்
பாணும் காணாமல் போயிற்று...

வற்றிய உனது வயிற்றில் எழும்
பசியின் அழுகுரலால்,
காலிமுகத்துக் காற்று,
ஓவென்று இரைந்தது!

அன்ப!
நாம் இருவரும் நமக்குள்
'மாத்தையா' ஆக வேண்டாமா?

சிவனொளி பாதத்தில்
சூரிய உதயமும்
கீரிமலைக் கடலில்
அதன் மறைவும்
நாமிருவரும்
காண வேண்டாமா!

அன்ப வா!
மண்டான் சுருட்டும்
ஆர்.பி.ஜி பீடியும்
மாறிப் புகைப்போம்.

காலிமுகத்து அலைக் கூதலில்
இப்போது
புரட்சி போதையாகியதா?
புகைக்க விருப்பமில்லையா?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.