முறிந்த பனை தந்ததால்
முறிந்து போன மண்ணின் மகள்.
பனை பிறந்த மண்ணின் குறியீடு!
பிறந்த மண்ணின் பிளவுகளால்
பாய்ந்தது இரத்தப் பேராறு.
மானுடர்தம் உரிமைகள் அம்
மண்ணில் சிதைந்தன.
அது கண்டு அவள்
அப்பால் ஓடியொளியவில்லை.
அயலகத்தில் புகலிடம் தேடவில்லை.
ஓடிய உதிர நதி கண்டு அவள்
ஓடி ஒளியவில்லை.

நிமிர்ந்த நன்னடையும்,
நேர்கொண்ட பார்வையுமாக
உயர்ந்து நின்றாள்.
உள்ளத்தில் உறுதி கொண்டே
உலகுக்கு
உள்ளதை, நடந்ததை எடுத்துரைத்தாள்
அநீதியை ஆவணப்படுத்தினாள்.
அதனால் அவளை முறித்தார்கள்.
வீதியில் குடங்கிக் கிடந்த அவளுரு
வலிதரும் நினைவாக
இன்னும் இருக்கிறது.
வரலாற்றில் இன்னும் வாழுமவள்
உரம்மிகு பெண்ணாக
உயர்ந்து நிற்கிறாள்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.