இன்று....
வாழ்த்துகள் தெரிவித்தீர்கள்!

பதிலுக்காய்...
என்னதான் இருக்கிறது...!?
உங்களைப் பற்றிச் சொல்ல...?

கேள்விக் குறியானது
உங்கள் வாழ்வு!

நீங்களோ..
உங்களுக்கென
ஒரு ரொட்டியும் இல்லாத போதும்
வாழ்த்துச் சொல்லிப் போகிறீர்கள்...!

வானொலிகளும்
தொலைக்காட்சிகளும்
உங்களைப் படம் பிடிப்பதும்...
நீங்களே படம் காட்டுவதுமாய்...!?

முகப்புத் தளங்களும்...
பதிவுகளும்...
உங்களுக்காகப் பதிவிடுவதும்
நீங்களே பதிவிடுவதுமாய்...!?

சிரித்தவாறே கடக்கலாம் எனிலோ...

பசியின் ஏக்க மணத்தோடும்
வயிறொட்டிய நெடியோடும்
'இன்னும் ஒரு லைக்'
எனும் நப்பாசையோடும்
மஹாபொல கிடைக்காத
ஒரு மாணவனின் கேக் துண்டு,
'சுதந்திர நாள் வாழ்த்துகள்' என
வந்துபோகிறது....!
என் முகப் புத்தக வாயருகே..!

எப்படிச் சிரிக்கலாம்?
எப்படியும் சிரிக்கலாம்.....!
அல்லவா...???

நீங்கள் என் மக்கள் ஆதலால்...
என் செய்வேன்...!?

உங்கள் தந்தையின்
வேர்வை மண வீரியத்தை வீழ்த்தியோனை
அறியாத நீங்களும்....
உங்கள் தாயின்
உங்களுக்கான மடியின்
சுகத்தைப் புசித்தோனை
புரியாத நீங்களும்...
துண்டு துண்டாய்
உண்ணப்படுவதை உணராது
சக வாழ்த்துச் சொல்கிறீர்களே...!?

கனவு நடிகனும் நடிகையும்
நல்ல தூக்கத்துக்கான பாயை
விரிப்பதாகக் கனவில் மூழ்கி...
சுதந்திரத்தை வாழ்த்தியவாறு
நீங்கள்
தூங்குகிறீர்களே...!

என் பிள்ளைகளே...!

கொடியின் உயர்வைக் கொண்டாடும்
நீங்களோ
உடையின் விலை உயர்வைக்கூட உணரவில்லை....!

துணியின் விலை உயரும் காலத்தில்...
அதன் விலைக்கு,
உங்களை விற்க நேரும் நேரத்தில்
கொடியின் மதிப்பை
என்னவென்று உரைப்பீர்கள்..!?

வரளும் நுனி நாவின் பசையும்
காற்றாய் கரையும் அப்போதாவது
'குசி'யாய்ச் சொல்லுவீர்களா?

'நமோ நமோ தாயே..!'

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.