*
எங்கள் சூரிய பயல்
கொடி மின்னலில் 
வெடி வெடிக்கும் மேகங்களில்
வானவில் பட்டம் ஏற்றுகிற 
கோடை மழைக்காலம்.
*
போன வசந்தத்தில் 
துருவங்களுக்கு பறந்து சென்ற
வலசைப் பறவைகளா இவை.
அதற்குள் மீண்டும் காதலிக்கவும் 
கலந்து விளையாடி குஞ்சு பொரிக்கவும்
தேன் சிந்தும் ஈழ மண்ணை
தேடி தேடி வருகின்றனவே.
எங்கள் புலம்பெயர்ந்த பிள்ளைகள்போல
வாழ தெரிந்தவை.
*
வானில் யூத கிபீர் விமானங்கள்
கொலைவெறியில் சுற்றிய போதுகூட
எங்கள் சிறுவர்கள் ஓடி ஒழியவில்லை.
கண்மூடி மின்னல் பார்த்தும்
இடிக்கு அஞ்சுவதாய் நடித்தும்
ஆலங்கட்டி பந்தாடியும்
குதூகலமாக கும்மாளமடித்தனர்.
இதுவா போர் நிகழும் மண்? 
இவர்களை தோற்கடிக்க முடியாது என
அன்றே நம்பினேன்.
நாம் தோற்கடிக்கப்படவில்லை போலும்.
பின்னடைவாகவே இருக்க வேண்டும்.
கங்கை கரை மரங்கள் என்றாலும்
எங்கள் வேர் பாதாளம்வரைக்கும் 


தொலைதூரத்து குண்டுகளுடும்
ஆடிப்பாடும் சிறுவர்கள் கூச்சலில் 
மீண்டு உயிர்க்கிற இந்த மண் 
வெல்லபடுவது எப்படி? 
உண்மையில் நாம் 
வெற்றிகொள்ளப் படவில்லை போலும்.
*
மீண்டும் வருவமென சிறகு அசைக்கும்
வலசைப் பறவைகளின் பின்னே
எங்கள் பிள்ளைகள் சென்றனர்.
பரம்பரை பொன்னென
மண்ணின் கனவுகளை சூடிக்கொண்ட
எங்கள் பிள்ளைகள். 
*
புலங்கள் பெயர்ந்தாலும்
மரபணுவில் தாய்பறவை 
எழுதி வைத்த வழி தேடி 
இளைய பறவைகளே வருகுதே. 
காதலும் வீரமும் கனியும் 
இந்த காந்தருவ நாடு
எட்டு திசைகளிலும் வாழுமெங்கள்
பிள்ளைகளின் தாய்மடியன்றோ.
*
வடகிழக்காய் மெத்தை விரித்து
காத்துக் கிடக்கிறது தாய் மண்.

28.06.2025