தமிழ்ச்சிற்றிதழ்களில்  நவீன படைப்புகள்-தமிழ்மொழி வளர்வதற்கான ஊற்றுக் கண்ணாகச்சிற்றிதழ்கள் இக்கால கட்டத்தில் விளங்குகின்றன. தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள், மேலைஇலக்கியங்களுக்கு   ஒருபடி மேலே சென்று, உலக இலக்கியத் தரத்தைத் தமிழுக்குத் தந்து  கொண்டிருக்கின்றன எனலாம்.  கவிதை,  சிறுகதை, குறுங்கதைகள்,  திறனாய்வுகள்,   துணுக்குகள் எனப் பல்வகைப்பட்ட இலக்கியங்களைத் தரத்தோடு வெளிவரச்செய்ய முயல்பவைகளாகவும்  இச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கின்றன. இலக்கியத் தாகத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்பு ஆற்றலுக்கு தீனி போடக் கூடிய மற்றொரு பயனையும் சிற்றிதழ்கள் செய்கின்றன.

சிற்றிதழ் தன்மை
“எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்.” 1

என்கிறது   தமிழ் விக்கிப்பீடியா .மேலும் வணிக இதழ்களுக்கு மாறாகச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கும் தன்மையினைப் “பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிக்கைச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிக்கைகள் “ 2  என மு.யாழினி வசந்தி கூறுவார்.தமிழக அளவிலும்,உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிற்றிதழ்கள் பெரும்பான்மையாக இன்று வெளியிடப்படுகின்றன.இவ்விதமான சிற்றிதழ்களில் நவீன படைப்புகள் எவ்விதமான தன்மையினைப் பெற்றிருக்கின்றன என்பதை  ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

நவீன சிறுகதைகள்
சிறுகதைகள் தற்பொழுது,நவீன இலக்கியக் கோட்பாட்டுச் சிந்தனைகளோடு சிற்றிதழ்களில் எழுதப்பெறுவதைக்  காணமுடிகின்றது.தமிழ்ச்சிற்றிதழ்கள் ஆண்டு  தோறும் சுமார் இரண்டாயிரம் இதழ்கள் உலகில் வெளிவருவதாக அறிகிறோம்.அந்தளவிற்கு இணையங்களும்,வணிக இதழ்களும், சிற்றிதழ்ச்செய்திகளும் சிற்றிதழ்களின் வரவை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.  தமிழம், கீற்று, கூடு, நக்கீரன்(கனடா),  தமிழ் மணம் போன்ற இணைய தளங்களில் தொடர்ந்து சிற்றிதழ்களின் வரலாறு மற்றும் திறனாய்வுகள் வெளிவருகின்றன.

சுந்தரசுகன், தொடரும், முங்காரி, ஓடம், பயணம்,நிழல்,கனவு,சதங்கை,இலக்கு போன்ற சிற்றிதழ்களில் நவீன கோட்பாட்டு அடிப்படையில் சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன. வன்மி, இரா.நடராஜன், ஆதவன் தீட்சண்யா, வா.மு.கோமு, கழனியூரன் விசும்பு, ஆ.சந்திரபோஸ் போன்ற எழுத்தாளர்கள் இவ்விதமான சிறுகதைகளை எழுதுகின்றனர். நனவோடை உக்தியைப் பயன்படுத்தி எழதும் சிறுகதைகள் அதிகத்திருப்பைதைக் காண முடிகின்றது.மொழிநடை ஒவ்வொரு சிறுகதையிலும் வேறுபாட்டைக் கொண்டவையாகவும், வாசகரின் மனவோட்டத்தைச் சுண்டி இழுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. தேவரசிகன் எழுதிய ‘நாங்கேட்டேல ஏகே ‘எனும் சிறுகதை சுந்தரசுகன் இதழில் வெளிவந்தது. 3 அக்கதை உளவியல் சார் கோட்பாட்டை உள்புகுத்திய கதையாகவும், மொழிநடை சிறக்க எழுதியதாகவும் இருக்கிறது.சமுக வெளிப்பாட்டை நவீனத்துடன் எடுத்துரைக்கும் சிறுகதைகள் அதிக அளவில் எழுதப்பெருகின்றன.உதாரணமாக விலங்குகள் வதைபடுவதை, ‘உறுப்பு ‘எனும் கதை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. இக்கதையை பா.சத்தியமோகன் கனவு இதழில் எழுதியுள்ளார். ‍‌4 பின்நவீனதத்துவச் சிறுகதைகளாகவும், மாய எதார்த்தவாதச் சிறுகதைகளாகவும், பல கதைகள் எழுதப் பெறுகின்றன.

நவீன கவிதைகள்
கவிதைகள் தமிழ்மொழியின் தன்மையினை உலகமொழிகளுக்கு மேலாக எடுத்துச்சொல்லும் அரிய பணியினைச்செய்கின்றன. படிமக்கவிதைகள், குறியீட்டுக் கவிதைகள் பெண்ணியக் கவிதைகள் , தலித்தியக் கவிதைகள் , உளவியல் கவிதைகள், மார்க்கியக் கவிதைகள், பின்நவீனத்துவக் கவிதைகள்,மிகைஎதார்த்தவாதக் கவிதைகள், மாய எதார்த்தவாதக் கவிதைகள் என மேலைநாட்டுக் கோட்பாட்டு இஸங்களைப் பயன்படுத்திக் கவிதைகள் இன்றைய சிற்றிதழ்களில் வெளி வருகின்றன.வணிக இதழ்கள் இவ்வாறு கவிதைகளை வெளியிட மறுக்கும் நிலையில், சிற்றிதழ்கள் இவற்றை வளர்க்கின்றன. ‘திசையெல்லாம் தீ’ எனும் தலைப்பில் மாயவனின் கவிதை இயற்கையைப் படிம்மாக்கித் தந்துள்ளார். “தீ” என்பது பல்வேறு நிலைகளில் படிமமாக்கப் பட்டுள்ளது.அக்கவிதை,

“சித்திரைச்சூரியன்
துப்பி விட்ட எச்சில்.

ரெளத்திரத்தின் ஆதி.

அடிவயிற்றுப் பசியின்
ஓர் சொல்.

தொட விடாத
தொட்டால் விடாத கம்பீரம்.

பனிக்காலத்தில்
வயது பாராது
அகப்படுத்தும் சிகப்பு நங்கை” 5

என்பதாகும். இக்கவிதை சிறந்த படிமக் கவிதையாக உள்ளது.

“மலர்களின் இதழ்களில்
நகங்களின் கீரல்.

காக்கியும் காவியும்
கற்புக் களத்தில்
சமாதிக்காகவாய் சண்டையிட்டு
சமாதியாகும் சமயங்கள் .

கோவணங்களின் உழைப்பு
‘சுவிஸ்’-இல் குவிப்பு.

கெட்ட கூட்டுறவால்
தள்ளாடும் வருங்காலத்துத் தூண்கள்” 6

எனும் இக்கவிதை,குறியிட்டுக் கவிதையாக,தேசியவளிமை இதழில் எழுதப்பெற்றதாகும்.சமுகத்தின் இழிந்த குரலை எடுத்தோதும் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.கூற வந்த நேரடிச்செய்தியை, வாசகர் மனதில் உள்ள அடிப்படைப் பண்பாட்டுச்சின்னங்களை தொடர்புப்படுத்திக் குறியீடாக்கி
எழுதுவது நவீனமானதாகிறது.

பெண்ணியக் கவிதைகளும் சிற்றிதழ்களில் பெண்ணிய எழுத்தாளர்களால் எழுதப் பெற்றிருக்கின்றன.சமஉரிமை, கட்டுப்பாடுகளைக் கட்டவிழ்த்தல், சுதந்திரம் எனக் கவிதைக்கான உள்பொருள்கள் பெண்ணியம் சார்ந்ததாகக் அமைகின்றன.

“நாங்கள் துளிகள் அல்ல
உளிகள் .
நாட்டைக் காக்கும்
வேட்டை நாய்கள்.
நாங்கள் மிதியடி அல்ல
மிதிக்கப் போகும்
யானைக் கூட்டம்.
நாங்கள் வளையும் மூங்கில்
வளையப் போகும் வில்லும் அம்பும்.
நாங்கள் அடிமைகள் அல்ல,
விடியலை நோக்கும் வீராங்கனைகள்.” 7

எனும் கவிதை பெண்களின் நிலை சமூகத்தில் முன்னேற்றத்தை நோக்கி, வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள் என்று பறை சாற்றுகிறது.

பிற படைப்புகள்
ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள் எனப் படைப்புகள் சிற்றிதழ்களில் பல்கிக் கிடக்கின்றன.இலக்கிய விமர்சனங்கள், சமூக விமர்சனங்கள், சமூகம் ஏற்க வேண்டிய/மாற்ற வேண்டிய கொள்கைக் கோட்பாடுகள் குறித்த கட்டுரைகளும் எழுதப் பெறுகின்றன. நேரடியான கருத்தைக் கூறும் விமர்சனங்களும் சமூகத்தை நோக்கியும்,இலக்கியத்தையும் நோக்கியும் வைக்கப் படுகின்றன.இவை காலங்களின் சக்கரத்தை நேர்வழிக்குத் திரும்பும் அஸ்திரங்களாக இருக்கின்றன. இவை தவிர துணுக்குகள் நகைச்சுவைகள், நவீன ஓவியங்கள்,உலக இலக்கியங்கள், உலக எழுத்தாளர்கள் எனச்சிற்றிதழ்களின் ஆக்கங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.நவீன ஓவியங்கள்,நவீன படைப்புகள் என நவீனத்தை எளிய வாசகர்களிடமும் கொண்டு செல்லும் அரிய பணியைச் சிற்றிதழ்கள் செய்கின்றன.

இணைய இதழ்களின் பெருக்கமும்,சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறன.சிற்றிதழ்களின் மாற்று வடிவமாகவும் இன்றைய இணைய இதழ்கள் இருக்கின்றன.இணையம் உலகத்தை கைக்குள் அடக்கி விடும் அற்புத சாதனம். சிற்றிதழ் எழுத்தாளர்கள் இணையத்திலும் நுழைந்து இணைய இதழ்களை நடத்துகின்றனர்.

சிற்றிதழ்களை வாங்கிப் பயன் பெறுவோம்.சிற்றிதழ்கள் அழிந்து படாமல் பாதுகாத்து வைப்போம்.உலக இலக்கியங்களுக்கு மேலாகத் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு செல்ல சிற்றிதழ்களை ஆதரிப்போம்.

அடிக்குறிப்புகள்
1) www.ta.wikipedia.org/சிற்றிதழ்கள்
2) www.andhimazhai.com/news/view/seo.title-2823.html
3) தேவரசிகன்,சுந்தரசுகன், ஏப்.98,ப-7
4) பா.சத்தியமோகன்,கனவு.செப்.98,ப-5
5) மாயவன்,முங்காரி,அக்.98,ப-12
6) மு.மு.முத்தையா,தேசிய வலிமை ,நவம்.97,பக்-10-11
7) தமிழப்பன்,தமிழ்ப்பாவை,ஜீலை.99,ப-13

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.