- முனைவர் சா.சதீஸ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை. முன்னுரை:
நாட்டுப்புறவியல் என்பது கிராமப்புறம் சார்ந்த இயற்கை எழில்கள், கிராம மக்களின் வீடுகள், தெருக்கள்,மரம்,செடி, கொடிகள், குளம்,குட்டைகள், பறவைகள், அம்மக்களின் இயல்பான வாழ்க்கைப் பதிவுகளையும் கிராமப்புற மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகள், உணவு முறைகள், விளையாட்டுகள், தாலாட்டுப் பாடல் முதல் ஒப்பாரிப் பாடல் வரையிலான இன்ப – துன்ப நிகழ்ச்சிகளையும் அவர்களின் வாழ்வியலுக்குத் தேவையான வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஏற்படும் விரயங்கள்,அவர்களின் பேச்சு வழக்கு, திருவிழாக்கள் போன்ற அனைத்து நிலைகளிலும் அனுபவம் சார்ந்த கவிஞர்கள் தங்கள் ஐக்கூக் கவிதைகளில் பாடுபொருளாக எவ்வாறு உருவகித்துப் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உத்தி
மனித வாழ்க்கையின் அனுபவக் கூறுகளை ஒழுங்குபடுத்தி, ஒன்றுபடுத்தி ஒரு முழுமை வடிவம் தந்து நாம் முற்றும் உணருமாறு செய்பவர்களே கவிஞர்களாவர். கவிஞர்கள் கவிதைகளைப் புனையும் கற்பனைகள் பலப் பல. அவர்களின் உள்ளத்தின் வெளிப்பாடுகளையே அவர்களின் எழுதுகோல் மையும் சிந்துகின்றது. அவற்றைப் படிப்போரைச் சிந்திக்க வைக்கவும் செய்கின்றன. கவிஞர்களின் நடை வேறுபடுவதுடன் மொழிநடையும் வேறுபடுகின்றது. ஆனால் மையக் கருத்து என்பது ஒன்றே.

நாட்டுப்புற இயல்
நாட்டுப்புற மக்களின் கலைகளையும், இலக்கியங்களையும் நம்பிக்கைகளையும் பற்றி அறிந்து கொள்ளும் இயலே நாட்டுப்புற இயலாகும்.நாட்டுப்புறம் என்பது கல்வி பெறாத சிற்றூர்ப் பகுதிகளையே குறிக்கும். இவர்களைக் கிராமத்தான், பட்டிக்காட்டான்,பாமரன்,நாட்டுப்புறத்தான், ஊர்மகன் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். இவை அனைத்தும் சிற்றூர்ப் புறங்களில் வாழும் மக்களையே குறிக்கின்றன. ஆங்கிலத்தில் நாட்டுப்புற இயலை Folklore என்று அழைக்கின்றனர். Folk + lore என்ற சொற்சேர்க்கை தான் Folklore என்று ஆகியிருக்கிறது. A New English Dicitionary  இதற்குப் பொருள் கூறும் போது, The traditional beliefs, Legends and customs , Current among the common people. The study of these Popular, Antiquities or Popular Literature (A New English Dicitionary, P.no 330 ) என்று குறிப்பிடுகின்றது.

சிற்றூர் கிராமம்
இயற்கை அன்னை தன் முகம் பார்த்துக் கொள்ள சிற்றூர் என்னும் கண்ணாடியைத் தான் எடுத்துக் கொள்கிறாள். அவள் ஒப்பனை உருப்பெறுவதும் இதன் மூலம் தான். இத்தகைய சிற்றூரின் மண்ணிலே தவழும் மக்கள் அனைவரும் அந்த இறைவனின் புதல்வர்களாகவே கருதப்படுகின்றனர்.

ஊர்ப்புறங்களின் அழகே அவை செல்லும் பாதையில் தான் இருக்கின்றன. நாகரீகம் முழுவதும் பரவாத அக்காலக்கடத்தில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படாத பள்ளம் - மேடுகளில் கால தடம் பதித்து. சிறிது தொலைவு நடந்து சென்று, ஊருக்குள் நுழைவதே மகிழ்வான அனுபவமாகும். அந்த அனுபவத்தைச் சொற்களால் விளக்கிட இயலாது. அதை உணர்ந்தவர்களால்தான் உணரமுடியும்.


“ ஒற்றுமையின் உருவம்
கிராமங்களில்
ஒற்றையடிப்பாதை...!” (பூ.பூ.வா, ப.20-5)

எனும் கவிதை,சிற்றூர்ப் புறங்களில் காணப்படும் அந்த ஒற்றையடிப் பாதையில் வரிசையாக நடந்து செல்லும் போதுதான் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாடின்மையைக் காணமுடிவதைக் காட்சிப்படுத்துகிறது. இதே போல வண்டி மாடுகள் செல்லும் பாதையின் அழகினைக் கூறுகிறது.

குடிசை வீடுகள்
சிற்றூர்ப் புறங்களின் வனப்பே, அவர்கள் குடியிருக்கும் வீடுகளிலும், அவர்கள் பேசும் பேச்சுக்களிலும் தான் உள்ளது. அவர்தம் குடிசை வீடுகள், வறுமையை எதிரொளிப்பதாய் இருப்பினும் அவர்கள் குடியிருப்பதற்கே மட்டுமல்ல் பறவைகளும் கூடுகட்ட அது இடம் கொடுப்பதாக அமையும்.

“நகரும் நிலா.....
கொஞ்சம் தான் தெரிகிறது....
கூரைப் பொத்தல் வழியே....” ( பிரியும் நேரத்தில்இ ப.34-1)

மரம், குளம்
சிற்றூர்களுக்கு ஆணிவேராக இருப்பவை அங்கே இருக்கின்ற மரங்களும் ஏரி, கண்மாய், குளம் , குட்டைகளுமே ஆகும். ஊருக்குள் நுழைந்ததும் அங்கே இருக்கும் அடர்ந்த மரங்களும் அதில் வாழும் பறவைகள் எழுப்புகின்ற ஒலிகளும் சில்லென்ற காற்றும் அக்காற்றினைத் தருகின்ற மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறச் சொல்லும் மரங்களும் சிற்றூர்களில் இன்றியமையாத ஒன்றாகும்.

“ பிறந்த மண்ணில்
ஒற்றைக் காலில் தவம்...
சாகும் வரை மரம்....” ( மரவரம்,ப.8-5)

எனும் கவிதை, தனக்கு மரணம் வரும் வரையில் தான் பிறந்த ஊரிலேயே இருக்க நினைக்கின்ற மரத்தைப் போன்றேஇ சிற்றூர்களில் பிறந்து வளர்ந்த நம் முன்னோர்கள் தாங்கள் இருக்கும்வரை அம்மண்ணை விட்டுப் பிரியக் கூடாது என நினைப்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.

நாட்டுப்புறத் தெய்வங்கள்
ஆதியில் வாழ்ந்த மனிதன் இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அஞ்சி நீர், தீ, இடி, பெருமழை, நிலநடுக்கம் போன்றவற்றை  அவற்றைவழிபடத் தொடங்கிய காலம் முதல் தமிழர்களின் வாழ்க்கையில் வழிபாடு வேரூன்றியது. அதன் பின்னர் கற்களை நட்டு,அவற்றை வழிபட்டான். பின்னர் கற்களில் சிலைகளை வெட்டி,அவற்றிற்கு மூன்று நேரப் பூசைகளும்,வழிபாடுகளும் செய்து வழிபடத் தொடங்கினான். அவ்வாறு தொடர்ந்ததே இறைவழிபாடு ஆகும்.

ஆண் தெய்வங்கள்
பெருந்தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பிள்ளையாரை வேண்டுவோர்க்கு விரும்பியதையெல்லாம் வழங்கும் கடவுள் என்று மக்கள் பிள்ளையாரிடம் தங்களது முறையீடுகளை வைப்பதுண்டு. பிள்ளையாருக்கு அரச மரத்தடியே முதன்மையான இடம் எனக் கருதுவர். அனைத்துக் கோவில்களிலும் பிள்ளையாருக்கென்றே தனி இடமும்இ சிறப்புப் பூசைகளும் செய்து வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. சிலர் எந்தச் செயலைச் செய்வதாயினும் பிள்ளையார் சுழியிட்டு அதன் பின்னர் செய்தால் அதில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகின்றது.

சிறு தெய்வமாக ஐயனார் என்னும் காவல் தெய்வத்தைக் குறிப்பிடுகின்றனர். ஐயனார் சிலை என்றதுமே  கையில் வெட்டரிவாள் ,முறுக்கு மீசை, பெருத்த கண்கள்,பருமனான பெரிய உருவம்,குதிரை என அனைத்து அமைப்புகளுடனும் காவல் தெய்வத்திற்கே உரிய மிடுக்கான தோற்றத்துடனும் காணப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மனத்தில் நீங்காது இடம் பெற்றுள்ளது.

ஊர்ப் புறங்களில் வாழும் மக்களிடையே சாதி – சமயங்களால் சில சமயங்களில் இறைவழிபாட்டின் போது இடையூறுகள் நிகழ்வதும் உண்டு. இதனை,

“ திருவிழாவில் கலவரம்...
உருண்டன தலைகள்...
உதவிக்கு ஐயனாரின் அரிவாள்!” (நி.சோ.வா.ப.16-1)

எனும் கவிதை எடுத்துக்காட்டுகிறது.

பெண் தெய்வங்கள்
பெண் தெய்வங்களுள் முதன்மைத் தெய்வமாக விளங்கும் மாரியம்மனுக்கு ஊர்தோறும் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா மற்றும் இருபத்தொரு நாள் நோன்பு சாட்டும் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம். மாரியம்மனுக்கு பத்ரகாளி அம்மன், உச்சிமாகாளி அம்மன்,காளியம்மன், அழகு நாச்சியம்மன்,கரடியம்மாள், உமையம்மாள், கோணியம்மாள் எனப் பல பெயர்களிட்டு வணங்கி வருகின்றனர்.

அம்மனுக்கு நோன்பு சாட்டும் நாள்களில் மக்களுக்குப் பெரியம்மை, சின்னம்மை எனப்படும் வெக்கை நோய்கள் ஏற்படுவதும் உண்டு. இக்காலங்களில் இந்நோய் ஏற்பட்டவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தி,வேப்பந்தழைகளை விரித்து,அதில் படுத்துறங்குவது வழக்கம். மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணுடையவள் என்ற பெயரும் உண்டு. மழை வேண்டி மாரியம்மனுக்குத் திருவிழா எடுக்கும் மக்கள்,மரம் வளர்த்தால் மழை பெய்யும் என்பதை அறியாத மூட நம்பிக்கையில் உள்ளனரே என்பதைக் கீழ்க்காணும் கவிதை உணர்த்துகிறது.

“மரங்களை அழித்துவிட்டு
மாரிக்கு
மாரியம்மன் திருவிழாவா?” (கி.தி.இ.,ப.51-4)

மக்கள், தெய்வத்தின் மீது வைக்கும் நம்பிக்கையை மரங்கள் மீது கொண்டு, மரங்களை வளர்த்தாலே மழை பெருகும் என்பதை நினைவூட்டுகிறது.

வேளாண்மை
பருவத்தே பயிர் செய், ஆடிப்பட்டம் தேடி விதை என்பவை உழவு பற்றிய பழமொழிகள் ஆகும். விதை விதைப்பதற்கு முன் உழவன், நிலத்தின் மண் வளத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மண்ணின் தன்மை அறிந்து, பயிர்களைப் பயிரிடுவதே உழவனின் சிறந்த அறிவுக்கு எடுத்துக்காட்டாகும். அத்தகைய உழவனின் புகழைப் பின்வரும் கவிதையில் காணமுடிகிறது.

“ கடவுளைத் தேடுகிறார்கள்...
நான் பார்த்துவிட்டேன்....
இதோ! வயல் வெளியில்...!” (மழைப்பாட்டு, ப.68-1)

கடவுளைக் காணவில்லை என்று தேடுவோர், வயலில் உழுதுகொண்டிருக்கும் உழவன் தான் கடவுள் என்பதை உணரவில்லை என்று மேற்காண் கவிதை உணர்த்துகிறது.

வயல் வரப்புகள்
காலமறிந்து நன்றாய் நீர்ப்பாய்ச்சியும் உரமிட்டும் வளர்ந்த பயிர், அந்நிலத்தில் காணலாகும் கண்கொள்ளாக் காட்சியை,

“ வனப்பான உடல்....
நடவுக்கால் இணைப்பு...
வரப்பு....” (மழைப்பாட்டு, ப.39-1)

எனும் கவிதையில் உணரமுடிகிறது.

நாற்று நடுதல்
நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுபடுவதை,

“கிராம வயல்களில்
குனிந்த பெண்கள்
கூலியைப் போல்...!” (மேலது, ப.57-5)

எனும் ஐக்கூ காட்சிப்படுத்துகிறது.

முடிவுரை
ஹைக்கூ கவிதைகளில் நாட்டுப்புறவியல் கூறுகளில் நாட்டுப்புறவியலின் விளக்கம், சிற்றூர்ப் புறங்ளில் காணலாகும் வீடுகளின் அமைப்பு, இயற்கைச் சூழல், உழவர்களின் வாழக்கை முறை, அவர்கள் அடைகின்ற துயரநிலைகள், நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள் அவற்றில் தெய்வங்களின் பங்கு போன்றவை பற்றி கவிஞர்களின் பார்வை வழி பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்வை நூல்கள்
1. A New English Dicitionary
2. பூ பூக்கும் வானம் - உதயகுமாரன்.வீ
3. பிரியும் நேரத்தில் - நாணற்காடன்
4. மரவரம் - வசீகரன்
5. நிலவுக்கு சோறூட்டும் வானம் - கவிதைத் தம்பி
6. கிளைக்குத் திரும்பும் இலைகள் - பாரியன்பன்
7. மழைப்பாட்டு – தமிழ்மதி