இந்து கலாசார, நாகரிக, சமயவழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் உச்சகட்ட காலமாக 19ம் நூற்றாண்டினைக் குறிப்பிடலாம். இக் காலக்கட்டத்தில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார, சமூக, சமய, இலக்கியங்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதன் காரணமாக தமது ஈடுபாடுகளையும் பங்களிப்பினையும் ஆற்றினர். இதற்காக மேலைநாட்டினர் இந்தியாவின் மொழியான சமஸ்கிருத மொழியினை கற்க தொடங்கினார்கள். அவர்கள் அவ் மொழியினை கற்றது மட்டும் அல்லமால் இந்துப்பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இலக்கியங்களை வெளியிட்டமை, மொழிபெயர்ப்பு பணியினை செய்தமை மற்றம் தொல்பொருள் ஆராய்ச்சி என்பனவற்றினையும் மேற்கொண்டனர்.

மேலைநாட்டினர் வேதங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் உள்ளிட்ட இந்து சமய இலக்கியமூலங்களை அச்சுருவாக்கினார், ஆங்கீலமொழியில் மொழிபெயர்த்தனர், விரிவுரைகள் செய்யப்பட்டன, ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன, அகாரதிகள் உருவாக்கினார் மற்றும் தொல்லியல் ஆய்வுகள், ஒப்பியல் ஆய்வுகள், சமய ஆய்வுகள் நடந்தேறின. இதற்கு துணை செய்தவர்களில் சேர் வில்லியம்ஸ் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர், கீத், மொனியர் வில்லியம்ஸ், எச்.ரி.கோல்புறூக், எச்.எச்.வில்சன், வின்ரநிட்ஸ், சேர் ஜோன்வூட்றொவ் போன்ற மேலைத்தேச இந்தியவியல் ஆய்வாளர்களின் வகிபாங்கு அளப்பெரியது ஆகும். இவ் ஆய்வாளர்களில் முதன்மையானவரும் சுவாமி விவேகானந்தரால் வேத ரிஷிகளுக்கு ஒப்பானவர் என்று போற்றப்பட்ட சிறப்புக்குரியவருமான ஜேர்மன் நாட்டறிஞராகிய மாக்ஸ்முல்லரின் இந்துப் பண்பாடு தொடர்பான பங்களிப்புகள் பற்றி இக் கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்.

ஜேர்மனியில் கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள s Dessau என்ற சிறுநகரில் வில்லியம் முல்லர், அடல்ஹெய்ட் முல்லர் ஆகியோருக்கு 1823 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி மக்ஸ்முல்லர் மகனாகப் பிறந்தார். இவர் இளவயதில் இருந்தே காவியங்களையும், இசைகளையும் கற்பதில் பெரிதும் ஆர்வம் உடையவாரக திகழ்ந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியினைக் ஜிம்னானிஸம் உயர்பள்ளி மற்றும் நிகோலாய் உயர் கல்லூரி என்பவற்றில் கற்றார். இவர் தனது பல்கலைக்கழக அனுமதிக்காக கீழைத்தேச மொழிகளில் குறிப்பாக சம்ஸ்கிருத்தை ஆழமாக கற்றிருந்தார். இவர் தனது 18வது வயதில் ஜேர்மன் பல்கலைக்கழகமான லெய்ப்ஸிஸ் பல்கலைக்கழகத்தில் மொழிப்பிறப்பியல் தொடர்பான கற்கையினை மேற்கொள்வதற்கு தெரிவாகினார். தனது பட்டப்படிப்பின் போது தொல்சீர் மொழிகளான கிரேக்கம், இலத்தீன், அரபு, பாரசீக மொழி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவாரக திழ்ந்த இவர் 1843ல் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். இவர் மிக இளவயதிலேயே ஹிதோபதேசத்தினை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.

மக்ஸ்முல்லரின் கவனம் இந்தியப்பண்பாட்டின் மீதும் இந்து சமய தத்துவங்கள் மீதும் விழுவதற்கு முக்கிய காரணம் அவர் சமஸ்கிருதத்தை ஆழமாக கற்க தொடங்கியமை ஆகும். இதற்கு வழிசெய்தவர்களாக பிரீட்ரிக் ஸ்கெலிங், பிரான்ஸ் பொப், ஹ்யூம் (பீ) பனார்வ் ஆகிய மூவர் திகழ்கின்றனர். பேர்ளின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிரான்ஸ் பொப் அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் நிமித்தம் சம்ஸ்கிருதத்தினை ஆழமாக கற்பதற்கு Eugene Burnouf என்ற விரிவுரையாளரை நாடி 1845 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரிற்கு சென்றார். டீரசழெரக இன் தொடர்பால் மக்ஸ்முல்லரின் வாழ்வில் முக்கிய திருப்பங்கள் இடம்பெற்றன. இவர் தான் ரிக்வேதத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் படி உற்சாகப்படுத்தியவர்.

இவர் ரிக்வேத மூலச்சுவடிகளை தேடி 1846 இங்கிலாந்து பயணித்தார். இதனால்தான் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொடர்புகளும் சம்ஸ்கிருத மற்றும் கீழைத்தேச அறிஞர்களின் தொடர்புகளும் அவருக்கு கிடைத்தன. இவர் 1850 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மொழிகள் கற்கைத்துறையில் துணைபேராசிரியராக நியமனம் பெற்றார். 1858ல் அனைத்து ஆன்மாக்கள் என்ற அமைப்பால் வாழ்நாள் புலமையாளர் என்ற தகைமைக்கு உரியவராக கௌரவிக்கப்பட்டார். பின்பு 1868 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட ஒப்பீட்டு மொழிப்பிறப்பியல் ஆய்வுப் புலத்துக்கான முதலாவது பேராசிரியராக மக்ஸ்முல்லர் தெரிவு செய்யப்பட்டார். பின்பு 1872ல் Strasburg பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறையில் விரிவுரையாளராக அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், 1892ம் ஆண்டில் கீழைத்தேச ஆய்வியலாருக்கான சர்வதேச அமைப்பு மக்ஸ்முல்லருக்கு தலைமைப்பதவி வழங்கி கௌரவித்தது. 1896 இல் அவர் பிரித்தானியாவின் கோமறைக்கழகத்தின் அங்கத்தினராக்கிக் கௌரவிக்கப்பட்டார். இவர் 1900 ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி இவ்வுலகை நீத்தார்.

சாயனாரின் விளக்கவுரையோடு 06 தொகுதிகளாக வெளியான ரிக்வேத சம்ஹிதை இந்து கற்கைகளுக்கான மக்ஸ்முல்லரின் ரிக்வேத சம்ஹிதையை அச்சிட்டு வெளியீடுவதற்கு கிழக்கிந்திய கம்பனியாரின் இயக்குனர் சபையினர் தூண்டப்பட்டனர். அச்சிடும் பணி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகத்தில் இடம்பெற்றது. இதற்காக தேவநகரி எழுத்துருக்கள் விசேடமாக தயாரிக்கப்பட்டன. ரிக்வேதப் பதிப்பின் முதலாவது தொகுதி 1849 இல் பிரசுரமாகியது. அதன்பின்பு 2ம், 3ம், 4ம் தொகுதிகள் முறையே 1853, 1856, 1862 ஆம் ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட்டன. இதன் ஆசிரியார் என்ற முறையில் அவரது பங்களிப்பு பெரிதாகப் பாராட்டப்பட்டது. அவர் தன்னுடன் கெலின்ங், திபேட், வின்டர் ரூட்ஸ் ஆகியோரையும் இணைத்துக் கொண்டு இப் பணியை முன்னெடுத்தார்.

மக்ஸ்முல்லரின் அடுத்த படைப்பாக கிழக்கின் புனித நூல்கள் என்ற பெயரில் கீழைத்தேய சமயங்களுக்கான முக்கிய நூல்களை ஆங்கீல மொழிப்பெயர்ப்புக்களை வெளியிடும் பாரிய திட்டத்தினை மேற்கொண்டார். இதில் பிரதான உபநிடதங்கள், வேத சங்கிதைகள், தம்மபதம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு மக்ஸ்மூலரால் மேற்கொள்ளப்பட்டது. 49 தொகுதிகளைக் கொண்ட இத் தொடர் இந்துக் கற்கைகள் மற்றும் கீழைத்தேயவியல் தொடர்பிலான ஆய்வுகளுக்கான உறுதியான அத்திவரமாக காணப்படுகிறது. மேலும் மக்ஸ்முல்லர் இந்தியவியல் இந்தியச் சமயங்கள், இந்து சமய வரலாறு, இந்து மெய்யியல் தொடர்பான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மற்றும் புராதன வடமொழி வரலாறு, இந்திய மெய்யியலின் ஆறு முறைமைகள் ஆகியவற்றையும் வெளியிட்டிருந்தார்.

மேலும், India, What can it Teach us ? என்ற தொகுப்பு நூலானது மக்ஸ்முல்லரின் விரிவுரைகளின் தொகுப்பு ஆகும். அதில் அவர் புராதன இந்தியாவில் சமயமானது வெறுமனே வணக்கத்துக்குரிய சடங்காக மட்டுமன்றி மெய்யியல், நன்னெறி, நீதிபரிபாலனம் மற்றும் அரசாட்சி ஆகியவற்றை தன்னகத்தே உள்வாங்கி மிகவும் சிறந்ததோர் நிலையில் விளங்கியது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு ஜேர்மனிய வேலைத்தளத்தின் செதுக்கல்கள் என்ற பொருள் தரும் ஒரு நூலும் மக்ஸ்முல்லரால் எழுதப்பட்டது. இதில் முதலாம் தொகுதி இந்து சமயம் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

மக்ஸ்முல்லரின் இந்துக்கற்கைகள் தொடர்பான பங்களிப்பில் அமைந்த மற்றுமொரு நூலாக ‘இந்திய தத்துவத்தின் ஆறு முறைமைகள்’ என்ற நூலாகும். இந்திய மெய்யியலில் இனங்காணப்பட்ட இவ்வறுவகைத் தத்துவத் தரிசனங்கள் பற்றிய தீர்க்கமான சிந்தனைகள் இக்கட்டுரைத் திரட்டில் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவரால் 1894 மார்ச் மாதம் றோயல் நிறுவனத்தில் வேதாந்த மெய்யியல் குறித்த மூன்று விரிவுரைத் தொடர்கள் நிழ்த்தப்பட்டன. இதுவே பின்பு Three Lectures on Vedanta என்ற பெயரில் நூலுருவாக்கப்பட்டது. இரண்டாவது விரிவுரையில் பிரம்மம்-ஆன்மா பற்றிய விவாதங்களாக அமைந்துள்ளது. மூன்றாவது விரிவுரையானது இந்திய ஐரோப்பிய மெய்யியல்களுக்கிடையிலான ஒப்பாய்வுக் கண்ணோட்டத்தில் அமைத்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இவரால் படைக்கப்பட்ட இன்னுமொரு நூல் சுயசரிதைக் கட்டுரைகள் என்ற 19ஆம் நூற்றாண்டில் நவீன இந்து சமய சீர்திருத்த இயக்கங்களையும், சிந்தனையாளர்களையும் பற்றிய நூலாகும். 1884 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலில் நவீன இந்து மத சீர்திருத்தவாதிகளான ராஜராம் மோகன்றோய், தயானந்த சரஸ்வதி, கேசப்சந்திரசென் ஆகியோரும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

எனவே தொகுத்து நோக்குவோமாயின் மக்ஸ்முல்லர் இந்துப் பண்பாட்டுக்கு மிகப் பெரும் சேவையாற்றியுள்ளார். இவர் இந்துக்கற்கைகள் தொடர்பாக தனது ஆய்வுகளை மேற்கொண்டமையை காணமுடிகிறது. மொழிப்பிறப்பியல், சமய ஒப்பாய்வியல், சமய மானிடவியல், மெய்யியல் போன்றவற்றில் இவரின் ஆய்வுகள் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கம்சமாகும். இவர் ஆய்வுலகின் தந்தை என்றால் மிகையாகது.

உசாத்துணைகள்

1. முகுந்தன்.ச. 2021. ‘இந்துக்கற்கைகளை வளமூட்டிய மேலைத்தேசத்து ஆளுமைகளும் ஆய்வுகளும்’, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை.
2. https://en.wikipedia.org/wiki/Max_M%C3%BCller.
3. https://www.britannica.com/biography/Max-Muller.
4. https://royalasiaticsociety.org/studying-the-sanskrit-language/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.