முன்னுரை

நாட்டுப்புறப் பாடல்கள் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குபவை. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. மண்ணின் மணத்தைப் பரப்புபவை:

நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும் என்கிறார் முனைவர் சு. சக்திவேல். (நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.22) எனவே, நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது எனலாம். அந்தவகையில் நாட்டூப்புறப் பாடல்களில் விரவிக்கிடக்கும் பெண்ணிய சிந்தனையை மட்டும் எடுத்துரைப்பதாக அமைகின்றது இக்கட்டுரை.

நாட்டுப்புற ப்பாடல் வகைப்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல் நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் பெண்ணிய சிந்தனைகளை முனைவர் சு.சக்திவேல், கீழ்வருமாறு பகுத்துக் கூறுகிறார்.

ஆணாதிக்க வெளிப்பாடு
கற்புக் கோட்பாடு
விருப்பமின்றி நடத்தப்படும் திருமணங்கள்
கருவின் கருவளம்
பாலின சமமின்மை
சக பாலின முரண்
விதவைப் பெண்ணின் மன உணர்வு
வேலைச்சுமை
கூலி வேலை செய்வும் பெண் நிலை
வன்புணர்வு
பெண் தன் பலத்தைப் பிரகடனம் செய்தல்.

மேற்கண்ட பட்டியலுக்குள் அடங்கியிருக்கும் பெண் உணர்வுகளையும், அடக்குமுறை களையும், அடிமைநிலையையும் நாட்டுப்புறப் பாடல்களின் துணைகொண்டு கீழ்வருமாறு காணலாம்.

ஆணாதிக்க வெளிப்பாடு

பெண் தன் இழிநிலைக்குக் காரணமாக அமையும் பெற்றோரையும், சுற்றத்தாரையும் பழி தூற்றுவதாக அதிகமான பாடல்கள் காணப்பட்டாலும், பெரும்பாலும் தன்னைச் சார்ந்துள்ள ஆணினத்தையே பழி தூற்றுகின்றாள்.

“தாலிக்கு அரும்பெடுத்த
தட்டானும் கண் குருடோ . . . . ?
சேலைக்கு நூலெடுத்த
சேனியனும் கண்குருடோ . . . .?
பஞ்சாங்கம் பார்த்துச் சொன்ன
பார்ப்பானும் கண் குருடோ . . . ?

என்று தன்னுடைய நிலைக்கு ஆணாதிக்கமே காரணம் என்னும் கருத்தை இப்பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், குறி, கோடங்கி, சோதிடம், நல்லநேரம், சகுனம் போன்ற நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் ஆணின் மூலமாகப் பெண்ணிற்குத் திணிக்கப்பட்டு கட்டாயப் படுத்தப்படும் சூழலை உணத்துவதையும் மேற்கண்ட பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

கற்புக் கோட்பாடு
பெண்ணின் கற்பு தீக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பதைச் சமூக இலக்கிய வரலாற்றின் வழி அறியக் கிடைக்கிறது. தீயின் தன்மையைப் பெண் கற்புக்கு ஏற்பக் கூறும் விதமும் பாலின ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடாகவே அமைந்து இருப்பதை நாட்டுப்புற பாடல்களில் காணமுடிகின்றது.

விருப்பமின்றி நடத்தப்படும் திருமணங்கள்

பெண்ணின் தெரிவு இன்றி நடத்தப்படும் கட்டாயத் திருமணங்கள் அல்லது பெண்ணின் விருப்பமின்றி முடித்துவைக்கும் திருமணத்தின் பின்னான வாழ்க்கையில் முரண்பாடு ஏற்படுவதை,

“மாமன் மகளிருக்க மாலையிடும் சாமியிருக்க
பேசும் கிளி நானிருக்க பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு
பெருங்கஷ்டத்துக்கு ஆளாச்சே”

என ஒரு பெண் தன் சொந்த உறவுகள், சுற்று வட்டாரம், பிறந்த மண் ஆகியவற்றைப் பிரிந்து அந்நியமான ஒருவனுடன் வாழ்க்கைப்படும் போது நேரும் துன்பத்தை அவள் யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாத அந்நியமான சமூகமாக இருப்பதை மேற்கண்ட பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

கருவின் கருவளம்

கருவின் கருவளம் பெண்ணினால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பது ஆரம்பகாலக் கண்ணோட்டம். அவள் ஆணின் பங்களிப்பைத் தெரிந்திருக்கவில்லை. அதைத் தனக்கு எதிராக ஆண்மை இன்மை மீது வைக்க மறுத்தது. மேலும், குழந்தை இல்லை என்றால் அது பெண்ணின் குறையாகக் காட்டி ஆணாதிக்க ஆண்மையைப் பாதுகாத்தது. இதனால் பெண்ணைக் கொண்டு சடங்குகளை விரதங்களைச் செய்விப்பதன் மூலம் நிவர்த்திக்கக் கோருகின்றது. குழந்தை இல்லாத நிலையில் சமூகம் பெண்ணை மலடியாக்க் கேவலப்படுத்தும் போது அப்பெண் அதை எப்படி எத்ர்கொள்கிறாள் என்பதைக் கீழ்வரும் நாட்டுப்புறப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

“ஐயனார் கோயிலாண்ட
ஆடுவெட்டப் போன இடத்த
ஆட்டுக்கிடா நூறும் சுமந்தேன்
என்ன என்ன சுமந்தாலும் என் கண்ணம்மா
கன்னரே வர்ணமுள்ள தேவரே
எனக்கு மைந்தன் ஒன்றும் காணமே
என்னமே

என்பதாக அமைகின்றன. இதில் பெண் தனது ஏக்கத்தைக் கடவுளிடம் பகிர்ந்து கொள்வதைப் பார்க்க முடிகின்றது.

பாலின சமமின்மை

கலைகள் மனித சமூக வாழ்வைப் பிரதிபலிக்கும் ஊடகங்களாக விளங்குகின்றன. சமூகப் பண்பாட்டினை வெளிக்காட்டி நிற்பவை கலைகள். கலை உடல்மொழி மற்றும் உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. உடல் அமைப்பில் வலுவுள்ளவர்களாக ஆண்கள் சித்தரிக்கப்பட்டதாலேயே பெண்கள் தவிர்க்கப் படுகின்றனர். இவ்வாறு சமுதாயத்தில் நிகழ்த்தும் கலைகளில் மட்டுமல்லாது வாழ்க்கைக் முறையிலும் பாலினப் பாகுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்தபொழுது தாலாட்டுப் பாடப் பெறுகின்றது. பெண்களே இதனைச் செய்கின்றனர். பாடலுடன் கூடிய இது பெண்களுக்கு உரியதாகக் கொள்ளப்படுகிறது. பாடப்படும் சூழலும் பாடல் பொருளும் பாலின வேறுபாட்டைக் காட்டுவதாக அமைகின்றன.

“கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை”

எனும் தொல்காப்பிய நூற்பா இறந்தோருக்காக அழுது புலம்பும் வழக்கத்தை சுட்டுகிறது. ஆனால், இதை யார் பாட வேண்டும் என்ற வரையறை தொல்காப்பியத்தில் இல்லை. பொதுவான வழக்காகவே இது காட்டப்படுகிறது. ஆனால், இன்று ஒப்பாரி வழக்கம் பெண் மீதே சுமத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலின வேற்றுமை

பிறந்த குழந்தைக்கான தாலாட்டில் கல்வி, ஆணாதிக்கக் கடமைகள் பாலினப் பாகுபாடு இருப்பதைப் பார்க்க முடிகின்றது. இதில் ஆண் குழந்தையை நோக்கிய தாலாட்டுப் பாடலில் ஆண் படிக்க பிறந்தவன் என்ற கண்ணோட்டத்தில் வெளிப்படுகின்றது. இதனை,

“சென்னைப் பட்டணம் ஐக்கோர்ட்டு - என் ஐயா நீ
செயிக்கப் பொறந்த கண்ணோ
பசுமலை பள்ளிக்கூடம் - என் ஐயா நீ
பசுமலை படிக்கப் பொறந்த கண்ணோ
பள்ளிகூடம் - என் ஐயா நீ
படிக்க பொறந்த கண்ணோ”

என தாலாட்டிலும் பாலின வேற்றுமை இருப்பதை உணரலாம். சக பாலின முரண் பெண், ஆணின் வழியாகத் துன்பங்கள் அனுபவிப்பது ஒரு புறமாகவும் மற்றொரு புறமாகப் பெண் வழியாகவும், துயரங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. கணவன் இறந்த பின்பு பிறந்த வீட்டிற்குச் செல்ல இயலாமலும் புகுந்த வீட்டில் மாமியாரின் கொடுமையை எதிர்கொள்ள முடியாமலும் பெண்கள் தவிக்கின்றனர்..

ஆத்தோட போற அத்த
அரிசிக் கணக்கச் சொல்லிப் போங்க

என்று அமையும் வரிகள் பெண் தன் சக பாலினத்திற்குள்ளேயே முரண்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.

விதவை பெண்ணின் மன உணர்வு

கணவனை இழந்த பெண், விதவை, கைப்பெண் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், மனதின் ஆசைகளையும், உணர்வுகளையும், தவிர்க்கவியலாது என்பது உண்மையாகும். இதனை,

“தச்சன் உலை நெருப்பு
தணியும் ஒரு சாமம் - என்
தங்கமடி நெருப்பு
தணிவது எக்காலம்?

என ஒரு பெண் புலம்புவதாக அமையும் இப்பாடல் பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்துகிறது.

இன்றைய சூழலில் ஒரு பெண் தன் காதல் உணர்வின் உடல் தேவையை வெளிப்படுத்துவதற்கான உரிமையும் வாய்ப்பும் சூழலும் இருக்கின்றனவா என்பது ஆயாயத் தக்கதாகும்.

வேலைச்சுமை

பெண்ணின் கடமை வீட்டிற்குள்ளே என்று வீட்டு வேலையை செய்தல் பெண்ணின் எழுதப்படாத சட்டம் என்பதை சீதையின் வாழ்வியலைக் காட்டுவதாக அமைகின்றன கீழ்வரும் நாட்டுப்புறப் பாடல் வரிகள்.

“ராமர் பசுவளக்க லட்சுமணன் பால் கறக்க
சீதை எழுந்திருச்சித் தீமூட்டிப் பால் காச்சி
சீதையம்மா மோர்கடைய - என்னய்யா
செல்லமகள் நித்திரையோ”

இந்த வரிகள் பெண் வீட்டுவேலைச் சுமையில் அடிமைப்பட்டிருக்கும் நிலையை சுட்டுகின்றன.

கூலிவேலை செய்யும் பெண் நிலை

கூலிக்கு உழைக்கும்போது சுரண்டலின் கோரத்தையும் பச்சைக் குழந்தைக்குப் பால் கொடுக்க அனுமதிக்காது நேர காலமின்றி சுரண்டப்படும் உழைப்பையும்,

“ இந்திரன் னோக்கியல்லோ எடுத்தோம்
சாந்துவக்கை
காலையில் வந்த மக்கள் கால் கடுக்க
நிற்கின்றோமே
வெள்ளைவே வந்த மக்கள் விரல் கடுக்க
நிக்கின்றோம்
நட்டகுறை நட்டு கூலி வாங்கி முடி
கூலியைக் குறைத்துக்
குறைமரக்காலிட்டார்.
தண்ணி கருத்திருச்சி
தவளை சத்தம் கேட்டிருச்சு
புள்ளை அழுதிருச்சு
புள்ளியரே வேலை விடு

வன்புணர்வு

ஆணாதிக்கச் சமூகத்தில் கற்புக்கு பாதுகாப்பு என்பதைவிட கற்பு சூறையாடப்படும் கற்பு குறித்த அச்சமே மேலோங்கி நிற்கின்றது.

“தண்ணிக்குப் போ மகளே
தடம் பாத்து போ மகளே
முட்டாளுப் பையங்கண்டா
முகங்கொடுத்துப் பார்க்காதே
பாசங் கலந்து வரும்
பலபேரும் மோக்கும் தண்ணி
நீரும் கலந்து வரும்
நிண்ணு மோக்க ரமாகும்”

என்ற நாட்டுப்புறப் பாடல் வரிகள், பாசமாகப் பேசிப் பெண்ணின் கற்புரிமையைக் காத்துக்கொள்ள வலியுறுத்துகின்றன. பெண்கள் எந்த காலத்திலும் தம்மையும் தமது உடலையும் ஆண்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்னும் கருத்து இதில் வலிமையாக மையமிட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

பெண் தன் பலத்தைப் பிரகடனம் செய்தல்

பெண் தனது பலத்தைப் பிரகடனம் செய்யும் விதம் உயர்ந்த சமூகக் கண்ணோட்டம் கொண்டவை. இதனை,

“ நாவிலொரு சொல்லு வந்தா
நாலாயிரம் பெண் வருவோம்”

என்னும் நாட்டுப்புறப் பாடலடிகள் உணர்த்துகின்றன. இதில், பெண் தனது பலத்தையும் போராடும் ஆற்றலையும் எச்சரிக்கையாக விடுவதைப் பார்க்க முடிகின்றது. மேலும், அதன் பலம் சமூகத்தின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாத தன்மை கொண்டவை. எந்த நாகரிகப் பெண்ணியமும் இயற்கையை எதிர்த்துப் பெண்ணியத்தின் வீட்டை அதன் உள்ளடக்கத்தைப் பெறமுடியாத வகையில் நாட்டுப்புறப் பாடல்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

நாட்டுப்புறப் பாடல்கள் சமூகப் பண்பாட்டின் வெளிப்பாடாக விளங்குகின்றன. அதில் எந்த விதமான போலித்தனமும் இல்லை. அவை எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைபவை. அந்தவகையில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் நாட்டுப்புறப் பாடல்கள் பெண்கள் குறித்தும் ஏராளமான பண்பாட்டுப் பதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இவ்வாறு நாட்டுப்புறப் பாடல்களில் விரவிக்கிடக்கும் பெண்கள் குறித்த பதிகளில் சிலவற்றை எடுத்துக்காட்டும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

துணைநின்ற நூல்கள்

1. சரசுவதி வேணுகோபால், தமிழக நாட்டுப்புறவியல், தாமரை வெளியீடு, மதுரை.
2. சு. சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. நா. வானமாமலை, தமிழர் நாட்டுப் பாடல்கள், செஞ்சுரிபுக் ஹவுஸ், 1976, சென்னை.
4. கி.வா. ஜகந்நாதன், கஞ்சியலும் இன்பம், 2010, அமுதநிலையம், சென்னை.
5. நாட்டுப்புற இயல் ஆய்வு, டாக்டர் சு. சக்திவேல் பதிப்பகம் மணிவாசம், 2006, சென்னை.
6. ம. சா. அறிவுடைநம்பி, தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2010, சென்னை.

 * பதிவுகளுக்கு அனுப்பி வைத்தவர்:Ramachandran Komala -  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.