- கவிஞர் மு.மேத்தா -

முன்னுரை

"ஆணாதிக்கத்தினின்று விடுதலை சமுதாயத்தில் ஆணுக்கு இணையான உரிமை , எக்காலத்தும்  எச்சூழலிலும் எப்பருவத்திலும் ஆணுக்கு நிகரான மதிப்பு, பெண் தன்னம்பிக்கையுடன் தன் காலில் நின்று எதிர்நிற்கும் சிக்கல்களைத் துணிந்து எதிர் கொண்டு தன் இழிவகற்றி முன்னேறுதல்,  வாழ்வில் தன் இன்றியமையாமையை உணர்த்துதல்,  பெண்ணை இழிவுபடுத்தும் அனைத்தையும புறக்கணித்து  அவற்றை வேரோடு களைதல் ஆகியவற்றை மையமிட்டுப் பெண்ணியம் இயங்குவதாகக் கொள்ளலாம்”

என்று பெண்ணியத்திற்கு விளக்கமாக முனைவா் ச. சிவகாமி அவா்கள் தன்  'காலச் சூழலில் பெண்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர்.

'தற்பொழுது பெண் சமுதாயம் பல வகைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். ஆனாலும் அவை முழுமையான அளவை எட்டவில்லை.  கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இருமடங்கு அதிகரித்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் குற்றச் செயல் புள்ளிவிவரப் பிரிவு சென்ற ஆண்டில் என்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஒவ்வொரு நாற்பத்தேழு நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். ஒவ்வொரு நாற்பத்து நான்கு நிமிடத்துக்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறாள். ஒரு நாளைக்குப் பதினேழு வரதட்சிணைக் கொலைகள் நிகழ்கின்றன என்றெல்லாம் புள்ளி விவரங்கள் பெண்ணின் அவல நிலையைக் கூறுகின்றன. இந்தநிலை ஓா் ஆரோக்கியமான முன்னேறும் சமுதாயத்துக்கு உரிய அடையாளங்கள் ஆகுமா? '

என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன அவா்கள்  'பெண் விடுதலை'  என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதின் வாயிலாக அறிய முடிகிறது.

”உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினும் இந்தப் பெண்மையினிதடா”  (பாரதியார் கவிதைகள். ப.235) 

என்று ' பெண்கள் வாழ்க' என்ற தலைப்பில் பாரதி எழுதுகிறார்.

பெண்மை என்பது தாய்மையின் வடிவங்களன்றோ! அவ்வியப்பூட்டும் சக்தியைப் பெற்ற பெண்கள் சார்புப் பிராணிகளாக்கப்பட்டு விட்டார்கள். இத்தகைய நிலையில் வானத்து விடிவள்ளி போன்று சில எழுத்தாளர்களில் ஒருவா்தான் கவிஞா் மு. மேத்தா.  அவா் எழுதியகவிதைகளில் காணப்படும் பெண்ணியச் சிந்தனைகளை ஆய்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்களின் நிலை

    தமிழகத்தில் சங்க காலம் முதற்கொண்டே, சமகால வாழ்விலும் பெண்கள் வீரம், கல்வி, பழக்க வழக்கங்கள், பண்பாடு கலாச்சரங்களில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனா். ஒரு குடும்பம் முன்னேற வேண்டும் என்றால் அந்தக் குடும்பத்தின் ஆணிவேராகத் திகழும் பெண், கல்வியில் உயர்வுபெற வேண்டும். பெண் கல்வி கற்றால் குடும்பம் சிறப்பான முன்னேற்றம் அடையும். பெண்களிடையே கல்வியறிவு பரவும்போது, பிறப்பு விகிதம் குறைந்து காணப்படும் நிலையானது உயரும் நிலை உருவாகும். பெண்கள் தெய்வத்திற்கு இணையானவர்கள். அவா்களைப் பாதுகாப்பது கடமை என்று மேடைக்கு மேடை சில தலைவா்கள் பேசுகின்றனர். ஆண்களின் தீச்செயல் முழுவதும் யாரும் அறியா வண்ணம் மறைக்கப்பட்டு விடுகின்றது என்பதை மு. மேத்தா அவா்கள்

”கௌரவத் திரௌபதிகளைக்
கலைத்துப் பார்க்கும்
இந்தத் து(ர்)ச்சாதனத்துக்குமா
பாரதத்தில் அடிக்கடி
பாராட்டு விழா” (மு. மேத்தா, அவா்கள் வருகிறார்கள், ப. 33)

என்ற அடிகள் மூலம் சுட்டிக்காட்டுகின்றார். பெண்கள் சமூகத்தில் பல துன்பங்கள் அனுபவக்கின்றனர். இந்த நிலையினை மு. மேத்தா

”பால் நிறைந்து கனக்க
வேண்டிய பாவையின் வாய்க்கால்
வழியே புரண்டோடிச் சங்கமித்த
கண்ணீர் சுமையால் மட்டுமே
கனத்துக் கிடந்தது” (மு. மேத்தா, ஊா்வலம், ப. 21)

என்று குறிப்பிடுகிறார். வரதட்சணை, சடங்குனள் என்ற போர்வையில் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். திருமணம் செய்த சில நாட்களில் கல்வி, வறுமை நிலையில் வரதட்சணை என்ற பெயரில் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

"குளிர்மலைச் சாரலாம்
கோதை சீதையைக்
கொளுத்தி எரித்த
நெருப்புகள் தான்
எத்தனை எத்தனை! " (மு. மேத்தா, காத்திருந்த காற்று ப.31)

என்ற கவிதை மூலம் கூறுகிறார்.

வரதட்சணைச் சிக்கல்

    இன்று திருமணம் என்பது அதன் புனிதத்தன்மையை இழந்து வேலரமான வணிக நிரைக்குத் தள்ளப்பட்டு உள்ளதுஇ வரதட்சனை முறை நம் வாழ்வில் இடம் பெற்றதால் எத்தனையோ பெண்களனி் வாழ்வு, காட்டில் காய்ந்த நிலவாய்ப் பயனின்றி ஒழிந்தது. பெண்ணைப் பெற்றுவிட்ட காரணத்தால் பெற்றோர்கள் துயரக் கடலில் மூழ்கின்றனா்.

    வரதட்சணை என்ற சமூகப் பிரச்சனை காரணமாகப் பெண்கள் முதிர் கன்னிகளாக வழ நேரிடுகின்றது. மேத்தாவின் ” காதல்” என்ற கவிதை முதிர் கன்னிகளின் நிலையை காட்டுகின்றது. வீட்டிற்குப் பெண் பார்க்க எவரும் வருவதில்லை. ஆனால் தெருவில் நடந்தால் ஈக்களைப் போல வட்டமிடுகின்றனர். இதற்கு அஞ்சித்தான் பெண்கள்வீட்டிற்குள்ளே சிறை இருக்கின்றனர். (மு. மேத்தா, கண்ணீா்ப் பூக்கள் ப. 45)

    பிரச்சனைகளை மட்டுமே தொட்டுக் காட்டாமல் இத்தகு சமூகக் கொடுமைகளுக்கு யார் யார் காரணம் என்பதையும் வெளிப்படுத்துகின்றார் பெற்றோர்களே மிகுதியும் காரணமாக இருக்கின்றனா்.

    ”பெரியவா்கள் மடடும்  விலைதரச் சொல்லி
    விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்   வேருடன் பிடுங்கிப் போக”

(மு. மேத்தா, கண்ணீா்ப் பூக்கள் ப. 35)

இதில் தலைமுறையாக வளர வேண்டிய செடியினை வேருடன் பிடுங்குவது போல வாழ வேண்டிய பெண்களை வரதட்சணை வாங்கிக் கொண்டு பிடுங்கிப் போவதை உணர்த்துகின்றார்.

பெண்களின் அவலநிலை

    'இன்று எவ்வளவு தான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் பெண்களை அடிமைகளாகத்தான் பார்க்கிறது ஆண்வர்க்கம், திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்றாலும் அவா்களின் நிலையில் முன்னேற்றமில்லை. இதனை ஈ.வே.ரா ஆணின் நலத்துக்குப் பயன்படுவத்ற்குமு், ஆணின் இச்சைக்கும் பெருமைக்கும் பெண் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? ஓர் ஆணுக்கு ஒரு சமையல்கார், ஓர் ஆணின் வீட்டுக்கு ஒரு வீட்டுக்கார்ஈ ஓா் ஆணின் குடும்பத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை, ஓா் ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்' என்ற கூற்றின் மூலம் பெண்கள்  இன்னும் நடை பியமாக வாழ்ந்து வந்த நிலை சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் பெண்களின் அவலநிலையை மு. மேத்தா தம் கவிதையில் படிப்படியாக விவரிக்கின்றார். வாலிபம் வந்து சேர்வதினால் காலத்தின் கட்டாயப்படி அவள் வயதுக்கு வருகிறாள். கனவுகளில் முடிசூட்டி விழாக்களில் கௌரவிக்கப்படுகிறாள்.

”அவா்களுடைய திருமணப்பேச்சு ஆரம்பமாகிறது,
மலர்ந்த மலர் மெல்லக் குவித்து
மறுபடியும் மொட்டாகிட்டது போல்
வாழ்க்கையின்
நிதர்சன அா்த்தத்தைக்
கண்டு கொள்ள நேரிட்டதால்
அந்த உல்லாசவாசிகள்
ஊமைகளாகி விடுகிறார்கள்” (மு. மேத்தா, அவா்கள் வருகிறார்கள். ப.13)

என்ற வரிகளில் பெண்களின் சுதந்திரம் பறிபோகும் திருமண வாழ்க்கையைச் சாடுகிறார். பெண் அலங்கரித்து அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கே நடைபெறும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைத் தோற்றுப் போவதால் மீண்டும் அடுப்புக்கே திருப்பி அனுப்பப்படும்  அவல நிலையைக் கண்டு மனம் வருந்துவதைப் பார்க்க முடிகின்றது.

முடிவுரை

 கவிஞா் மு. மேத்தா படைத்த இலக்கியம் பல பெண்களின் முன்னேற்றத்திற்காகப் படைக்கப் பெற்றவையாகும். தமிழ் நெஞ்சங்களில் பெண்ணியச் சிந்தனைகளைச் சுடர்விட்டு ஒளிவெள்ளமாக ஒளிரச்செய்த படைப்புகளாகும்.  பெண், ஆண்களிடமிருந்து விடுதலை அடைந்து கல்வியைப் பெற்று சமுதாயத்தில் முன்னேற வேண்டும். பல பெண்கள் கல்விபெற்று முன்னேற்றம் அடைந்தாலும் இன்றும் சில கிராமங்களில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில்லை. இந்நிலை மாற வேண்டும் என்பது கவிஞர் மு. மேத்தாவின்  முக்கிய குறிக்கோளாக இருந்ததை அவரின் படைப்புகள் மூலம் அறியமுடிகிறது.

பயன்பட்ட நூல்கள்

1. மு.மேத்தா - கண்ணீர்ப் பூக்கள்
குமரன் பதிப்பகம்
சென்னை – 17

2. மு.மேத்தா - ஊர்வலம்
கவிதா பப்ளிகேஷன்
சென்னை – 17

3. மு.மேத்தா - அவா்கள் வருகிறார்கள்
கவிதா பப்ளிகேஷன்
சென்னை – 17

4. மு.மேத்தா - காத்திருந்த காற்று
கவிதா பப்ளிகேஷன்
சென்னை – 17

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.