முன்னுரை

பெண்களாய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா  - கவிமணி

குடும்பம் என்பது உறவுகள் கூடி வாழும் இல்லம். அத்தகைய உறவுகளில் தாய்ப்பாசத்திற்கு அடுத்த நிலை உறவாக மதிப்பிடக்கூடிய உறவு மகளாகும். இத்தகைய பெருமைக்குரிய மகள் நிலை உறவு குறித்துப் பெருந்தன்மை குடும்பக்கதைகள் சிறுகதைத்தொகுப்பில் எழுத்தாளர் செளந்தரராசன் படைத்துள்ள தன்மையினை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தளவை மா.சு.சௌந்தரராசன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் இராயகிரியில் சுப்பையா-மாரியம்மாளுக்கு பத்தாவது மகனாகப் பிறந்தார் (27-8-1953). விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டியில் தமது மனைவி-தங்கேஸ்வரியுடன் வாழ்பவர். ஒன்பதாம்வகுப்பு வரை படித்த இவர் தளவாய்புரம் அம்மையப்ப நாடார் பெண்கள் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணி செய்தவர். ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவுகளோடு படிக்க முயற்சி செய்து முடியாமல் போனதால் எழுத்தாளராக வளர்ந்தவர். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தினர் உதவியுடன் இவரது சிறந்த கதைகளைத் திரு. அப்துல்ஹமீது அவர்கள் வானொலிக் கதைகளுக்காகப் பேசியுள்ளார். இவரது முதல் சிறுகதை14-10-1985 மாலைமுரசு இதழில் வெளி வந்தது. மேதகு.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தபோது இவரது சிறுகதைகளைப் பாராட்டி உள்ளார்.

நா.கவிதா என்ற சிவகாசி கல்லூரி மாணவி இவரது படைப்புகளை ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார். நல்லஉள்ளம், தரிசனம், சுபசகுனம், பெருந்தன்மை, யோசனை போன்ற பெருமை மிகுந்த பல சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள இவர் சிறுவர்களுக்கான பல நூல்களையும் எழுதியுள்ளார்.

பெருந்தன்மை சிறுகதைத்தொகுப்பு 33 சிறுகதைகளை உள்ளடக்கியது. அவற்றுள்

1.நாய்க்கு நன்றி,
2. கல்யாண வேளையிலே,
3. பூக்காரி,
4. கன்னித்தாய்,
5. நாடகம்,
6. தீபம் தீயானால்,
7. தீர்வு,
8. புனிதமான காதல்,
9. மீண்டும் சுமங்கலி

போன்ற சிறுகதைகளில் காணப்படும் மகள் பாத்திரப்படைப்பு குறித்து இக்கட்டுரை அமைகிறது.

   - தளவை மா.சு.சௌந்தரராசன் -

கதையின் நடை

ஒரு எழுத்தாளரின் திறன் வர்ணனை,கதைக்கரு,கதையமைப்பின் உயிரோட்டம்,கதைப்பின்னல்,கதையை எடுத்துச் செல்லும் நடையழகு, கதையின் முடிவு இவற்றைப் பொருத்து வெளிப்படும். சிறுகதை என்பது சுவை மிகுந்த மாம்பழத்தை இறுதிவரை கடித்துத் தின்னும் உணர்வுடன் அமையவேண்டும் என்பது எழுத்தாளர் சுஜாதாவின் கருத்து.

    மனிதர்கள் மதமும்,சாதியும் மறந்து-கவலை துன்பங்களை தொலைத்து-உடலுக்கும்,உள்ளத்திற்கும் ஓய்வு கொடுத்து உறங்கும் இரவு மணி இரண்டு. நிம்மதியான உறக்கம் ஆரோக்கியத்தின் அறிகுறி. ஆனால் கதாநாயகி பவித்ரா வீட்டை விட்டு ஓடுவதில் மனம் இலயித்திருந்த நிலையினை ஆசிரியர் இங்கு காட்டியுள்ளார்.

    நான் என் பெற்றோருக்கு மூன்றாவது பெண்ணென்று தெரிந்தும் கருவில் அழிக்காமல் கள்ளிப்பால் கொண்டு கொல்லாமல் பெற்று படிக்க வைத்து……இருபதாண்டு காலமாய் சோறு போட்டு வளர்த்து,என் உடல்நலத்தைப் பேணி,பாதுகாப்பாய் இருந்த பெற்றோரை விட்டுவிட்டு காதல்வேகத்தில் ஓடத் துணிந்து விட்டேனே! சிசுக்கொலை இந்த காலத்திலும் நடந்துள்ளதை ஆசிரியர் காட்டுகிறார்.(நாய்க்கு நன்றி)

    என் எதிர்காலத்திற்காக-என் நல்வாழ்விற்காக என்னென்ன பாடுபட்டுச் சிறுகச் சிறுக பணமும்,நகையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அத்தனையும் ஒரே நொடியில் சுருட்டிக்கொண்டு ஓடத் துணிந்தேனே!

குடும்பத்திலுள்ள பெண்களை வைத்துத்தானே குடும்பம் மதிப்பு பெறுகிறது. பெண்கள்-வந்த காதலை இழந்தாலும் பெற்றோரை இழக்கக்கூடாது. என்கின்ற உலக நியதி இக்கதையின் வழி அறிய முடிகிறது.(நாய்க்கு நன்றி)

    ஐயா!....என்னோட கல்யாணத்தை என் அம்மாதான் முடிவெடுக்கணும்.அவுங்க எந்த மாப்பிள்ளையைச் சொல்றாங்களோ…அவரைத்தான் கட்டிக்குவேன்.

    குலம்,கோத்திரத்தைவிட சந்தோஷமாக வாழ மனப்பொருத்தம்தாம்மா அவசியம் வேணும். மணக்கப் பணம் கேட்கற நம்ம ஜாதியைவிட பொண்ணு மட்டுமே கேட்கற அவரு உயர்ந்த ஜாதிதாம்மா.(பூக்காரி) https://www.youtube.com/watch?v=aQ4gWH3svF8 போன்ற புரட்சிகரமான பெண்ணிய சிந்தனைகளை சிறுகதைகளின் நடுவே உலவ விடுகிறார். பெண் கதாபாத்திரங்கள் யாவும் பெண் சமுதாயம் முன்னேற்றமடைவதன்பொருட்டு அமைக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக உயிரைக் கொல்வதே பாவம்! அதிலும் பெற்ற தாயைக் கொல்வது பாவத்திலும் கொடும் பாவமாயிற்றே!

    உணர்ச்சிக்கு நான் அடிமையாகிவிட்டால் எனக்குக் கணவன் என்ற புது உறவு வந்துவிடும். அப்புறம் சுயநலம் தானாய் வந்து ஒட்டிக்கொள்ளும்.அப்புறம் என் இலட்சிய வாழ்க்கை சிதறிப்போகும்.(கன்னித்தாய்) மகளானவள் ஊர்ப்பழி ஏற்று வாழ இயலாது. அதனால் அவசரப்பட்டதன் விளைவு தாயை இழப்பு. அதைச் சரிக்கட்ட வாழும் மகளின் உன்னத வாழ்க்கை வெண்புறா சிறகடித்துப் பறக்கும்போது அதனுடன் உன்னதமாக பல புறாக்கள் செல்வதைப்போன்று தான் வாழும் வாழ்க்கையை தெய்வீகமாக்கிக் காட்டி இருக்கிறார்.

    பொட்டைப் புள்ளைங்களுக்கும் சட்டப்படி சொத்துல பங்கிருக்கு மல்லிகா. அதனால நாம் கொஞ்சம் சொத்து கொடுப்போம். அதுகளுக்கும் வசதியோட மதிப்பும் கிடைக்கட்டும்.

    அப்ப சொத்து கொடுத்தால்தான் பிள்ளை கொள்ளி போடுவான்னு சொல்றியா? என்ற ஒவ்வொரு சொற்களிலும் கதையின் உயிர்ப்பை வெளிப்படுத்துகிறார்.

    பொட்டைப்புள்ளை வீட்டுக்கு விருந்தாளியாத்தான் போக முடியும்.பிள்ளை வீட்டுக்குன்னா சொந்தக்காரங்களாகவே போக முடியும். (நாடகம்)

    பணக்காரிங்கற திமிரு. ஆம்பளைக்கு அலையுறா….இருந்தே திங்கற கொழுப்பு! அவளால இருக்க முடியலை!(மீண்டும் சுமங்கலி) தாய்க்கு மகள் மாப்பிள்ளை பார்த்தவுடன் தாய்க்குக் கிடைக்கும் அவச்சொற்களை ஆசிரியர் சூசகமாக எழுதியிருக்கிறார். மகளானவள் இத்தகைய சிக்கல்களைக் கையாள வேண்டியிருக்கும் என்பது ஆய்வின் கருத்தாகிறது.

ஒரு கதைக்கு உயிரோட்டம் தருவது நடை. வாசிக்கும் வாசகரும், கதை கேட்கும் நேயரும் விரும்புவது கதையின் நடையமைப்பு என்பதைத் தெளிவாக உணர்ந்து ஆசிரியர் வீட்டில் மகிழ்ச்சி உண்டாக ஒவ்வொரு வீட்டிலும் மகள் இருக்கும் நிலையினை உணர்ந்து இக்கதைகளை அமைத்துள்ளதை அறிய இயலுகிறது.

சேமிப்பின் அவசியம்

    தாயில்லாத பெண் படித்துப் பணி செய்திருந்தாலும் பொறுப்பைத் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு சும்மாயிருந்து விடமுடியாது என்ற நிலையினைக் காண இயலுகிறது. ஐந்து வருடமாகத் தனது தந்தைக்குத் தனது திருமணத்திற்குப் பிறகு தேவைப்படும் எனத் தோழியிடம் கொடுத்து சேமித்து வைக்கும் மாதவி பாத்திரம் பாரதி கண்ட புதுமைப்பெண்ணைப் பிரதிபலித்துக் காட்டுகிறது.(கல்யாண வேளையிலே)

    சராசரிக் குடும்பத்தில் என்னதான் செலவுவகைகளைக் கட்டுக்குள் கொண்டுவர நினைத்தாலும் செலவுகள் எல்லைமீறிப்போகும்போது மனைவியின் தாலி கைகொடுக்கும் சேமிப்பாக இருக்கிறது என்பதை சிறுகதை காட்டுகிறது .(தீர்வு)

    மனைவி அசிங்கமாகத் திட்டியவுடன் தாய் தனது தாலியைக் கழட்டி செலவுகளைச் சரிக்கட்டிய நிகழ்வு கதையின் உச்சகட்ட எதிர்பார்ப்பை மிஞ்சியதாக இருக்கிறது. (தீபம்…தீயானால்?) மகள் பெற்றோரையே சார்ந்து இருக்காமல் முடிவுகளைத் தாமாக எடுக்கப் பழகவேண்டும் என்பதை இக்கதை உணர்த்துகிறது.

    மகளின் திருமணத்திற்காகத் தாய் பெட்டியில் பணத்தைச் சேமித்து வைக்கின்ற நிகழ்வு எழுத்தாளரால் படைக்கப்பட்டுள்ளது.(பூக்காரி)

    கட்டுசெட்டாகக் குடும்பம் நடத்தி சொத்துகளைப் பிரிப்பது குறித்து நாடகம் கதை சேமிப்பின் அவசியத்தை விளக்குகிறது.

    பெற்றோர் சேமித்து வைத்த நகை,பணம் தனக்குத்தான் என்ற கொள்கையைக் காதலன் மூலம் உடைத்தெறிந்த கதை சிறப்புக்கு உரியது.(நாய்க்கு நன்றி)

    சேமிப்பில்லாத பெற்றோர் தகுதிக்கு மீறிய வசதியான இடத்தில் மகளைக் கட்டிக்கொடுத்து அல்லல்பட்டு வட்டி வாங்கி துன்பப்படும்போது மகள் கணவனது வீட்டில் பேசும் பேச்சு புரட்சிகரமானதாக ஆசிரியர் அமைத்துள்ளார்.(தீபமா…தீயா?)

    வாழ்க்கைப் பாதையில் பெண்கள் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது இவ்வாய்வினால் அறிய இயலுகிறது.

திருமணத்திற்கு முன் மகள்

நன்றியுணர்வு

    நாய் இரவு நேரத்தில் மகளுக்குத் துணையாக இருக்கவேண்டும் என பெற்றோர் நாய் வளர்த்துள்ளனர். ஆனால் மகளோ ஓடிப்போக நினைத்த விடியல் வேளையில் வாலைக் குழைத்து தனது நன்றியுணர்வைக் காட்டியவுடன் மனம் மாறித் திருந்திய மகளைக் காட்டிய எழுத்தாளரின் கருத்து காதலித்து மணம் புரியும் பெண்கள் சிந்திக்கத் தகுந்த(நாய்க்கு நன்றி)

    இவருக்கும் எனக்கும் கூடிய சீக்கிரம் திருமணம் நடக்கப்போகுது!(மீண்டும் சுமங்கலி)

தாய் திருமணம் செய்துகொண்டால் அவளுக்கு வாழ்க்கைத்துணை கிடைத்துவிடும், தன்னைப் பெற்று வளர்த்த தாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்ற கடமையை அறிய வைக்கிறார் செளந்தரராசன்.

அப்பா!...ஒண்ணு நான் கேட்கட்டுமா? அம்மா கழுத்துல புதுசா மஞ்சக்கயிறு இருக்கே! ஏம்பா?என்றாள் பௌனா. பெற்றவர்களிடம் பாசம் மட்டும் இருந்தால் போதாது. அந்த நன்றியுணர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும் என்பதைத் தீர்வு கதை தெளிவுபடுத்துகிறது.

காதல் நிலை

குடும்பப் பிரச்னையின் காரணமாக புனிதன் ஓடி வந்த காதலியைப் பெற்றோருடன் சேர்த்து வைக்க நினைக்கிறான். அதற்கு அவள்

இத்தனையும் சிந்திக்கிற நீங்க என்னை ஏன் காதலிச்சீங்க புனிதன்?”(புனிதமான காதல்) எனக் கேட்கிறாள். ஓடி வந்த நம்மை இனி எப்படி வீட்டில் சேர்ப்பார்கள் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்திருக்கலாம் என்றாலும் தனது காதலன் சொல்லுக்கு அடங்கி காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியங்கள் யாவிலும் கைகொடுத்து- என்ற கவிஞனின் வைரவரிகளுக்கு ஏற்றாற்போல சௌந்தரராசன் அமைத்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பின் மகள்

    பாச நிலை

    யாருக்கு உடல்நலம் சுகமில்லைன்னு சொன்னாலும் முதல்ல வருவது பொண்ணுங்கதான்(நாடகம்)

    ஸ்கூட்டர் வாங்கத்தாம்பா போறாம்…………பணம் பிடுங்க வந்திட்டேன்னு நினைச்சிட்டீங்களா? இப்போ எங்க வீட்ல முன்னைவிட வசதி கூட தெரியுமா உங்களுக்கு?

    வயித்துவலி வந்து தாங்கமாட்டாம தற்கொலை செய்றேன்னு கைப்படவே கடிதம் எழுதி வச்சிடுறேன். அப்பத்தான் பிரச்னை வராது. (தீபம்…தீயானால்?) பெற்றோர் மேலுள்ள பாசத்தினால் மகள் பெற்றோரிடமும்,கணவன் வீட்டிலும் இருதலைக்கொள்ளி எறும்பாய் மாறிய நிலையினை ஆசிரியர் சுட்டிக்காட்டி பெண்களின் அவல நிலையை விளக்குகிறார்.

விதவை நிலை

    தாயையும், மகளையும் கொன்னு போட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு போலீசுல சொல்லிடலாமா (மீண்டும் சுமங்கலி). கிராமத்தில் ஒரு மகள் தாய்க்கு மறுமணம் செய்ய விளம்பரம் கொடுத்தும் ஊர்ப் பண்பாடு கெட்டுவிட்டதாக நினைத்த அறியாமையையும், ஊர்ப் பழக்கங்களையும் இங்கு காண இயலுகிறது.

    கணவனை இழந்தாலும் தனது மகளுக்கு மாப்பிள்ளை அமையாத வருத்த்தில் பெண் முடிவெடுத்தவிதம் சிறப்பாக இருந்தாலும் மனதில் ஆழமாக தனது மகள் தானாக முடிவெடுத்து இருக்கிறாள் என்ற நினைப்புடன் அதை வரவேற்பதுபோல ஆசிரியர் கதையை முடித்திருக்கிறார்(பூக்காரி)

பழக்க வழக்கங்கள்

நாய் வீட்டைக் காவல் காக்கும்(நாய்க்கு நன்றி)

ஐயர் வைத்துத் தாலி கட்டும் வழக்கம்(ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கதைகள்)

திருமணத்திற்குப் பின் இல்லறம்(ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கதைகள்)

பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்யும் வழக்கம்(ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கதைகள்)

காதல் மணம்(கல்யாண வேளையிலே,புனிதமான காதல்)

இரண்டாம் தாரமாக முதிர்கன்னியைத் திருமணம் செய்தல்(பூக்காரி)

விதவைக்குக் குழந்தைகள் உள்ளவருடன் திருமணம்(அவள் சுமங்கலி)

திருமணம் செய்வதற்கு மணக்கொடை அளித்தல்(தீபம்…தீயானால்?)

திருமணம் செய்ய சகோதரர்கள் உதவுதல்(கல்யாண வேளையிலே)

கல்யாண வீடுகளில் மல்லிகை, ரோஜா, சம்பங்கி அலங்காரம் செய்தல்(பூக்காரி)

வீட்டுச் செலவுக்கு தாலிச்சரடை விற்று மஞ்சள் கயிறு கட்டும் வழக்கம்(தீர்வு),(தீபம்,….தீயானால்)

    ஒரு குடும்பத்தில் கடைபிடிக்கப்படும் பழக்கங்கள் அவர்கள் வாழ்ந்து வரும் சுற்றுவட்டாரச் சாதி, மத, இனங்களை அடிப்படையாக வைத்து மட்டும் வருவது கிடையாது என்பது எழுத்தாளரின் கருத்து. குடும்பம் அமைத்து வாழும் முன்னர் நாம் வாழும் இடத்தின் சூழல் அறிந்து குடும்ப வாழ்க்கையினை அமைத்து வாழவேண்டும் என்பதை இவரது கதைகள் உணர்த்துகின்றன.

கதைச் சுருக்கம்

நாய்க்கு நன்றி

பவித்ராவும்,பாஸ்கரும் வேறு சாதியினர். ஒன்றாக வேலை பார்த்துவந்த இடத்தில் காதல் மலர்ந்தது .வீட்டை விட்டு இரவு ஓடி விட முயற்சிக்கையில் அவள் படித்த அறிவு அவர்கள் வளர்த்த நாயிடம் இருந்து பெறுவதாக ஆசிரியர் கதையினை எழுதியிருக்கிறார். காதலுக்குத் தாழ்ப்பாள் போட்டு பெண்மைக்குப் பெருமை சேர்த்த கதை இது.

கல்யாண வேளையிலே

ஒவ்வொரு சராசரி பண வருமானம் வரும் குடும்பத்தில் வரும் சிக்கல்களை ஆசிரியர் மகள் பாத்திரப் படைப்பு வழியாகத் தீர்வு காண்கிறார். மணநாளன்று சம்பந்தம் செய்தவர் ஏழாயிரம் பணம் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார். மணமகன் பேசாமல் இருக்கவே மணமகள் தான் ஐந்து வருடமாகச் சம்பாதித்த பணத்தைத் தோழியிடம் வைத்திருந்த கதையைத் தந்தையிடம் கூறி தனது திருமணத்தினை இனிதாக முடிக்கிறாள். திருமண நாளன்று இரவில் கணவனிடம் பொன்னிற்காக வாழ்ந்த நீங்கள் பெண் என்று எப்போது மதிக்கிறீர்களோ அன்றுதான் இல்லறம் என்று கதை முடிகிறது.

பூக்காரி

பூவிற்கும் பூக்காரி ஊருக்கெல்லாம் பூ விற்றாலும் தமது மகளுக்குத் திருமண வாழ்க்கை அமையவில்லை என வருத்தப்படுகிறாள். பூக்கடையில் தந்தையில்லாத மலர்க்கொடி வரதட்சணையால் திருமணம் தடைபட்டதை எண்ணி வருத்தமடைகிறாள். இந்நிலையில் கடைக்கு வரும் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார்.

மனைவியற்ற அவருக்கு குழந்தைகள் இருப்பதாகவும்,வேற்று சாதிக்காரராகவும் இருப்பதாகவும் தனது தாயிடம் கூறுகிறார். தனது மனைவிக்கு மலர்மாலை வாங்கி தினமும் போடும் அவர் நல்லவராகத்தான் இருக்கவேண்டும் என்று கூறிய அவள் தாய் திருமணத்திற்கு சரி சொல்கிறார்.

கன்னித் தாய்

கேட்பார் பேச்சைக் கேட்டு எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காயத்ரி தனது தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டிக்கொன்று விட்டாள். வயது ஏற ஏற அனுபவமும், தந்தையின் பணமும், கல்வியும் கைகொடுக்க முதியோர் இல்லம் ஆரம்பித்து கன்னித்தாயாக வாழ்கிறாள்.

நாடகம்

தாயும், தந்தையும் தமக்குப் பிறகு சொத்துகளை யார் பாசமாயிருக்கிறார்களோ அவர்களுக்கே தரவேண்டும் எனப் பேசி நடிக்கின்றனர். தாய் மகளுக்கும் சொத்து தரவேண்டும் எனச் சொல்கிறாள். தாய்க்கு காலில் காயம் ஏற்பட்டதுபோல நடிக்க மகன் நழுவுகிறான். மகள்கள் தாயுடன் இருப்பதாக கதையின் இறுதி முடிவு அமைகிறது.

தீபம்…… தீயானால்…………?

கதையின் நாயகி வாசுகி பலமுறை மாமியாரால் பிறந்தவீட்டிற்கு பணத்திற்காக அனுப்பப்படுகிறாள். இம்முறை பெற்றோர் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கின்ற நிலையைப் பார்க்கிறாள். நேராக மாமியார் வீடு செல்கிறாள். வேண்டுமானால் விடுதிக்குச் சென்று தன்னை விற்று பொருள் தருவதாகக் கூறினாள். வீட்டிற்கு விளக்கேற்ற தீபமாய் வந்தவள் தீயாய்ப் பேசுவது கண்டு அவளது மாமியார் தனது கழுத்தில் கிடந்த செயினை விற்று மகனிடம் கொடுத்துச் செலவைச் சரிக்கட்டச் சொல்லி திருந்துகிறாள்.

தீர்வு

கதையின் நாயகி மணக்கொடையினால் அல்லல்படுகிறாள். தாய் தனது தாலியை விற்றுப் பணமாக்கி வருவதைக் கண்டு பணத்தை வைத்துவிட்டு காவல்நிலையம் சென்று தனது பிரச்னைக்கு விடிவு காண்கிறாள்.

புனிதமான காதல்

புனிதா பெற்றோர் தனக்கென வாங்கி வைத்திருந்த பணம்,நகையுடன் காதலுடன் ஓடிவிடத் தீர்மானம் செய்கிறாள். ஆனால் காதலனோ அவளைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு நீங்கள் விருப்ப்பட்டால் உங்களது மகளைத் திருமணம் செய்து தாருங்கள் என கேட்க கதை சுபமாய் முடிகிறது.

மீண்டும் சுமங்கலி

கதையின் நாயகி மகள் பாரதி தனது விதவைத் தாய்க்குத் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை என விளம்பரம் தருகிறாள். வரும் மாப்பிள்ளையும், பாரதிக்கு வரப்போகும் கணவரும் சொத்துகளே வேண்டாம் எனச் சொல்லும் அளவிற்கு நல்லவர்களாக இருக்கின்றனர். அவளது தாயும், வருங்காலக் கணவரின் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிப் போகிறாள்.

முடிவுரை

தளவாய்புரத்தைச் சார்ந்த மா.சு.செளந்தரராசன் அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள் பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டுள்ளன. ஆணாதிக்கம் தமிழகத்தின் தென்திசையில் அதிகமாகக் காணப்படும். அதனால், எழுத்தாளர் பெண் குறித்த சிக்கல்களைக் கூறியிருப்பினும் நடைபெற இயலாத பல முடிவுகளை எழுதியிருக்கிறார் என்பது ஆய்வின் வழி அறிய இயலுகிறது. பெண்ணியச் .சிக்கல்களான வரதட்சணை, பெண் கல்வியின்மை, காதல்மணம் இவை குறித்து இன்னமும் ஆய்வுகள் அமையவேண்டும் என்பது ஆய்வு முடிவாகிறது.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்

    பெருந்தன்மை, மா.சு.சௌந்தரராசன்., அருள்மொழிப் பிரசுரம்.,(2014)-சென்னை-15

    வானொலிக்கதைகள்,தளவாய்.மா.சு.சௌந்தரராசன்.,அருள்மொழிப் பிரசுரம்.,(2017)சென்னை-15.

ஆய்வுக்குப் பயன்பட்ட இணையத் தளங்கள்

   https://thamizhsudar.com/
   https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011221-23797
   https://www.sirukathaigal.com

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.