முன்னுரை

பண்டைத் தமிழர்களின் வாழ்வில் காதலும் கொடையும் நீதியும் பின்னிப் பிணைந்திருந்தன. பண்டைத் தமிழ்ப்புலவர்களும் காதலையும் வீரத்தினையும் இயற்கையுடன் இணைந்தே காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்வினை இயல்பாக ஏற்றுக்கொண்டனர். சுற்றுச்சூழல் பண்டையத் தமிழர்களால் பொலிவு பெற்றது. சங்ககால மக்கள் நிலங்களை ஐவகையாகப் பிரித்து அவற்றின் தன்மைக்கேற்ப விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடி, பொழுது முதலியவற்றைப் பாகுபடுத்தி அவற்றின் வழியே வாழத்தலைப்பட்டனர். இயற்கை நெறிக்காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு நிறைந்த இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது. அகநானூற்றில் காணப்படும் சூழல் சார்ந்த சிந்தனைகளை ஆய்வதாகக் கட்டுரை அமைகின்றது.

அகநானூற்றில் சூழலியல்

இன்று மானுடம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சனைகளுள் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு சிந்தனைகளுக்கு அடித்தளமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. அகநானூற்றில் குறிஞ்சி, பாலை நிலச்சூழலியல் பற்றியச் செய்திகளும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த செய்திகளும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.

1.1. மலைச் சூழலியல் (குறிஞ்சி)

மலைப்பகுதி மரங்கள் சொரிந்துக் காணப்படுவதால் மழைப்பொழிவதற்குக் காரணமாக அமைகின்றன. மழையால் இயற்கைவளம் பெறுகின்றது. இதனை பரணர்,

“கடல்கண் பன்ன மாகவிசும்பின்...
...விளிவு இடன் அறியா வான்உமிழ் நடுநாள்” (அகம்:162 : 3-6)

என்ற பாடல் வரிகளில் கடலினைக் கண்டாற் போன்ற நீல வானில் மேகத்தைப் பிளந்து கொண்டு நெளிப்புடன் அசைந்து செல்லும் நெருப்பின் கொடி போன்ற மின்னலுடன் கடுமையாக இடிக்கும் இடியும் இதுவென அறியமுடியாத வகையில் நள்ளிரவில் மழை பொழிந்தது என்கிறார். இத்தகைய மலைச் சூழலியலில் மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் மழைப்பொழிவு அதிகம் காணப்படுகிறது.

1.2. பாலைச் சூழலியல்

பாலைத்திணைப் பாடல்கள் பாலை நிலத்தின் பண்புகளுள் முதன்மையான வெப்பத்தினையே சுட்டுகின்றன. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் வாழ்வதற்கான சூழல் பாலையில் இல்லை. “பாலை நிலத்தின் சூழலியலில் நிலம், நீர், காற்று என்ற மூன்றிலும் வெப்பம் மிகுந்ததாகவே அமைகின்றது. பாலை நிலத்தின் வெப்பக்காற்று ஒரு வகையில் உடலுக்கு ஒவ்வாமல் சூட்டை உண்டாக்கினாலும் சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் தன்மை பாலைநிலத்திற்கு உண்டு. பாலை நிலத்தில் நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மிகக்குறைவு எனினும் இருக்கும் நீர்ப்பரப்பும் வெப்பம் மிகுந்த நீரையேக் கொண்டிருக்கின்றது. பாலை நிலம் மணலும் மணல் சார்ந்த பகுதியானதால் சூரியக்கதிர் பட்டவுடன் சூடோகி விடுகின்றது. இதனாலேயே “பாலைவனம்” என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது. ஐந்திணைகளிலேயே நோய்க்கிருமிகள் அண்ட முடியாத சூழலமைப்பைக் கொண்ட நிலமாகப் பாலை நிலம் அமைந்துள்ளது” (மாரிமுத்து.எஸ்: சங்க இலக்கியத்தில் திணை சார்ந்த சூழலியல்: ப.87) என்று பாலைச்சூழல் பற்றி எஸ்.மாரிமுத்து தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பட்டுள்ளார். பாலை நிலத்தில் வெப்பத்தினை மாமூலனார்,

“வேனில் வெற்பின் கானம் காய”(அகம்:187:16)

என்ற பாடல் வாரியில் பாலைநிலத்தின் கடுமையான வெப்பம் காரணமாகக் காடுகள் காய்ந்த செய்தியினைப் பதிவு செய்கின்கிறார்.

2. சுற்றுச்சூழல் அழிப்பு

ஆரம்பக் காலத்தில் நாடோடியாக வாழ்ந்த மனிதன் இயற்கையில் கிடைத்த தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை உணவாக உட்கொள்ளத் தொடங்கினான். பின்னர் ஓரிடத்தில் நிலையாக வாழவும் பயிர்த்தொழில் செய்யவும் கற்றுக்கொண்டான். ஆதிகால மனிதன் பயிர் செய்யக் கற்றுக்கொண்டதன் விளைவே சுற்றுச்சூழல் மேலாண்மையும், மாசுபாடும் ஆகும். ஆரம்பக் காலத்தில் பயிர் செய்யவும், பாதுகாப்பான இருப்பிடம் அமைக்கவும் காடுகள் அழிக்கப்பட்டன. இன்று மனித நாகரீகம் வளர்ச்சியடைய அடைய புதிய புதிய கண்டுபிடிப்புகள் தோன்றிவருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகள் தோன்றியதன் காரணமாக மனிதன் வேளாண்மைச் செய்யவும், வீடுகள் கட்டவும், போக்குவரத்துச் சாதனங்கள் தயாரிக்கவும், சாலைகள் அமைக்கவும் இன்று காடுகளை அழிக்கின்றான். சங்க காலத்தில் மேய்ச்சலுக்காகவும், உணவிற்காகவும் மரங்கள் அழிக்கப்பட்டன. காடுகள் அழிக்கப்படுவதைப் பற்றி மெ.மெய்யப்பன் தனது நூலில், “காடுகள் தொன்று தொட்டே அழிக்கப்பட்டு வந்திருக்கின்றன. போக்குவரத்துச் சாலை அமைக்கவும் நீர் பாசன வசதிக்காகவும் மின் உற்பத்திக்காகவும் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதற்காகவும் புதிய வசிப்பிடங்களை நிர்மாணிக்கவும் காகிதம் செய்வதற்காகவும் மரச்சாமன்கள் செய்வதற்காகவும் விறகிற்காகவும் கூடுதலான விதத்தில் இன்றைக்கும் அழிக்கப்படுகின்றன” (மெய்யப்பன்.மெ : தமிழ்ப் பழமொழிகளில் அறிவியல்: ப.27) என்று குறிப்பிட்டுள்ளார்.

2.1.பயிரிடுவதற்காகக் காடுகள் அழிப்பு

மனிதர்கள் தன் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வேளாண்மைச் செய்யவும் காடுகளை அழிக்கின்றனர். “காடுகள் அழிவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, இயற்கையாக அல்லது மனிதனால் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ ஆகும்” ( நாகராஜன்.கி : சுற்றுச்சூழல்: ப.117) என்று கி.நாகராஜன் காடுகள் அழிப்பது பற்றி தனது நூலில் பதிவு செய்துள்ளார். பயிர் செய்யும் பொருட்டு காடுகள் அழிக்கப்படும் செய்தி அகநானூற்றுப்பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிர் செய்யும் பொருட்டு மரங்கள் வெட்டி எரித்த சாம்பல் உரமாக பயன்பட்டாலும் அது இயற்கையாக இழை, தழை மக்குவதால் ஏற்படும் உரத்தின் சக்தியைவிடக் குறைவான வளமுடையதாகத் திகழ்கின்றன.

பயிர் செய்யும் பொருட்டு சந்தனமரமானது வெட்டி எரிக்கப்படுவதனை ஊட்டியார்,

“வேங்கைஅம் கவட்டிடை நிவந்த இதணத்து”(அகம்: 388: 7)

என்ற பாடல் வரியில் மூங்கில் மரங்கள் நெருங்கி வளர்ந்துள்ள மலைச்சாரலில் சந்தன மரத்தை வெட்டி அவ்விடத்தை உழுது தினை விதைத்தச் செய்தியினைப் பதிவு செய்கிறார்.

2. 2. உணவிற்காக சூழல் அழிப்பு ( அல்லது) மரங்கள் அழிப்பு

யானைகள் தமது உணவிற்காக மரப்பட்டைகளை உரித்து உண்பதுண்டு. யானைகள் தனது நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும் உணவினைப் பெறும்பொருட்டும் யாமரம் மற்றும் ஓமைமரப் பட்டைகளை உரித்துண்ணும் காட்சிகளைச் சங்கப்புலவர்கள் இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

யானைப் (பிடியின்) பசியினைப் போக்க ஓமை மரப்பட்டைகளை உரித்துண்ணும் காட்சியினைக் கயமனார்,

“கடும்பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி,
போழ்புண் படுத்த பொரிஅரை ஓமைப்”(அகம்:397 : 10-11)

என்ற பாடல் வாகளில் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் ஆண்யானை பிடியின் பசியினைப் போக்க ஓமை மரத்தை முறித்துத் தள்ளியமையும், அவ்வாறு முறிந்து விழும் மரமானது வழிச் செல்பவாகளுக்கு நிழலாக அமையும் செய்தியினை,

“கயந்தலை மடைப்பிடி உயங்குபசி களைஇயர்,
பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை” (நற்:137 : 6-7)

என்ற நற்றிணை பாடல் வரிகள் சுட்டுகின்றன. ஓமை மரத்தினைப் போன்றே யாமரத்தினையும் களிறானது நீரைப் பெற உரித்த செய்தியினை உறையூர் மருத்துவன் தாமோதரனார்,

“பகைமிகு கவரைச செல்நெறி காண்மார்,
மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து” (அகம்: 257 : 14-15)

என்ற பாடலடிகளில் குறிப்பிடுகின்றார்.

2.2.3 மேய்ச்சலின் காரணமாக மர அழிப்பு

இடையர்கள் வெள்ளாடுகளின் உணவுத்தேவையினைப் பூர்த்தி செய்ய மரங்களை உடைத்து உணவாகத்தரும் காட்சியினை இன்றளவும் காணமுடிகின்றது. சங்க இலக்கியத்திலும் வெள்ளாட்டு குட்டிகளின் மேய்ச்சலுக்காக ஆத்திமரம் அழிக்கப்படும் செய்தியினை மதுரை மருதன் இளநாகனார்,

“புன்தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவைஇலை ஆரின் அம்குழை கறிக்கும்” (அகம்:104: 11-12)

என்ற பாடல் வரிகளில் வெள்ளாட்டின் குட்டிகள் ஆத்தி மரத்தின் தளிர்களைக் கடிக்கும் காட்சியினைப் பதிவு செய்துள்ளார். இவ்வாறு மரமானது உணவிற்காகவும், மேய்ச்சலின் காரணமாகவும் அழிக்கப்பட்டுள்ளது.

2.2.4 போரின் பொருட்டு மரங்கள் அழிப்பு

பண்டைத் தமிழ் மன்னர்கள் காதலினையும் வீரத்தினையும் தனது இரு கண்களாகக் கருதினர். போரின் அடையாளச் சின்னமாக வீரம் கருதப்பட்டது. போரிடாத மன்னன் வீரமற்றவனாகவே கருதப்பட்டான். எனவே பண்டைத் தமிழ் மன்னர்கள் புகழுக்காகவும், மண்ணாசை காரணமாகவும் பகை உணவு காரணமாகவும் பிற மன்னர்களுடன் போரிடும் வழக்கம் கொண்டிருந்தனர். பண்டைத் தமிழ் மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட மரத்தினைக் குலமரமாகவும் தனக்குரிய காவல்மரமாகவும் கருதி இரவு பகலாகப் பாதுகாத்து வந்தனர். ஒரு குறிப்பிட்ட காவல் மரத்தினை வெட்டுதல் என்பது அம்மரத்தினைத் தனக்குரிய அடையாளச்சின்னமாகக் கொண்ட மன்னனுக்கு இளுக்கு ஏற்படும் என கருதியதால் ஒவ்வொரு மன்னனும் பகை மன்னரின் காவல் மரத்தினை வெட்டுவதனையே தனது முதன்மையானப் பணியாகக் கருதினர்.

நன்னனது காவல் மரமாகிய வாகை மரத்தினை களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன் வெட்டி வீழ்த்தினான் என்ற செய்தியினை,

“இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்,
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்” (அகம் : 199)

என்ற அகநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. சிறப்பு மிக்க புன்னை மரமானது திதியன் என்பவனின் காவல் மரமாகும். அதனை அன்னி என்பவன் வெட்டி வீழ்த்தினான் என்ற செய்தியை,

“அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி” (அகம் :45)

என்ற வெள்ளிவீதியார் பாடல் வரிகளின் மூலம் அறியலாம். இவ்வாறு அகநானூற்றில் பல பாடல் வரிகளில் மரங்கள் போரின் பொருட்டு அழிக்கப்பட்ட செய்தியினைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.

3. சுற்றுச்சூழல் மேலாண்மை

சுற்றுப்புறச் சூழலானது சங்ககால மக்களாலும் மாசுபாட்டினைச் சந்தித்துள்ளது. பழங்கால மக்களால் ஏற்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடானதுத் தற்கால மாசுபாட்டினைப் போலில்லாது விரைவாக குறையக்கூடிய அளவில் இருந்தது. சுற்றுச்சூழல் மேலாண்மையில் மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மரங்கள் வளிமண்டல மாசினைக் குறைப்பதுடன் மழைப்பொழிவிற்கும் காரணமாக அமைகின்றன. சூழலியல் மேலாண்மைக் குறித்த பல்வேறு செய்திகளை அகநானூற்றில் சங்கப்புலவர்கள் பதிவு செய்துள்ளனர்

3.1. வேலி அமைத்தல்

பண்டைத் தமிழ் மக்கள் தமது ஊரினைச் சுற்றி வேலி அமைத்த செய்திகள் அகநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலி அமைத்தலினால் கொடிய காட்டு விலங்குகள் தம்மைத் தாக்காதவாறு பாதுகாத்துக் கொண்டனர். காட்டரணின் பக்கத்திலே(வேலி) ஊர் இருந்த செய்தியினை பரணர்,

“முனை உழை இருந்த அம்குடிச்சீறூர்” (அகம்:367 :5)

என்ற பாடல் வரிகளில் காட்டரண் ஊரினைச் சுற்றிக் காணப்படுவதால் வேலியாகவும் கொடிய விலங்குகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் அரணாகவும் விளங்கியது. ஊரின் சுற்றுப்புறத்தில் மட்டும் அன்று ஆற்றின் கரையில் மரமானது வேலிபோல அமைந்து மண் அரிப்பு ஏற்படாமலும் ஆற்றுநீர் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படா வண்ணம் பாதுகாக்கின்றன. ஆற்றங்கரையில் உள்ள மரமானது மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துகின்றது.

ஆற்றங்கரைகளில் மட்டும் அன்றி கடற்கரை ஓரத்திலும் மரங்கள் வளர்க்கப்பட்டன. கடற்கரைப் பகுதியில் மரம் செழித்து காணப்படும் இடமானது கடற்கரை சோலை அல்லது அலையாத்து காடுகள் என்று அழைக்கப்பட்டன. அலையாத்து காடுகள் பற்றி பி.எஸ்.மணி, “கடற்கரையோரப் பகுதிகளிலே கண்டல் மரக்காடுகள் சதுப்பு நிலத்தை உருவாக்கிக் கொண்டு கடலையேச் சார்ந்து நிலமாக்கும் பணியைச் செய்து வருகின்றன. அந்நிலையில் அலையாத்தி, மற்றும் கண்டல் மரங்களை அழிக்கும் போது சதுப்பு நிலம் கடலுக்கு இரையாகி கடல் நிலத்தை அரித்திடும் நிலையும் தோன்றுகிறது. எனவே கடலோரமாக மரம் வளர்ப்பதும் இருக்கிற மரங்களை வெட்டாமல் காப்பதும் அவசியம்” என்று தனது நூலில் குறிப்பிடுகிறார். பழந்தமிழர் ஆற்றங்கரைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் மரங்களை நட்டு வளர்க்கும் பண்பானது போற்றுதற்குரியது. மக்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் மரங்களை நட்டு வளர்க்கும் நுட்பமானது அவர்களின் விழிப்புணர்வு சிந்தனையைக் காட்டுகின்றது. ஆற்றங்கரைகளின் இருபுறமும் மரங்கள் செழித்து வளர்ந்து ஆற்றுநீரைப் பாதுகாக்கும் நுட்பத்தினைக் கலித்தொகையில்,

“..அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல்தீம் கரை...”
(கலி: 48: 4-5)

என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

அலையாத்தி காடுகள் பற்றி சி.மைக்கேல் சரோஜினிபாய் தமது நூலில் “அலையாத்திக் காடுகள் என்று சொல்லப்படும் சுரப்புன்னை மரங்களும் கண்டல் மரங்களும் கடற்கரைப் பகுதிகளில் வேலியாக அமைக்கப்பட வேண்டும் என இன்றைய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அதற்கான முயற்சிகளைச் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் இம்மரங்கள் நெய்தல் நிலம் என்று சொல்லப்படும் கடலும் கடல் சார்ந்த இடங்களில் சங்ககாலத்தில் ஊருக்கு வேலியாக அமைந்திருந்தன. இதனை நற்றிணை நெய்தல் திணைப்பாடல்கள நமக்கு எடுத்துரைக்கின்றன” (மைக்கேல் சரோஜினிபாய்.சி    : தமிழிலக்கியத்தில் சூழலியல்: ப.114- 115) என்றும் தாழை, புன்னை, ஞாழல், கண்டல் மரமானது ஊருக்கு வேலியாக அமைந்திருக்கும் செய்தியினை “நற்றிணையில் நெய்தல் திணைப்பாடல்கள் 102 ஆகும். அவற்றுள் 42 பாடல்களில் புன்னை, ஞாழல், கண்டல், தாழை ஆகிய மரங்கள் ஊரைச் சுற்றியும் வீட்டைச்சுற்றியும் தடுப்பு அரண்களாக அமைந்திருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது”(மேலது : ப – 115) என்றும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

தொகுப்புரை

சுற்றுச்சூழல் மாசுபாடு நிறைந்த இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. சுற்றுச்சூழல் மேலாண்மையில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழல் என்பது காற்று, நீர், நிலம், இயற்கை வளங்கள் முதலியவற்றின் இயங்குத் தன்மையைக் குறிக்கின்றது. மலைப்பகுதி மற்றும் காடுகளில் மரங்கள் செழித்து வளர்வதால் மழைப்பொழிவு அதிகமாகக் காணப்படுகின்றது. பாலை நிலப்பகுதியில் காணப்படும் மரங்கள் பாலை வெப்பத்தினைக் குறைப்பதுடன் வழிப்போக்கர்களுக்கு இளைப்பாரும் இருப்பிடமாகத் திகழ்கின்றன. ஆற்றங்கரை ஓரங்களில் காணப்படும் மரங்கள் ஆற்றுநீர் கரைபுரண்டு ஓடாவண்ணமும் வெள்ளப்பெருக்கு ஏற்படா வண்ணமும் பாதுகாக்கின்றது. பண்டைய கால மக்கள் கடற்கரையோரம் புன்னை, தாழை, கண்டல், ஞாழல் போன்ற மரங்களை வேலிபோலவும் சோலையாகவும் அமைத்த செய்திகள் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆல், அரசு, வேம்பு மரங்கள் அசுத்தக் காற்றினை உள்வாங்கிக் கொண்டு தூயக்காற்றினை வெளிவிடுகின்றன. மரங்கள் வளிமண்டல மாசினைப் போக்கவும் மண் அரிப்பினைத் தடுக்கவும் மழைப் பொழிவதற்கும் காரணமாக அமைகின்றன. எனவே தான் அரசும் வீட்டுக்கொரு ‘மரம் வளர்ப்போம் நாட்டு வளம் காப்போம்’ என்று எடுத்துரைத்து வருகின்றது. அரசு ஒருபுறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்க முயற்சிகள் எடுத்து வந்தாலும் மறுபுறம் சுற்றுச்சூழல் மாசுபாடானது பலமடங்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே சுற்றுச்சூழல் மாசுப்பாட்டினைக் குறைக்க நாமும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வோடு செயல்படுதல் இன்று மிகவும் அவசியமானதாகும்.

ந.மு.வேங்கடசாமி நாட்டார் , அக்நானூறு , கெளரா பதிப்பகம் , சென்னை
புலியூர்க் கேசிகன் , அகநானூறு -களிற்றியானைநிரை, குமரன் பதிப்பகம், சென்னை
புலியூர்க் கேசிகன் , அகநானூறு - மணிமிடை பவளம், குமரன் பதிப்பகம், சென்னை
புலியூர்க் கேசிகன், அகநானூறு - நித்திலக் கோவை, குமரன் பதிப்பகம், சென்னை
புலியூர்க் கேசிகன், நற்றிணை , சாரதா பதிப்பகம், சென்னை
புலியூர்க் கேசிகன், கலித்தொகை  - சாரதா பதிப்பகம் சென்னை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.