* ஓவியம் AI

முன்னுரை

முறை செய்து காப்பாற்றும் மன்னனை மக்கள் இறை என்று கருதியுள்ளனர். தன் மக்களுக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து, அதனைப் போக்க மன்னன் தன் உயிரையும் நீத்துள்ளான். அப்படி தன் நாட்டு மக்களைக் காக்க உயிரை நீக்கும் மன்னன், பகைமை காரணமாக பகை நாட்டில் உள்ள மக்களையும், அவர்கள் வாழும் நாட்டினையும் பல்வேறு விதமான அழிவுகளுக்கு உள்ளாக்கியுள்ளான். பகைமை காரணமாக மன்னன் பகைநாட்டிற்கு எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பதனை ‘பகைநாட்டின் அழிவுகள்’ எனும் இவ்ஆய்வுக்கட்டுரையில் காண்போம்.

தோற்ற அரசனது ஆட்சிப் பகுதிகளைப் பாழ்படுத்துதல்

போரில் வெற்றி பெற்ற மன்னன் தோற்ற மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்திருக்கிறான். அது மட்டுமல்லாது வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வி அடைந்த மன்னர்களின் நிலங்களைப் பல்வேறு வகைகளில் பாழ்படுத்தவும் செய்துள்ளனர். இதனை,

பகை நாட்டினைத் தன் ஆட்சிப் பகுதியுடன் இணைத்தல்
பாழ்படுத்துதல்
பகைநாட்டின் செல்வ வளத்தினைக் கவர்தல்
பகைவரின் விளை நிலங்களைக் கொள்ளையிடுதல்
நிலங்களைப் பாழாக்குதல்
பகைவர் நாட்டினை எரியூட்டல்
நீர்நிலைகளைப் பாழ்படுத்துதல்
மன்றத்தை அழித்தல்

என்ற அடிப்படையில் ஆராய இயலுகின்றது.

பகை நாட்டினைத் தன் ஆட்சிப் பகுதியுடன் இணைத்தல்

போரில் வெற்றி பெற்ற மன்னன் தோற்ற மன்னனின் நாட்டினைத் தன் ஆட்சிப் பகுதியுடன் இணைத்துள்ளான்.

“ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த
வேல் கெழு தானை, வெருவரு தோன்றல்” (பதிற்று.22 : 15-16)

என்ற பாடலடிகள் இமயவரம்பனின் தம்பியான பல்யானைச் செல்கெழு குட்டுவன் போரில் கொங்கரை வென்று, அவர்கள் ஆண்ட கொங்கு நாட்டினைத் தன் ஆட்சிப்பகுதியுடன் இணைத்துக் கொண்டதை விளக்குகின்றன.

களங்காய் கண்ணி நார்முடிச்சேரல், பூழி நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான் என்பதனை,

“ஆராத் திருவின் சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் முனை
பனிப்பப் பிறந்து பல் புகழ் வளர்த்து
ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பின்
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ”    (பதிற்று.நான்.பதி. : 1-6)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன. தோற்ற மன்னனுக்கு நிலம் இல்லாமல் செய்வதை அவர்களுக்கான தண்டனையாகக் கருத இடமுள்ளது.

பாழ்படுத்துதல்

மெய்யப்பன் தமிழ் அகராதி பாழாக்குதல் என்பதற்கு “பயனில்லாததாகச் செய்தல்”1 எனப் பொருள் விளக்கம் தருகின்றது. சங்க காலத்தில் போரில் தோற்ற மன்னனின் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், மதில்களையும், அரண்களையும், நாட்டினையும் யானை, குதிரை, கழுதை போன்றவற்றைக் கொண்டு பாழாக்கியும், தீயிட்டுக் கொளுத்தியும் பாழ்படுத்தியுள்ளனர்.

“பகைவரைத் தம் அடிக்கீழ் விரைந்து கொணரும் பொருட்டு அவர் நாட்டு மக்கள் குடித்தற்கெனப் பயன்படுத்தும் நீர்நிறை குளத்தில் தம் யானையை விடுத்துக் கலக்கி அவர் தமக்கு நன்னீரில்லா வண்ணம் செய்வர். விளை வயல்களில் நெருப்பிடுவர். அன்றியும் விளைபொருள்களில் தாம் வேண்டும் அளவும் கொண்டு மற்றவற்றை அந்நாட்டிற்குப் பயன்படா வண்ணம் குதிரை முதலியவற்றை விடுத்துச் சிதைப்பர். ஊர் காவற்கென உள்ள காவற்காடுகளை வெட்டி வீழ்த்துவர். அரசனின் காவல் மரத்தினைத் தடிவர். வினைபொலியும் நல்லில்லங்களில் தீ வைத்து எரிப்பர்”2 என்று குறிப்பிடுவர்.

பகைநாட்டின் செல்வ வளத்தினைக் கவர்தல்

வெற்றி பெற்ற மன்னர்கள் கைப்பற்றிய நாட்டின் செல்வத்தைக் கவர்வது இயல்பு. சேரர்களின் முசிறி என்னும் பட்டினத்தை, பாண்டியன் ஆரவாரம் உண்டாக வளைத்து, அரிய போரில் வென்று, அங்குள்ள பொற்பாவையினைக் கவர்ந்து கொண்டு சென்றான் என்பதனை,

“யவனர் தந்த வினைமாண நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ
அருஞ்சமம் கடந்து, படிமம் வவ்விய”    (அகம்.149 : 9-12)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

பகைவரின் விளை நிலங்களைக் கொள்ளையிடுதல்

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பகைவர்களின் விளைந்த வயல்களைக் கொள்ளையிட்டான் என்பதை,

“முனை முருங்கத் தலைச் சென்று, அவர்    
விளை வயல் கவர்பூட்டி”    (புறம்.16 : 3-4)

என்ற பாடலடிகள் பதிவு செய்துள்ளமையை அறியலாகின்றது.

நிலங்களைப் பாழாக்குதல்

வெற்றி பெற்ற மன்னன் போரில் தோல்வியுற்ற பகைவரின் அரண்களை அழித்து அவர் வாழும் இடங்களைக் கழுதை ஏரால் உழுது, வெள்ளை வரகும், கொள்ளும் விதைத்துள்ளான் என்பதனை,

“வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்”    (புறம்.392 : 9-10)

என்ற பாடலடிகளின் வழி அறியமுடிகின்றது. நெட்டிமையார் என்னும் புலவர், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பகை நாட்டை வென்று, அதனை வெள்ளை வாயைக் கொண்ட கழுதையைக் கொண்டு உழுது பாழ்ப்படுத்தியதை,

“வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ் செய்தனை………………………”    (புறம்.15 : 2-3)

என்ற பாடலடிகளில் பதிவு செய்துள்ளார்.

மேலும் பட்டினப்பாலையில், பூக்களையுடைய கரும்புகளும், செந்நெல்லும் வளர்ந்து, குவளைகளும், பெரிய இதழ்களைக் கொண்ட நெய்தலும் மயங்கி முதலைகள் செருக்குடன் திரியும் இடமகன்ற பொய்கைகளைக் கொண்டு இருந்தது மருதநிலம். அந்நிலத்தில் உள்ள மக்களைத் திருமாவளவன் போர் செய்து குடிபெயர்ந்து ஓடும்படிச் செய்தான். அப்பகுதிகளில் வயல்களும், பொய்கைகளும் நீரற்று வறண்டு வேறுபாடின்றிக் காணப்பட்டன. அங்கு சிறுபூளை, பெரும்பூளை என்னும் பூக்களும், கொழுத்த தண்டுகளைக் கொண்ட அறுகம்புல்லும், கோரைகளும் வளர்ந்தன என்று குறிப்பிடுவதை,

“……… தண் பணை எடுப்பி
வெண் பூங் கரும்பொடு செந்நெல் நீடி
மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி
கராஅம் கலித்த கண்அகன் பொய்கை
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடி
செறுவும், வாவியும் மயங்கி நீர் அற்று,” (பட்டினப்.239-244)

என்ற பாடலடிகள் வழி அறியமுடிகின்றது.

விரைந்து செல்லும் குதிரையைக் கொண்டும் நிலத்தினைப் பாழ்படுத்தியுள்ளனர். குட்டுவனின் குதிரைப்படைகள் சென்று போரிட்ட வயல்கள் கலப்பைகள் கொண்டு உழ இயலாதபடி ஆயிற்று என்பதனை,

“மாவா டியபுல நாஞ்சி லாட”    (பதிற்று.25 : 1)

என்ற பாடலடி தெளிவுப்படுத்துகின்றது.

குதிரையைத் தவிர யானைகளைக் கொண்டும் நிலத்தினைப் பாழ்படுத்தியுள்ளனர். யானைக் கூட்டத்தைக் கொண்ட படையினை ஏராகக் கொண்டு பகைவர் இடங்களை உழுதவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பதனை,

“பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையே ருழவ……………….”    (பதிற்று.14 :16-17)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

மேலும், ஆநிரைகள் அச்சத்தினால் ஓடிச் சென்றதனால் நிலங்கள் ஏர் உழுதது போன்று காணப்பட்டுள்ளன. பகைவர் நாட்டு மக்களெல்லாம் அச்சத்தால் கூட்டமாகத் திரண்டு ஓடினர். இதனால் அம்மக்கள் காத்த ஆநிரைகளும் நான்கு திசைகளிலும் ஓடிற்று. அவ்வாறு சென்றதால் கலப்பைகள் கொண்டு உழ இயலாதபடி நிலங்கள் பாழ்பட்டுப்போயின. விளைநிலங்களும் கெட்டழிந்தன என்பதனை,

“…………. ஊருட னெழுந்து
நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்த லீயா வளனறு பைதிரம்”    (பதிற்று.19 : 16-18)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன. மேலும், மக்கள் நிலங்களைப் பயன்படுத்த இயலாதபடி நிலங்களைப் பாழ்படுத்தியுள்ளனர். இதனை,

“கொள்பத மொழிய வீசிய புலனும்”    (புறம்.23 : 7)

என்ற பாடலடி விளக்குகின்றது.

தேர்கள் அக்காலத்தில் பலவகையாக இருந்துள்ளன. போர்க்களத்தில் போர் செய்வதற்கு ஏற்றவாறு தேர்கள் வலிமையாகச் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு வலிமையாகச் செய்த தேர்கள் சென்றதால் சேறுகளுடன் காணப்பட்ட வயல்கள் ஏர்கள் கொண்டு உழ இயலாதபடி ஆயிற்று. இதனை,

“தேஎர் பரந்தபுல மேஎர் பரவா”    (பதிற்று.26 : 1)

என்ற பாடலடி விளக்குகின்றது.

இவற்றின் வழியாக கழுதைகளைக் கொண்டு நிலத்தினை உழுது வரகு, கொள் முதலியவற்றை விதைத்துள்ளனர் என்பதனையும், குதிரைகள், யானைகள், தேர்கள் போன்றவற்றைக் கொண்டும் நிலத்தினைப் பாழ்படுத்தியுள்ளதையும் அறியமுடிகின்றது.

பகைவர் நாட்டினை எரியூட்டல்

வெற்றி பெற்ற மன்னன் பகைவர்களின் நாட்டையும் ஊரினையும் தீயிட்டுப் பாழாக்கியுள்ளான். நாடு, வீடு, அரண், மதில், விளைநிலங்கள் முதலியவற்றைத் தீயிட்டு அழித்துள்ளான். புறநானூற்றில், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடும்போது ‘பகைவரின் அகன்ற இடம் அமைந்த பெரிய ஊரினைத் தீ எரிப்பதானாலும் எரிக்கட்டும் உன் வீரர்கள்’ என்று குறிப்பிட்டதை,

“நனந்தலைப் பேர் ஊர் எரியும் நைக்க”    (புறம்.57 : 7)

என்ற பாடலடி விளக்குகின்றது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடும்போது, போரின் காரணமாக அழிப்பதற்கு எழுந்த தீயானது பகைவர் ஊர்களைச் சூழ்ந்து அங்குப் புகை எழுந்து நாற்திசையையும் மறைத்தமையை,

“ஊரெரி கவர வுருத்தெழுந் துறைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப”    (பதிற்று.71 : 9-10)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

மேலும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடும்போது, ‘நீ ஓர் ஆண்டு போர் புரிந்து அழிக்க எண்ணிய ஊர்களைத் தீ வைத்து எரித்துள்ளாய். அவ்வாறு எரிந்த தீயில் காற்று மோதுவதால் நிறமுடைய புகை எழுந்துள்ளது’ என்று குறிப்பிடுவதனை,

“யாண்டு தலைப் பெயர வேண்டு புலத்து இறுத்து,
முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப
கொடி விடூஉ குரூஉப் புகைபிசிர….”    (பதிற்று.15 : 1-6)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

இதன் மூலம் தன் நாட்டையும், தன் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் ஓர் அரசன் பகையுணர்ச்சி வந்துவிட்டால் சிறிதும் மனிதநேயமின்றி பிறநாடுகளை முன்னேற முடியாத அளவிற்கு அழித்து அந்நாட்டு மக்களைத் துன்புறுத்தும் இரக்கமற்ற பண்போடு நடந்துள்ளான் என்பது புலனாகின்றது.

நீர்நிலைகளைப் பாழ்படுத்துதல்

பகைவர்களின் நீர்நிலைகளை, யானைகளைக் கொண்டு பாழ்படுத்தி யாரும் பயன்படுத்த முடியாதவாறு செய்துள்ளனர். அசைந்து செல்லும் தன்மையும், பெரிய கழுத்தினையும் கோபமான பார்வையினையும் வெண்மையான தந்தத்தினையும் உடைய களிற்றைப் பகைவருடைய நீர்நிலைகளில் படிவித்துள்ளனர். இதனை,

“களங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செனனோக்கின்
ஒளிறுமருப்பிற் களிறுவர
காப்புடைய கயம்படியினை”    (புறம்.15 : 7-10)

என்ற பாடலடிகள் வாயிலாக அறியமுடிகின்றது.

வீரர்கள் குளத்தினைக் காவல் காத்துள்ளனர். ஏனெனில் அக்காலத்தில் குளத்தில் தண்ணீர் எடுத்து வீட்டிற்குப் பயன்படுத்துவர். ஆடு, மாடுகளுக்குத் தேவையான தண்ணீரைக் குளத்திலிருந்துதான் எடுத்துச் செல்வர். எனவே பகைவரின் சூழ்ச்சியினால் மக்களுக்கும், மற்றவைகளுக்கும் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக நீர்நிலைகளைப் பாதுகாத்துள்ளனர். இவ்வாறுள்ள பொய்கையில் கலங்காத நீரினையுடைய துறைகள் கலங்கும்படி யானையைப் படிவித்துள்ளனர் என்பதனை,

“கடிதுறைநீர்க் களிறுபடீஇ”    (புறம்.16 : 6)
என்ற அடியாலும்,
“நெடுநீர துறைகலங்க”    (பதிற்று.33 : 4)

என்ற அடியாலும் அறியலாகின்றது. மேலும், களிற்றை நீர்த்துறையில் படிவித்ததனால் நீர்நிலை கலங்கியமையை,

“களிறு படிந்து உண்டெனக் கலங்கியதுறையும்”    (புறம்.23 : 2)

என்ற பாடலடி விளக்குகின்றது. இவ்வாறு போரில் வெற்றி பெற்ற மன்னன் தோற்ற மன்னனின் நீர்நிலைகளை யானைகளைக் கொண்டு பாழ்படுத்தியுள்ளதை அறியமுடிகின்றது.

மன்றத்தை அழித்தல்

பிற நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்தோடு அல்லது பிற காரணத்தின் வழி படை கொண்டு சென்ற வேந்தன் பகை அரசர்களின் நீதிமன்றமாக விளங்கிய மன்றங்களை அழித்திருக்கின்றான். வேந்தர்கள் தன்னுடன் பகை கொண்டு போர் செய்த மன்னர்களைத் தோற்றோடச் செய்து அவர்களின் ஊர்களில் உள்ள மன்றங்களில் மக்கள் இல்லாமல் பாழாகும்படி அழித்தனர். இதனை,

“மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட”    (பெரும். 423)

என்ற பாடலடி வாயிலாக அறியமுடிகின்றது.

போரின் காரணமாக ஊரிலுள்ள குடிகளை இடத்தினின்றும் பெயரச் செய்தமையின் மன்றம் பொலிவிழந்து காணப்பட்டது. இதனை,

“முனைபுலம் பெயர்ந்த புல்லென் மன்றத்துப்”    (அகம். 157 : 11)

என்ற அடி விளக்குகின்றது. போர் தொடுத்து வந்த பகை அரசன் மன்றத்தை அழித்ததால், மக்கள் வெளியேறினர். இதனால் மன்றம் பொலிவற்றுக் காணப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு நாட்டை விட்டுக் குடிகள் பெயர்ந்து சென்றதால் மன்றம் பொலிவற்றுப் போகியது. இப்பொலிவற்றுப் போய்விட்ட இடத்தினையுடைய மன்றினைப் பின்னாளிற் காணின் அக்காட்சி ஆரவாரங் கொண்டிருந்த முதிய ஊரார்க்குத் துன்பம் உண்டாகும் என்பதை,

“புன்றலை மன்றங் காணின் வழிநாள்
அழுங்கன் மூதூர்க் கின்னா தாகும்”    (அகம். 301 : 24-25)

என்ற அடிகள் சுட்டுகின்றன. குட்டுவனின், காலாட் படையிலுள்ள படைவீரர்கள் சென்று போர் புரிந்த பகை மன்னர்களின் மன்றங்கள் கழுதைகள் சென்று மேயும் பாழிடங்களாயின என்பதனை,

“நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி”    (பதிற்று.25 : 4)

என்ற பாடலடி விளக்குகின்றது. இவ்வாறு பகை மன்னர்களது நிலங்களைப் பாழாக்குவது ஒருவகையில் தோற்ற மன்னனுக்கான தண்டனையாகக் கருத இடமுள்ளது.

முடிவுரை

போாில் தோற்ற மன்னனின் நாட்டை வெற்றி பெற்ற மன்னன் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளான். பகை நாட்டினைத் தன் ஆட்சிப் பகுதியுடன் இணைத்தல், பகைநாட்டின் செல்வ வளத்தினைக் கவர்தல், பகைவாின் விளை நிலங்களைக் கொள்ளையிடுதல், நிலங்களைப் பாழாக்குதல், பகைவர் நாட்டினை எாியூட்டல், நீர்நிலைகளைப் பாழ்படுத்துதல், மன்றத்தை அழித்தல் என்று பலவாறு தண்டனை வழங்கியுள்ளான்.

சான்றெண் விளக்கம்

ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ), மெய்யப்பன் தமிழ் அகராதி,, ப.827

முத்து இராசாக் கண்ணனார், தமிழ் எங்கள் உயிர், ப.62

ந.மு.வேங்கடசாமி நாட்டார் , அக்நானூறு , கெளரா பதிப்பகம் , சென்னை

டாக்டர் உ.வே.சாமிநாதையர் , பதிற்றுப்பத்து, டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பகம், சென்னை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.