இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த நூல்களுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.10.2022) கொழும்பில் நடைபெற்ற 'அரச சாகித்திய இலக்கிய விருது' விழாவில் இலங்கை தமிழ் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் வெளியான 'அந்திம காலத்தின் இறுதி நேசம்' நூல், சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விருதினை வென்றுள்ளது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, சிங்களப் பெண் எழுத்தாளர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதைகள் அடங்கிய அந்த நூலை ஆதிரை பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

 அந்த விருதோடு, 'அரச சாகித்திய இலக்கிய விருது' இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்த, எம்.ரிஷான் ஷெரீபின் மேலுமிரண்டு மொழிபெயர்ப்பு நூல்களான, வம்சி பதிப்பக வெளியீடுகளான 'சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்' (சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு) மற்றும் 'கிகோர்' (சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்) ஆகிய நூல்களுக்கான சான்றிதழ்களும், விழா நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்டன.