அரசர்களின் விளையாட்டு எனக் கருதப்படும் சதுரங்கம் chess) இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. மதியூகமும்,  தந்திரமும் முக்கியமானதாகக் கருதப்படும் இவ்விளையாட்டானது தற்காலங்களில் பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில்,  பூங்காக்களில்,  கழகங்களில், இணையத்தளங்களில் விளையாடுவதோடு, கணனிகளிலும் போட்டித் தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகின்றது.

இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி,  ஒரு கலையாகவும்,  அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. சில சமயங்களில் ஒரு போர் விளையாட்டாகவும்,  ‘மூளை சார்ந்த போர்க்’கலையாகவும் பார்க்கப்படுவதுண்டு. இப்படி 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்தச் சதுரங்க விளையாட்டானது பல ஈடுபாடுள்ள சென் சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது எனலாம். அந்தகைய சிறப்புகளைக் கொண்ட சதுரங்க விளையாட்டை ‘உலகத் தமிழர் சதுரங்க பேரவை’ யின் (WTCF)  ஏற்பாட்டால் மிக அண்மையில் முதற் தடவையாக லண்டன் அல்பேட்டன் கொமியூனிற்றிப் பாடசாலை மண்டபத்தில் இப்போட்டி அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

இந்த அமைப்பானது சுவிஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் சதுரங்கம் விற்பன்னன் திரு கந்தையா சிங்கம் அவர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்டமை பாராட்டுக்குரிய விடயம். திறமைசாலிகளான தமிழ் சமூகத்திடையே உலக சதுர அரங்கில் ஒரு தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2019 ஆம் ஆண்டில் சதுரங்கப் பயிற்சிப் பட்டறையை இவர் லண்டனில் நடாத்தியமை மனங்கொள்ளத்தக்கது. இத்தகைய பெரு முயற்சியை மேம்படுத்துவதில்,  விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படும் திரு. ரகுராஜ் தர்மரட்ணம் அவர்கள் லண்டன் அமைப்பின் தலைவராகச் செயற்படுவதுடன் இச் சதுரங்கப் போட்டியை முதற் தடவையாக நடாத்தியமை தமிழ் மக்களிடையே மிகுந்த விழப்புணர்வை ஏற்படுத்திய செயலாகும். இந்த அமைப்பில் பெண்கள் உட்பட தலைவர் ரகுராஜ் தர்மரட்னம் (பிரித்தானியா).  திரு அன்ரனி அமரபாலு,  திரு.கந்தையா பாஸ்கரன்,  (சிவா சுவிஸ்),  திருமதி ஸ்ரீரஞ்சனி வரதன் (பிரித்தானியா),  திரு சாய் முருகன் (பிரித்தானியா), திரு.விஜயரட்னம் விஜிதரன் (பிரித்தானியா) போன்ற அங்கத்தவர்களைக் கொண்டு இயங்குவது மகிழ்ச்சி தரும் செயலாகும்.

 

வயதுக் கட்டுபாடு இன்றி இடம்பெறும் இச்துரங்கப் போட்டியில் ஐரோப்பாவின் ஜேர்மன்,  நோர்வே போன்ற நாடுகளிலிருந்தும் இளையவர்கள் வந்து ஆர்வத்துடன் பங்கு பற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிட வேண்டிய வி;டயமாகும். இச்சதுரங்கப் போட்டியை ஹரோ மேயர் அவர்கள் வருகை தந்து ஆரம்பித்து வைத்தமையும்,   வெற்றிபெற்ற மாணவர்களுக்கு லண்டன் பிறென்ற் மேயர் அவர்கள் பங்கேற்று பரிசல்களை வழங்கியமையும் சிறப்பான விடமாக இருந்தது. லண்டனில் முதற் தடவையாக இச்சதுரங்க போட்டியில் திரளான தமிழ்  இளையவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டமை மகிழ்வான விடயம். இத்தகைய அறிவு சார்ந்த துறையை தொடர்ந்து எல்லோரும் இணைந்து பயணித்து வெற்றி பெற வேண்மென இதயத்தால் வாழ்த்துகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
27.5.2023.