சிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி 2023 தமிழ் எழுத்தாளர் விழாவில் இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டும், கௌரவிப்பும் இந்நிகழ்வில் நடைபெறுகிறது.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் தூங்காபி Toongabbie சமூக மண்டபத்தில் காலை 10-00 மணிக்கு ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் நூல்களின் கண்காட்சி, மலையகம் 200 கருத்தரங்கு , வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன் எழுத்தாற்றல் மிக்க மணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

2023 தமிழ் எழுத்தாளர் விழாவின் காலை அரங்கில் வரவேற்புரையை கலாநிதி கார்த்திகா கணேசர் நிகழ்த்துவார். அதன்பின் கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன், Clr Lisa Lake , Mayor, Cumberland City Council   மேயர் வரவேற்று உரையை ஆற்றுவார். அதன்பின் இளம் எழுத்தாளர்களுக்கான சான்றிதழ்கள் பிரதம அதிதி கம்பர்லாந்து மேயரால் வழங்கப்படும்.

இந்த எழுத்தாளர் நிகழ்வில் முக்கியமாக அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலக்கியப்படைப்பாளி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டி, கெளரவிக்கும் வண்ணமாக, கலாநிதி சந்திரிக்கா சுப்ரமணியன் ஆங்கில உரை மூலம் அறிமுகம் செய்வார். அதன்பின்னர் “தாமரைச்செல்வியின் இலக்கியப்பங்களிப்பு” பற்றி எழுத்தாளர் லெ.முருகபூபதி உரையாற்றுவார்.

நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வு:
அவுஸ்திரேலியாவில் வசியும் தமிழ் எழுத்தாளர்களின் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வும் இவ் எழுத்தாளர் விழாவில் நடைபெறும். நடேசன் எழுதிய தாத்தாவின் வீடு நாவலுக்கான வாசிப்பு அனுபவப் பகிர்வை ரஞ்சகுமார் ஆற்றுவார்.  தேவகி கருணாகரன் எழுதிய அவள் ஒரு பூங்கொத்து சிறுகதை தொகுப்புக்கான நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வு உரையை சௌந்தரி கணேசன் ஆற்றுவார்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா தொகுத்த  ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ கட்டுரை தொகுப்பு நூலுக்கான வாசிப்பு அனுபவப் பகிர்வு உரையை ம. தனபாலசிங்கம் ஆற்றுவார். முருகபூபதி எழுதிய சினிமா பார்த்ததும் கேட்டதும் கட்டுரை தொகுதிக்கான  உரையை கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆற்றுவார். அத்துடன் தெய்வீகனின் நாடற்றவர்களின் கடவுச் சீட்டு நூல், சந்திரிக்கா சுப்பிரமணியன் நூலின் வாசிப்பு அனுபவ உரையை இந்துமதி ஶ்ரீநிவாசன் ஆற்றுவார்.

மலையகம் 200 சிறப்பு அரங்கு:
சிட்னி எழுத்தாளர் விழா நிகழ்வின் மதிய இடைவேளையின் பின்னர் மாலை அரங்கில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாள்களின் நூல்கள் – இதழ்கள் கண்காட்சியும் கலந்துரையாடலும் நடைபெறும்.

மலையகம் 200 சிறப்பு அரங்கில் நிகல்கால எழுத்தாள ஆளுமைகளின் காணலை ஒளிபரப்பாகும். நோர்வே சரவணனன், கனடா மீரா பாரதி, ஆகியோரின் பதிவுகள் காண்பிக்கப்படும். மாலை அரங்கில் அருண். குமாரசாமி குழுவினர் வழங்கும் இசைக் கலை நிகழ்வும் நடைபெறும்.

“பிலிங்க்”குறும்படக்காட்சி:
சுவாரஸ்யமான கதை களத்துடன் வெளியிடப்பட்ட "பிலிங்க்" தமிழ் குறும்படமும் சிட்னி தமிழ் எழுத்தாளர் விழாவில் காண்பிக்கப்படும். அவுஸ்திரேலிய - இந்தியாவை தளமாகக் கொண்ட GUM LEAF ENTERTAINMENT தயாரிப்பில், கதிர் இயக்கிய தமிழ் இலங்கை குறும்படம் "பிலிங்க்" இலங்கையில் வெளியிடப்பட்டது.

இது ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்துடன் அருண் குமாரசாமியின் தனித்துவமான இசையுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்டது. சுமதி குமாரசாமியின் இயக்கத்தில் கம் லீஃப் என்டர்டெயின்மென்ட் தயாரித்த, "பிலிங்க்" திரைப்படம், இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி திரையரங்கில் அதன் முதல் காட்சியை அண்மையில் நடத்தியதும் அறிந்ததே.
 
நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையை அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் ஆற்றுவார்.

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிட்னி தமிழ் எழுத்தாளர் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு எழுத்தாளர்களையும் கலை, இலக்கிய ஆர்வலர்களையும் வேண்டிக் கொள்கிறது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் தமிழையும் ஒரு பாடமாக உயர்தர வகுப்பில் பயிலும் மாணவர்களையும், தமிழ்மொழிப்பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் கலந்து சிறப்பிக்க அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் வேண்டுகிறது.


     
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.