‘சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி 2024இல் லண்டன் ‘பாரதிய வித்யா பவனில்’ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சென்னை ‘அபய்’ பரதநாட்டிய கலைஞர்கள் சங்கமமும் லண்டன், சலங்கை நர்த்தனாலயா’ நுண்கலைக் கூடமும் இணைந்து செயற்பட்ட இந்நிகழ்வை, நிறுவனர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும் துணை நிறுவனர் பவித்திரா சிவயோகமும் நேர்த்தியாக முன்னெடுத்தமை பாராட்டுக்குரிய விடயம். இதன் அங்கத்தவர்களாக சஸ்கியா கிஷான் மற்றும் றூபேஷ் கேசியும் செயற்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலாநிதி கீதா உபாத்தியாயரும் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமதிகள் அம்பிகா தாமோதரம், பாமினி சித்தரஞ்சன், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். பிரதம விருந்தினர் அவர்களுக்கு அந்நிகழ்வில் ‘சாஸ்வத கலா போஷக’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடவேண்டியதொன்றாகும்.

பிரதம விருந்தினர் கலாநிதி கீதா உபாத்தியாய பேசும்போது: ‘கலாநிதி ஜெயந்தி யோகராஜா உலகளாவிய ரீதியாக பரதக் கலைஞர்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் இந்த ‘சாஸ்வதம்’ பரதநாட்டிய நிகழ்வு உன்னதமான செயற்பாடாகும். இந்நிகழ்வில் அக்;கலைஞர்களோடு இணைந்து சிறப்பு நடனத்தை அவர் வழங்கியமை மிகச்சிறப்பான விடயம். அத்தோடு ஜேர்மனியிலிருந்து செல்வன் நிமலன் சத்தியக்குமாரின் ஆண் நடனமும் பார்வையாளர்களை கட்டிப்போட்டது என்று பாராட்டிப் பேசினார்.

ஆறு வயது நிரம்பிய சமிக்ஷா திவாகர் இருபது நிமிடத்துக்கும் மேலாகத் தொடர்ந்து தனது நாட்டியத் திறமையை வெளிக்காட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க் வைத்தார் என்றால் அது மிகையாகாது. அவருக்கு ‘சாஸ்வத பால நர்த்தகி’ என்ற விருது வழங்கிக் கௌரவிப்பது மிகச் சிறப்பான விடயம் என அவரை ஆரத்ததழுவிப் பாராட்டிப் பேசினார். இப்பரதநாட்டிய நிகழ்வில் கதக், கூச்சுப்புடி போன்ற இன்னும் பல நடனவகைகளைப் பார்வையிட்டமை நாட்டியத் திறமைகளை வெளிக்கொணர்வதாக அமைந்திருந்தது. இத்தகைய நடனங்களைப் பயிற்றுவித்து மேடையேற்றிய ஆசிரியர்கள் போற்றுதற்குரியவர்கள். நடன ஆசிரியர்களான சித்திhh முரளீதரன். ஜெயவேணி ஜெயகாந்தன், அனனியா ஐங்கரன், மீனா டோறா, பீனாஷ் மகாதேவன், சோபிகா விஜேய், நந்தினி ராஜன், சுவாதி பட்டுள்வா போன்ற அங்கு வருகை தந்திருந்த நடன ஆசிரியர்கள் அனைவரையும் விதந்து பாராட்டிப் பேசியிருந்தார்’  

மருத்துவர் சுருதி பாக்கியராஜா நிகழ்ச்சிகளை மிக அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தார். மண்டபம் நிறைந்த கலைரசிகர்களோடு மிகவும் ரம்மியமான பொழுதாக அன்றைய மாலைநேரம் மகிழ்வாக அமைந்திருந்தமை சிறப்பான விடயமாகும்.



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.