கண்டி தமிழ் மன்றம் வழங்கும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கண்டி யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள டெவோன் ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பேராசிரியர் துரை. மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்டித் தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. எஸ். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இரு நூல்கள் வெளியீட்டுரையினை பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களும். இந்தியா - இலங்கை ஒப்பந்தம் பற்றிய நூலின் அறிமுகவுரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி அவர்களும் மற்றும் ஒற்றன் நாவல் பற்றிய நூலின் அறிமுகவுரையினை திரு. கோ. கணபதிப்பிள்ளை அவர்களும் நிகழ்த்தினார்கள்
நூல்களின் ஆய்வுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொருளியல்துறை, சிரேஷ்ட விரிவுரையாளர் (மேனாள்) பேராசான் மு. நித்தியானந்தன் அவர்களும்
மற்றும் ஏற்புரையும் நன்றியுரையினையும் பேராதனைப் பல்கலைக்கழகம். தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், நூல்களின் பதிப்பாசிரியர், கலாநிதி பெருமாள் சரவணகுமார் அவர்களும் நிகழ்த்தினார்கள்
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ் சுதர்சன் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சித் தொகுப்பினை பேராதனை பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் சர்வேஸ்வரன் வில்வசரன் அவர்கள் வழங்கினார்.
இதன் போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்லைக்கழக மாணவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் துரை. மனோகரன் தலையுரை நிகழ்த்திய போது
கண்டித் தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்குகின்ற கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பித்த தேசபக்தன் கோ. நடேசய்யரின் இரு நூல்கள் அறிமுக விழாவுக்கு நான் தலைமைதாங்குவதையிட்டு உண்மையிலும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இலங்கையினுடைய தமிழ் இலக்கிய வரலாற்றிலும், மலையகத்தின் சமூக வரலாற்றிலும் தனித்துவ முத்திரையைப் பதித்தவர், தேசபக்தன் கோ. நடேசய்யர். அவரது பங்களிப்புகள் பன்முகத் தன்மையைக் கொண்டவை. தமிழ் இலக்கியப் பரப்பில் முன்னோடி முயற்சிகள் பலவற்றை அவர் செய்திருக்கின்றார். குறிப்பாக, அவரது சிறுகதை முயற்சி என்பது ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முதன்மைiயான முயற்சியாக அமைந்திருக்கின்றது. இது குறித்து எனது இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலிலும் பதிவுசெய்திருக்கின்றேன்.
கலாநிதி பெருமாள் சரவணகுமார் அவர்களின் பதிப்பில் உருவான ஒற்றன், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களும் கோ. நடேசய்யரின் வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகளைக் காட்டுவன. ஒற்றன் முதலாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட ஒரு படைப்பு. நடேசய்யரை ஒரு நாவலாசிரியராக அடையாளப்படுத்துவது. இதனைப் பதிப்பித்ததன் மூலம் வரலாற்றுச் சாதணையைப் படைத்திருக்கின்றார் கலாநிதி பெருமாள் சரவணகுமார். அதுபோலவே, இந்தியா - இலங்கை ஒப்பந்தம் என்ற நூலும் மிக முக்கியமான ஒன்று.
எனது அன்புக்குரிய மாணவர்களுள் ஒருவரான கலாநிதி பெருமாள் சரவணகுமாரது இந்த இரண்டு நூல்களின் வெளியீடு இன்று நடைபெறுவது மிகுந்த சிறப்புக்குரியது. அவரது ஆய்வுமுயற்சிகள், தேடல் முயற்சிகள் தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் நூல் வெளியீட்டுரை நிகழ்திய போது
தேசபக்தன் கோ. நடேசய்யரின் அறியப்படாதிருந்த இந்த இரண்டு நூல்களையும் கண்டுபிடித்து அவர் பொது மக்களுக்கு வழங்கி இருக்கின்றார். அந்தவகையிலே, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் உடைய நிகழ்ச்சி என்று நாம் சொல்லலாம். இந்தியாவில் பிறந்து, இலங்கையில் தன்னுடைய பிற்கால வாழ்க்கையைக் கழித்து தோட்டத் தொழிலாளர்களுக்காக, அவர்களது விமோசனத்துக்காக பணியாற்றி மறைந்தவர், நடேசய்யர அவர்கள். அவர் அறுபது ஆண்டுகள்தான் வாழ்ந்திருக்கின்றார். அதிலே கிட்டத்தட்ட அரைவாசி காலம் குறிப்பாக, 27 ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றார். அந்த 27 ஆண்டுகளும் அவர் தோட்டத் தொழிலாளர்களுக்காக அவர்களின் விமோசனத்துக்காக, முன்னேற்றத்துக்காக நிறைய பணிகள் செய்தவர். பத்திரிகைகள் நடத்தியவர். தேசபக்தன் என்பது அவருக்கு அடைமொழியாக வந்தது அவரது பத்திரிகையின் பெயரால்தான். அவர் வேறுபல பத்திரிகைகளையும் நடாத்தியிருக்கின்றார். ஏராளமாக எழுதியிருக்கின்றார். எல்லாம் நூல்களாகக் கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கின்ற இந்த இரண்டு நூல்களும் ஒன்று ஒற்றன் என்பது மற்றது இந்தியா - இலங்கை ஒப்பந்தம். ஒற்றன் அவர் எழுதிய ஒரேயொரு நாவல். அது ஒரு துப்பறியும்வகையைச் சேர்ந்த நாவல். அது பற்றி பேராசிரியர் - நண்பர் மு. நித்தியானந்தன் அவர்கள் நீண்ட கட்டுரையொன்றை எழுதியிருக்கின்றார். அது ஒரு தழுவல் என்று ஆதாரங்களுடன் நிறுவுகின்றார். அது பற்றி அவர் விரிவாக இங்கு பேசுவார் என்று நினைக்கின்றேன்.
இரண்டாவது நூல் இந்தியா - இலங்கை ஒப்பந்தம். நமக்கு இரண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தங்களைப் பற்றித்தான் தெரியும். ஒன்று ஸ்ரீரிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மற்றது து. சு. ஜெயவர்தனவும் ரஜீவ் காந்தியும் செய்துகொண்ட ஒப்பந்தம். இது அதற்கு முதலே 1941ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளும், இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளும் செய்துகொண்ட ஒப்பந்தமாகும். அப்போதிருந்தே தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு போக்கு இலங்கையிலே தலைத்தூக்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக, சிங்கள தேசியவாத குழுவினர், இந்தியத் தோட்டத்தொழிலார்களது வருகையினால், இலங்கையினை வளங்கள் பாதிப்படைகின்றது என்பது குறித்து பேசியிருக்கின்றனர். இவர்களின் வகையினால் இலங்கைமக்கள் தமது வழங்களையெல்லாம் இழக்கவேண்டியிருக்கின்றது என்றெல்லாம் பேசினர். இவ்வாறான சூழ்நிலையில், இலங்கைவாழ் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய சட்டநடவடிக்கைள் என்னவென்பதைக் கருத்திற் கொண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துதான் நடேசய்யரின் இந்த இந்தியா - இலங்கை ஒப்பந்தம் நூல் பேசுகின்றது.
தேசபக்தன். கோ. நடேசய்யரின் இவ்வாறான எழுத்துக்களை வெளிக்கொணர்வது மிக முக்கியமானது என்று நான் நினைக்கின்றேன். அவரது பத்திரிகைளைப் பதிப்பிக்கலாம். ஆவற்றை ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்க வேண்டியது அவசியம். நாம் கடந்துவந்த பாதையினை அறிவதற்கு அவரது எழுத்துக்கள் தொகுக்கப்படுதல் வேண்டும். நடேசய்யரின் பன்முகப் பணிகளை அடையாளங்காணுவதற்கு இவ்வாறான பதிப்புகளும் தேடுதல்களும் நமக்கு வழிவகுக்க முடியும். நடேசய்யரது வெளிவராத எழுத்துக்களை பெருமாள் சரவணகுமார் மேலும் முயற்சியெடுத்து வெளிக்கொணர்வார் என்று நினைக்கின்றேன். இது மலையக அறிவுஜீவிகளின் கடப்பாடாகும். அவரது எல்லா எழுத்துக்களும் நூல்வடிவில் வெளிவரும் பின்னணியில்தான், நடேசய்யர் குறித்த முழுமையான பார்வையை நாம் வைக்கமுடியும்.
மலையகத்திலே சி. வி. வேலுப்பிள்ளை என்ற பெரிய ஆளுமை இருந்தார். இலக்கியத்துறையிலே அவரைத்தாண்டி மலையகம் போகவில்லை என்பது எனது கருத்து. அவர் நிறைய ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருக்கின்றார். அவரது சில முக்கியமான எழுத்துக்களை நண்பர் மு. நித்தியானந்தன் பதிப்பித்திருக்கின்றார். அவரது வீடற்றவன் நாவலை முதன்முதலில் வெளியிட்டவர், மு. நித்தியானந்தன்தான். அந்தவகையான வேலைகளை மலையகத்தில் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. குறிப்பாக இலக்கிய வரலாறு, சமூக வரலாறு, தொழிற்சங்க வரலாறு சம்பந்தமாக எழுதுவதற்கும் தேடிப் பதிப்பிப்பதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன என்று நான் நினைக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நூல்களின் ஆய்வுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொருளியல்துறை, சிரேஷ்ட விரிவுரையாளர் (மேனாள்) பேராசான் மு. நித்தியானந்தன் உரையாற்றும் போது
கோ. நடேசய்யர் எழுதிய ஒற்றன், இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற இரு நூல்களையும் பெருமாள் சரவணக்குமார் பதிப்பித்துள்ளார். இலங்கை இந்தியா என்ற நூலை இந்தியாவில் பரமணியில் ரோஜா முத்தையா செட்டியார் நினைவில் இயங்குகின்ற ஒரு நூல் நிலையத்தில் இருந்து பெற்று இருக்கின்றார். ஒற்றன் என்ற நாவலை தஞ்சையிலும் கருதையிலும் உள்ள இரு நூல் நிலையத்திலும் இருந்து தேடி எடுத்து இருக்கின்றார். ரோஜா முத்தியா வின் நூலாகம் மிகவும் முக்கியமான நூலகம். அதை நுஹ்மான். சரவணக்குமார் போன்றோர் நேரடியாக அறிந்து இருப்பார்கள். ரோஜா முத்தையா செட்டியார் என்பவர் சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களைச் சேர்த்து வைத்துள்ளார்.
திரையரங்குகளில் படம் போடும்போது சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் அப்பொழுது சிறிய பணத்திற்கு விற்பனை செய்வார்கள். 2500 சினிமாப் பாட்டுப் புத்தகங்களை இந்த ரோஜா முத்தையா செட்டியார் வாங்கி வைத்துள்ளார். 200 சினிமா விளம்பர பதாதைகளையும் சேர்த்து வைத்திருக்கின்றார். அவர் செட்டி நாட்டைச் சேர்ந்தவர். கோட்டை என்ற ஊரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதை நூலமாக்கி வைத்திருக்கின்றார். அங்குள்ள அத்தனை புத்தகங்களும் பழைய புத்தகங்கள். அவர் 24 மணித்தியாலயமும் அதைப் பராமரிப்பதற்காக இயங்கி வந்தார். அதைப் பாதுகாப்பதற்காக கிருமிநாசனியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். அந்தக் கிருமி நாசனியை தொடர்ந்து சுவாசித்து வந்தார், அந்தக் கிருமி நாசனி அந்த புத்தகங்களைக் காப்பாற்றியதோ எண்ணமோ தெரியவில்லை. இவரின் உயிரை வாங்கி விட்டது. அவருக்கு ஒரு மகன் இருந்தார். செட்டி நாட்டில் வியாபாரம் செய்தார். அவர் மனைவி இந்தப் புத்தக நிலையம் விற்பனைக்கு வருகிறது என்று ஒரு விளம்பரம் செய்தார். இது உலகத்தில் எங்கும் நடத்திருக்கக் கூடாது. ஆனால் டொக்டர் சி. எஸ். லக்ஷ்மி என்பவர் இருந்தார். அவர் எனது நண்பியும் மிகச் சிறந்த நாவலாசிரியருமாவார். அவர் சிகாக்கோ பல்கலைக்கழகத்தில் இருந்தவர். இந்த நூலகத்தை சிக்காக்கோ பல்கலைகழகத்தை வாங்க வேண்டும் என்று பரிந்தரை செய்தார். சிகாக்கோ பல்கலைகழகம் வாங்க முயற்சி செய்தது. அந்த நூலகத்திற்கு மிகப் பெரிய தொகையை வழங்கினார்கள். அந்த நிதியின் மூலம் ரோஜா செட்டியார் அவர்களுடைய மகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. அது மிகச் சந்தோசமான விசயம். அதில் முக்கிய விடயம் யாதெனில் ஜேம்ஸ் நை என்கின்ற ஒரு அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர். செட்டி நாட்டின் கோட்டையில் இருந்து மெட்டாசுக்கு புத்தகங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதற்கு உதவியாக அவர் இருந்தார். அதைப் பிரித்து தங்களுடைய நாட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள். உண்மையான புத்தகங்களை தரமணியில் விட்டுச் சென்றுள்ளார்கள் அந்தப் புத்தகம் கோட்டை ஊரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரும் பொழுது அதன் முதல் இயக்குனராக இருந்தவர் பா. சங்கரலிங்கம் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதான நூலகர். மிகத் திறமையானவர். அவர் பிளேன்டியும் பீடியும் புகைப்பார். அவர் எனது மிக நெருக்கமான நண்பர். அவர் வேலை செய்வது மட்டும்தான் அவரைப் போல மனிதர்களை நாங்கள் காண முடியாது. அவர் சிறிய வயதில் உயிர் இறந்து விட்டார்.
அந்தக் கால கட்டத்தில் நூல்களைப் பட்டியலிடும் கட்டத்தில் நான் கோ. நடேசய்யரின் நூல்களை அந்தக் குவியல்களுக்குள் தேடினேன். ஆதில் நடேசய்யர் கணக்கியல் என்ற புத்தகம் எழுதியிருந்தார். அது எனக்கு கிடைத்தது. அதைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றேன். இங்கே கலாநிதி சரவணக்குமார் பதிப்பித்திருக்கின்ற இந்தியா இலங்கை ஒப்பந்தம் என்கின்ற புத்தகங்களுடன் நான்கு ஐந்து புத்தகங்கள் நான் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால் நான் மிக விருப்பமாக ஆர்வத்துடன் தேடிய புத்தகம் வேறொன்று. அது இந்த ஒற்றன் என்ற புத்தகம். அந்த ஒற்றன் என்ற நாவலை நான் 30 ஆண்டுகளாகத் தேடுகிறேன். ரோஜா செட்டியா என்ற நூலகத்தில் அது இருக்கவில்லை. நான் பிரித்தானிய நூலகத்தில் தேடினேன். அந்த நூலகம் என்பது ஒரு சுரங்கம். அங்கே அந்தப் புத்தகம் பெயர் பட்டியலில் இருந்தது கோ. நடேசய்யர் ஒற்றன். நான் திகைத்துப் போனேன். அந்த நூல் இலக்கத்தைப் போட்டு விண்ணம் கோரியிருந்தேன். புத்தகம் வந்தது. அது வேறு ஒரு புத்தகம். அது ஒற்றன் அல்ல. புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். அந்தப் பெயர் பட்டியலிலுள்ள இலக்கத்தைச் சரியாகத்தான் எழுதியிருந்தேன். அதே இலக்கத்தில் வந்த புத்தகம் ஒற்றன் அல்ல வேறு ஒரு புத்தகம். நான் உடனே தூக்கிக் கொண்டு அந்த ஆங்கில நூலகரிடத்திடம் காட்டினேன். அவன் திகைத்துப் போனான். பெயர் பட்டியில் ஒற்றன் பெயர் இருக்கிறது. அந்தப் புத்தகத்திற்குப் பதிலாக வேறு ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் அந்த முழு நூலகத்திலும் என்ன குழப்படி நிலவும் என்று இங்கே சொல்ல முடியாது. அவர் உடனே பதறிப் போய் இதற்குப் பொறுப்பாக இருந்த பெண்மணியைப் பார்க்கச் சொன்னார். அந்தப் பெண் ஒரு தெலுங்குப் பெண். அவர் வந்தார். அவர் தனியாக கூட்டிக் கொண்டு சென்று ரோஜா முத்தையா செட்டியா நூலகத்தில் பார்க்கும்படி சொன்னார். நான் அங்கே இருந்துதான் வருந்தேன் என்றேன். அங்கே இந்த நூல் இல்லை. இந்தப் புத்தகத்திற்கு என்ன நேர்ந்தது என்று சொல்வதற்கு அவரிடம் எந்த ஒரு அக்கறையும் இருக்கவில்லை. நான் இந்தப் புத்தகத்தை இலக்கத்தை எடுத்துப் போட்டால் ஒற்றன் வருமா என்று கேட்டேன். அந்த பெண் அதில் கவனம் செலுத்தவில்லை. அதற்குப் பின் ஒரு தமிழ் நூலகர். இந்த பிரித்தானியா நூலகத்தில் சவூத் ஏசியன் நூலகத்திற்கு பொறுப்பாக வந்தார். அவர் பெயர் பிரவீனா. அவர் கடினப்பட்டுத் தேடினார். அவர் ஒரு துயரமான செய்தியைச் சொன்னார். புத்தகம் காணாமற் போயிற்று என்றார்.
இந்த நிலையில் தான் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த ஒற்றன் என்ற நூலை பெருமாள் சரவணக்குமார் பதிப்பித்துள்ளார் என்று சொல்லைக் கேட்டு உண்மையிலே நான் மகிழ்ந்து போனேன். இது மிகப் பெறுமதியான செய்தி. ஆனால் இந்த நாவல் பற்றி சீதாதேவி என்பவர் கலாநிதிப் பட்டம் படிப்பை நிறைவு செய்திருக்கிறார். தமிழில் வெளிந்த அத்தனை நாவல்களையும் ஒரு பட்டியிலிட்டுள்ளார். அதில் அ, ஆ. இ ஈ என்ற வரிசையில் ஒற்றன் நாவல் இருக்கிறது. தமிழ் நாட்டில் இந்த ஒற்றன் புத்தகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த அம்மா எங்கே இருக்கிறார் என்று இன்னுமொரு அம்மா ஊடாகத் தேடினேன். அவர் மறந்து விட்டார்கள். தேடிப் பிடிக்க வில்லை. இந்த நிலையில் பெருமாள் சரவணக்குமார் அவர்கள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். உண்மையில் சரவணக்குமார் அவர்களுக்கு எனது உள்ளார்ந்த பாராட்டுக்கள். இது ஒரு பெரியதொரு நற் செய்தியாகும்.
இந்தப் புத்தகத்தை வாசித்தேன். நான் லண்டனில் இருக்கிறேன். எனக்கு கிட்ட கிப் ஸ்டேசன் இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் ஜேர்மன் இருந்து செல்லும் புகையிரதத்தைப் பற்றி எழுதுகிறார். அந்த புகையிரத்தில் நான் பயணம் செய்துள்ளேன் வெஸ்டன் என்ற இடத்தில் இறங்கி ஏறியிருக்கிறேன். ஆனால் நடேசய்யர் ஒரு நாளும் இலங்கை இந்தியாவை விட்டு வேறு எங்கும் சென்றது கிடையாது. எனவே இந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் யோசித்தேன். இது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் என்று திட்டவட்டமாக எனக்குத் தெரிந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒற்றன் நாவல் பற்றிய நூலின் அறிமுகவுரையினை திரு. கோ. கணபதிப்பிள்ளை அவர்கள் உரையாற்றும் போது
தேசபக்தன் கோ. நடேசய்யர் மறைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றும் அவரது பதிப்பு முயற்சிகள் பூரணத்துவமடையாத சூழலில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணக்குமார் மீள் பதிப்பு செய்த கோ. நடேசய்யரின் ஒற்றன் நாவல் குறித்து நோக்குகையில் முதலாம் உலகப் போரைப் பின்புலமாகக் கொண்ட தமிழில் முதல் நாவல. 1915 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் வெளியிட்டிருந்தார். இந்நூலின் மீள் பதிப்பு 107 ஆண்டுகளுக்குப் பிறகு பதிப்பாசிரியர் பெருமாள் சரவணக்குமார் அவர்களால் 2022 இல் வெளியிடப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக வெளி வராதிருந்த பன்முக ஆற்றல் கொண்ட படைப்புக்களை தமிழ் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதில் மலையக ஆய்வாளரும் படைப்புத் துறை சாரல் நாடன் அவர்கள் பதிப்பித்த தேசபக்தன் என்ற பத்திரிகை ஆசிரியர் கோ. நடேசய்யர், மலையக நிர்மாணச் சிற்பி கோ. நடேசய்யர் போன்ற இன்ன பிற நூல்களை அடையாளப்படுத்த இயலும். கோ. நடேசய்யரின் இலக்கியத் தளத்திற்கான அடையாளமான ஒற்றன் நாவல் குறித்தான தமிழுலகம் கண்டிராத தேசபக்தன் நடேசய்யர் தேடல்களில் சாரல் நாடனின் பங்கு மகத்துவமிக்கது. இருப்பினும் ஒற்றன் நாவல் குறித்தான தேடல்கள் பாரிய இடைவெளியை உணர்த்தியது. இவ்வாறான சூழலில் மிகச் சிறந்த ஆய்வாளர்களால் கடின உழைப்புக்கு மத்தியில் பெருமாள் சரவணக்குமார் ஒற்றன் நாவலைத் தேடி அறிந்து மீள் பதிப்புச் செய்திப்பது தமிழுலகிற்கு செய்திருக்கும் பணியாகக் கருத முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை இந்தியா நூல் பற்றிய அறிமுகவுரையினை சிரேஷ்ட ஊடகவியாளர் இக்பால் அலி உரையாற்றும் போது
பெருமாள் சரவணக்குமார் அவர்கள் தம் சமூகத்திலும் தம் சமூக அமைப்பு கடந்து வந்த பாதைகளை வெளிக் கொணர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கடந்த வந்த பாதைiயின் வரலாற்று நிலையில் அவர்கள் பட்ட துன்பங்களையும் உணரச் செய்வதும் நூல் பதிப்பாசிரியரின் அழுத்தமான சிந்தனையாக அமைந்துள்ளது. எனவே கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்கள் இவை போன்ற பழைமை வாய்ந்த நூல்களைத் தேடி எடுத்து மென்மேலும் வெளிக்கொணர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நூல் பதிப்பாசிரியர் பெருமாள் சரவணக்குமார் உரையாற்றும் போது
தேசபக்தன் கோ. நடேசய்யரின் எழுத்துச் சுரங்கத்தைத் திறந்துவிட்டவர் சாரல்நாடன் அவர்கள். அதற்குப் பிறகு பேராசான் மு. நித்தியானந்தன் போன்றவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் எனது ஆய்வுகளுக்கும் தேடுதல்களுக்கும் அடிப்படையாக அமைந்தன. அவர்களது ஆய்வுப்பாதையில் பயணித்ததன் விளைவாக கிடைத்தவை ஏராளம். அவைகள் நூல்வடிவில் வர இருக்கின்றன. நடேசய்யரது எழுத்துக்களை வாசிக்கத் தூண்டியதோடு, அவை குறித்து தேடுவதற்கும் ஆய்வுசெய்வதற்கும் என்னை வழிப்படுத்திய எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவகூறுகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.