மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிலுள்ள தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆவது ஆண்டைக் கடந்து செல்லுகின்றது. அந்த வகையில் மலையக எழுச்சிக்காக பங்காற்றிய பல ஆளுமைகள் உள்ளன. அதில் கோ. நடேசய்யரின் பங்களிப்பு மகத்தானது. இத்தருணத்தில் கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” என்ற நூலை கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்கள் மீளவும் பதிப்பித்து வெளியிடுவது இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு மிகவும் அவசியமான தொன்றாகும்.

இரத்தத்தையும் வியர்வையையும் தேயிலைச் செடிகளுக்கு உரமாக்கி இந்நாட்டை வளமாக்கியவர்களின் வரலாறு தோற்றம் பெறுவதற்கு உந்து சக்தியாக அமைந்த கோ. நடேசய்யர் அவர்கள் எழுதிய இந்த “இந்திய இலங்கை ஒப்பந்தம்”; என்னும் நூல் மலையக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பேசுகின்றன.

இம்மக்கள் சமூக, பொருளாதார அரசியல் அரங்கில் கொடுங்கோன்மையுடன் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கு இந்நூலே போதுமானதாகும்.

தேசபக்தன் கோ. நடேசய்யர் அவர்கள் “ இலங்கை இந்தியா ஒப்பந்தம்” என்கின்ற தலைப்பில் முதல் பதிப்பாக 1941 இல் வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பாக கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்களைப் பதிப்பாசிரிரியராகக் கொண்டு 2022 இல் மலை வாசகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

1820 களின் ஆரம்பத்தில் கோப்பி பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் கொண்ட வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்களே இன்றைய மலையக மக்களின் ஆரம்ப கர்த்தாக்களாகும். 1823 முதல் 1920 வரை இவர்கள் தோட்டங்களில் அடைபட்ட ஒரு தொழிலாளர் கூட்டமாகவே கருதப்பட்டனர். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் காலனித்துவ அடிமைகளாகவும், கங்காணித்துவ அதிகாரத்திற்குட்பட்டவர்களாகவும் வாழ்ந்த தோட்டத் தொழிலார்களை முதன் முதலில் தொழிற்சங்க அடிப்படையில் ஒன்று திரட்டி பல்வேறு களச் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு போராட்டங்களையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தொடக்கி வைத்தவர் கோ. நடேசய்யர் அவர்களே.

தோட்ட மக்கள் நிலவுரிமை வீட்டுரிமை மறுக்கப்பட்டு சொல்லொண்ணாத் துயரம் தோய்ந்த கொடுமைகளை வாழ்வாய் சுவீகரித்துக் கொண்ட மலையக மக்களுக்கு ஒளிக்கீற்றாய்- உற்ற துணைவனாய் வழிகாட்டியாய் அமைந்த இந்தியா இலங்கைக ஒப்பந்தம் பற்றி கூறும் இந்த நூலில் இலங்கை இந்தியா நாட்டவர்களுக்கிடையே ஒப்பந்தத்தில் ஒன்றித்து போன இணக்கப்பாடான விடயங்கள், முரண்பட்ட விடயங்கள். பல கட்ட பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தம் சாத்தியமாவதற்கு அடித்தளமிடப்பட்ட எண்ணக்கருக்கள், மெலெழுந்து காணப்பட்ட எதிர்ப்புக்கள், இலங்கையர் என்ற சம அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பு, அரசியல் உரிமை, இப்படி மலையக மக்களின் விடுதலைக்காக முன்வைக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சட்ட அம்சங்களைக் கூறும் நூலாகவே இது அமைந்துள்ளது.

இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதிலும் இலங்கை வாழ் இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தை கட்டமைப்பதிலும் கோ. நடேசய்யரின் வகிபாகம் எவ்வளவு கனதியானது என்பதை வெளிப்படுத்தும் நூலாக அவரது இந்திய இலங்கை ஒப்பந்தம் விளங்குகின்றது என்று பதிப்பாசிரியர் கலாநிதி பெருமாள் சரவணக்குமார் தனது பதிப்புரையில் சுட்டிக் காட்டுகின்றார்.

ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தோட்ட மக்களுக்கு கிடைக்கப் பெற்ற சலுகைகளையும் வரப்பிரகாசத்தையும் அறிந்து கொள்வது மட்டுமன்றி கோ. நடேசய்யர் அன்றைய இந்திய எதிர்ப்புவாதத்திற்கு எதிராக அவர் முன்னெடுத்த முன்னோடி நடவடிக்கைகளையும் அவர் தனது எழுத்துத் துறையின் மூலம் ஆற்றிய பங்களிப்பினையும் அறிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக இனவாத ரீதியாக மட்டுமன்றி மலையக மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள், மற்றும் பொருளாதாரம் தொடர்பாகவும் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான இந்தியா வம்சாவழித் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது நீதி கிடைக்க தொழிற் சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டதுடன் மலையக தொழிலாளர்களுக்குரிய வழிகாட்டல்களையும் தொழிற் சங்க சட்டங்கள் பற்றிய தெளிவூட்டல்களையும் அவர் எழுத்துக்களில் பதிவு செய்து வைத்துள்ளார். இவ்வாறு மலைய மக்கள் எதிர்நோக்கிய சவால்களை வெற்றி கொள்வதற்காக அவர் வகித்த பங்கு எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்து கொள்ள இந்த நூல் பேருதவியாய் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமுமில்லை.

“இலங்கை வாழ் இந்தியத் தமிழர் தொடர்பில் 1940களில் இந்தியப் பிரதிநிதிகளுக்கும் இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் இடையே கொழும்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படைகளையும் அந்த ஒப்பந்தத்தால் இலங்கை வாழ் இந்தியர்களின் சமூக அடையாளம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது குறித்தும் இந்த ஒப்பந்த விதிமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் இயங்கு நிலைகள் குறித்தும் நடேசய்யர் தீர்க்கதரிசமான சமூகப் பார்வையுடன் எழுதிகின்றார். இது குறித்து இந்நூலின் பின்வருமாறு எழுதுவது கோ. நடேசய்யரின் ஆளுமையின் வீச்சையும் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் குறித்த அவரது தீர்க்கதரிசமான பார்வையும் வெளிக்காட்டுபவனவாகும்.” என்று பதிப்பாசிரியர் கலாநிதி சரணவனக்குமார் தனது பதிப்புரையில் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இந்தியத் தமிழர்களை இலங்கைக்கு அழைத்து வருதல் என்பது எத்தகைய தன்மை வாய்ந்தது என்பதை கூர்மையாக நோக்கினால் தென் இந்தியாவில் இருந்து கடலைக் கடந்து தலைமுன்னாருக்கு காலடி எடுத்து வைத்தது முதல் ஆரம்பமாகிறது. தலைமுன்னாரில் இருந்து முதலில் மாத்தளை நோக்கி அடர்ந்த காடு வழியாக வழிப்பாதைகள் இல்லாத கால கட்டத்தில் வழி அமைத்து வரும் வழியில் கொடிய விலங்குகள் கடித்தும். உண்ண உணவின்றியும், நோய் வசப்பட்டும் இறந்தவர்கள் பல்லாயிரம் மக்கள் எனலாம்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் அவர்கள் மாத்தளைக்கு நடந்து வரும் வழியில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டன. மூன்று வைத்தியசாலைகள், இரு கிணறுகள் என்பன நிர்மாணிக்கப்பட்டன.

அதேவேளை தமிழ் இலக்கியப் பரப்பில் செயற்பாட்டு இலக்கியம் பற்றிய கருத்தாடல்கள் தற்போதைய கால கட்டத்தில் முக்கியமானதாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் 1931-1932 ஆகிய ஆண்டுகளில் கோ. நடேசய்யர் அவர்கள் தோட்டங்களுக்குச் சென்றுச் கூட்டங்களை நடத்துதல், மக்களை விழிப்புணர்வுட்டுகின்ற களச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். தன் எழுத்துக்களில் தன் சமூகத்தையும் மக்களையும் பிரதிபலிக்கச் செய்வது போல அம்மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் குறித்து களச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். தன் படைப்பிலும் மட்டுமல்ல தன் பணியிலும் உயிர்ப்பை வெளிப்படுத்தியவர் என்று ஈண்டு குறிப்பிட்டுச் சொல்லாம்.

அந்த வகையில் மலையகம் முதல் 100 (1823-1923) ஆண்டுகள் அந்நியர்களான வெள்ளையர்களால் முற்றுமுழுதாக அடிமை நிலைமைக்கு வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த நூற்றாண்டு நிறைவில் அப்போது மலையகம் என பதாதை காட்டி இரண்டாவது நூற்றாண்டுக்காக திட்டமிடவில்லை. மாறாக நகர்வுகள் மலையகத் தேசபிதா கோ. நடேசய்யர் உருவாக்கிய தொழிற்சங்க அமைப்பாக்கத்தின் ஊடாக எழுந்த அரசியல் எழுச்சி அடுத்த பத்தாண்டு காலத்திற்குள் 1931 ஆம் ஆண்டு நாட்டில் வழங்கப்பட்ட சர்வஜன வாக்குரிமையில் கூலி அடையாளம் கொண்டிருந்த இந்த மக்களையும் அரசாட்சியில் பங்கேற்கச் செய்தது. கலை இலக்கியம், பண்பாட்டு செயற்பாடுகளின் ஊடாக’மலையகம்’ என்னும் அடையாளத்தை உருவாக்குவதில் இந்த சமூகம் கடந்த 100 ஆண்டுகள் காலமாக தன்னை அரசியல் சமூகமாக வளர்த்துக் கொண்டது. ( மாண்புமிகு மலையகம் நேற்று இன்று நூலில் (சந்திக்க வேண்டியச வால்களும் சிந்திக்க வேண்டிய பக்கங்களும். நாளை ) மல்லிகைப்புச் சந்தி திலகர் ப. 7)

கோ. நடேசய்யரின் தேசபக்தன் பத்திரிகை, வெற்றியுனதே, நீ. மயங்குவதேன், நரேந்திர பதியின் நரக வாழ்க்கை, மூலையில் குந்திய முதியோன், தொழிலாளர் அந்தர பிழைப்பு நாடகம் போhன்ற இலக்கிய முயற்சிகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். செயற்பாட்டு இலக்கியத்திலும் ஆரம்ப முயற்சிகள் பெரிதும் கோ. நடேசய்யரிலிருந்தே தொடங்குகின்றன.

இந்நூலின் பொருளடக்கத்தில் திரும்பி வருதல், கோட்டாக்கள், வாக்குரிமை, பதிவு செய்தல், அந்தஸ்து, பொது விதிகள், வியாக்கியானம், என்னும் தலைப்பில் ஐந்து அத்தியாயங்கள் அமைந்துள்ளன. ஒப்பந்தத்தின் மூலக் கொள்கைகள், இலங்கையர் யார்? இலங்கை இந்தியர் புதுப் பேர் வழிகள், , பழைய இந்தியர், சில முக்கிய விசயங்கள் ஆகிய தலைப்புக்களில் ஒப்பந்தம் குறித்த சட்ட திட்டங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன.

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற இந்த நூல் இலங்கையில் வாழும் இன்றைய இலங்கையராக கருதப்படுகின்ற அப்போதைய இந்திய வம்சாவளி மக்கள் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையை எப்படி ஏற்படுத்தியது என்ற ஒரு கதையை சொல்லுகின்ற ஒரு புத்தகமாகும். இந்த நூலை வாசிக்கிற பொழுது மூன்று விடயங்களை ஒரு கதையைப் போல் புரிந்து கொள்ளுகிற வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.

1) இலங்கைக்கு தொழில் நிமித்தமாக குடியேறி இலங்கையின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு பங்களிப்பு செய்த ஒரு சமூகம் இந்த 1941 வது ஆண்டு சட்டத்தின் படி இந்த நாட்டுக்குள் குடி மக்களாக அடையாளப்படுத்துவதற்கான தகுதி இருக்கின்றதா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கான ஒரு சட்டத்தையே இந்த புத்தகம் வரையறை செய்கிறது.

2) இலங்கையில் இருப்பது நமது எதிர்காலத்துக்கு நல்லதா? நமது சந்ததிகளின் எதிர்காலத்துக்கு நல்லதா ?இல்லை நமது தாயகத்துக்கு திரும்பி விட வேண்டுமா? என்கின்ற செய்தியை இந்த புத்தகம் அந்த ஒப்பந்தத்தின் வழியாக இதை வாசிக்கும் ஒவ்வொரு இந்திய தொழிலாளர்களுக்கும் அந்நாட்களில் கொடுத்திருக்கக்கூடும்.

ஒரு வகையில் நம்பிக்கையையும் நம்பிக்கையின்மையையும் அந்த ஒப்பந்தம் மக்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கின்ற ஒரு கதையை இந்த புத்தகம் சொல்லுகிறது.

3) இலங்கையில் இந்திய வம்சாவளி குடி மக்களாக குடியேறியவர்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படை உரிமையை பெற்ற ஒரு சமூகமாக நிலைநிறுத்தப்படுவதற்கு அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை இந்த புத்தகம் இன்னும் ஒரு வகையில் இந்த ஒப்பந்தம் எப்படி உறுதிப்படுத்துகிறது என்பதை மிகத் தெளிவாக கூறுகிறது. இது ஒரு வகையில் ஒரு ஆணித்தரமான தீர்மானத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது.

எனவே இந்த புத்தகம் இன்றைய மலையக இளைய சமூகத்தின் கைகளில் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. படித்து வருகின்ற மாணவ மாணவிகள் இதை வாசிக்க வேண்டும். தமது வரலாறு எப்படி சட்டங்களின் ஊடாக கடந்து வந்திருக்கிறது என்பதை ஆக்கபூர்வமாக புரிந்து கொள்வதற்கு இது ஒரு அடிப்படையான பாட புத்தகம். இந்த புத்தகத்தை வாசிக்காமல் ஒருவர் மலையகத் தமிழரின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வியலை புரிந்து கொள்ள முடியாது.

அந்த வகையில் இந்த மக்களுடைய வாழ்க்கை வரலாற்றை புதுமைப் பித்தன் எழுதிய “துன்பக்கேனி” நாவலிலிருந்து அதைத் தொடர்ந்து இறுதியாக மலையகத்தில் வெளிந்த கவிஞர் யோசுவாவின் பூச்சாண்டி நாவலின் கதை வார்ப்பு ஓர் இனத்தின் வீரத்தையும் துணிவையும் தட்டி எழுப்புகின்ற நாவலையும் வாசித்தால் அறிந்த கொள்ளலாம்.

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்கள் தம் சமூகத்திலும் தம் சமூக அமைப்பு கடந்து வந்த பாதைகளை வெளிக் கொணர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கடந்த வந்த பாதைiயின் வரலாற்று நிலையில் அவர்கள் பட்ட துன்பங்களையும் உணரச் செய்வதும் நூல் பதிப்பாசிரியரின் அழுத்தமான சிந்தனையாக அமைந்துள்ளது. எனவே கலாநிதி பெருமாள் சரவணக்குமார் இவர்கள் இவை போன்ற பழைய நூல்களையும் மென்மேலும் வெளிக்கொணர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.