தமிழ் வரலாற்றறிஞர் ஒரிசா பாலு (சிவ பாலசுப்பிரமணி) அவர்கள் மறைந்த செய்தியினைச் சமூக ஊடங்கள் வாயிலாக அறிந்தோம். கடலியல் சார்ந்த தமிழர் வரலாற்றில் கூடிய கவனம் செலுத்தியவர் ஒரிசா பாலு அவர்கள். அவரது மறைவு உண்மையில் மிகப்பெரும் இழப்பே. அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம். ஆழ்ந்த இரங்கல். அத்துடன் அவர் நினைவாக அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பொன்றையும், பத்திரிகைச் செய்தியொன்றினையும் பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள்.காம் -


விக்கிபீடியாக் குறிப்பு

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்பிரமணி (7 ஏப்ரல் 1963 – 6 அக்டோபர் 2023) தமிழக ஆய்வாளர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்தவர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு

சிவ பாலசுப்பிரமணி திருச்சி உறையூரில் பிறந்தவர். பின் தமிழகத்தின் விழுப்புரம், புதுவை நெய்வேலி சென்னை போன்ற பல இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளி நாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.

பணி
ஆர். ஏ. ஆர். என்ற பனாட்டு நிறுவனத்தில் உயிரி மருந்தியல் மற்றும் மாற்று எரிபொருள் துறையில் இயக்குநராக பணிபுரிந்து வந்தார். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை நடத்தி வந்தார். ஒரிசாவில் கனிம வள கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் செய்மதிகளின் உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளைக் கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர். தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வந்தார், ஒரிசா புவனேசுவர தமிழ் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து, பல பொறுப்புகளில் இருந்து 2002-2003 செயலர் ஆகப் பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்தார். அவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தார், உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டி வந்தார்.

கலிங்க தமிழ் தொடர்புகள், தமிழ் - கலிங்க தென் கோசல, ஒட்டர தொடர்பான தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அதே போல் இனப் பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாய் மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வு கருத்தையும் முன்வைத்தார். ஆமைகள் தொடர்ப்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வருபவர். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வந்தார்.[2] கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய் மரத்தில், மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்ப்பவர். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து வந்தார்

தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தியும், முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வந்தார்.

கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராய் பணிபுரிந்தார். மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள் , மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். இறுதிக் காலத்தில் சென்னையில் வசித்து வந்த இவர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு தமிழருடைய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயங்கி வந்தார். 500 இடங்களுக்கு மேலாக சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார்.

குமரிக்கண்டம் நோக்கிய ஆய்வு

குமரிக்கண்டம் மற்றும் லெமூரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று செய்மதி, நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து வந்தார்.


இந்து தமிழ் (23.02.2020) :  தரை பகுதியைவிட கடலில் காணப்படும் தமிழர்களின் சுவடுகளை ஆராய வேண்டும்: தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு வலியுறுத்தல்!

கடலில் இருக்கும் பண்டைய தமிழர்களின் சுவடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவித்தார்.

பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்துறை சார்பில் உலகளாவிய தமிழின் தொன்மை என்ற தலைப்பில் பயிலரங்கு நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ந.கலைவாணி தலைமை தாங்கினார். கடலியல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு பயிலரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

"தமிழர்கள் பண்டைக் காலம் தொட்டே நாகரிக வளர்ச்சி அடைந்தவர்கள். தங்களது வணிகத்தின் மூலமாகவும் படையெடுப்புகளின் வாயிலாகவும் பல நாடுகளுக்குப் பரவி இருக்கிறார்கள். அங்கெல்லாம் தமிழ் அடையாளத்தை பதித் திருக்கிறார்கள். அந்த வகை யில் பல சுவடுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, உலகின் பல நாடுகளில் பல ஊர்ப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. பல பழங்குடி இனங்கள் பண்டைய தமிழ்ச் சொற்களை அப்படியே பயில்கிறார்கள்.

நாம் மறந்து போன சங்ககால சொற்களை அவர்கள் இன்னமும் பயன்படுத்துகிறார்கள். பண்டைத் தமிழரின் கடல் அறிவு என்பது மிகவும் வியக்கத்தக்கது. பல்வேறு வகையான கப்பல்களை பண்டைக் காலம் தொட்டே தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கடலின் நீரோட்டம் அறிந்து கலங்களை செலுத்தி இருக் கிறார்கள். கடல்வாழ் உயிரினமான ஆமைகள் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும் வழித்தடங்களை அறிந்து கடல் பயணத்துக்காக அந்த தடங்களை பயன்படுத்தி இருக்கக் கூடும் என்று தெரியவருகிறது. ஆழ்கடலில் நான் பல இடங்களில் ஆய்வு செய்து இருக்கிறேன்.

தரையில் இருக்கும் பண்டைய தமிழரின் சுவடுகளைவிட கடலில் தமிழர்களின் சுவடுகள் அதிகமாக இருக்கக்கூடும். அவற்றை இன்னும் விரிவாக ஆய்வு செய்து வெளிக்கொணர வேண்டும். நமது மரபுச் செல்வங்களை மீட்டெடுக்க வேண்டும். உலகம் முழுக்க நாங்கள் ஒருங்கிணைப்பை உருவாக்கி இருக்கிறோம். உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களின் உதவியோடு பல மீட்டெடுப்பு செயல்களை செய்து வருகிறோம். மாணவர்களும் எங்கள் பணியில் இணைந்து கொள்ளலாம்."

இவ்வாறு அவர் பேசினார். இந்த பயிலரங்கில் தமிழ் துறை தலைவர் பச்சியப்பன், கணினி அறிவியல் துறை தலைவர் மலையரசு, பேராசிரியர்கள் செந் தில்குமார், சீமானம்பலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நன்றி: https://www.hindutamil.in/news/tamilnadu/540920-orissa-balu.html