கவிஞர் மு.புஸ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத்தொகுப்பு பற்றிய வெளியீட்டு நிகழ்வு கனடாவில் நடந்தது. அதனையொட்டிப் 'பதிவுகள்' இதழில் வெளியான மு.புஸ்பராஜனின் எதிர்வினையும், அதற்கான எழுத்தாளர் தேவகாந்தனின் எதிர்வினையும்  ஒருங்குறியில் 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள் பிரசுரமாகின்றன. - பதிவுகள்.காம் -


பதிவுகள்.காம் ஆகஸ்ட் 2005 இதழ் 68
எழுத்தாளர் மு.புஸ்பராஜனின் எதிர்வினை: இலண்டன்! அவலை நினைத்து..  - மு.புஷ்பராஜன் -

கனடாவில் 05-06-2005ல் ஸ்காபறோ சிவிக் சென்ரரில் (Scarborough Civic Center ) எனது 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வும் விமர்சன உரைகளும் ரதன் தலைமையில் நடைபெற்றன. அங்கு நான் சமூகமளிக்காத நிலையில் கவிதைத் தொகுப்பின்மீதும் என்மீதும் முன்வைக்கப்படீட விமர்சனங்களுக்கு பதிலாக இதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சம்பிரதாயமான தலைவரின் ஆரம்ப உரை எதுவுமின்றி கூட்டம் ஆரம்பமாகியது. அதிகாரங்களையும் மரபுகளையும் மீறுதல் இலக்கியத்தில் இனைந்த அம்சமாதலால் அதன் வெளிப்பாடாக முதலில் இதனைக் கருதினேன். ஒவ்வொருவர் உரைக்குப் பின்னும் தலைவர் உதிரி உதிரியாகத்  தனது கருத்துக்களை முன்வைத்தார். அதில் என்மீது வைக்கப்பட்டவைகள் இவை:

- நான் கனடா வந்தபொழுது ஒரு தடவைகூட தங்களைச் சந்திக்கவில்லை. செல்வத்திடம் கேட்டபொழுது அவர் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றார். அது இப் புத்தகத்தில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. -

'அலை' வெளிவந்த காலத்தில் தீண்டாமை பற்றிய போராட்டம் மிகத் தீவிரமடைந்திருந்தது. ஆது பற்றி வந்த கட்டுரைகளைவிட மார்க்சிய எதிர்ப்புக் கட்டுரைகளே அலையில் கூடுதலாகக் காணப்பட்டன. இதில் எனது கவிதை சார்ந்து ஒரே ஒரு கருத்துத்தான். அது நான் புலி ஆதரவாளன் என்பது எனது கவிதையில் அடிநாதமாக ஒலிக்கிறது என்பதே.

எனது கவிதைகளை அவ்வாறு குறுக்கிவிட முடியாது என்பதுதான் எனது பதில். தவிரவும் ஒவ்வெருவருக்குமான ஒரு அரசியல் நிலைப்பாட்டின் சாத்தியத்தை மறுக்கும் போக்கிலிருந்தே இது எழுகிறது. அதன் அரசியல் தன்மைகளுக்கு அப்பால் அவை கவிதைகளாக இருக்கின்றனவா என்பதே முக்கியமானது. எனது முன்னுரையில் இதனைக் கூறியுள்ளேன். ரதன் அவ்வாறான எதனையும் முன் வைக்கவில்லை.

கனடா வரும்போது அதன் மோசமான காலநிலையையும் மீறி கலை இலக்கிய ஆர்வலர்களை அவர்கள் எந்த மாற்றுக் கருத்துக் கொண்ட வர்களாக இருந்தாலும் சந்தித்திருக்கிறேன். இதில் எந்த மனத்தடையும் எனக்கு இல்லை.

1975ன் கார்த்திகையில் 'அலை'யின் முதலாவது இதழ் வெளிவந்தது. தீன்டாமைக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமடைந்த காலம் 1968, 69களிலாகும். 1968ஆடியில் மாவிட்டபுர ஆலயப் பிரவேசப் போராட்டம் அரம்பமாகியது. இதனால் இதற்கு முன்னும் பின்னும் எதுவுமில்லை என்று அர்த்தமல்ல. இன்றைய போராட்ட காலத்திலும் நிலத்திற்கடியில் நீர்போல் ஓடிக்கொன்டுதான் இருக்கிறது. சமயத்ததில் அது மேலாலும் ஓடுகிறது. எனவே ரதனின் காலப் பிரக்ஞை என்பது முற்றிலும் தவறானது. அலை'யில் மார்க்சிய எதிர்ப்புக் கட்டுரைகள் வெளிவந்தால் அதை ஆதாரங்களுடன் முன்வைக்கவேன்டும். 'அலை'யில்தான்  றேமன்டீ வில்லியம்சின் 'மார்க்சிய பண்பாட்டுக் கோட்பாட்டில் அடித்தளமும் மேற்கட்டுமானமும்' , மைக்கல் லோவியின் 'மார்க்சியவாதிகளும் தேசிய இனப் பிரச்சனையும்' கட்டுரைகள் மொழிபெயர்ப்புக்களாக வெளிவந்தன. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முற்பட்ட விடயங்களை இன்று பிழையாக அர்த்தப் படுத்துவது ரதன் தன்னை ஒரு மார்க்சியவாதி என நிறுவ காரணம் கண்டுபிடிக்கிறாரா? சரி அவர் மார்க்சியவாதியாக இருந்துவிட்டுப் போகட்டுமே  அதற்காக பிழையான காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதில்வையே. கூட்டம் முழுவதும் இவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கையில் அசல் 'Eugene Ionesco'வின் 'The Leader' ஆகவே இருந்தார்.

திருமாவளவன் எனது கவிதை சார்ந்து சில கருத்துக்களையும் கவிதைக்கு அப்பாற்பட்டு எனது நியாயப்பாடு எனத் தான் கருதுவதையும் கேள்விக்கு உட்படுத்துகிறார். எனது சிறிய கவிதைகளைத் தவிர மீதிக் கவிதைகள் கவிதை அனுபவத்தைத் தரவில்லையெனக் கூறினார். அவ்வாறு கூறுவதற்கான அவருக்குள்ள உரிமையில் நான் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால் எனது கவிதைகளின் பாடுபொருளுக்கப்பால் எனது அரசியல் நிலைப்பாட்டைத் தானே வகுத்துக் கோண்டு பின் வரும் கேள்விகளை முன்வைக்கிறார்:

- முஸ்லிம்கள் துரத்தப்பட்டபோது, சகோதரப் படுகொலைகள் நடந்தபோது, நாங்களே அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றபோது, இன்றைய ஏகப் பிரதிநிதித்துவம் சர்வாதிகாரம் அப்போதெல்லாம் இந்தக் கவிஞனால் எப்படி மெளனம் சாதிக்க முடிந்தது?-

இந்திய இராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்திருந்தபோது அராலிக் கடலூடாகத் தப்பியோடிய எனது இரத்த உறவினர்கள் ஆண்கள்,பெண்கள் சிறுவர்,சிறுமியர் உட்பட பலர் இந்திய ஹெலியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனது குருநகர் ஊரைச் சேர்ந்த முப்பத்தியிரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடலில் வைத்துக் கொல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தால் மணலாற்றிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப் பட்டபோதும்,அம்பாறை மாவட்டத்தின் தீபக வாவியிலிருந்து முஸ்லிம் மக்களால் தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்ட போதும், யாழ் நூல்நிலயம் எரிக்கப்பட்டபோதும் பிந்துனவெவவில் புனர்வாழ்வு முகாமிலிருந்த சிறுவர்கள் கொல்லப்பட்டபோதும் (இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்) நான் இவைகள் பற்றிய கவிதைகள் எதனையும் எழுதிவிடவில்லை. கவிதைத் தொழிலாளர்களுக்குச் சாத்தியமாகலாம். கவிதை சில கணங்களில் பற்றிக்கொள்வதை இயல்பாகச்சொற்களில் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. சிலவேளை நினைத்தவற்றை இன்றுவரை எழுத முடியாமலுமிருக்கிறது. நிலவின் தேஜசை மொழிக்குள் கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்தும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன். எங்கள் ஊரின் மீன்சந்தையின் உயிர்ப்பின் வேகத்தை எழுதும் முயற்சி கைகூடாமலே காலம் நீடிக்கிறது. எனவே எழுதியதற்கும் எழுதாமைக்கும் திட்டவட்டமான அரசியல் காரணங்களைக் கண்டுபிடித்தல் என்பது அபத்தமானது. எழுதியதால் ஆதரவு என்பதோ எழுதாததால்
எதிர்ப்பு என்பதோ அல்ல.

கவிதைக்கு அப்பால் எழுதப்படாத விடயங்களை கேள்விக்கு உள்ளாக்கத்தான் வேண்டும் (விவாதத்தின்போது இக்கருத்தை மீண்டும் அழுத்தினார்) என்பதைத் திருமாவளவன் உண்மையாக நம்புவதாக இருந்தால் அவர் அதற்கு விசுவாசமுள்ளவராக இருக்க வேண்டும் எனவே பின்வரும் கேள்விகளை அவர்முன் வைப்பதற்குரிய வாசலை அவரே திறந்துவைத்துள்ளார்.

சிறுவர்கள் பற்றியும் அவர்கள் தவறாக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் எனக் கவிதை எழுதிய தாங்கள் இலங்கைப் படையினரால் வடகிழக்கில் கொல்லப்பட்ட சிறுவர்கள் பற்றி ஏன் எழுதவில்லை? 'பிந்துனுவெவ'வுக்கு முன் எந்தச் சிறுவர்களும் கொல்லப்படவில்லையென நினைக்கிறீரா? யுத்தத்தில் அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? சமூகத் தளத்தில் யுத்தம் சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றியும் முழுஇலங்கை அளவிலும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும்போதும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? தீபகவாவியிலிருந்து முஸ்லிம்களாலும் மணலாற்றிலிருந்து இராணுவத்தாலும் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டபோது உங்களால் எப்படி மெளனம் காக்க முடிந்தது?  இந்தப் பட்டியலை நீடித்துக்கொண்டே போகலாம். அதென்ன ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே அப்பிடியா?

திருமாவளவனால் கேட்கப்பட்ட கேள்விகள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை குறிவைத்து முன்வைக்கப்பட்டவைகள் என்பதை வெகு இலகுவாகக் கண்டுகொள்ளலாம். எல்லாவகை அநியாயங்களும் புத்திஜீவிகள், சாதாரண மக்கள் படுகொலைகள், இவற்றின் இரத்தக்கறை விடுதலையென்று பேசி வந்த எல்லா இயக்கங்களின் முகங்களிலும் கழுவ முடியாத அளவு ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது. ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி விட்டோம் என்று சொல்பவர்கள்கூட இன்றுவரை கொலைகளை விட்டுவிடவில்லை. இதுவொண்றும் அறியப்படாத இரசியமுமில்லை. நிலைமை இவ்வாறு இருக்க ஒரு இயக்கத்தினரை மட்டும் அரசியல்வாதிகள்போல் சுட்டுவது அவற்றின் நியாப்பாடுகளுக்கு அப்பால் உள்நோக்கம் கொண்டிருப்பது ஒரு கலைஞருக்குரிய நியாயப்பாடு அல்ல.

அடுத்தது எனது 'வெல்பவர் பக்கம்' கவிதை பற்றி 'வெல்பவர் பக்கம்' கவிதையைப்போல் இவர் கடைசிவரையும் வெல்பவர் பக்கம் நின்று தனது உயிரைக் காப்பாற்ற முனைந்துள்ளார்' எனக் கூறுகிறார். அக்கவிதை 1987ம் ஆண்டு எழுதப்பட்டது. அக்காலத்தில் இந்திய இராணுவமும் அதனேடு சேர்ந்து இயங்கிய ஏனைய இயக்கங்களுமே வென்றவர்களாகும் இந்திய இராணுவ வெளியேற்றத்திற்குப் பிறகு விடுதலைப்புலிகள் வென்றவர்களாகும். 'சூரியக்கதிர்' இராணுவ நடவடிக்கை கு;குப்பிறகு விடுதலைப்புலிகள் காட்டுக்குள் முடக்கப்பட்ட பின்னர் தேர்தல் மூலம் தெரிவானவர்கள் எனச் சொல்லப்படும் ஈ.பி.டி.பி யினர் வென்றவர்கள். 'ஓயாதஅலை' மூன்றுக்குப் பின்னர் மீண்டும் விடுதலைப் புலிகள் வென்றவர்களாவர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வென்றவராவார். இதுதான் களநிலமை இந்தக் காலங்களிலெல்லாம் நான் வென்றவர் பக்கம் நின்றுள்ளேன் என திருமாவளவன் கருதுகிறாரா? அப்படியானால் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்? எனது கவிதைகளை ஒரு கட்சி சார்ந்த கவிதைகளாகக் குறுக்கியிருப்பது இவரின் கவிதை உணர்திறன் பற்றிய போதாமையையே காட்டுகிறது. ஆக நான் நிலவைச் சுட்டிக்காட்டும்போது என் விரலைப் பார்த்தவராகவே நிற்கிறார் திருமாவளவன்.

தேவகாந்தன் எதை உரைநடையில் சொல்ல முடியாதோ அதைத்தான் கவிதையில் சொல்லவேண்டும் எதை உரைநடையில் செல்லமுடியுமோ அதைக் கவிதையில் சொல்லவேண்டிய அவசியமில்லை என் கறாரான ஒரு பிரிப்பு முறையை முன்வைக்கிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. எதை எதில் சொல்லவேண்டும் என்பது படைப்பாளியின் சுயம் சார்ந்தது. ஆயினும் தேவகாந்தனது பிரிப்பு முறைக்கு எதிராக உலக,தமிழக,ஈழத்து இலக்கிய படைப்புக்கள் தம்மை முன்நிறுத்தக் கூடியவைகள். டி.எஸ்.எலியட்டின் 'பாழ்நிலம்' (THE WAST LAND, அன்னா அக்மத்தோவாவின் 'இரங்ற்பா' (REQUIEM) அலெக்சான்டர் ப்ளொக்கின் 'பன்னிருவர்' (THE TWELVE),ஜெவ்ரு செங்கோவின் 'சிமா ஜங்சன்' (ZIMA JUNCTION) தமிழகத்தில் சி.மணியின் 'நரகம்' , தர்மு சிவராமுவின் E=MC2 ,சுந்தர ராமசாமியின் 'பல்லக்கு தூக்கிகள்', 'உன் கை நகம்', ஈழத்தில் மகாகவியின் நெடும் பாடல்கள், சண்முகம் சிவலிங்கத்தின் 'ஆக்காண்டி' ,'மண்ணில் முளைக்கும் ஒரு வால்நட்சத்திரம்' எம்.ஏ.நு:.மானின் 'அதிமானுடன்' இன்னும் பலஸ்தின் கவிதைகளையெல்லாம்  படித்த எங்களுக்கு என தேவகாந்தன் தன்னைப்பற்றிக் குறிப்பிடுவதனால் மொகமடீ தர்வீஸ், ரஜுடீ ஹீசைன், அந்தொய்னே ஜபானா போன்ற பெயர்களையும் முன்வைக்கிறேன்.

இப்பட்டியல் முடிவின்றி நீண்டுகொண்டே போகக்கூடியது. ஆக சொல்லப்பட்ட விடயம் கவிதையாக மாறி கவிதை அனுபவத்தைத் தரவில்லையா என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால் மு.பொன்னம்பலத்தின் 'பொறியில் அகப்பட்ட தேசம்' பற்றி அது சொல்லப்பட்ட விதத்தில் அது கவிதையாகி இருக்கிறது எனக் கூறும்போது அவர் தன்னில்தானே முரண்பட்டு எதைச் சொல்ல வருகிறார் என்பதில் தெளிவற்றவராகவே தெரிகிறார்.

'இக் கணத்தில் வாழ்ந்துவிடு' கவிதையின் முதலிரு வரிகளையும் கடைசிச் சில வரிகளையும் சேர்த்தாலே கவிதையாக இருந்திருக்கும் எனக் கூறுகிறார். அவர் விருப்பப்படி பார்த்தால் அது இவ்வாறு அமையும்

       'யசோதரா
       இக் கணத்தில் வாழ்ந்துவிடு
       இவையெல்லாம்
       இயல்பாய் நீங்கள் அளித்த
       வாக்குமூலங்களாய்
       முனை முறிந்த தராசில்
       நிறுக்கப்பட்டு
       தீர்மானித்த இலக்கு நோக்கி
       நகர்த்தப்படுவீர்.'

இதில் ஏன் இக்கணத்தில் வாழவேண்டும் என்பதற்கான பதில் இல்லை. இவையெல்லாம் என்பதில் எவை எவையெல்லாம் இல்லாமல் போயிருக்கிறது? 1983ம் ஆண்டுக்காலப் பின்னணியில் தமிழர்கள் வாழ்வுநிலை எவ்வாறு நிச்சயமற்று இருந்தது. சட்டம், சிறை, நீதி ஆகியவைகளின் நம்ப கமற்ற தன்மை எதுவுமற்று மூளியாகி நிற்பதையா தேவகாந்தன் கவிதையாக இருக்கும் என்றார்? அவர் அவ்வாறு கருதினால் நாமென்ன சொல்ல முடியும் நமது ஒப்புக்கொள்ளாமையை முன்வைப்பதைத் தவிர.

இறுதியாகத் தேவகாந்தன் விரும்பியபடி('இந்தளவு விசயங்களும் மு.புஷ்பராஜனுக்கு தெரியவேண்டுமென விரும்புகிறேன் இந்த விமர்சனத்தை அவரிடமே சேர்க்க வேண்டுமென்பது எனது விருப்பம்') D.V.D.மூலம் இவையெல்லாம் வந்து சேர்ந்துள்ளன. எனது கவிதைத் தொகுதி பற்றிய விமர்சனத்தை அவர் கருத்து என்ற அளவில் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கவிதைபற்றி அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள எனக்கு எதுவுமில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள்.காம் ஆகஸ்ட் 2005 இதழ் 68


பதிவுகள்.காம் ஆகஸ்ட் 2005 இதழ் 68
எழுத்தாளர் தேவகாந்தனின் எதிர்வினை: தேவகாந்தன் பக்கம் - மு. புஷ்பராஜனின் மீண்டும் வரும் நாட்கள் கவிதை நூல் குறித்தும் விமர்சன அரங்கு குறித்தும்  - தேவகாந்தன் -

'மீண்டும் வரும் நாட்க'ளின் மீதான விமர்சன அரங்கு 05-06-2005 இல் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. அன்றைய மாலையில் அதைத் தொடர்ந்து சுமதி ரூபனின் யாதுமாகி நின்றாள் கவிதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் இடம்பெற்றது. விமர்சன அடிப்படையில் அச்சொட்டாக மட்டுமே கருத்துக்களை என்னால் அங்கு முன்வைக்கக்கூடியவளவான கால அவகாசமே தரப்பட்டிருந்தேன். அந் நூல் குறித்து மேற்கொண்டும் விவாதிக்க நிறைய விஷயங்கள் இருந்தபோதும், உடன் மறையாகத்தான், காலம் கருதியே அதை நான் தவிர்க்க நேர்ந்தது. அவைபற்றியெல்லாம் கட்டுரையாக எழுத எண்ணம் கொண்டிருந்தேன். காலம் இழுபட்டுப் போனது. அதற்கிடையில் மு.புஷ்பராஜனின் எதிர்வினை பதிவுகளில் வந்திருக்கிறது. நல்லது. புதிவுகளில் வரும் தேவகாந்தன் பக்கத்துக்கு நீண்ட நாட்களாக எழுதவில்லை என்ற என் மன உறுத்தல் இத்தோடு தீர்ந்ததாக ஆகட்டும்.

இந் நூல் குறித்து அன்று நான் வெளியிட்டதில் இரண்டாம் அபிப்பிராயம் என்னிடத்தில் இல்லை. ஆனாலும் சிலவற்றுக்கான விரிவுகள் அவசியமென்றே இப்போது படுகிறது. குறிப்பாக புஷ்பராஜனின் எதிர்வினை வந்தபிறகு படுகிறது.

ஏவரிடத்திலும் சரி, எழுச்சி மிகும் ஒரு கணத்திலேயே கவிதை பிறக்கிறது. ஒரு காட்சி பற்றி, ஒரு கருத்துப்பற்றி, ஓர் உணர்வுபற்றியெல்லாம்கூட அது இருக்கலாம். கவிஞனுக்கு அதற்கான வரையறுப்பு இல்லை. அப்படி இருக்கக்கூடாது. ஆனால் அது எழுச்சிக் கணத்திலானதாய் மட்டும் இருக்கவேண்டுமென்பது வரையறை. என்னால் எதையும் கவிதையில்தான் சொல்ல வரும் என்பதுமாதிரியெல்லாம் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. இன்றும்கூட சங்கப் பாடல்களுக்கிருக்கும் மதிப்பு அவை வீரமும் காதலும் பேசின என்பதினாலில்லை. எழுச்சிக் கணங்களில் அவை கவிஞனின் மனசாட்சியாய் வெளிவந்தன என்பதினாலேயே ஆகும். அதையே தன்னுணர்ச்சிப் பாடல்களென இலக்கியம் சொல்லிநிற்கிறது. அவற்றிலும் அவசியங்களுக்காய்ப் பாடப்பட்டுச் சோடைபோனவை உண்டு அல்லவா?

செய்யுளின் தளையுடைத்து மொழியடைந்த சுதந்திரமே உரைநடையென்று சொன்னாலும் தப்பில்லை. அது ஒரு மேலாதிக்கக் குடியின் மொழியதிகாரத் தடையுடைப்பும். நாவலரிடம் எனக்குள்ள கவுரவத்தின் ஒரே காரணம் அவர் வன்ன நடை வழங்குநடை வசனநடை கைவந்த வல்லாளராகத் திகழ்ந்தார் என்பதில்தான். அதை எந்தக் காரணம் சுட்டி அவர் செய்திருந்தாலும், அந்தப் பெருமையிலிருந்து அவரை இறக்கிவிட நான் உடன்படமாட்டேன். தமிழின் இன்றைய மேன்நிலைக்கு உரைநடையே முழுக் காரணமாக இல்லாவிடினும், மக்களுக்கான மொழியாக அது மாறியது அந்தக் கணத்திலிருந்துதான். இன்று இன்னும் தளையறுத்து அது புதுமொழியாக வலம் வருகிறதெனில் அது ஏதோ நினையாப்பிரகாரம் நிகழ்ந்ததொன்றல்ல. யாப்பின் கட்டுடைப்பை, உரைநடையின் அவசியத்தை பாரதி எவ்வளவு அவசியமென்றான் என்பது எமக்குத் தெரியாததல்ல. அதுவும் கருத்துப் பரிமாற்றத்துக்கான சாதனமே. உரைநடையினதும் கவிதையினதும் மொழிக்கிடங்குகூட ஒன்றுதான். எந்த ஒரு கருத்தைச் சொல்வதற்கும் வல்லபம் வாய்ந்துதான் தமிழுரைநடை இன்று இருக்கிறது. இல்லாவிட்டால் இதுவரை காலமான தமிழின் புனைகதை முயற்சிகளுக்கெல்லாம் என்ன பொருள் இருக்கமுடியும்?

உரைநடை இலக்கியத்தின் பங்குதாரியாகிய பிறகு சாமான்யமான விஷயங்களை அதில் சொல்வதில்தான் அர்த்தமிருக்க முடியும். கவிஞர்களானாலும் உரைநடையில்தானே கடிதமெழுதிக் கொள்கிறார்கள்? புஷ்பராஜன் புதுக்கவிதையில்தான் நான் கடிதமெழுதுவேன் என்று அடம்பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்? முடிந்தது, இவ்வாறான விஷயங்களைப் பேச புதுக்கவிதையை எடுக்காதீர்கள் என்று சொல்வது மட்டும்தானே? பாலஸ்தீனத்துக்கான வாழ்த்தை கவிதையில் சொல்ல புஷ்பராஜனுக்கு என்ன அவசியம் இருந்தது? அதுவும் இரண்டு பாகங்களில். அது கவிதையாக வரவில்லையே. இல்லை, கவிதையாகத்தான் வந்திருக்கிறதென்று கவிஞனேதான் வந்து சண்டை பிடித்துக்கொண்டு நிற்பானா? கவிதை|கவிதையில்லை என்று சொல்கிற தகுதி வாசகனுக்குத் தானுண்டு. சிறிது விமர்சகனுக்கும். வேறு யாருக்கும்-யாருக்குமே - இல்லை.

கவிதையில் ஒரு பூடகமும் உள்ளோடியிருப்பது நல்லது. நான் புரியாத் தன்மையைக் குறிக்கவில்லை. மர்மம் அல்லது மாந்திரீகப் பயன்படுத்துதல்கள் பற்றிக் கூறவில்லை. இந்தப் பூடகம் ஒரு இடைவெளியாகவுமிருக்கலாம். வாசகனின் தன் அனுபவப் பொருத்தலுக்கானது இந்த வெளி. அதுதானே முக்கியம். கவிஞன் தன் அனுபவத்தை வாசகனுடன் பகிர்கிறானென்றில்லை. கவிதையே அனுபவமாகவேண்டும் என்பதுதான் என் கட்சி. அதற்கானவைதான் கவிதையின் இடைவெளிகள். இது தெரியாததால்தான் எல்லாவற்றையும் சொல்லப்போய் அழகிய கவிதையொன்று கெட்டது. புரிதல் இன்னுமே ஒரு நல்ல கவிதை. அது மிகமிக நல்லவொரு கவிதையாக வந்திருக்கவேண்டியது. இப்படி எல்லாவற்றையும் சொல்லப்போய்த்தான் கெட்டது.

   இயற்கையின் உள்ளுணர்வுகளுக்காய்
   இதயத்தைத் திறந்துவிடு
   மெளனமான அதன் மொழிகள்
   உன்னில் புரிகையில்ஸ

என்றுமட்டும் அக் கவிதை முடிந்திருந்தால், அது உச்சமேறுவதை எதனாலுமே தடுத்திருக்க முடியாது. புரிதல் கவிதை பரவாயில்லை. நல்லதாகத் தப்பிப்பிழைத்திருக்கிறது. இக் கணத்தில் வாழ்ந்துவிடு வுக்கு நேர்ந்தது பெரும் சோகம். வேண்டியவரிகளாய் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் மட்டும் நான் சொல்லவில்லை. இடையிலுள்ள வரிகள் சிலவற்றையம் சேர்த்தே சொன்னேன். அவ்வாறாயின் கவிதை இவ்வண்ணம் அமைந்திருக்கும்:

   யசோதரா
   இக் கணத்தில் வாழ்ந்துவிடு

   முற்றத்தில்
   விரித்த பாயில் மனைவி அருகிருக்க
   மல்லாந்து படுத்தபடி
   என்ன நினைக்கிறாய்?
   
   விண்ணில் வெள்ளிகள் மினுங்க
   கள்ளப் பார்வையும் செல்லச் சிரிப்பும்
   அருகில் ஒலிக்க
   ஆயிரம் எண்ணங்கள்
   வீதி மருங்கில் பூத்துப் பொலிகிறதா?
   
   வாழ்ந்துவிடு வாழ்ந்துவிடு
   கற்பனையிலாவது வாழ்ந்துவிடு.

   மரணம்
   கள்வனைப் போல் வரும்
   அதுவும் உங்களுக்குத் துப்பாக்கியாலும்
   சித்திரவதையாலும்
   தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

   கவனம்!

   நள்ளிரவில்
   சப்பாத்தின் ஒலிகளினால்
   உனது வீட்டின்
   விளக்கின் ஒளி நடுங்கும்

   இழுத்துச் செல்லப்படுவாய்
   பிள்ளைகள் கதற
   மனைவி திகிலில் உறைய.
   அக் கணத்தில்
   துப்பாக்கி ஏந்திய ஒருவன் தீர்மானித்தால்
   உனது மனைவியும்.

   இப்படித்தான்
   ஒரு பகற் பொழுதில்
   உனது நண்பனும் மனைவியும்
   இழுத்துச் செல்லப்பட்டார்கள்

   எனவே யசோதரா
   நீ
   இக் கணத்தில் வாழ்ந்துவிடு.

புதுக் கவிதை ஓரளவு வடிவத்தாலும் வாழ்வது என்பார்கள். அதாவது புதுக்கவிதையின் வடிவம் கட்புலன் சார்ந்தது. செய்யுள், பாட்டு என்றெல்லாக் கவிதையினமும் செவிப்புலன் சார்ந்திருக்க, புதுக்கவிதை மட்டும் கட்புலன் சார்ந்திருப்பது அது அச்சியந்திரச் சூழலில் உருவான குழந்தை என்பதனாலேயாகும். புதுக் கவிதையின் மிடுக்கு அதன் வரிகளில். இங்கே வரிதான் ஓசையைத் தருகிறது. அதில் ஏற்படக்கூடிய பின்னம், கவிதைத் தன்மையைப் பாதிக்கிறது. இம் மாதிரி வரிகளின் இடர்ப்பாட்டோடுள்ள சில கவிதைகளும் இத் தொகுப்பில் உள.

மொத்தப் படைப்பையும் தொகுப்பாக்குற தேவையொன்றிருக்கிறபோது இம்மாதிரிச் சில கவிதையல்லாதனவும் சேர்ந்துவிடுகின்றனதான். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் ஆதங்கமெல்லாம் இக் குறைபாடுகள் நீங்கிய கவிதைகள் தொகுபட்டிருப்பின் சிறந்த ஒரு கவிதைத் தொகுப்பாக இது வந்திருக்குமே என்பதிலிருந்து பிறந்ததுவே.

அதிர்ச்சி விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கையிருப்பதில்லை. என் விமர்சனத்தின் தாத்பர்யமே படைப்பை அது அதுவாக இனங்காட்டுவதே. மீண்டும் வரும் நாட்கள் கவிதைத் தொகுப்பில் குற்றங்கள் குறைகள் உள்ளவை மட்டுமல்ல, நிறைவான .. உன்னதமானவையும் உண்டு. அவற்றுளொன்று தனிமை கவிதை. தனிமையைப் பற்றியது. தனிமைதான் யாருக்கு யாரால்? என்று அக் கவிதை முடிகிற இடம் அற்புதமானது. அக் கவிதையில் இகழ்வின் நகைப்பிருக்கும். ஐயோ, இவன் அழகென்பதோர் அறியா அழகுடையான் என்பதுமாதிரியான முடிவு கூறமுடியாக் கம்ப கையறுநிலை அதில் இருக்கிறது. பிரிவின் கொடுமையை இவ்வளவு பாதிப்புடன் சொன்ன வேறு கவிதை புலம்பெயர் சூழலில் நான் அறியாதது. இன்னும் தமிழ்ச் சூழலில் என்றும் சொல்வேன்.  அகலிப்பு இன்னொரு நல்ல கவிதை. பிறந்த ஆண்டு போடப்படவில்லை. மொழி தன் பன்முகமெடுத்து விசாலம் காட்டும் விந்தை சத்தியமாக இங்கே நடந்திருக்கிறது. கட்டிறுக்கமும் படிமமும் உணர்வடக்கமுமாய் அது. கவிதைகளின் தலைப்புகள் பெரும்பாலும் தமிழ்ச் சூழலில் குறிப்பீட்டுக்கானவையே. தலைப்பை ஒரு புள்ளியாக்கி அதிலிருந்து விரிந்தெழுந்து மேலே மேலேயாய்ச் செல்லும் கவிதைகள் தமிழில் இல்லாமலில்லை. தலைப்புகளில் பெருங் கவனம் செலுத்தப்படுவதில்லையென்பதே நான் சொல்ல வருவது. மீறல் கவிதை குறுகியது. ஐக்கூக் கவிதையல்ல அது. ஆனாலும் சிறந்த ஒரு ஐக்கூ கவிதையைவிடவுமே உச்சமடையும் கவிதை . அதை இங்கே பார்ப்பதும் நல்லதுதான்:

மீறல்
                   
வீதிக்காய்
விரித்து நெரித்த கற்களிடையே
சிறு
புல்லொன்று பூத்திருக்கு.

சில நல்ல கவிதைகள் கூட ஒருபோது ரசனை தந்து, இன்னொருபோது சாதாரணமாகிப் போகின்றன. எப்போதும் ரசனை தரக்கூடிய கவிதையை மிக நல்ல கவிதையென்று சொல்லலாம். அதுமாதிரியான கவிதை ஓயாத அலை என்கிற கவிதை. அனைவரினதும் பார்வைக்குமாக அதை முழுமையாக இங்கே:

ஓயாத அலை

இடி மின்னலோடு
காற்றுச் சினம் கொள்ள
அலையின் தினவி;ல்
அணை உடைந்தது

ஓஸவென்ற இரைச்சலுடன்
பொங்கிய பெருவெள்ளம்
ஊற்றை நோக்கி
வேகம்கொண்டு விரைந்து
ஓரமாய் நின்ற
தடைகள் அனைத்தையும்ஸ

சூரிய வெம்மையில்
வெடித்த பாளங்களிடையே
நீர் புக
நிலம் குளிர்ந்தன
நிலமூறிய வெம்மை
ஆவியாய் அகன்றன

காற்றின் அனலும்
அகன்று குளிர
வீட்டு முற்றத்தில் தென்னோலைகள் நிழல் விழுத்தி
நிலவெறிக்கும் காலத்தில் நாட்டார் பாட்டொலிக்க

செட்டை அடித்த
வெள்ளடிச் சேவலின் கூவலோடு
காலடியில் கேட்கிறது ஓயாத அலை.
   
படிமங்களில் தன் அர்த்தங்களைப் பொதிந்து, அதற்கான சொல் தெரிந்து உருவான கவிதையென்று இதைச் சொல்ல முடியும். இது மாதிரி இன்னும் சில கவிதைகள் இத்தொகுப்பில் இரருக்கவே செய்கின்றன. இவற்றையெல்லாம் நான் விமர்சன அரங்கிலேயே சொல்லியுமிருக்கிறேன்.

கவிதையை இம் மாதிரி அறுவைச் சிகிச்சை செய்வது மகா கொடூரம். விமர்சகன் எவனும் சரி , வாசகன் கூடத்தான், இம்மாதிரிச் செய்யவே செய்யக்கூடாது. ஆனாலும் ஒரு அவசியம் கருதி இவ்வளவு தூரம் வர வேண்டியதாயிற்று. மிகுந்த சாத்தியப்பாடுகளை நோக்கி மொழியை முன்னகர்த்ததிச் செல்லக்கூடிய தராதரம் வாய்ந்தது கவிதை மட்டும்தான். அதன் சாத்தியப்பாடுகளை புரிந்தும், உள்வாங்கியும் கொண்டிருக்கவேண்டியது கவிஞன் கடமையென்றே எனக்குச் சொல்லத்தெரிகிறது.

தமிழ்ப் பரப்பில் நீண்ட கவிதைகள் பெருமளவில் இல்லை. கவிஞர்கள் சிற்பி, நகுலன்  போன்றோரைத் தமிழகத்திலும், மு.பொ., மஹாகவி, இ.முருகையன் போன்றோரை ஈழத்திலும் இலகுவாய் இனங்காண முடியும். மு.பொ.வினது விலங்கிடப்பட்ட தேசம், 11|9 சம்பவத்தின்  மூலம்தேடிக் கண்டடைந்து அதை சரித்திர , தொன்ம கதையுருவங்களைக் கொண்ட அடைதற் சாத்தியத்துடன் கூடிய கவிதையாகவே இன்னும் பார்க்கிறேன். அது கவிதை அனுபவத்தைத் தந்தது என்பதைவிடவும், உரைநடையில் சாத்தியமற்ற கவிக் கூறுகளைக் கொண்டிருந்தது என்பதே நிஜம். வடிவம் நேர்த்தியாகிற, உள்ளடக்கம் நேர்த்தியாகிற, அனுபவத்தை நேர்த்தியாய்த் தருகிற என்று கவிதைகள் தரம் தரமாகவே அமைகின்றன. இவற்றில் பல கூறுகளின் இயைவு ஒரு நல்ல கவிதையைத்தருகிறது. இக் கூறுகளின் கூடுதலான இயைவு உன்னதமான கவிதையைத் தருகிறது. இதில் நானெங்கே தெளிவில்லாமல் இருக்க நேர்ந்தது? இந்த விதிகளின் படியேதான் சகல கவிதைகளையும் நான் தரம் பார்க்கிறேன்.

நான் அதிகம் சொல்லாதது மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' என்ற நீண்ட கவிதை பற்றியே. அது கவிதைபோல் தன்னைக் காட்டிக்கொண்டிருப்பினும் கவிதையாக மாற இழுவாணிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் அனுபவத்தை வாசகன் அடையவே முடிவதில்லை. ஆயினும் அது கவனத்துக்குரியதே. ஈழ நெடுங்கவிதைப் பரப்பு குறுகியதாய் இருக்கிற அளவில் அது  நெடுநாளைக்கு நினைக்கப்படும். வளர்ச்சியில் அக் கவிதை  ஒரு கட்டம். அதற்காகவேனும்.  கட்டுமானம் நன்றாயும் வாசல் பிழைத்ததாயும் சில வீடுகள் அமைந்திருப்பதில்லையா, அதுபோல் என்று வைத்துக் கொள்ளவேண்டியதுதான்.

மீண்டும் வரும்தான் நமக்கு அந்த  நாட்கள். மீண்டும் வரும் நாட்கள் என்பது ஒரு நம்பிக்கை. வாழ்வுக்கான நம்பிக்கை. அதை இந் நூல்  கவிதையில் தந்துகொண்டிருக்கிறது என்பது நிஜமே. இதுவே அதன் ஒட்டுமொத்தமான பெறுமானம் , மதிப்பீடு எல்லாம். இந்த நம்பிக்கை தமிழினத்துக்கு என்றைக்கும்விட இன்றைய காலகட்டத்தில் அதிக தேவையாயுமிருக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள்.காம் ஆகஸ்ட் 2005 இதழ் 68